மத்திய மற்றும் ஏனைய அதிவேகப் பாதைகளை துரிதமாக நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தோடு முதற்கட்ட நிர்மாணப்பணிகள் முடிவடைந்துள்ள மாத்தறை - அம்பாந்தோட்டை அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து திறந்து வைக்கப்படுதல் வேண்டும். மத்திய அதிவேகப் பாதையில் கடவத்தையில் இருந்து மீரிகம ஊடாக குருணாகல் வரை, குருணாகல் தொடக்கம் தம்புள்ள வரை, பொதுஹெர முதல் கலகெதர வரையிலான பகுதிகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டியது பிரிதொரு செயற்திட்டமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது :
கடவத்தை தொடக்கம் தம்புள்ளை வரையிலான அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் வாகனங்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு மிக விரைவாக பிரவேசிக்கக்கூடியதாக இருக்கும். மக்களுக்கு மிகவும் இலகுவாக பயணங்களை மேற்கொள்வதற்கு வழி செய்வதே இதன் நோக்கமாகும். வீதி முறைமைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்ட பொருளாதார வழியொன்றும் இதன்மூலம் உருவாகும்.
இங்கிரிய முதல் இரத்தினபுரி வரையிலான 76 கிலோமீற்றர் வீதி நிர்மாணப் பணிகளை விரைவாக மேற்கொண்டு தேசிய அதிவேக வீதி முறைமையுடன் இணைக்கப்படவுள்ளது. இது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவையில் ஆரம்பமாகும். கண்டி சுரங்கப் பாதை நிர்மாணப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதும் அதிக வீதி நெரிசலுக்கு தீர்வாக அமையும்.
தற்போது பகுதியளவு நிறைவு செய்யப்பட்டுள்ள வீதி மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டுமென்றும் கிராமிய வீதி முறைமையை ஏனைய வீதி முறைமைகளுடன் இணைந்ததாக நவீனமயப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
காலி வீதி மற்றும் கடுவலை, ஹைலெவல் மற்றும் பிலியந்தலை வீதிகளில் கொழும்பு நோக்கி காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினையும் விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.
அதிக நெரிசலைக் கொண்டுள்ள இடங்களை இனங்கண்டு மேம்பாலங்களும் சுரங்கப் பாதைகளும் நிர்மாணிக்கப்படவுள்ளது. தெமட்டகொடை வனாத்தமுல்லையின் ஊடாக பத்தரமுல்லை வரையிலான வீதியை நிர்மாணிப்பது பற்றியும் ஆராயப்படவுள்ளது. அதன் மூலம் பொரல்லை மற்றும் இராஜகிரிய சந்திகளில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
காலி வீதியிலும் டுப்லிகேஷன் வீதியிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக காலி வீதிக்கு சமாந்திரமாக கடலோரப் பாதை (மெரைன் டிரைவ்) பாணந்துறை வரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தினார். அனைத்து நிர்மாணப்பணிகளுக்கும் உள்நாட்டு பொறியியலாளர்களின் முழுமையான பங்களிப்பை பெற்றுக்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வீதிகளை நிர்மாணிப்பதற்கு இணையாக பொதுப் போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும். மோட்டார் வாகனங்களில் நகரங்களுக்குள் பிரவேசிப்பதை குறைப்பதற்கு சொகுசு பஸ் வண்டிகள் மற்றும் பாடசாலை பஸ் வண்டிகளின் சேவையை முறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கொழும்புக்குள் வரும் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு பொருத்தமான இடங்களை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வியாபார நிலையங்களை அமைக்கும்போது வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி மார்க்கங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிறுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் பணிப்புரை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM