3 நீதிபதிகளுடன் 63 தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளார் ரஞ்சன் ; விசாரணையில் அம்பலம்

13 Feb, 2020 | 11:07 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நீதிபதிகள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இன்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை அல்லது அழுத்தம் கொடுக்க முயற்சித்தமை  தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இது குறித்த வழக்கு நேற்று நுகேகொடை நீதிவான் எச்.யூ.கே.பெல்பொல முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே,  முறைப்பாட்டாளர் தரப்பான சட்ட மா அதிபர், ரஞ்சனுக்கு பிணையளிக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 வழக்கு விசாரணையின்போது விசாரணையாளர்களான கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா, பொலிஸ் பரிசோதகர் ரத்நாயக்கவுடன்  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்  ஆகியோர் ஆஜராகினர்.  சந்தேக நபரான ரஞ்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன, ஆஷ அகஹவத்த உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கூறினார்.ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் பணிஇடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நீதிவான் தம்மிக்க ஹேமபால ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த காலங்களில் 63 தடவைகள் தொலைபேசியூடாக தொடர்புகொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

' கனம் நீதிவான் அவர்களே,  விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நீதிபதிகளுடன் சந்தேக நபர் 63 தடவைகள் வரை தொலைபேசியில் தொடர்புபட்டுள்ளார்.  அதில் நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்கவிற்கு 33 தடவைகளும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவிற்கு 10 தடவைகளும் நீதவான் தம்மிக்க ஹேமபாலவிற்கு 20 தடவைகளும் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க 10 தடவைகளும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய 6 தடவைகளும் நீதவான் தம்மிக்க ஹேமபால 10 தடவைகளும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். ' என விசாரணை நிலைமைகளை தெளிவுபடுத்தி பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் கருத்து வெளியிட்டார்.

 இந் நிலையில் சந்தேக நபர் ரஞ்சனின் சட்டத்தரணிகள் சார்பில், இந்த விவகாரத்தில் விசாரணையில் உள்ள விடயங்களில் ரஞ்சனால் தலையீடு செய்ய முடியாது என்பதைக் காரணம் காட்டி அவருக்கு பிணை கோரப்பட்டது.

 எனினும் அந்த பிணைக் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொல்சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸினால் கடும் ஆட்சேபனம் வெளியிடப்பட்டது.

சந்தேக நபரை இந்த மன்றுக்கு வழக்கு விசாரணைகளுக்காக அழைத்து வரும் போது அவர் ஊடகங்களுக்கு கூறும் கருத்துக்களால் கூட, இவ்வழக்கின் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும். இது பிணை சட்டத்தின் கீழ் பிணை நிராகரிப்புக்கான காரணியாகக் கொள்ள முடியுமான நிலைமையாகும்.

எனவே சர்ச்சைக்குரிய தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குரல் மாதிரிகளின் அறிக்கை கிடைக்கும் வரையும் விசாரணைகள் நிறைவு பெறும் வரையும் சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாம் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல்  திலீப  பீரிஸ் மன்றில் வாதிட்டார்.

அதனையடுத்து  சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33