(ரொபட் அன்டனி)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலை மையிலான புதிய அரசியல் கூட்டணி எந்தச் சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் நெருக்கடி நிலையே நீடித்து வருகிறது.
புதிய அரசியல் கூட்டணியானது யானை சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் சஜித் தரப்பினர் இதயம் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சின்னம் தொடர்பில் தொடர்ந்தும் இரண்டு தரப்பினருக்குமிடையில் பாரிய இழுபறி நிலை நீடித்து வருகின்றது.
இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியின் பெயர் சமகி ஜன பலவேகய( ஐக்கிய மக்கள் சக்தி) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய பெயரையும் அதற்கான சின்னமான இதயம் சின்னத்தையும் தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்திருக்கின்றது.
ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையிலான தரப்பினர் அபே ஜாதிக பெரமுன என்ற கட்சியையே தமது புதிய கூட்டணிக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுத்தனர். எனினும் அபே ஜாதிக பெரமுன என்ற பெயரின் ஆங்கில முதலெழுத்துக்கள் ஐக்கிய தேசியக்கட்சி என்ற பெயரின் ஆங்கில முதலெழுத்துக்களுக்கு ஒத்ததாக இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என ஐக்கிய தேசியக்கட்சியின் சட்டப்பிரிவு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.
இந்த சூழலிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தரப்பினர் தற்போது கட்சியின் பெயரை சமகி ஜன பலவேகய என மாற்றியிருக்கின்றனர். அதனை தேர்தல் ஆணைக்குழு அங்கீகரித்திருக்கிறது.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைமை பதவியை சஜித் பிரேமதாச கோரியுள்ள நிலைமையில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியும். பிரதமர் வேட்பாளர் பதவியும் வழங்கப்பட்டதே தவிர கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையிலேயே சஜித் தலைமையிலான குழுவினர் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றனர். அந்தக்கூட்டணியில் ஐக்கிய தேசியக்கட்சியும் இடம்பெறுகிறது.
புதிய அரசியல் கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அதன் பொது செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது இந்த கூட்டணி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பிலேயே சிக்கல் நிலை தோன்றியிருக்கிறது.
ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்திலேயே போட்டியிடவேண்டுமென ரணில் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் சஜித் தரப்பினர் இதயம் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென கூறிவருகின்றனர். இந்த சூழலிலேயே ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தொடர்ச்சியாக இந்த இழுபறி நிலைமை நீடித்து வருகிறது.
சின்னம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சின்னம் தொடர்பில் பாரிய முரண்பாடு ஏற்பட்டிருந்தது. யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென ரணில் தரப்பினர் வலியுறுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறி சென்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே நாளை காலை 9.30 மணிக்கு கட்சியின் செயற்குழு மீண்டும் கூடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM