Published by R. Kalaichelvan on 2020-02-07 18:58:43
(எம்.ஆர்.எம்.வஸீம்)
பெண் அரச உத்தியோகத்தர்களுக்கான 4 மாத கால பிரசவ விடுமுறையை 6 மாதம் வரையில் நீடிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.

அத்துடன் சகல கர்ப்பிணி பெண்களுக்குமான போசனை பொதி வேலைத்திட்டம் 2020 வருடத்தில் செயற்படுத்துவதற்கான நிதி அமைச்சுக்கு கிடைத்துள்ளது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். இதனால் அவர்களின் முயற்சிகளை அடையாளம் கண்டு பொருளாதாரத்தை பலப்படுத்தும் பொறிமுறைக்குள் உள்வாங்க வேண்டும்.
அந்தந்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு தேவையான நிதியியல் ஒத்துழைப்புகளை வழங்கக் கூடிய வகையிலான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு பலமாக அமையும்.
அத்துடன் பொதுநிர்வாக சட்ட திட்டங்களுக்கமை பெண்களுக்கு மகப்பேற்று காலங்களுக்கான 84 வேலை நாட்களுக்கு முழுமையான சம்பளத்துடனான விடுமுறையும் அதற்கு மேலதிகமாக பகுதியளவிலான சம்பளத்துடனான 84 நாள் விடுமுறையும் தேவைப்பட்டால் சம்பளம் இல்லாத 84 நாள் விடுமுறையும் வழங்குவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்துடனான 4 மாத மகப்பேற்று விடுமுறை காலத்தை 6 மாத காலம் வரையில் நீடிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
இதேவேளை வருமான நிலையை பார்க்காது சகல கர்ப்பிணி பெண்களுக்குமான போசனை பொதி வேலைத்திட்டம் 2020 வருடத்தில் செயற்படுத்துவதற்கான நிதி அமைச்சுக்கு கிடைத்துள்ளது.
மாவட்ட செயலாளர்களுக்கு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான நிதி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் இதற்காக தாய்மார்களுக்கு வவுச்சர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.