சந்திரா பெர்னாண்டோ
பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon) 1231 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி பிரான்சிஸ்கன் சபையில் தன்னை அர்ப்பணித்தவர்.
இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களை இவர் கழித்தார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான்.
Pic By: Vinoth Thiyagarajah
ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.
புதுமைகள் பல புரிந்துவரும் புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா இன்று 13ஆம் திகதி கொழும்பு, கொச்சிக்கடையில் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் புனிதரின் திருவிழாவை, கொழும்பு வாழ் அடியார்கள் எந்தவித குறையுமின்றி ஆரவாரமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தகோடிகள் எண்ணிடலங்கா.
ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் புனிதர் பிறந்தார். அவரது பெற்றோர்களான மார்டின் - – மேரி தம்பதியருக்கு மூன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வி கற்று, சிறந்த தேர்வுகளைப் பெற்றவர்.
ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர், உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின்படி கொயிம்ரா என்னும் இடத்துக்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ஆம் ஆண்டில், தனது 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.
மொேராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றிச் சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.
பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயரால் அழைக்கப்பட்டார். சிறிதுகாலம் ஆபிக்காவிலுள்ள பிறமதத்தினருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார்.
அன்றுமுதல் அந்தோனியார் புகழ்பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையைக் கேட்க ஆலயங்களில் பெருந்தொகையான மக்கள் திரண்டுவந்தனர். கிறிஸ்தவக் கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்தும் ஆணித்தரமாகப் போதித்தார்.
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்புக்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அநேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன.
ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தன.
இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்தது.
மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டது. இதன் பொருட்டு மடத்தின் தலைமைக் குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்யத் தடைவிதித்தார்.
நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில், "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்க வைத்தார்.
பின், அருகில் இருந்த மடத்திற்குச் சென்று தலைமைக் குருவிடம் 14ஆவது புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினார். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது.
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜூன் மாதம் 13 ஆம் திகதி இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறையடி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 36. 336 ஆண்டுகளுக்குப் பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.
1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.
கேட்கும் வரமருளும், அண்டி வந்தோரை அரணைத்துக் காக்கும் புனித அந்தோனியார், நம் ஒவ்வொருவரின் தேவையையும் இறைவனிடம் கேட்டு நிறைவு செய்கின்றார். இவ்வாலயத்தில் நடக்கும் புதுமைகளுக்கோ அளவே இருப்பதில்லை. இதனை நிரூபிப்பதாக உள்ளது, பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கொச்சிக்கடை ஆலயத்துக்கு வந்து குவியும் பக்தகோடிகளின் பெருவெள்ளம்.
இத்தருணத்தில் நாமும் புனிதரை நோக்கிச் செபிப்போம். எம் நாட்டில் நல்லாட்சி ஓங்கவும் நிரந்தர சமாதானமும் நீடித்த ஒற்றுமையும் நிலவவும் வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM