(எம்.மனோசித்ரா)
' பாதுபாக்கான தேசம் - சௌபாக்கியமான நாடு ' என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று காலை சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளன.
இதனை முன்னிட்டு இலங்கையின் தலைநகரான கொழும்பில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ மத வழிபாடுகளின் பின்னர் காலை 8 மணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திர தின உரை இடம்பெறவுள்ளது.
இதன் பின்னர் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
இறைச்சி கடைகள் , மதுபானசாலைகளுக்கு பூட்டு
விஷேடமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள இறைச்சி விற்பனை கடைகள் மற்றும் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
மத வழிபாடுகள்
இன்று காலை 6.30 மணியளவில் சமய ஆரதானை நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரின் தலைமையில் பொல்வத்த தர்மகீதயாராம விகாரையில் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் , இந்து மத வழிபாட்டு நிகழ்வுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் இடம்பெறவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.பைசர் முஸ்தபா , கே. காதர் மஸ்தான், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரின் தலைமையில் புனித மைக்கல் வீதியில் அமைந்துள்ள ஜூம்மா பள்ளியில் இஸ்லாம் மத வழிபாடுகளும் , அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்ணான்டோ மற்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தலைமையில் புனித மரியாள் தேவாலயத்தில் ரோமன் கத்தோலிக்க மத வழிபாடுகளும் , பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தலைமையில் பெப்டிஸ்ட் தேவாலயத்தில் கிறிஸ்த்தவ மத வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.
பௌத்த மத வழிபாடுகள் காலை 7.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி - தர்மகீர்த்தியாராம விகாரையிலும், இந்து மத வழிபாடுகள் கொழும்பு 7, மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும், கத்தோலிக்க மத வழிபாடுகள் காலை 6.15 க்கு பம்பலபிட்டி புனித மரியாள் தேவாலயத்திலும், இஸ்லாம் மத வழிபாடுகள் காலை 6.25 க்கு கொழும்பு - 03 கொள்ளுப்பிட்டி ஜூம்மா பள்ளிவாசலிலும் இடம்பெறவுள்ளன.
விஷேட பாதுகாப்பு , போக்குவரத்து ஏற்பாடுகள்
இன்றைய தினம் அதிகாலை 4 மணி முதல் மதியம் ஒரு மணிவரை சுதந்திர சதுக்க வளாக வீதிகள் மூடப்படவுள்ளன. இதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட வீதி போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு கொழும்பில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விஷேட பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முப்படை, பொலிஸ் மரியாதை அணிவகுப்பு
இன்று இடம்பெறவுள்ள மரியாதை அணிவகுப்பில் 4325 இராணுவத்தினரும், 868 கடற்படையினரும், 815 விமானப்படையினரும், 1382 பொலிஸாரும் , 515 சிவில் பாதுகாப்பு பிரிவினரும், 355 தேசிய மாணவரணியினரும் பங்குவற்றவுள்ளனர்.
கலாசார அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய இளைஞர் சேவை சபை, மாகாணசபை மற்றும் கலாசார மத்திய நிலையத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி 451 கலைஞர்கள் பங்குபற்றுவார்கள்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றாலும் கடற்படையினால் வழமையாக செய்யப்படும் ஏற்பாடுகள் கொழும்பு - காலி முகத்திடலில் செய்யப்பட்டுள்ளது. 'உங்களின் கடற்படை ' என்ற தொனிப்பொருளில் நாட்டு மக்கள் அனைவரும் பார்வையிடக் கூடியவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியம் 2 மணிமுதல் இவற்றை பொது மக்கள் பார்வையிட முடியும். அத்தோடு நண்பகல் 12 மணிக்கு 25 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இலங்கை விமானப்படை கல்லூரியின் பீடாதிபதியின் தலைமைத்துவத்தில் விமானப்படை அணிவகுப்பில் விமானங்களும் கலந்து கொள்ளவுள்ளன. கே.8 ரக விமானங்கள் மூன்றும், சீனாவில் தயாரிக்கப்பட்ட பி.டி.6 ரக விமானங்கள் ஐந்தும், செஸ்ன 150 ரக விமானங்கள் ஐந்து உள்ளிட்ட விமானங்கள் , ஜெட் விமானங்கள் என்பனவும் பங்குபற்றவுள்ளன.
வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட 2500 பேர் நிகழ்வில் கலந்து கொள்வர்
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட விஷேட உறுப்பினர்கள் 2500 பேர் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு பொது மக்கள் 1000 பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விஷேட வெளிநாட்டு பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளப்போவதில்லை. எனினும் இலங்கைக்கான தூதரங்கள் இல்லாத நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் மரநடுகை
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மரங்களை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
டி.எஸ்.சேனாநாயக்கவின் நினைவு தினம்
அத்தோடு இன்றைய தினம் காலை 8.8 மணியளவில் டீ.எஸ்.சேனாநாயக்கவின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. சபாநாயகர் கருஜ சூரிய மலர்வளையம் வைத்து அனுஷ்டானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM