1980களில், எச்.ஐ.வி தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருவோரை எவ்வாறு அச்சத்துடன் பார்க்கப்படும் சூழல் இருந்ததோ, அதுபோலவே, சீனாவில் இருந்து வருவோரை அச்சத்துடன் பார்க்கின்ற நிலை இன்று உலகெங்கும் உருவாகியிருக்கிறது.
தீவிரமாகப் பரவத் தொடங்கியிருக்கின்ற கொரோனா வைரஸ் தான் இந்த நிலைமைக்குக் காரணம்.
சீனாவிலும் தாய்லாந்து உள்ளிட்ட சில தென்கிழக்காசிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய போதும், இந்தியாவைக் கடந்து அது இலங்கையையே முதலில் வந்தடைந்தது.
அதற்குக் காரணம், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்பட்ட நெருங்கிய தொடர்புகள் தான்.
பொருளாதார, அரசியல் தொடர்புகளுக்கு அப்பால், அண்மைக்காலத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்ட சுற்றுலாத் துறை வளர்ச்சியும் இன்று கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பெருகச் செய்திருக்கிறது.
21/4 தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கையின் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தோன்றியிருக்கிறது.
இதனையடுத்து, சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் திருப்பி அழைக்கப்படுகின்றனர். சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான சீனர்கள், சீன முதலீட்டில் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்களை விட இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு தோள்கொடுக்கும் வகையில், சீனா கணிசமான சுற்றுலாப் பயணிகளை அனுப்பியும் வருகிறது.
2019ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து 167,863 சுற்றுலாப் பயணிகள் கொழும்புக்கு வந்திருந்தனர். அதற்கு முன்னைய ஆண்டில், 265,965 சுற்றுலாப் பயணிகள் சீனாவில் இருந்து வந்தனர்.
21/ 4 தாக்குதல்களினால் இலங்கைக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டு குறைவு ஏற்பட்டிருந்த போதும் இந்த ஆண்டில் புதியதொரு வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
அதுவும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சீனாவுக்கு மிகவும் நெருக்கமான கோத்தாபய ராஜபக் ஷ அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள சூழலில், கூடுதல் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு சீனா அனுப்பும் என்ற நம்பிக்கை கொழும்பிடம் ஏற்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பது, இலங்கை – -சீனா இடையிலான சுற்றுலா துறை உறவுகளுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.
இலங்கை வரும் சீன சுற்றுலாப் பயணிகள் இங்கு அச்சத்துடன் பார்க்கப்படுகின்றனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கி அவர்கள் போகின்ற எல்லா இடங்களிலும் சோதனைகளையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சீனர்களை இலங்கையர்கள் அச்சத்துடன் பார்க்கின்ற சூழலினால் தான், கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், அச்சம் அடைய வேண்டாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தூதரகத்தின் அறிக்கையை நம்பக் கூடிய நிலையில் இலங்கையிலுள்ள மக்கள் இல்லை. உண்மையும் பொய்யுமாக பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் தான், மக்களின் கவனத்தைப் பெறுகின்றன.
கொரோனா வைரஸ் குறித்து பீதியடைய வேண்டாம் என்று கூறுகின்ற அறிக்கைகளை விட, இந்த நோயினால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டு விட்டனர் என்று வெளியாகின்ற வதந்திகளைத் தான் மக்கள் அதிகம் ஆர்வத்துடன் அறிந்து கொள்கிறார்கள்.
விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் சற்று சந்தேகத்துக்குரிய காய்ச்சலுடன் வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட முன்னரே, கொரோனா வைரஸுடன் வந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.
சாதாரண காய்ச்சல் காரணமாக அதிக உடல் வெப்பம், சளி போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களை கூட கொரோனா வைரஸ் காவிகளாக அடையாளப்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது சீனர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மாத்திரமல்ல இலங்கையர்களுக்கும் கூட இதே நிலை தான்.
இலங்கைக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு சோதனை கெடுபிடிகள் அதிகரிக்கும் போதும், சீனாவே தமது நாட்டவர்களை தனிமைப்படுத்த முற்படுகின்ற போதும், இலங்கையின் சுற்றுலாத் துறையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
2018 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்த சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தினால் குறைந்திருந்தது. அதற்கு மிகமுக்கியமான காரணியாக 21/ 4 தாக்குதல் தான் கூறப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே கொரோனா வைரஸ் காரணமாக சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை சரியும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
நோய் பரவுகின்ற ஆபத்தும், இலங்கையில் சீனர்கள் குறித்த அச்சமும் இதே போக்கில் தொடருமானால், இந்த ஆண்டில் இலங்கையின் சுற்றுலாத் துறையில் சீனாவின் பங்களிப்பு பெரிதும் வீழ்ச்சி கண்டு விடும்.
2018 ஆம் ஆண்டு இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது.
இந்த ஆண்டில் கொரோனா வைரஸ், எந்த நிலைக்கு கொண்டு செல்லப் போகிறது என்பதை, இந்த நோய் பரவுகின்ற மற்றும் கட்டுப்படுத்தப்படுகின்ற சூழலை பொறுத்தே அமையும்.
இலங்கையைப் பொறுத்தவரையில், கொரோனா வைரஸ் பாதிப்பு, சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விட்டது. தனியே சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் மாத்திரம் இந்த நிலை ஏற்பட்டு விடும் என்று இல்லை.
இந்த நோய் பரவிய நாடுகளின் முதற்கட்ட பட்டியலிலேயே இலங்கையும் இடம் பெற்றுவிட்டது.
அதைவிட சீனர்களின் நடமாட்டம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பது சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒன்று.
இலங்கையில் சீனாவின் தலையீடுகள், நடமாட்டங்கள் அதிகரித்து விட்டதாக அண்மையில் கூட, குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச ஊடகங்களில் அதிகளவு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இவை இலங்கை- – சீன உறவுகளின் நெருக்கத்தை ஓரளவுக்காவது பிரபலப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறானதொரு சூழலில் மேற்குலக நாடுகளில் இருந்தும் ஏனைய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கூட, தமது பயணத் திட்டங்களை மாற்றியமைக்க யோசிக்கும் நிலை தோன்றியிருக்கிறது.
பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருப்பது மாத்திரமன்றி, சீனர்களின் பிரசன்னம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை தெரிவு செய்வதை தவிர்க்கக் கூடும்.
ஒட்டுமொத்த இலங்கையின் சுற்றுலாப் பயணத்துறைக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசியல் ரீதியாகவும் இந்த நோய் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய நிலையிலேயே இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இன்னமும் சீனாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை. அவர் கடந்த மாதம் சீனா செல்வதாக இருந்தது. எனினும் பல்வேறு பயணத்திட்ட குழப்பங்களால் அது சாத்தியப்படவில்லை.
இந்த மாதம் அவர் சீனாவுக்கு செல்வது பெரும்பாலும் உறுதியாகவே இருந்து வரும் சூழலில், கொரோனா வைரஸ் அவரது பயணத் திட்டத்துக்குள் நுழைந்து மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் தோன்றியிருக்கிறது.
இந்தப் பயணத் திட்டத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டால், தற்போதைய அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கான வாய்ப்புகளும் பின்தள்ளப்படும் சூழலே தென்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM