ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கம் இது வரைக்கும் நாட்டிலுள்ள இனப் பிரச்சினைக்கு எத்தகையதொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை. நாட்டில் இனப் பிரச்சினையில்லை என்ற தொரு தோற்றப்பாட்டையே வெளிப் படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதிரடி நடவடிக்கைகளின் மூலமாக நாட்டு மக்களிடையே ஜனாதிபதி வரவேற்பை பெற்றுள்ளார். ஆனால், அந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வினைக் கொண்டு வரும் என்று சொல்ல முடியாது.
சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகளினால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றுள்ளார் என்பதற்காக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை ஒதுக்கி வைக்க முடியாது. மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்காக பேச்சுக்களும் நடைபெற்றன. இதன் மூலமாக நாட்டில் இனப் பிரச்சினையுள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பிரதமராக மஹிந்த ராஜபக் ஷ உள்ள நிலையில் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைப்பது அவசியமாகும். அப்போதுதான் சிறுபான்மையினரிடையே காணப்படும் தப்பான எண்ணங்களை இல்லாமல் செய்யலாம்.
அதன் மூலமாக சிறுபான்மையினரின் ஆதரவையும் பெருவாரியாக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், ஜனாதிபதியும், அரசாங்கமும் இதனை கருத்திற் கொள்ளாது பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி கொள்ள வேண்டு மென்று மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான சகல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
நல்லாட்சி எனும் பேரில் நடைபெற்ற ஆட்சியில் ஜனாதிபதியாக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே அதிகாரப் போட்டிகள் காணப்பட்டன. இதனால், நாட்டில் ஒரு ஸ்திரமான ஆட்சியை நடத்த முடியவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை மண்டியிடச் செய்ய வேண்டுமென்பதற்காக மைத்திரி பால சிறிசேன பல நடவடிக்கைகளை எடுத்தார். அந்த நடவடிக்கைகளினால் ரணில் விக்கிரமசிங்கவை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதற்கு மாற்றமாக நாட்டில் அரசியல் ஸ்திரம் பாதிக்கப்பட்டது. அது பொருளாதாரத்தில் எதிர் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசாங்கம் குறித்து மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால், மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன சிங்கள மக்களிடையே அதிக ஆதரவைப் பெற்றுக் கொண்டது. பொதுஜன பெரமுனவினர் அரசாங்கத்தின் இந்த நிலையை கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டார்கள். இதேவேளை, நல்லாட்சி அரசாங்கம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதற்கு பௌத்த இனவாதிகளும், இனவாதத் தேரர்களும் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். இத்தகைய நடவடிக்கைகளினாலும் பொதுஜன பெரமுன அரசியல் ரீதியாக நன்மை களை அடைந்தது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி ஏற்பட்டது. அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் இழுபறிகள் இருந்தன.
இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளினதும் இறுதி பெறுபேறாக ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெற்றார். கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்கு சிறுபான்மையினர் அதிக ஆதரவைக் கொடுக்கவில்லைஎன்பது அறிந்ததே. ஆயினும், பௌத்த இனவாத அமைப்புக்களின் ஆதரவு இருந்தது. சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக பௌத்த மதமும், முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும், சஹ்ரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களும் ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தின. இந்த பின்னணியை வைத்தே மீண்டும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தா பய ராஜபக் ஷ வெற்றி பெற்றுள்ள போதிலும், அவரிடம் நிறைவேற்று அதிகாரம் பூரணமாகயில்லை. அரைகுறை நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டதொரு பதவியாக ஜனாதிபதி பதவியை மாற்றியமைத்துள்ளார்கள். அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 19ஆவது திருத்தத்தின் மூலமாகவே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு மூக்கணாங் கயிறு கட்டப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்திற்கு மூக்கணாங் கயிறு கட்டப்பட்டுள்ளதை ஜனாதிபதி கோத்தாபய ராஜக் ஷவும், அவரை சார்ந்தவர்களும் விரும்பவில்லை. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள சட்ட ரீதியான தடைகளை அகற்ற வேண்டுமென்று எண்ணுகின்றார்கள். பிரதமராக மஹிந்த ராஜபக் ஷ உள்ள நிலையில் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு நிறைவேற்று அதிகாரங்கள் செல்ல வேண்டுமென்பதன் மூலமாக எதிர் காலத்தில் பிரதமர் பதவியை அதிகாரங்கள் குறைந்தவொன்றாக மாற்ற வுள்ளார்கள்.
இதனால் தான் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று திட்டங்களை வகுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்ற போதிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தோல்வியடையுமாயின், ஆட்சியை அமைத்துக் கொள்ள முடியாத நிலைக்கு அக்கட்சி தள்ளப்படும். ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியின் மகிழ்ச்சி அப்போது துன்பமாகிவிடும்.
இங்கு பொதுஜன பெரமுன பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டு மென்பதற்கு அப்பால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய விரும்புவதில் உள்ள ஆபத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தாகும். எதிர்க்கட்சி பலவீனப்பட்டுவிடும். எதிர்க்கட்சி பலவீனமாக இருக்கும் நிலையில், ஆளுங் கட்சியையும், அதன் தலைமையையும் சர்வதிகாரத்திற்குள் இழுத்துச் சென்றுவிடும்.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பௌத்த இனவாதிகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளார்கள். பல தடவைகள் ஜனநாயகத்தை சிதைத்துள்ளார்கள். ஆட்சி அதிகாரத்திலிருந்த அரசாங்கங்கள் அத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக ஊக்கப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டுள்ளார்கள். அரசாங்கங்களும் பல தடவைகள் அதிகாரத்தை எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாமென்ற இறுமாப்பில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்திற்கு பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாத வேளைகளிலும் சர்வதிகாரத் தோரணையில் ஆட்சியை நடத்தியுள்ளார்கள்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாத ஆட்சியும், அதிகாரமும் உள்ள நிலையில் ஜனநாயக விரோதமாக செயற்பட்டுள்ளதுடன், சிறுபான்மையினரின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு எதிராகவும், அவர்களின் பூர்வீகக் காணிகளை கூட பறித்தும் இனவெறியாட்டம் மேற்கொண்டுள்ளார்கள். சிங்கள மக்களின் நலன்களில் மாத்திரம் அக்கறையுடன் செயற்பட்ட அரசாங்கங்கள், தமது செயற்பாடுகளின் மூலமாக சிறுபான்மையினரை முற்றாக ஒதுக்கி வைத்தார்கள் என்று சொல்வது தான் சாலப் பொருத்தமாகும்.
இத்தகையதொரு நிலை இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தான், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து வீத ஆசனங்களைப் வெற்றி கொண்டமை மிகப் பெரிய ஆபத்தை நாட்டிற்கு ஏற்படுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்தன தமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை பயன்படுத்தி 1972ஆம் ஆண்டு யாப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய அரசியல் யாப்பு ஒன்றினை 1978ஆம் ஆண்டு கொண்டு வந்தார்.
பாராளுமன்றத்தில் தனக்குள்ள மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆதரவைப் பயன்படுத்தி தம்மை ஜனாதிபதி என்று பிரகடனப்படுத்தினார். அரசியல் யாப்பின் மூலமாக ஜனாதிபதிக்கு யாராலும் தடை செய்ய முடியாத நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமன்றி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி தமது ஆட்சிக் காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிக்கச் செய்தார். தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, ஒரு சர்வதிகாரி போன்று செயற்பட்டார். தமிழர்களின் கோரிக்கைகளை நசுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். முஸ்லிம்களை கவனத்திற் கொள்ளாது செயற்பட்டார்.
தொகுதிவாரி தேர்தல் முறைக்கு பதிலாக விகிதாசார தேர்தல் முறையை கொண்டு வந்தார். பாராளுமன்றத் தேர்தலுக்கு 12.5 வீத வாக்களிப்பு வீதத்தை கொண்டு வந்தார். இதன்போது விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டப்பட்டது. தொகுதிவாரியை விடவும் விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு அவர்களின் பிரதி நிதியை பெற்றுக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும். மாவட்ட மட்டத்தில் சிறுபான்மையினர் ஒரு கட்சி அல்லது ஒரு குழுவாக தனித்து செயற்படும் போது தங்களுக்குரிய பாராளுமன்ற பிரதி நிதியை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எடுத்து சொன்னார்கள்.
விகிதாசாரத் தேர்தல் முறையில் முஸ்லிம்களின் வாக்குகளை ஒரு கட்சிக்கு அளித்தால்தான் பாராளுமன்ற பிரதி நிதியை பெற்றுக் கொள்ளலாமென்பதற்காகவும், முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்காகவும் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது அதனை இனவாதக் கட்சி என்றார்கள். தங்களின் பாராளுமன்ற பிரதிநிதியை ஒரு கட் சியாக அல்லது குழுவாக தனித்து நின்று தேர்தலில் போட்டியிடும் போது பெறலாம் என்று தெரிவித்தவர்களே முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சி அவசியமில்லை என்று மிகப் பெரிய ளவில் இனவாதத்தைப் பரப்பினார்கள்.
விகிதாசாரத் தேர்தல் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. இதனால், முஸ்லிம் கட்சிகள் பேரினவாதக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு பாராளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றன. ஆட்சியை அமைப்பதற்கு நிபந்தனைகளை விதித்து தாம் நினைத்ததை சாதித்துக் கொண்டன. இப்போது விகிதாசாரத் தேர்தல் முறை வேண்டாமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தேர்தல் முறையின் கீழ் ஆட்சியை தீர்மானிக்கின்றவர்களாக சிறுபான்மையினர் இருப்பதனை அனுமதிக்க முடியாதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். புதிய கலப்புத் தேர்தல் முறையை அல்லது தொகுதி வாரி முறையைக் கொண்டு வருவதற்கும், தொகுதிகளுக்கு புதிய எல்லைகளை தீர்மானிப்பதற்கும் திட்டங்களை வகுத்துள்ளார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்தியுள்ளார்கள். இத்தேர்தல் முறையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களும், தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கேற்ற வகையில் வட்டாரங்களின் எல்லைகளை அமைத்துள்ளார்கள்.
இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிராக அரசியல் யாப்புக்கள் மூலமாக வும், அரசாங்கத்தின் அதிகாரங்களின் மூலமாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலும் பல நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுத்து வந்துள்ளார்கள். தற்போதும் கூட அத்தகைய நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. விஜேதாஸவினால் முன்வைக்கப்பட்டுள்ள 12.5 வீத வாக்களிப்பு வீதத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்ற தனிநபர் பிரேரணை, முஸ்லிம்களின் திருமணச் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதற்காக அத்துரலியே ரத்ன தேரரினால் முன் வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணைகள் போன்றன சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் நடவடிக்கைகளாகும்.
மேலும், கேகாலை மாவட்டத்தில் நெலுந்தெனிய உடுகும்புற எனும் இடத்திலுள்ள பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகே சில வாரங்களுக்கு முன்னர் புத்தர் சிலை ஒன்று சட்ட விரோதமாக நள்ளிரவு வேளையில் வைக்கப்பட்டது. இதனை அப்பிரதேச முஸ்லிம்களும், பள்ளிவாசல் நிர்வாகமும் ஏற்றுக் கொள்ள வில்லை. பொலிஸில் முறைப்பாடு செய்தார்கள். இறுதியில் நீதிமன்றத்திற்கு சென்றது. இப்பிரச்சினையில் இப்பிரதேச முஸ்லிம்கள் நீதியை கோரினால் தங்களுக்கு பெரும்பான்மையினத்திலுள்ள இனவாதிகளினால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்று அச்சம் கொண்டார்கள். இதனால், புத்தர் சிலையை அகற்றுவதில்லை என்றும், புத்தர் சிலையை சுற்றி மதில் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. முஸ்லிம்களின் இந்த விட்டுக் கொடுப்பால் பிரச்சினைக்கு தீர்வு வந்தாலும் அது நிரந்தர தீர்வாகக் கொள்ள முடியுமா என்பதில் உறுதியில்லை. இப்போதைக்கு புத்தர் சிலையை சுற்றி மதில் அமைத்தாலும், எதிர்காலத்தில் அங்கு ஒரு பௌத்த விகாரையை அமைக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. அவ்வாறு அமையுமாயின் இப்பிரதேசத்தின் அமைதிக்காக முஸ்லிம்கள் செய்த விட்டுக் கொடுப்புக்கு அர்த்தமில்லாது போய்விடும். சில வேளைகளில் பௌத்த இனவாதிகள் பள்ளிவாசலின் இருப்பைக் கூட கேள்விக்குட்படுத்தலாம். அது மட்டு மல்லாது சட்டவிரோத புத்தர் சிலை வைப்பின் மூலமாக, அங்கு பள்ளிவாசல் அமைந்திருப்பதனை சிலை வைத்தவர்கள் விரும்பவில்லை என்று கூட சந்தேகிக்கலாம். ஒரு இனக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூட சிலையை வைத்திருக்கலாம். அதேபோன்று முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்புடன் நடந்துள்ள போதிலும், இந்த விட்டுக் கொடுப்பை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம்களும் இருப்பார்கள். அதனால், எந்த வேளையிலும் இவ்விரு சாராரும் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஆதலால், இதனை விடுத்து அரசாங்கம் நியாயத்தைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இனங்களுக்கிடையே குழப்பத்தையும், மோதலையும் ஏற்படுத்தும் வகையில் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அங்கிருந்து புத்தர் சிலையை அகற்றுவது தான் நீதியாகும். ஆனால், முஸ்லிம்களின் விட்டுக் கொடுப்பினால் சட்டத்திற்கு புறம்பானதொரு நடவடிக்கை சட்டத்திற்குரியதாக மாற்றப்பட்டுள்ளது.
ஆதலால், இன்றைய அரசாங்கம் கூட பௌத்த இனவாதிகளின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் அங்கீகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது. இதன் மூலமாக நாட்டை யார் ஆட்சி செய்தாலும் பௌத்த இனவாதிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாதுள்ளது. பௌத்த இனவாத அமைப்புக்களும், தேரர்களும் அரசியல்வாதிகளின் துணையால் தங்களுக்கென ஒரு சனக் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். இவர்களுக்கு பௌத்த நாடு, பௌத்த மக்கள் என்ற உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. ஏனைய இனங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று போலியான விம்பங்கள் காட்டப்பட்டுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக செயற்படுவதனை நாட்டுப்பற்று செயலாகக் காட்டப்பட்டுள்ளது. இதனால், ஆட்சியாளர்களினால் பௌத்த இனவாத சிந்தனைக்கு எதிராக செயற்பட முடியாதுள்ளது.
இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பின்னணியில் தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். ஆகவே, மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது ஜே,ஆரின் ஆட்சியையும், அதன் ஒடுக்கு முறை நடவடிக்கைகளையும் ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி, முஸ்லிம் கட்சிகளை வற்புறுத்தியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக் ஷ 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்று திருத்தியமைத்தார். 2015ஆம் ஆண்டு 18ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையிலும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் வகையிலும் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது. பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளுமாயின் மீண்டும் 18ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளவற்றை கொண்டு வருவார்கள். அதனோடு, சேர்த்து வேறு சில சட்டங்களையும் நிறைவேற்றுவார்கள். அதனால்தான் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும், அழுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சஹாப்தீன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM