வலிந்து காணாமலாக்கப்பட்டோர் இறந்து விட்டதாகவும் இது தொடர்பில் அரசு விரைவில் இறந்தவர்களின் உறவுகளுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்கவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கரிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வாரம் கூறியுள்ளார். மேலும் முறையான விசாரணைகளின் பின்னரே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி பின்பு கூறியிருந்த போதிலும் அவரது கருத்துக்கள் வீதியோரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்திலும் அல்லது நீதிமன்றிலும் பதில்களை எதிர்பார்த்து நிற்கும் தாய்மார், மனைவிமார், சகோதரிகள் மற்றும் பிள்ளைகளுக்கு இது அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கருத்துக்கள் மூலம் தான் குற்றத்தை ஒப்புக்கொள்வது போன்று ஜனாதிபதி உணர்ந்திருக்கலாம். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 2016 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்தார். அப்பொழுது பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பானது அக்கருத்தை கண்டித்தது போன்றே இப்பொழுதும் ஜனாதிபதியின் கருத்தை கண்டிக்கின்றது. எனினும் ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தின் கடைசிக் கட்டத்திலும் அதை தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்யவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக அக்கால கட்டத்தில் கடமையாற்றினார். மே 18. 2009 அன்று தற்போதைய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் 58ஆவது பிரிவில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசேப்புடன் இணைந்து ஆயிரக்கணக்கிலானோர் சரணடைந்தனர். சரணடைந்தவர்கள் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டதை கண்ட உறவுகள், அவர்களை மீண்டும் காணவே இல்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் இறந்து விட்டார்கள் என்றால் அவர்கள் எவ்வாறு இறந்தனர்? யார் அவர்களைக் கொன்றது? எப்பொழுது, எங்கே, ஏன் மற்றும் எவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர்? அவர்களது சடலங்கள் எங்கே? எவ்வளவு காலமாக உண்மை முடக்கப்பட்டிருக்கின்றது?
ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை நோக்குவோமாயின், பாலேந்திரன் மகிந்தனுக்கு நேர்ந்தது என்ன? புனர்வாழ்விற்காக அவரது தாய் பாலேந்திரன் ஜெயக்குமாரி தனது மகனை இராணுவத்திடம் கையளித்தார். பின்னர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட நூலில் அவரது படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அவரும் உயிருடன் இல்லையா? 2014ஆம் ஆண்டு அவரது தாய் ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது வழக்குகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இவ்வாறான சிக்கல் நிலைக்கு அவர் தள்ளப்பட்டமைக்கான ஓர் காரணம் மறுக்கமுடியாத ஆதாரங்களுடன் அவர் நீதி கேட்டு முன்னணியில் நின்று போராடியமையாகும். புனர்வாழ்விற்காக இராணுவத்திடம் கையளித்த தனது மகனுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை தெரிந்து கொள்ளாமல் அவரது மகனுக்கான மரண சான்றிதழையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென அரசு தற்பொழுது எதிர்பார்க்கின்றதா?
வலிந்து காணாமலாக்கப்பட்ட அநேகமானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டார்கள். அல்லது கட்டாய ஆட்சேர்ப்புக்குள்ளானார்கள் என ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் போரின் இறுதிக் கட்டத்திலும் போருக்கு பின்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது? பயங்கரவாதம் தோற்கடிப்பட்டதென கோத்தபாய
ராஜபக்ஷவினால் பறைசாற்றப்பட்ட பின்னரும் ஊடகவியலாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. தற்பொழுது அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர்? பல சாட்சிகளுக்கு முன்னிலையில் தங்களது உறவுகளால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு சரணடைந்தவர்கள் தொடர்பில் தற்பொழுது எவ்வித தகவல்களும் இல்லாமல் இருப்பவர்களின் நிலையென்ன?
என்ன நடந்தது? யார் காரணம்? என்ற உண்மையை கண்டறியாது பாதிக்கப்பட்ட உறவுகளை வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல கூறுவது நடைமுறைச் சாத்தியமற்ற ஓர் விடயமாகும். இவ்வாறு கூறுவது, மனித மட்டத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தினை முறையாக கையாள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் ஓர் அலட்சியப் போக்கினையும், அறியாமையையும் அரசு கொண்டுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. மரணச்சான்றிதழ்கள் மற்றும் இழப்பீடுகள் மூலமாக தங்களது நியாயமான கோரிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் அரசின் முயற்சிகளை உறவுகள் பல வருடங்களாக எதிர்த்து வருகின்றன. அவர்களது கோரிக்கைகளும் உள்ளீடுகளுமே காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலக சட்டத்தில் காணாமல் போனமைக்கான சான்றிதழ் முறைமை உருவானது (காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலக சட்டம் 2016 இல. 14, பிரிவு 13). உண்மையைக் கண்டறிதல் என்பது காணாமல் போன உறவுகள் உயிர் வாழ்கின்றார்களா என்பதை மாத்திரம் தீர்மானிக்கும் ஒன்றல்ல, மாறாக அவர்களுக்கு நடந்தது என்னவென முழுமையாக அறியும் ஓர் செயற்பாடு என்பதை நாளாந்தம் வீதியோரங்களில் அமைதி ஆர்ப்பாட்டம் நிகழ்த்தும் பாதிக்கப்பட்ட உறவுகள் நமக்கு வலியுறுத்துகின்றனர். ஒரு முழுமையான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வரை பாதிக்கப்பட்ட உறவுகளின் வடுக்கள் ஆறாத நிலை காணப்படும். அத்துடன் இது நல்லிணக்கம் மற்றும் சமாதான உருவாக்கத்திற்கு ஒரு தடையாகவும் இருக்கலாம்.
பெப்ரவரி மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை காணப்படுகின்றது. தீர்மானம் 30/1 தொடர்பில் அரச செயற்பாடுகளின் முன்னேற்றம் பேசப்பட்டு ஆராயப்படும். நமது ஜனாதிபதியின் கடந்த வார கருத்துக்களும் இதை மையாகக் கொண்டே கூறப்பட்டது எனக் கருத வாய்ப்புக்கள் உண்டு- அதாவது முன்னர் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்வதற்காண முதல் படியே இதுவாகும். உண்மையிலேயே பல மாற்றங்களை புதிய அரசு மேற்கொள்வதை நாம் அவதானிக்கின்றோம். உதாரணமாக முக்கியமான மனித உரிமை வழக்குகளை விசாரணை செய்து வரும் அதிகாரிகள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு அவர்களது பதவிகள் பறிக்கப்படுகின்றன. தங்களது வழக்குகள் தொடர்பாக காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தில் அல்லது நீதிமன்றில் விசாரிக்கும் பாதிக்கப்பட்ட உறவுகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அதே போல சில சட்டத்தரணிகளும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அஞ்சுகின்றனர். காணாமலாக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்ற ஜனாதிபதியின் கருத்துக்கள் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலக செயற்பாடுகளின் முக்கியத்துவத்தினை வலுவற்றதாக காட்டுகின்றது. விசாரணைக்கு பின்னரே இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென அவர் தெளிவுபடுத்தியதன் மூலமாக விசாரணைகள் வெறும் கண்துடைப்புக்கு மாத்திரமே நடைபெறுகின்றன என்பதையும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவது முன்கூட்டியே முடிவெடுக்கப்பட்ட ஒரு விடயம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது. மேலும், பலனற்ற பல்வேறு விசாரணைகளைக் கொண்ட இலங்கையின் வரலாறு உண்மையைக் கண்டறிய போராடுபவர்களுக்கு எவ்வித ஆறுதலையும் அளிக்கப் போவதில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதிக்கு நாட்டின் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காப்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும். காணாமல் போன மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டறிய ஒரு விரிவான, வெளிப்படைத் தன்மை கொண்ட செயற்திறன் மிக்க ஓர் பொறிமுறையின்மையானது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பாரிய மன உளைச்சலுக்கு முகங் கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என ஐ.நா. வின் தன்னிச்சையாக மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான செயற்பாட்டுக் குழு 2016இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. .(A/HRC/33/51/Add.2,¶19.) மேலும் "உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களான பின்னரும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது” என 2019 இல் வெளியான செயற்பாட்டுக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (A/HRC/42/40/Add.1, ¶19.). இக்கண்டுபிடிப்புகளுக்கு இணங்க, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு, உண்மை மற்றும் நீதியை வழங்க வேண்டிய ெபாறுப்பு இலங்கைக்கு உள்ளது என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் சபை கொண்டிருத்தல் வேண்டும். ஜனாதிபதியின் கருத்துக்கள் இவ்விடயத்தில் இலங்கையின் வாக்குறுதிகளை இல்லாதொழிப்பதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இச்சமிக்ஞையை ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இலங்கை மக்களின் சார்பாக சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது என்பதை ஐ.நா. பிரகடனப்படுத்தல் வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களும் பாதுகாக்கப்படுவதற்கான சர்வதேச சமவாயத்தில் இலங்கை அரசு கைசாத்திட்டு அங்கீகரித்து அதனை ஒரு சட்டமாக இலங்கை உள்வாங்கியுள்ளது. இது நம் தேசத்தின் சட்டம் அதனால் "வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கான சூழ்நிலை, சட்ட அமுலாக்கல் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முன்னேற்றமும் முடிவுகளும், மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை தொடர்பிலான உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் பாதிக்கப்பட்டவரின் ஒவ்வொரு உறவினருக்கும் உரிமை உண்டு." (வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களும் பாதுகாக்கப்படுவதற்கான சட்டம் 2018 இல. 05, பிரிவு 14(1)). ஒரு முழுமையான உண்மையை கண்டறியும் செயல்முறையில் ஈடுபட்டு இலங்கை அரசாங்கம் இந்த உரிமையை மதிக்க வேண்டும். அவ்வாறு நடைபெறாத பட்சத்தில், சர்வதேச சமூகம் மாத்திரமே தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுதர முடியுமென்ற நம்பிக்கை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகரிக்கும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்கு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கண்டனம் தெரிவித்து உண்மை மற்றும் நீதியை பெற்றுத்தருமாறு அரசுக்கும் ஐ.நாவுக்கும் விடுத்துள்ள வேண்டுகோள் இது என்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செயற்படும் ஒன்பது பெண்கள் குழுக்களின் கூட்டே பெண்கள் செயற்பாட்டு அமைப்பு.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM