(தி.சோபிதன்)
மாகாண சபையை கூட முடங்க வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியே என குற்றஞ்சாட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா புதிய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மாகாண சபையை இயங்க வைக்குமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடக்குமென்றே நம்புகின்றேன். இதனை தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் மஹிந்த ராஜபக் ஷ சொல்லியிருக்கின்றார்.
அதிகாரப் பகிர்வு, கூடிய அதிகாரங்கள் எல்லாம் வேண்டுமென்று பெரிய கோஷங்களை விட்டுக் கொண்டும் உணர்வுபூர்வமாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இருக்கிற மாகாண சபையைக் கூட முடங்க வைத்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசு தான். அது எத்தனை பேருக்குத் தெரியுமென்று எனக்குத் தெரியவில்லை.
சாதாரண மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலங்களுக்கு அமைவாக மாகாண சபைகளினுடைய காலம் முடிவடைந்து இரண்டு கிழமைக்குள் தேர்தல் வைக்கக் கூடிய ஒழுங்குகளைச் செய்வதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இருக்கிறது. இது தான் மாகாண சபைத் தேர்தல் சட்டம்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் என்ன செய்தது என்றால் 2017 ஆம் ஆண்டு ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வந்தது. மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றுவதாகக் கூறி அந்தச் சட்ட மூலத்தை கொண்டு வந்தது. அதன்பின் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் அறிக்கையை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது. அவ்வாறு நிராகரித்தால் இருக்கின்ற அடுத்த ஏற்பாடு என்னவென்றால் அதற்கொரு மீளாய்வு குழு பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டு இரண்டு மாதத்தில் அந்தக் குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்.
ஆனால் முன்னாள் பிரதமர் தலைமையிலான அந்தக் குழு மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது அந்த 2017 இல் கொண்டு வந்த சட்டமூலத்துக்கு முரணான செயற்பாடு. இதை ஒருவரும் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தவில்லை.
உண்மையாகவே இந்த மாகாண சபை முறைமையை முழுக்க முழுக்க முடக்கி வைத்திருப்பது 2017 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசால் கொண்டு வரப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் முறைமையினுடைய மாற்றத்துக்கான சட்டமூலம். இதற்கு ஒன்று செய்திருக்கலாம். ஒரு நாலு வரியில் அந்தச் சட்ட மூலத்தை மீளப் பெறுகிறோம் என்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்திருந்தால் இன்றைக்கு தேர்தல்கள் நடந்திருக்கும்.
ஆதலால், இருக்கின்ற மாகாண சபை முறைமையை கூட இன்றைக்கு தேக்க நிலைமைக்கு அல்லது இயங்க முடியாமல் இருக்கின்ற நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு தான் காரணம். அதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தது கூட்டமைப்பு என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டு மாதத்தில் செய்ய வேண்டுமென சட்டத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் இதைக் கூட செய்யாமல் நாங்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அரசு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் இதற்கு சட்டவாக்கத்தை செய்ய வேண்டியிருக்கிறது.
ஆகையினால், அந்தச் சட்டவாக்கத்தை புதிய பாராளுமன்றம் செய்து உடனடியாக தேர்தல் வரக்கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. அதாவது அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய பாராளுமன்றம் ஊடாக நிச்சயமாக மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்குரிய செயற்பாடுகள் செய்யப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM