கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மக்கள் நலன்நோன்பு திட்டங்கள் என்பன புதிய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அந்த வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்றே கடந்த அரசாங்கத்தின் இறுதிக்காலத்தில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பயிற்சிகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் அரச நிறைவேற்று சேவை அதிகாரிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு என்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறினாலும் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறக் கூடாது. அபிவிருத்தி அடைந்த மேற்குலக நாடுகளில் இத்தகைய கொள்கைகளே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் அரசாங்கங்கள் மாறுகின்றபோது அதன் கொள்கைகளும் மாறுகின்ற நிலைமை காணப்பட்டு வருகின்றது. அதன் காரணமாகவே தற்போதும் இத்தகைய இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாட்டின் அபிவிருத்திகளைக் கருத்தில் கொண்டு பிரதேச செயலக மட்டங்களில் பல்வேறு செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான இந்த ஆட்சியில் பிரதேச செயலக மட்டத்திலான அபிவிருத்திகளைக் கருத்தில் கொண்டு கம்பெரலிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதேபோன்று சிறிய உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் என்டர்பிரைஸஸ் சிறிலங்கா திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவியேற்றதையடுத்து ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினால் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்மூலம் வடக்கு,கிழக்கிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மாவட்டங்கள் தோறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு கூட்டங்களில் அனுமதி பெற்று இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பெருமளவு நிதி கம்பெரலிய திட்டத்தின் மூலம் பிரதேச செயலக மட்ட அபிவிருத்திகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று என்டர்பிரைஸஸ் சிறிலங்கா திட்டத்தின் மூலமும் இலகு கடன் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதுடன் நிதி ஒதுக்கீடுகளும் முன்னெடுக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
புதிய இடைக்கால அரசாங்கம் பதவியேற்றதையடுத்து இந்த அபிவிருத்தித் திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கம்பெரலிய திட்டத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இடைநடுவில் உள்ளன. அதனை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. வேலைத்திட்டங்கள் முடிவடைந்துள்ள போதிலும் அதற்கான கொடுப்பனவு தொகைையப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் பெருமளவான ஒப்பந்தக்காரர்கள் வேலைத்திட்டங்களை முடித்துவிட்டு கொடுப்பனவை பெற முடியாது திண்டாடி வருகின்றனர்.
இந்தத் திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி வழங்கப்படாமையால் கொடுப்பனவு விடயத்தில் பெரும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இன்மையால் பல திட்டங்கள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இதேபோன்று என்டர்பிரைஸஸ் சிறிலங்கா திட்டமும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமையால் அதன் மூலம் பயன் பெற காத்திருந்த பயனாளிகளும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டன. ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் 8000 பேருக்கு புதிய நிமனங்களும் வழங்கப்பட்டிருந்தன. அன்றைய பிரதமர் கீழான அமைச்சின் கீழ் செயற்றிட்ட உதவியாளர் பதவிக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதேபோன்று இரண்டாந்தர மொழிப் பயிற்சி ஆசிரியர்களாக 1500 பேர் வரையில் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இத்தகைய நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுடன் நியமனங்களைப் பெற்ற இளைஞர், யுவதிகள் பெரும் ஏமாற்றமடைந்திருக்கின்றனர். அரசாங்கம் தமது நியமனங்களை வழங்குமா? அல்லது முழுமையாக இரத்து செய்துவிடுமா என்று பாதிக்கப்பட்டவர்கள் ஏங்கி வருகின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் அரச நிறைவேற்று சேவை அதிகாரிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு என்பனவற்றை ஜனவரி மாதம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான சுற்று நிருபமும் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையால் இந்தக் கொடுப்பனவையும் இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் முன்னைய அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள அதிகரிப்புக்கிணங்க அரசாங்க ஊழியர்களில் ஒரு பகுதியினரின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரது கொடுப்பனவுகளில் முரண்பாடு ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த அரசாங்கம் 2019 ஜனவரி மாதம் முதல் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் அரச நிறைவேற்று சேவை அதிகாரிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு ஆகியவற்றை வழங்கத் தீர்மானித்திருந்தது. அது தொடர்பில் ஏற்கனவே சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கிணங்க தற்போதைய அரசாங்கம் 2019 டிசம்பர் 10 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இம்மாதம் 20 ஆம் திகதி கூடிய அமைச்சரவை குறித்த சம்பள அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதனாலேயே இந்த விடயத்தில் இழுபறி நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இவ்வாறு கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், ஊழியர்களின் நலன்நோன்பு திட்டங்கள் என்பவற்றை தற்போதைய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்கள், அதற்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.
கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்தும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்ற னர். இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவிடம் கலந்துரையாடியுள்ளார். இதன்போது நிதிப் பிரச்சினை தற்போது காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்ததும் இந்தத் திட்டங்களுக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள் ளார்.
இதேபோன்றே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவை நேற்று முன்தினம் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆயர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது முன்னைய அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதுடன் இந்தத் திட்டங்களை தொடர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க செயற்றிட்டங்களை வகுத்துள்ளதாகவும் அதற்கிணங்க அவற்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி வழங்கியிருக்கின்றார்.
உண்மையிலேயே எந்த அரசாங்கமாக இருந்தாலும் அந்தந்த அரசாங்க காலங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்நோன்பு வேலைத்திட்டங்கள் அடுத்த ஆட்சி மாறியபோதிலும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். அவ்வாறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால்தான் நாட்டை முன்னேற்ற முடியும். இதனைவிடுத்து ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் பழைய திட்டங்கள் கைவிடப்படுமானால் அதன் மூலம் நாட்டுக்கே பாதகம் ஏற்படும். இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஜனாதிபதியும் இடைக்கால அரசாங்கத் தரப்பினரும் செயற்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM