நான் ஒரு வயதான சட்டத்தரணி என்பதால் பல இளைஞர்களும் யுவதிகளும் சில வேளைகளில் விவாகம் செய்தவர்களும் எனக்குத் தொலைபேசியில் கேட்டுக்கொள்வது என்னவெனில்,
விவாகம் செய்வதற்கு தேவையான தகைமைகள் என்ன?
விவாகரத்தின் பலனாக பிறக்கும் குழந்தைகளின் நிலை என்ன?
மீண்டும் விவாகம் செய்யலாமா?
என்பன பற்றி எழுதுமாறு கேட்பது உண்டு. இன்று அவர்களது வினாக்களுக்கு விடை எழுதும் அதே சமயம் மற்றோரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களையும் எழுதவேண்டும் என்று கருதி இக் கட்டுரையை எழுதியுள்ளேன்.
விவாகத்துக்குத்
தேவையான தகைமைகள்
1. ஆண், பெண் இருவரும் விவாகம் சட்டப்படி செய்யவேண்டுமானால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும். 18 வயது தொடங்குவது 17+1 நாளில் என்பதால் 18 ஆவது பிறந்த தினம் வரும் வரையும் காத்திருக்கதேவையில்லை.
சிலருடைய கருத்து என்று உண்டு. பெற்றோர் விரும்பினால் 18 வயதுக்கு கீழ்பட்டவர்களும் விவாகம் செய்யலாம் என்பது. இது தவறு. ஏனெனில், சட்டத்தை மீற பெற்றோருக்கும் அதிகாரம் இல்லை என்பதினாலாகும்.
சட்டப்படியான விவாகத்தை புரிந்த இருவர் அந்த விவாகம் நிலைத்திருக்கும்போது இன்னுமொரு விவாகத்தை சட்டப்படி செய்யமுடியாது. அவ்வாறு விவாகம் முடித்தால் பலதார விவாகம் என்ற குற்றத்துக்கு ஆளாவார்.
விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் யாராவது விவாகம் செய்ய விரும்பினால் விவாகம் சட்டப்படி செய்யலாம்.
விவாகரத்து பெறமுன்னர் விவாகம் செய்ய முடியாது என்பது முக்கியம். விவாகரத்து நடைபெறும்போது நீதிமன்றம் முதலில் பின்னுறுதி கட்டளை (OPDERNISI) என்ற ஒரு கட்டளையை பிறகு உறுதி செய்யப்பட்டு நிரந்தரக் கட்டளை வழங்கப்படும். நிரந்தரக் கட்டளை வழங்கப்பட்ட பின்னரே விவாகம் செய்ய சட்டம் இடமளிக்கிறது. பின்னுறுதி மாறும் என்பதற்கு நீதிமன்றம் உத்தரவாதம் அளிக்கமாட்டாது. ஆகவே, இவ்விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.
தடை செய்யப்பட்ட உறவினர்கள் இருவர் விவாகம் செய்யமுடியாது. அதனை மீறி இருவரும் விவாகம் செய்தால் அது வெறிதான திருமணம் (VOID MARRIAGE INCEST) என்ற குற்றவியல் வழக்கு ஒன்றையும் தொடுக்கலாம். மேலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் பெயர் தாயுடையதாக இருக்கும் தகப்பனின் நிரலில் கோடு ஒன்று கீறப்படவேண்டும். ஆனால் நடைமுறையில் இது இருக்கிறதே தெரியாது.
இவை உரோமச் சட்டத்தின் கீழ் ஆளப்படுபவர்களுக்கே பொருந்தும். ஏனெனில் இலங்கையில் பல இனம், பல மதம் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இதனால் அவர்களுக்குரிய மதங்களின் அனுசரணையுடன் விவாகம் நடைபெறலாம்.
உரோமச்சட்டத்தின் கீழ் ஆளப்படுபவர்கள் பொதுவாக திருமணச் சட்டத்தின் கீழேயே விவாகம் செய்தால் மேலேயுள்ள விதிகளில் பெரும்பாலானவை அவர்களுக்கே பொருந்தும்.
விவாகரத்து மாவட்ட நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யப்படவேண்டும். சிலர் பொலிஸ் நிலையம் சென்று தனக்கு விவாகரத்து பெற்றுத்தரவேண்டும் என்று அழுது முறைப்பாடு செய்வதுண்டு. பொலிஸாரால் விவாகரத்து தரமுடியாது. அவர்களால் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யவும் முடியாது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
விவாகரத்து பெறுவதற்கு
தேவையான சட்டவிதிகள்
விவாகம் செய்யும் இருவர் மனமொத்து விவாகப்பதிவாளர் முன்னிலையில் அதனை பிரகடனப்படுத்தி அவர்களது கையொப்பத்தை இரண்டு சாட்சியாளரினதும் விவாகப் பதிவாளரதும் முன்னிலையில் இடுவதுடன் விவாகம் நிறைவேறிவிடுகிறது.
மட்டக்களப்பு விவாகரத்து வழக்கு ஒன்று உயர் நீதிமன்றம் வரை சென்றது. அந்த விவாகம் சம்பிரதாய மூலம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் விவாகரத்து பெற நீதிமன்றம் செல்லவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. விடை ‘ஆம்’ என்று கூறப்பட்டது. ஆனால் விவாகம் சம்பிரதாயப்படி (விளாம் பழம்) ஊட்டியபடி நடைபெற்றதால் சட்டப்படி விவாகம் நடைபெற்றதாக கொள்ளமுடியாது என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே, நீதிமன்றம் சட்டப்படியான திருமணத்தையே ரத்து செய்யும் அதிகாரத்தை கொண்டுள்ளது என்பதை கவனிக்கவேண்டும்.
விவாகம் செய்த இருவருக்கிடையில் குடும்பச் சண்டைகள், ஆதனச் சண்டைகள் மற்றும் சீதனச் சண்டைகள் நடைபெறுவதுண்டு. அவற்றின் அடிப்படையில் அவர்கள் இருவரும் பிரிந்து பல வருடம் வாழ்வதும் உண்டு. அவற்றை காட்டி நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்யமுடியாது. நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யவேண்டுமாயின் சில காரணங்களை காட்டியே வழக்கை தாக்கல் செய்யலாம். அக்காரணங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்திலேயே விவாகரத்து வழங்கப்படும். அத்தவறுகள் அல்லது காரணங்களை விவாக குற்றங்கள் (MATRI MONIAL FAULT) என அழைக்கப்படும்.
விவாக குற்றங்களாக பின்வருவனவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன
அ. விவாகத்தின் பின்னர் தனது தலைவர் அல்லது துணைவி அல்லாத வேறு ஒருவருடன் பாலியல் உறவில் விருப்பத்துடன் ஈடுபடுவது இதனை ஆங்கிலத்தில் (ADULIERY) என்று அழைப்பர். தமிழில் சோரம் என்றும் அழைப்பர்.
ஆ. விவாக பந்தத்தை முறிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சில குற்றங்களை செய்தல். இதனை வண்ம உறவறுத்தல் (MALICOUS DESERTION) என அழைப்பர்.
இ. ஆண்மை இன்மை. ஆண்மை என்பது வேறு விடயங்களில் பார்ப்பது இல்லை. பாலியலில் ஈடுபட ஆண்மை இல்லை என்பதுவே இதுவாகும். சில சந்தர்ப்பங்களில் சில காரணங்களால் முழு ஆடவனுக்கு பாலியல் ஈடுபட ஆண்மை இல்லாமல் இருக்கும். ஆனால், இதனை சுகப்படுத்தலாமா என்று பார்க்கவேண்டும் சுகப்படுத்தவே முடியாது என்று கண்டால் வைத்தியரின் அறிக்கையின் (INCURABLE SEXUAL IMPORTENCY) என்று கண்டால் மட்டுமே இப்பிரிவின்கீழ் விவாகரத்தை நீதிமன்றம் வழங்கும்.
மேலேயுள்ள மூன்று காரணங்களில் ஏதாவது ஒன்றாவது இருந்தால்தான் நீதி மன்றம் விவாகரத்தை வழங்கும்.
கணவனுக்கு எதிராக நடைபெறும் குற்றவியல் வழக்குகளில் கணவனுக்கு எதிராக சாட்சியம் அளிக்குமாறு மனைவியை கேட்க யாருக்கும் உரிமையில்லை. இது சாட்சியியல் சட்டத்தின் கீழ் உள்ள விதியாகும்.
கணவன் இறந்த பின்னர் அவனது இறுதி விருப்பாவணத்தால் குறிப்பிடப்பட்டிருந்த அசையும் அசையா சாதனங்கள் தவிர்ந்த வேறு குறிப்பிடப்படாத ஆதனங்கள் இருப்பின் அவ்வாவணங்களை பெற மனைவிக்கு உரிமையுண்டு. இவ் விடத்தில் இறுதி விருப்பாவணம் பற்றி சிறு தகவல் ஒன்றையும் வாசகர்கள் அறியவேண்டும்.
சிலவேளைகளில் இறுதி விருப்பாவணம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கணவன்இறந்தால் அவனது ஆசைப்படி எழுதி வைத்த நபருக்கு நிருவாக தத்துவப் பத்திரத்தை நீதிமன்றம் வழங்கும்.
இறுதி விருப்பாவணம் ஒன்றை எழுதாமல் இறந்தால் அவனது சொத்தை பெற மனைவி மட்டுமல்ல வேறு பலரும் போட்டியிடலாம். ஆனால் மனைவிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இது சம்பந்தமாக மேலும் அறியவேண்டுமானால் கோத்தாடுகொட எதிர் சிறிமான என்ற வழக்கை படிக்கவும். இந்த வழக்கில்மனைவிக்கு இறுதிநிருவாக பத்திரம் வழங்கப்படவில்லை. நண்பரான சிறிமானவுக்கே அது வழங்கப்பட்டது.
விவாகரத்து வழங்கப்பட்ட இரண்டு கட்டங்கள் உண்டு. ஒன்று விளக்கத்தின்பின்னர் வழங்கப்படும். ஓடர் னைசை எனப்படும் பின்னுறுதி (ORDER NISI) கட்டளையும் அதன் பின்னர் வழங்கப்படும் முற்று உறுதி கட்டளையுமான இரண்டு கட்டங்களே அவையாகும்.
சில சமயங்களில் பின்னுறுதி கட்டளை ORDENISI வழங்கப்பட்ட பின்னர் இரு பகுதியாரும் தாம் இணைந்து வாழப்போவதாகவும் பின்னுறுதிக்கட்டளையை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்கலாம். நீதிமன்றம் அப்போது பின்னுறுதிக் கட்டளையை ரத்து செய்யும்.
பின்னுறுதிக் கட்டளை ஒன்று முற்றுறுதிக்கட்டளையாக மாற்றாமல் இருந்தால் எவ்வளவு காலம் சென்றாலும் அவர்கள் வேறு விவாகம் செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னுறுதிக்கட்டளை ABSOLUTE ORDER எனப்படுகின்றது.
பின்னுறுதிக்கட்டளை வழங்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்னர் நீதிமன்றம் சுயமாகவே முற்றுறுதி கட்டளையை வழங்கும் என சிலர் கூறுவதுண்டு. இது தவறு. பின்னுறதியில் கட்டளையை பெற விண்ணப்பம் செய்தே பெறவேண்டும். குடியியல் நடைபெற்ற விளக்கங்களையும் படிக்கவும்.
விவாக பிரிமனைப்பணம் (ALIMONY) விவாகம் பரிபூரணமாக ரத்துச் செய்யப்படும் வரை கணவனால் வழங்கப்படவேண்டும்.
விவாகரத்தின் பின்னரும் மாஜி மனைவிக்கு இருப்பிட வசதி கணவனால் செய்து கொடுக்கப்படவேண்டுமா என்ற வினா பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் எழுவது உண்டு. இது சம்பந்தமாக பல தீர்ப்புக்கள் உண்டு. இவற்றில் இரண்டு எதிரும் புதிருமான தீர்ப்புக்கள் பின்வருமாறு ஆகும்.
அ. டயஸ் எதிர் கொடிதுவக்கு
என்ற வழக்கு
1. இந்த வழக்கில் கணவனானவன் மனைவியின் பராமரிப்புக்கு கடமைப்பட்டவன். ஆகவே அவளது இருப்பிடத்துக்கு கணவன் இல்லிடம் ஒன்றை கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. விபரத்துக்கு 3 ஸ்ரீல.பு.ச.அறிக்கை 3542 பார்க்கவும்.
2. ஸ்ராலா எதிர் மார்கிட் சில்வா (2002) ஸ்ரீல.பு.ச.அறிக்கை169ம் இதில் கூறப்பட்டது என்னவெனில், மனைவிக்கு இல்லிட வசதி செய்து கொடுக்கவேண்டியது கணவனின் கடமையென்றும் ஆகவே இல்லிடம் என்று கொடுக்காமல் அவளையும் குழந்தைகளையும் வீட்டில் இருந்து வெளியேற்றமுடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
3. ஆனால், விவாகரத்து பெற்றபின்னர் பெண்ணானவள் அதே வீட்டில் தொடர்ந்தும் இருக்கமுடியும் என்பது நடைமுறையில் சாத்தியப்படாது. புதிதாக வரும் மனைவியைப் பார்த்துக்கொண்டு மாஜி மனைவியால் இருக்கமுடியாது என்றே கொள்ளவேண்டும்.
விவாகரத்தின் பயனால்
கிடைக்கும் பலாபலன்
அ.முன்னைய விவாகம் ரத்தாகிறது.அவளது பெயரின் முன் இருந்த MRS.............. என்ற பெயர் ரத்தாகிறது.
ஆ. விவாகரத்து பெற்ற இருவரும் மீண்டும் விவாகம் செய்யலாம். புதிதாக விவாகம் செய்த ஆணின் பெயரை தனக்கு MRS............. என்று பெண் பாவிக்கலாம்.
இ. விவாகம் ரத்து செய்யப்பட்டு 280 நாட்களுக்கிடையில் கிடைக்கும் பிள்ளைகளுக்கு மாஜி கணவனின் பெயரே உரித்தாகும். அவரே பிள்ளையின் தகப்பனாக அங்கீகரிக்கப்படுவர்.
10. விவாகம் ஒன்று ரத்து செய்யப்பட்டு பின்னுறுதிக்கட்டளை கிடைக்கும் வரை விவாகம் செய்யமுடியாது. ஆனால் பலர் இதனை கவனிக்காமல் பின்னுறுதி கட்டளை கிடைக்கும் முன்னரே வேறு ஒருவரை விவாகம் செய்து விடுகின்றனர்.இது பாரிய சட்டத்தவறாகும். ஆயினும் கணவன்மார் இதனை பொருட்படுத்தாமல் போனால் போகட்டும் போடா என்று பாடித்திரிவதைக் காணலாம். கணவனைப் பொறுத்தவரை மனைவியின் தொல்லை தொலைந்தது என்று கூறி அமைதியாக இருக்கலாம் என்று நினைத்தாலும் சில சட்டக் கட்டுப்பாட்டுக்கு அவன் உள்ளாக வேண்டும் என்பதை அவனும் அறிவதில்லை. அவளும் அறிவதில்லை. தொலைந்தது தொல்லை என்று இருக்கின்றார்கள்.
ஆனால் ABSOLUTE ORDER இல்லாமல் வேறு ஒரு விவாகம் செய்வது தவறு என்பது மட்டுமல்ல அந்த விவாகம் VOID வெறிதான திருமணமாகவே சட்டம் கருதும்.
பின்னர் புதிதாக விவாகம் செய்தவருடன் குடும்பம் நடத்தும்போது அது வெறிதான விவாக வாழ்க்கையாதலால் புதிய கணவன் இவளுக்கு பராமரிப்பு பணமோ வேறு ALIMONEY என அழைக்கப்படுகின்ற பணமோ வழங்கத்தேவையில்லை. குழந்தைகள் கூட அவனது பெயரில் இருக்க முடியாது. விரும்பிய போது அவளை விட்டு விட்டு இன்னும் வேறு ஒரு விவாகத்தை அவன் செய்யலாம். பெண்ணானவள் அநாதையை போலவே சட்டத்தின் முன்னிலையில் இருப்பாள்.
ஆகவே, பெற்றோரும் மற்றோரும் தனது மகளுக்கு விவாகரத்து பெற்று கொடுத்து மீண்டும் விவாகம் செய்ய விரும்பினால் மிக கவனமாக பார்க்கவேண்டியது முன்னைய விவாகம் ABSOLUTE ORDER ஐ கொண்டுள்ளதா என்பதாகும் ABSOLUTE ORDER இல்லையெனில் VOID விவாகத்தையே தனது மகளுக்கு செய்து வைக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளவேண்டும். ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு என்ற நிலையில் இல்லாமல் தெளிவாக இருந்து விவாகரத்தை செய்து கொடுக்கவேண்டும்.
விவாகரத்துக்கு முன்னால் பல
விடயங்களை கவனிக்க வேண்டும்
அ. பிள்ளைகளின் பாதுகாவல் யாரிடம் இருக்கவேண்டும் என்பது முக்கியம். (CUSTODY OF CHILDREN) தகப்பனும் தாயும் பிள்ளைகளின் பாதுகாப்பை கோரலாம். நாட்டுப்புறங்களில் மட்டுமல்ல படித்தவர்கள் மத்தியிலும் ஒரு கதையுண்டு பெண்பிள்ளை தாய்க்கு என்றும் ஆண் பிள்ளை தகப்பனுக்கு என்றும் கூறுவதைக் காணலாம். இது தவறான அபிப்பிராயமாகும். அப்படிச் சட்டம் இல்லை.
ஆ. பிள்ளை யாரிடம் இருந்தாலும் அப்பிள்ளையை பார்க்க மறுபகுதியாருக்கு சேர்வு (ACCESS) என்ற ஒன்று உண்டு. நீதிமன்றம் அதனை கட்டாயம் வழங்கவேண்டும்.
இ. நீதிமன்றம் யாரிடம் பிள்ளையின் பராமரிப்பை கொடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது எப்படியெனில், குழந்தையின் கரிசனையை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கிறது. BEST INTERESTO OF THE CHILD) யோ நீதிமன்றம் அடிப்படையாக கொள்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், பிள்ளைகளின் பராமரிப்பை மாற்ற நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்பதாகும். ஏனெனில் விவாகரத்து பெற்ற பெண்ணை அவளுக்கு பிறந்த குழந்தையை இரண்டாம் தாரமாக மணப்பவன் பல சமயங்களில் கொடுமைப்படுத்துவது உண்டு. வேலைக்காரர்களை விட மோசமாக நடத்துவது, இவற்றை கவனித்து பிள்ளையின் பாதுகாப்பை எந்த நேரத்தில் மாற்றலாம். மேலும் நீதிமன்றம் பிள்ளையின் நிலையை நன்னடத்தை உதவியாளர் சிறுவர் கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோர் மூலம் மேற்படி குழந்தைகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்று அதற்கு தக்க பராமரிப்பை மாற்ற சட்டத்தில் இடம் உண்டு. ஆகவே கூறக்கூடிய அறிவுரை விவாகரத்து பெறாமல் இருப்பதேயாகும்.குழந்தைகளுடன் இருப்பவர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
தொகுப்புரை
வாழ்க்கையில் ஒருவர் எத்தனையோ பிரச்சினைகளை சமாளிக்கவேண்டியுள்ளது. எல்லாவற்றையும் தனக்குச் சார்பாக தீர்க்க வேண்டும் என்று நினைக்ககூடாது; சமாளித்து போகவேண்டும். விசேடமாக கணவன் மனைவியர் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் பல குறைபாடுகளை நாம் கணவன் மனைவியிடம் காணலாம். ஆகவே இயன்றவரை அக்குறைகளை அவர்களிடம் எடுத்துக்கூறி அல்லது சமூகநல வல்லுநர் குடும்ப பெரியார்களிடம் எடுத்துக்கூறி நிலையை திருத்த முயலவேண்டும். அதனை விடுத்து குடும்பத்தை அழிக்கும் காரணங்களில் ஒன்றான விவாகரத்தை பெறுதலை செய்யக்கூடாது.
சட்டமே அதற்கு இடம் அளிக்கின்றது. விவாகரத்து பெறமுன்னர் கணவர் மனைவி விரும்பின் SEPARATION என்ற ஒரு நடவடிக்கை உண்டு. அதனைப் பெற்று குடும்பத்தை பிரிக்காமல் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடிக்காமல் வாழ முயற்சிக்க வேண்டும்.
- கே.ஜி.ஜோன் - சட்டத்தரணியும் ஆய்வாளரும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM