மலையகத்தில் அமையவுள்ள தேசிய பல்கலைக்கழகம் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் - கலாநிதி ச. கருணாகரன்
மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைவது குறித்து காத்திரமான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், அப்பல்கலைக்கழகத்தின் தேவை மற்றும் எவ்வாறான துறைகளைக் கொண்டிருத்தல் அவசியம் என்பது பற்றி மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் சமூக விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ச. கருணாகரன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணல் விபரம்:
கேள்வி : மலையகப் பல்கலைக்கழகம் பற்றி தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள்?
பதில் : ‘மலையகப் பல்கலைக்கழகம்’என்று கூறுவதைவிட மலையகத் தமிழரின் தனித்துவத்தைப் பேணக்கூடிய தேசிய பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்தல் பற்றிய முயற்சிகள் எனக் கூறுவது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.
மேற்படி விடயம் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் நியாயமானதும் காலத்திற்கேற்றதுமாகும் என்பதில் ஐயமில்லை. அதனைப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு மலையகச் சமூகம் தற்போது கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளிலும் ஒப்பீட்டு ரீதியில் (முன்னர் இருந்த நிலையைவிட) முன்னேறியுள்ளது என்பதை இலங்கை வரலாற்றை நன்கு அறிந்த எவராலும் மறுக்கவியலாது. அரசியல் சமூகப் பொருளாதார உரிமைகள் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த மலையகத் தமிழ் மக்களிடையே கல்வி, கலை, இலக்கியம், அறிவியல், வர்த்தகம், விளையாட்டு போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள இவ் வளர்ச்சியானது குறைத்து மதிப்பிடப்பட முடியாதது.
இந்நாட்டில் வாழ்கின்ற ஏனைய இன சிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களுடன் ஒப்பிடுகையில் பிரஜாவுரிமை, வாக்குரிமை போன்றன பறிக்கப்பட்டு அரசியல் உரிமைகள் உள்ளிட்ட சமூகப் பொருளாதார நலன்களும் அற்றவர்களாக மிகவும் துன்புற்று அண்மைக் காலம் வரை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படாதிருந்த இம் மலையக மக்களின் முன்னேற்றமானது இமாலய சாதனையாகும். இவ்வாறான ஒரு பின்னணியில் மலையகத்தில் அமைக்கப்பட வேண்டும் எனக் கோரப்படுகின்ற தேசிய பல்கலைக் கழகம் இச் சமூகத்தை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்கு உதவும்.
கேள்வி: இப்பல்கலைக்கழகம் மலையக சமூகத்திற்கான தனித்துவமான கல்வி நிறுவனமாக இருக்க வேண்டுமா?அல்லது அனைவருக்கும் பொதுவான தேசிய பல்கலைக்கழகமாக இருத்தல் வேண்டுமா?
பதில்: அனைத்து இன மாணவர்களும் கற்கக் கூடிய பொதுவான ஒரு தேசிய பல்கலைக்கழகமாக இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாதவிடத்து இப் பல்கலைக்கழகத்தில் கற்று வெளியேறும் மாணவருக்கு வழங்கப்படும் சான்றிதழின் அங்கீகாரம் பற்றிய பிரச்சினைகள் ஏற்படலாம். இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை இனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் முகமாக நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களைப் போன்று பல்லின மற்றும் பன்மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் தேசிய பல்கலைக்கழகமாக அமைதல் வேண்டும். உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எவ்வாறாயினும் அமையவிருக்கும் பல்கலைக்கழகமானது இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள சம்பிரதாயபூர்வமான பல்கலைக்கழகக் கல்விமுறையிலிருந்து (ஏட்டுக் கல்வி) பெரிதும் விடுபட்டு மலையக சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை(செய்முறைப்பயிற்சிகளுடனான தொழிற்கல்வி மற்றும் நவீன பாடநெறிகள்) வழங்கும் ஒரு நிலையமாகக் காணப்படல் வேண்டும் (தொழில்சார் பல்கலைக்கழகம்). அதாவது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான முறைசார் கல்வி அடிப்படையிலான இளமாணிப் பட்டங்களையும் பின்னர் அவர்களுக்கு டிப்ளோமா மற்றும் முதுமாணிக் கற்கை நெறிகளையும் வழங்கும் ஒன்றாகச் சுருங்கி விடக்கூடாது.
மேலும் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் குறிப்பாகப் பெருந்தோட்டத் தொழிலாளருக்கான தொழில்சார் விரிவாக்கல் நிகழ்ச்சித் திட்டங்கள் (extension programmes) மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான கல்வியறிவூட்டல் போன்றவற்றையும் நடத்துதல் வேண்டும். உதாரணமாக இந்தியாவிலும் அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இவ்வாறான பட்டப் படிப்பு சாராத தொழிலாளருக்கான தொழில்சார் விரிவாக்கல் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் கூறலாம். மேலும் இலங்கையின் பெருந்தோட்டக் கைத்தொழிலை நவீன மயப்படுத்துவதற்கான அறிவியல்சார் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான களமாகவும் இப் பல்கலைக்கழகம் தனது வகிபங்கினை ஆற்றலாம்.
கேள்வி: மலையகத்திலுள்ள ஆசிரியர்கள் இதன் மூலம் பயன்பெறக்கூடியதாக இருக்குமா ?
பதில்: நிச்சயமாக. மலையகத்திலுள்ள கல்வி கற்றோரில் பெரும்பாலானோர் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சேவையிலுள்ளோருக்கான வாண்மைவிருத்திக்கான (professional development) பாடநெறிகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதும் இப் பல்கலைக்கழகத்தின் பிரதான பணிகளில் ஒன்றாக இருத்தல் வேண்டும். ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி நிகழ்ச்சிகள் அல்லது பாடநெறிகள் ஏற்கனவே இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பொதுவான அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கமைவானதும் மேலிருந்து -கீழ்நோக்கியதுமான (top-down) அணுகுமுறையிலிருந்து விடுபட்டுப் பெருந்தோட்டப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் பணியாற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வியதிகாரிகளின் குறிப்பான பிரச்சினைகளுக்கான தீர்வினை நோக்கிக் கொண்டு செல்வதாக அமைதல் வேண்டும். மேலும் பெருந்தோட்டத்துறையின் கல்வியில் நிலவும் குறிப்பான பிரச்சினைகள் பற்றிய ஆய்வுகளை விரிவான முறையில் முன்னெடுப்பதற்கும் அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கும் இப் பல்கலைக்கழகத்தின் மூலம் பங்களிப்பை நல்க முடியும்.
அதேவேளை, அமையவிருக்கும் பல்கலைக்கழகமானது பிரதேசத்தில் செறிந்து வாழும் சிறுபான்மை இனங்களின் கலை, கலாசார அடையாளங்கள் பேணப்படும் விதத்திலான பாடநெறிகளையும் நடத்துதல் வேண்டும்.அவை தொடர்பான ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டு அவற்றுக்கு ஊக்கமளிக்கலாம்.
கேள்வி: அவ்வாறு ஆரம்பிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு போதிய வளங்களை வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றதா?
பதில்: வரலாற்று ரீதியாக நோக்கின் அவ்வப் பிரதேச அரசியல் தலைமைகளின் சமூகம் சார் கோரிக்கைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களின் விளைவாக அமையப் பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தேசிய பல்கலைக்கழகங்களுக்கும் அரசாங்கமானது உரிய பௌதிக, மானிட வளங்களை வழங்கியுள்ளது. எனவே உத்தேச பல்கலைக்கழகத்திற்கும் தென்னிலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களை ஒத்த வசதிகள் வழங்கப்படும் என்பதில் ஐயமில்லை.
கேள்வி: பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு முன்னர் வளாகம் ஒன்றை ஆரம்பிப்பதில் தடைகள் இருக்கின்றனவா?
பதில்: எந்த தடைகளும் இல்லை. இலங்கையின் உயர்கல்வி வரலாற்றில் அவ்வாறு பல்கலைக்கழக வளாகங்களாக ஆரம்பிக்கப்பட்டவை பின்னர் தனியான ஒரு தேசிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்படுவதற்கு எவ்வித தடைகளும் இருக்கவில்லை.
கேள்வி: தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?
பதில்: எனக்கு மட்டுமன்றி சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் இம்முயற்சியில் ஆர்வமும் அக்கறையும் நம்பிக்கையும் உள்ளது. இடையறாது இதனை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுடன் குறிப்பாக, இலங்கை அனுபவத்திற்கிணங்க உரிய நேரத்தில் அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் இதனை வெற்றி கொள்ளலாம்.
கேள்வி: மலையக சமூகத்திற்கான அரசாங்கத் தொழில் என்றால் அது பெரும்பாலும் ஆசிரியர் நியமனங்கள் மட்டுமே என்ற நிலை எப்போது மாறும்?
பதில்: இந் நிலையை மாற்றுவதற்கு அரசியல் தலைமைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தமிழ் மொழியில் கல்வி நிர்வாகம் மற்றும் பொது நிருவாக, உள்ளூராட்சி அலுவல்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றன இடம்பெறும், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த சிங்கள மொழியில் மேற்படி அலுவல்கள் நடைபெறும் ஏனைய ஏழு மாகாணங்களிலும் செறிவாகவும் சிதறியும் வாழும் மலையகத் தமிழர் கல்வி நடவடிக்கைகள் தாய்மொழியில் (தமிழ்) இடம்பெறும் பாடசாலைகளைத் தவிர ஏனைய இடங்களில் மிகவும் அரிதாகப் பணியாற்றுவது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல.ஏனெனில் வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் ஆசிரியர் சேவை உள்ளிட்ட ஏனைய அரசாங்கத் துறைகளில் தமிழ் மொழியில் பணியாற்ற முடியும்.
ஆனால், பிற மாகாணங்களில் வாழும் சிறுபான்மையினர் பிறமொழிகளில் (குறிப்பாகச் சிங்கள மொழி) ஆற்றலைப் பெற்றிருப்பது இன்றியமையாதது. எனவே, ஆசிரியர் சேவை தவிர்ந்த ஏனைய அரசாங்கத் தொழில்துறையில் பிரவேசிப்பதற்கு மலையகத்தின் கற்ற இளைஞர்கள் மேலதிகமாக முயற்சிக்க வேண்டியுள்ளது. அத்துடன் இன விகிதாசாரத்திற்கிணங்கத் தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக மலையகத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் (ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக) நுவரெலியா மாவட்டத்தில் ஒரே ஒரு கல்வி வலயத்தில் மட்டுமே தமிழர் பணிப்பாளராகவுள்ளார். மேலும் பொது நிருவாகம், உள்ளூராட்சி, நீதித்துறை மற்றும் ஏனைய நிறுவனங்களில் மிகச் சொற்பளவான மலையகத் தமிழர்களே அரசாங்கப் பதவிகளிலுள்ளனர். இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கு அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூகத்தினரின் தொடர்ச்சியான அழுத்தமும் திட்டமிட்ட செயற்பாடுகளும் இன்றியமையாதவை.
கேள்வி: மலையகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற இந்த காலப்பகுதியில் இவர்கள் பல்வேறுதுறைகளில் உள்நுழையவேண்டும் என்ற கரிசனை உருவாகிவிட்டதா?
பதில்: இக்கருத்தை ஓரளவுக்கு ஏற்கலாம். இவ்வினாவை பட்டதாரிகளுக்கு மட்டுமன்றி க.பொ.த. சா.த., உ.த. பூர்த்தி செய்துள்ளோர் உள்ளிட்ட ஏனையோருக்கும் பயன்படும் வகையில் இங்கு கலந்துரையாட விரும்புகின்றேன்.
முன்னரை விடக் கரிசனை அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.இது உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடியதே. அண்மைக் காலங்களில் அகில இலங்கை மட்ட சேவைகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்து மலையகத்தைச் சேர்ந்த பலர் SLEAS, SLTES, SLPS போன்றவற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக சிலரும் கடமையேற்றுள்ளனர். இவை கல்வித்துறை சார்ந்த அடைவுகளாகும். எனினும், நீங்கள் இங்கு கருதுகின்ற ஏனைய துறைசார் (கல்வித்துறைசார) பதவி நிலைகளுக்கு (Sri Lanka Judicial Service, Sri Lanka Planning Service, Sri Lanka Foreign Service etc.) செல்வோரின் எண்ணிக்கை ஒப்பீட்டு ரீதியில் மிகவும் குறைவானதாகும். இவை தவிரவும் முப்படை,பொலிஸ் சேவை, சுகாதாரத்துறையிலுள்ள தாதியர்சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கும் தாமாக முன்வந்து விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சை மற்றும் போட்டிப்பரீட்சைகளுக்குத் தோற்றுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவேயுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM