எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் எல்லா அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. ஆட்சியை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்பதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கின்றன. அதேவேளை, சிறுபான்மையினக் கட்சிகள் ஆட்சியின் பங்காளிகளாக இருப்பதற்கு வெற்றி, தோல்வி கணிப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அரசியல் கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் பௌத்த இனவாதிகள் தங்களின் இனவாத புராணங்களை பாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி, இனவாத சிந்தனைகள், சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முற்றாக புறக் கணிக்கும் மனப்பாங்கு என்பவற்றுக் கிடையே இலங்கை மாட்டியுள்ளது.
இவ்விதமாக தொடர்ந்து செல்லுமாயின், இலங்கையின் எதிர்காலம் என்பது சூனியமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இனவாத கரு மேகங்களைக் கொண்டதாகவே இருக்கும் என்பதற்கு தற்போது தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் எடுத்துக் காட்டாக திகழ்கின்றன.
சிங்கள பௌத்தர்களின் ஆதரவு
பௌத்த மக்களின் பெரும் ஆதரவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக் கொண்ட பொதுஜன பெரமுன, பாராளுமன்றத் தேர்தலிலும் அத்தகையதொரு வெற்றியை இலக்கு வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்கு சிங்கள பௌத்த மக்களின் பெரும் ஆதரவே பிரதான காரணமாகும். சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை உச்சஅளவில் பெற்றுக் கொள்வதற்கு ஏற்றவாறே தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பௌத்த கடும்போக்குவாதிகளும், அமைப்புக்களும் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்குரிய அனைத்து காரியங்களையும் செய்திருந்தார்கள். இதனால், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றி தனியே பௌத்த சிங்கள மக்களின் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. ஆயினும், சிறுபான்மையினரும் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி கொண்டாலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி கொள்ள வேண்டிய தொரு கட்டாயம் பொதுஜன பெரமுனவுக்கு இருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியமைக்கும் அளவுக்காவது 113 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் தான் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியினை முழுமையாக ருசிக்க முடியும். இதனால், ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை கவர்ந்து கொள்வதற்காக பயன்படுத்திய அதே தந்திரோபாயத்தையே பாராளுமன்றத் தேர்தலிலும் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இதனை பொதுஜன பெரமுனவினரின் கருத்துக்களின் மூலமாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அதேவேளை, பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தலில் கையாண்ட பௌத்த மேலாதிக்க பிரசாரத்தை பாராளுமன்றத் தேர்தலில் கைவிட்டு, சிறுபான்மையினரின் வாக்குகளையும் அதிகமாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்று திட்ட மிடுமாயின் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளில் பெரும் எண்ணிக்கையை இழக்க வேண்டியதொரு நிலைமை ஏற்படும். அதனால், பொதுஜன பெரமுனவினால் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையிலிருந்து விடுபட முடியாததொரு அரசியல் சூழலும் உள்ளது.
பொதுஜன பெரமுனவினர் தமது பிரசாரங்கங்களின் மூலமாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் தமது இறுதி இலக்கு ஆகக் குறைந்தது 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதாகவும் இருக்க வேண்டுமென்று இருக்கின்றார்கள். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக் கொள்ள முடியுமென்று தெரிவிக்கும் அரசியல்வாதிகளும் உள்ளார்கள். ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளை மாவட்ட அடிப்படையில் பார்க்கின்ற போது சுமார் 105 ஆசனங்களையே ஆகக் கூடுதலாக பெற்றுக் கொள்ள முடியுமென்று அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பீடுகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரின் தோல்விக்கு பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளை பெரும்பான்மையாக பெற்றுக் கொள்ளாமையே காரணமாகும். ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தமது கொள்கையையும் பிரசாரத்தையும் அமைத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டு ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குரிய மாற்றுத் திட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சி வகுத்து செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில்தான் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் 113இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியு மென்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்துக் கொண்டாலும் அதனை ஒரு மிகைப் படுத்தலான பிரசாரம் என்று தான் சொல்ல வேண்டும். எவ்வாறாயினும், பாராளுமன்றத் தேர்தலில் எந்த வொரு அரசியல் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது என்பது மிகக் கடினமானதாகவே இருக்கும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
சிறுபான்மையினக் கட்சிகள்
சிறுபான்மையினக் கட்சிகளில் மனோ கணேசன் தலைமையில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி தமது தோழமைக் கட்சிகள் யாவும் தனித்துப் போட்டியிடாது ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென்று திட்டமிட்டுள்ளது. அவ்வாறு போட்டியிடும் போதுதான் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று ஐக்கிய தேசியக் கட்சியினர் கருதுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி தோழமைக் கட்சிகள் யாவும் யானை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென்று விரும்பினாலும் அல்லது திணித்தாலும் எல்லா மாவட்டங்களிலும் தோழமைக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டத்துக்கு பணியுமா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட வேண்டுமென்று அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதே நிலைப்பாட்டினையே அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடும் போது அதன் மூலமாக முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவர்களே பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள். ஏனெனில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களிடையே முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கின்றது. அத்தோடு, இவ்வாறு இணைந்து போட்டியிடும் போது மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ளாது போகும் போது மக்கள் காங்கிரஸ் செல்வாக்கு அம்பாறை மாவட்டத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும். அதேவேளையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சரிவினை சீர்செய்வதற்கும் முடியுமாக இருக்கும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட வேண்டுமென்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் விரும்புகின்றார்கள் என்ற போதிலும், முஸ்லிம் காங்கிரஸின் வழமையான மூன்று வேட்பாளர்கள் விடயத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் அலுத்தும், வெறுத்தும் போயுள்ளார்கள். இதனால், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் புதிய வேட்பாளர்களை எதிர்பார்க்கின்றார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமாயின் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டால் இரண்டு ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அந்த இரண்டு பேரும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
அதேவேளை, திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் பொதுஜன பெரமுன அம்பாறை தொகுதியில் மாத்திரம் 89ஆயிரத்து 674 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனால், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அது சாத்தியமா என்பதுதான் கேள்வியாகும்.
இதேவேளை, இம்முறை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமது வாக்குகளை பல கட்சிகளுக்கும் அளிக்கும் சூழ் நிலையும் உள்ளது. அம்பாறை மாவட்ட தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சிகளை ஒரு சில தமிழ்க் கட்சிகள் மேற்கொண்டிருக்கின்றன. ஆதலால், தமிழர்கள் தமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சிந்தித்து வாக்களிக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் வன்னியிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அபாயமும் இருக்கின்றது. திருகோணமலை, மட்டக் களப்பு, வன்னி மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸை விடவும் மக்கள் காங்கிரஸுக்கே செல்வாக்கு அதிக மாகும். அதனால், இம்மாவட்டங்களில் மேற்படி மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என்பது முஸ்லிம் காங்கிரஸுக்கு சிலவேளை ஆபத்தாக அமையலாம்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கே அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. இங்கு இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் விட்டுக் கொடுப்பின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தும் போதுதான் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கம் போன்று தனித்தே போட்டியிடும்.
ஆட்சியின் பங்காளி
பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாது போகும் போது சிறுபான்மையினக் கட்சிகளுடன் இணைந்துதான் ஆட்சியமைக்க வேண்டியேற்படும்.
குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும், ஆட்சியின் பங்காளிகள் என்ற நிலையை அடைந்து கொள்வதற்கே அக்கட்சிகள் விரும்பும். இதேவேளை, ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பேரினவாத கட்சிகள் கேட்கும். தேர்தல் பிரசாரங்களின் போது என்னதான் குற்றச்சாட்டுக்களை சிறுபான்மையினக் கட்சிகளின் மீது சுமத்தினாலும், அத்தகைய குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் தேர்தலை வெற்றி கொள்வதற்காகவேயாகும்.
இதேவேளை, இம்முறை நடைபெற வுள்ள பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆட்சியின் பங்காளர் என்ற நேரடி அந்தஸ்தை பெறும் நிலையும் உள்ளது. கடந்த அரசாங்கத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியின் மறைமுக பங்காளிகள் போன்று செயற்பட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் சூழல்
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் புதியதொரு அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழமைபோன்று எதிர்க்கட்சியிலிருந்து செயற்படுமாயின் பின்னடைவுகளையும் மக்களின் பெரும் எதிர்ப்பினையும் சந்திக்க வேண்டியேற்படலாம். அதனால், ஆட்சியின் பங்காளி என்ற நிலையிலிருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு சாத்தியமானவற்றை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் ஜனாதிபதியாக இருந்தபோது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் இனப் பிரச்சினைக்கு தீர்வாக (13 பிளஸ்) அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு தயார் என்று மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். ஆயினும், நடைபெற்ற அனைத்து சுற்று பேச்சுவார்த்தைகளும் வெறும் ஏமாற்று வித்தையாகவே முடிவுற்றன.
நல்லாட்சி அரசாங்கத்தில் கூட இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை வழங்குவோம் என்று தெரிவிக்கப்பட்டது. பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. உத்தேச அரசியல் யாப்புக்குரிய நகல் திட்டமும் வெளியிடப்பட்டது. ஆனால், எதனையும் அடைய முடியவில்லை.
தற்போது நாட்டில் இனப் பிரச்சினை இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகளின் மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றியது போன்று ஏமாற்ற மாட்டோம். ஒற்றை ஆட்சியின் கீழ் நாடு ஆட்சி செய்யப்படும். மாகாண சபை முறைமை தேவையற்றது என்பன போன்ற கருத்துக்களே முன்வைக்கப்படுகின்றன.
கடந்த காலங்களில் இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவோம் என்று ஏமாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றமையால் இனப் பிரச்சினை இருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தற்போது நாட்டில் இனப்பிரச்சினை கிடையாது என்று சொல்லுவதன் மூலமாக அரசியல் தீர்வுக்கு இடமே கிடையாதென்று தெரிகின்றது.
அதுமட்டுமன்றி, இன அடிப்படையிலான கட்சிகளை தடை செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக பேரினவாதக் கட்சிகள் பௌத்த மதத்துக்கும், சிங்கள மக்களுக்கும் உரித்தான கட்சிகளாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், பேரினவாத கட்சிகளும் இனம் சார்ந்துதான் செயற்படுகின்றன. ஆதலால், இன ரீதியாக செயற்படும் கட்சிகளை தடை செய்வதாக இருந்தால் பேரினவாதக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.
ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் பெயரால் உள்ள அரசியல் கட்சியால் மாத்திரமே அந்தக் கட்சி பிரதி நிதித்துவப்படுத்தும் மக்களின் உண்மையான அபிலாஷைகளை வெளிப்படுத்த முடியும். ஆதலால், இனத்தின் அல்லது சமூகத்தின் பெயரால் அரசியல் கட்சிகள் இருப்பதனை குற்றமாக கருத முடியாது. ஆனால், அத்தகைய கட்சிகள் அடுத்த இனத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை மறுக்குமாயின் அறநெறிக்கு மாற்றமாக அடுத்த இனத்தின் அடையாளங்களை அழிக்க முற்படுமாயின் அவற்றை தடை செய்ய வேண்டும். ஆனால், பேரினவாத கட்சிகள்தான் இத்தகைய இனவாத அடிப்படையில் செயற்பட்டு கொண்டிருக்கின்றன.
சமூகங்களுக்கு இடையே பல பிரச்சினைகள் உள்ளன. அவையாவும் பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைகளாகவே இருக்கின்றன. ஆயினும், அரசியல் கட்சிகள் அப்பிரச்சினைகளுக்கு இனம், மதம், மொழி போன்ற நிறங்களை பூசி பிரச்சினைகளை பூதாகாரமாக்கி வைத்துள்ளனர். பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பது பற்றி பேசினாலே தேசத்துரோக செயலாக பார்க்கின்றனர். பல்லின மக்களின் தனித்துவம், அபிலாஷைகளை அங்கீகரிக்காததனால் தான் இந்த சிந்தனைகள் உருவாகின்றன. சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகள் பல்லினங்களை கொண்ட நாடுகளாக இருக்கின்றன. அங்கு வாழும் பல்லின மக்களின் அபிலாஷைகளை அங்குள்ள அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொண்டமையாலும் நாட்டினை ஆட்சி செய்வதற்கு நல்ல கொள்கைகளை வகுத்துக் கொண்டதனாலும் அந்நாடுகள் எல்லாத்துறையிலும் முன்னேறியுள்ளன. அரசியல் முதிர்ச்சி ஏற்படும் போதுதான் இத்தகைய நல்ல தன்மைகளை காணலாம்.
இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அரசியல் முதிர்ச்சியில்லாது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தின் கூறுகளை கூர்மைப்படுத்துவதற்கு பதிலாக, மழுங்கடித்துக் கொண்டிருக் கின்றார்கள்.
சஹாப்தீன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM