* அநேகமான பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர் அல்லது இருக்குமிடம் தெரியாதிருக்கின்றனர். சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மனவேதனைகள் இருக்கத்தக்கதாக மேற்படி குடும்பங்களின் சிறுவர்களையும் முதியவர்களையும் பராமரிக்க வேண்டியது இப்பெண்களின் பொறுப்பாகவுள்ளது. எனவே, அவர்களுக்கான ஜீவனோபாய மார்க்கத்தையும் வருமானம் ஈட்டித்தரும் முறையையும் அமுல்படுத்த வேண்டும். ஒரு செயலணி தாமதமின்றி ஸ்தாபிக்கப்படல் வேண்டும் - நல்லிணக்க ஆணைக்குழு
* நுண்கடன்களை பெறும் பெண்கள் அதனை மீள செலுத்த முடியாமல் பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாரிய அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். - ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் 2018 இல் அறிக்கை
தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் 8000 பெண்கள் யுத்தம் காரணமாக கணவனை இழந்துள்ளதுடன் கடும் சிரமங்களுக்கு மத்தியில் குடும்பங்களை கொண்டு நடத்துகின்றனர்.
இலங்கையை பாரிய பின்னடைவுக்கு தள்ளிய மற்றும் உயிர்ச்சேதங்கள் மற்றும் சொத்துச்சேதங்களை ஏற்படுத்திய கொடிய யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட் டுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை இன்னும் துரதிஷ்டவசமாகவே காணப்படுகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக் கள் தமக்கான நீதியைக் கோரி போராடி வருகின்ற சூழலில் அதற்காக சர்வதேசமும் ஐக்கியநாடுகள் சபையும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் யுத்தம் நடைபெற்ற பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமை மிகவும் துரதிஷ்டவசமாக இருக்கின்றது. வடமாகாணத்தில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண் குடும்பத்தலைவிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் வாழ்வாதார சிக்கல்கள், பொருளாதாரப் பிரச்சினைகள் என்பன ஏராளமாகும். மிக முக்கியமாக யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பத் தலைவிகள் மற்றும் ஏனைய காரணிகளால் கணவனை இழந்த பெண்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு பொருளாதார ரீதியிலும் வாழ்வாதார ரீதியிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகமாகும்.
இதில் அதிகமான மக்கள் நுண்கடன் திட்டங்களினாலும் பாரிய பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். பொருளாதாரப் பிரச்சினை காரணமாக இவ்வாறு நுண்கடன்களைப் பெற்றுக்கொள்கின்ற பெண்கள் பின் னர் அவற்றை செலுத்த முடியாமல் பாரிய அசெளகரியங்களை எதிர் கொள்கின்றனர்.
ஐ.நா.வின் கண்டுபிடிப்பு
நுண்கடன்களை பெறும் பெண்கள் அதனை மீள செலுத்த முடியாமல் பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாரிய அழுத்தங்களை எதிர்கொள்வதாக இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வடமாகாணத்தில் பல்வேறு காரணிகளினால் கண வனை இழந்த அல்லது கணவனி னால் கைவிடப்பட்ட பெண் குடும்பத்தலைவிகள் நிலைமைகள் தொடர் பில் நாம் தகவல் அறியும் சட்டம் ஊடாக சில தகவல்களை வட மாகாண மகளிர் விவகார அமைச்சில் பெற்றுக்கொண்டோம். அதன்படி வடமாகாணத்தில் மொத்தமாக 63345 பெண் குடும்பத் தலைவிகள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு மாகாணத்தில் இந்தளவுதூரம் பெண் குடும்பத்தலைவிகள் இருப்பதானது அவர்கள் எந்தளவு தூரம் இந்த சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை ஊகிக்கக்கூடியதாக உள்ளது.
கணவனை இழந்துள்ள பெண்கள்
வடமாகாண மகளிர் விவகார அமை ச்சின் தகவலின் பிரகாரம் வடமாகாணத்தின் 63345 பெண் குடும்பத் தலைவிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களில் 8004 பெண்கள் போரின் காரணமாக கணவனை இழந்த நிலையில் உள்ளதுடன் குடும்பத்தலைவிகளாகவும் இருக்கின்றனர். அதேபோன்று 38991 பெண்கள் இயற்கையாக கணவனை இழந்த நிலையில் பெண் குடும்பத் தலைவிகளாக உள்ளனர். அதேபோன்று 7253 பேர் கணவனினால் கைவிடப்பட்ட நிலையில் பெண் குடும்பத் தலைவிகளாக உள்ளனர். அதுமட்டுமன்றி ஏனைய காரணங்களினால் 9097
பெண்கள் குடும்பத் தலைவிகளாக இருக்கின்றனர். ஏனைய காரணிகள் என்ற பிரிவின் கீழ் கணவன் ஊனமுற் றவராக இருத்தல் அல்லது காணாமல்போனவராக இருத்தல் போன்ற விடயங்கள் உள்ளடங்குகின்றன.
யாழ்ப்பாணத்திலேயே அதிகம்
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு குடும்பப் பெண் தலைவிகள் உள்ளனர். யாழ். மாவட்டத்தில் 36334 குடும்பப் பெண் தலைவிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8435 பெண் குடும்பத் தலைவிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5961 குடும்பப் பெண் தலைவிகளும் வாழ்கின்றனர். அதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 6712 பெண் குடும்பத் தலைவிகளும் மன் னார் மாவட்டத்தில் 5903 குடும்பத் தலைவிகளும் உள்ளனர். போர் காரணமாக 8000 பெண்கள் கணவனை இழந்துள்ளனர்
இது இவ்வாறிருக்க வடமாகாணத் தில் யுத்தம் காரணமாக 8004 கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்ற னர். அதில் யாழ்ப்பாண மாவட்டத்தி லேயே அதிகமான கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். யாழ். மாவட்டத் தில் யுத்தம் காரணமாக 3193 பெண்கள் கணவனை இழந்த நிலையில் குடும்பத்தலைவிகளாக இருக்கின்றனர். கிளி நொச்சி மாவட்டத்தில் 1514 பெண்கள் யுத்தத்தினால் கணவனை இழந்துள்ளனர். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1458 பெண்கள் யுத்தத்தினால் கணவனை இழந்து குடும்பத் தலைவிகளாக உள்ளனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் 1296 பெண்களும் மன்னார் மாவட்டத்தில் 543 பெண்களும் யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் தங்கள் குடும்பங்களை கொண்டு நடத்தவேண்டிய நிலைமையில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வடமாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணிகளி னாலும் கணவனை இழந்து குடும்பத்தை கொண்டு நடத்தவேண்டிய சூழலில் சுமார் 63 ஆயிரம் பெண்கள் இருக்கின்றமை என்பது சாதாரண விடயமல்ல. இந்த மக்கள் தொடர்பாக அரசாங்கம் சரியானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும். அவர்களது வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து பொருளாதா
ரத்தை வலுப்படுத்தும் திட்டங்களை முன்னெடுப்பதுடன் அந்த மக்களுக்கான பொருளாதார உதவிகளை செய்வதும் அவசியமாகின்றது.
அத்துடன் கடந்த அரசாங்க காலத்தில் இழப்பீட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது. அதற்கு ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டனர். எனினும் அந்த அலுவலகம் இன்னும் சரியான முறையில் செயற்பட ஆரம்பிக்கப்படவில்லை. அதனூடாக இவ்வாறு கணவனை இழந்து குடும்பத்தை சுமந்து கொண்டிருக்கும் பெண் குடும்பத் தலைவிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவது அவசியமாகின்றது.
வெறுமனே 244 தொழில் வாய்ப்புக்கள்
வடமாகாண மகளிர் விவகார அமைச்சு தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் எமக்கு வழங்கிய தகவல்களின் பிரகாரம் இதுவரை வடமாகாணத்தில் இவ்வாறு பெண் குடும்பத் தலைவிகளுக்காக 244 தொழில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆடு வளர்ப்பு, மெழுகுதிரி தயாரித்தல், உணவு தயாரித்தல், கைவினைப்பொருட்கள் தயாரித்தல் போன்ற துறைகளில் தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு வாழ்வாதார ஆதரவுக்காக கடந்த காலத்தில் 30 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அதில் 29.513 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் வடமா காண மகளிர் விவகார அமைச்சு அறிவித்திருக்கிறது.
வாழ்வாதார உதவிகளின் அவசியம்
எனவே சுமார் 63 ஆயிரம் பேர் கணவனை இழந்து பெண் குடும்பத்தலைவிகளாக உள்ள நிலையில் அவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுக்கு உதவிகளும் தொழில்வாய்ப்புக்களும் கிடைத்துள்ளமையை காண முடிகின்றது. இந்த நிலைமை முன்னேற்றம் ஏற்படவேண்டும். பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பெண் குடும்பத் தலைவிகளுக்கும் சரியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவேண்டும் என்பதுடன் அவ ர்கள் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தப்படவேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு பெண் குடும்பத்தலைவிகளுக்கு
உதவிகளை வழங்குவதில் சில தடைகள் இருப்பதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சு எமது தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழான கேள்விக்கு பதிலளித்திருக்கிறது.
தடைகள்
அதாவது சில விடயங்கள் பெண்கள் விவகார அமைச்சின் கீழ் உள்வாங்கப்படவில்லை. பெண்கள் விவகார பிரிவு மற்றும் புனர்வாழ்வு பிரிவுக்கான அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. பெண்கள் விவகாரங்கள் மற்றும் புனர்வாழ்வு பிரிவுகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இந்த மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் தடைகளை ஏற்படுத்துவதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சு பதிலளித்திருக்கிறது.
இந்த நிலையில் 63 ஆயிரம் பெண் குடும்பத் தலைவிகள் மற்றும் யுத்தம் காரணமாக கணவனை இழந்த 8 ஆயிரம் பெண் குடும்பத் தலைவிகள் தமது வாழ்க்கையையும் குடும்பத்தையும் கொண்டு செல்வதில் எந்தளவுதூரம் சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொள்வார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் இதுவரை இந்தப் பெண் குடும்பத் தலைவிகள் தொடர்பாக சரியானதொரு வேலைத்திட்டம் அல்லது அந்த மக்களுக்கான வேலைத்திட்டங்கள் வந்து சேராமல் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். யுத்தம் முடிந்தவுடன் இந்த விடயம் விசேடமாக ஆராயப்பட்டு அவர்களுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் அந்த மக்கள் பொருளாதார ரீதியில் வலுவூட்டப்பட்டிருக்கவேண்டும்.
பெண் குடும்ப தலைவிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
தற்போதைய சூழலில் ஒரு ஆண் குடும்பத் தலைவரினாலேயே தனது குடும்பத்தை கொண்டு செல்வதில் வாழ்க்கையை நடத்துவதில் பாரிய சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என பல வழிகளில் குடும்பங்கள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தில் கணவனை இழந்த பெண் குடும்பத் தலைவிகள் எவ்வாறான சவால்களை எதிர்கொள்வர் என்பது தொடர்பாக சிந்தித்துப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.
தற்போது அதிகாரத்துக்கு வந்திருக்கின்ற ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும். 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு சில விசேடமான பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பெண்கள் குறித்த பரிந்துரைகள்
விசேடமாக கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பரிந்துரைகளில் 7 பரிந்துரைகள் நேரடியாக பெண்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்திருந்தது. அந்த முக்கிய பரிந்துரைகள் வருமாறு,
1 குடும்பத்தின் தலைமைப் பொறு ப்பினை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட் டுள்ள. பெண்களின் நல்வாழ்வினை உறுதிப்படுத்தி நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்
2. அநேகமான பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர் அல்லது இருக்குமிடம் தெரியாதிருக்கின்றனர். சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மனவேதனைகள் இருக்கத்தக்கதாக மேற்படி குடும்பங்களின் சிறுவர்களையும் முதியவர்களையும் பராமரிக்க வேண்டியது இப்பெண்களின் பொறுப்பாகவுள்ளது. எனவே, அவர்களுக்கான ஜீவனோபாய மார்க்கத்தையும் வருமானம் ஈட்டித்தரும் முறையையும் அமுல்படுத்த வேண்டும்.
3. இந்தப் பணியில் உதவியளிப்பதற்கு சர்வதேச சமூகங்களும் சர்வதேச ஸ்தாபனங்களும் சிவில் அமைப்புகளும் தமது அறிவையும் வளங்களையும் வழங்கும் வகையில் அரசு முன்னின்று செயற்பட வேண்டும். உள்ளூராட்சி நிறுவனங்கள், அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பாதிக்கப்பட்டோரின் மனநலம் கருதி நடவடிக்கைகளையும் தீர்வுகளையும் மேற்கொள்வதற்கு அரசு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
4. நீடித்த யுத்தம் காரணமாகவும் குடும்பத்தில் ஆண்களை இழந்த காரணத்தினாலும் கல்வியைத் தொடரமுடியாது பல பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு முறைசார் அல்லது முறைசாரா கல்வி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு தொழிற்பயிற்சி அல்லது வாழ்வாதார முறை என்பவற்றை உருவாக்க உதவ வேண்டும்.
5. பெண்கள் தமது பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய வகையிலும் தமது மனித கௌரவம் பாதுகாக்கக்கூடிய வகையிலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்துக்கான முன் நிபந்தனையாக இத்தகைய சூழலை உருவாக்குவது அரசின் பொறுப்பாகும் என ஆணைக்குழு கருதுகின்றது.
6. காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், எதேச்சதிகாரமாக நீண்டகாலம் தடுத்து வைத்தல், காணாமற்போகச் செய்தல் என்பன பெண்களை நேரடியாக பாதிக்கும் விடயங்களாகும். மேற்படி பாதிப்புக்கு உள்ளானவர் தமது கணவராகவோ, தந்தையாகவோ, மகனாகவோ, சகோதரர்களாகவோ இருக்கலாம். தமது அன்புக்குரியவர்கள் இருக்கும் இடம் அறியாவிட்டால் உண்மையையும் சட்டரீதியான பாதுகாப்பையும் பெறும் உரிமை அவர்களது ஜனநாயக உரிமையாகும். நல்லிணக்க முயற்சிக்கு இது முன் நிபந்தனையாகும்.
7. இப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வுகளைக் காண்பதாயின் நிறுவனங்களுக்கிடையிலான முயற்சிகளும், ஒருங்கிணைந்த முயற்சியினால் மட்டுமே அதை எதிர்கொள்ள முடியும் என ஆணைக்குழு கருதுகிறது. மேற்குறிப்பிட்ட பாதிப்புக்குள்ளான அனைவரது தீர்வுகளைக் காண்பதற்கும், தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் ஒரு செயலணி தாமதமின்றி ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.
மேற்கூறிய ஏழு பரிந்துரைகளே பெண்கள் முகம்கொடுக்கும் நேரடியான பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்ற பரிந்துரைகளாகும்.
அந்த வகையில் பல முக்கியமான பரிந்துரைகளை நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்திருந்தது. அதாவது பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் செய்துகொடுக்கப்படவேண்டும் என்பது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமாக உள்ளது. கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது முக்கியமாகும். அதேபோன்று அந்த பெண்கள் சமூகப் பாதுகாப்புடன் கெளரவமான முறையில் சமூகத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகள் அவசியம் என்பது குறித்தும் நல்லிணக்க ஆணைக்குழு விசேடமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளமையை காண முடிகின்றது.
ஆனால் கடந்த பத்துவருடங்களில் அந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் பெண்கள் தொடர்பான பரிந்துரைகள் கூட முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலைமையே நீடிக்கிறது. எனவே இந்த மக்களின் நிலைமையை புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்படவேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பொருளாதார அபிவிருத்தி குறித்தும் முழுநாட்டுக்கும் சமமான அபிவிருத்தி குறித்தும் பேசிவருகின்றார். எனவே இவ்வாறு வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவிகளின் குடும்பங்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கும் அவர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி சமூகத்தில் கெளரவமாகவும் பாதுகாப்புடனும் வாழும் சூழலை ஜனாதிபதி ஏற்படுத்துவார் என மக்கள் நம்புகின்றனர்.
-ரொபட் அன்டனி -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM