(ஆர்.யசி, எம்.ஆர்..எம்.வஸீம்)
- ஜனாதிபதி உண்மைகளைப் பேசுகிறார்
- பல்லினத்தன்மையை மதிக்க வேண்டும்
- சர்வகட்சி மாநாட்டை நினைவுபடுத்துகிறோம்
- தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுங்கள்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதைச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதியால் முடியாமல் போனமைக்கு தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமையே காரணமாகும். அதிகாரப் பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுத்தால் நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.
அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன, ஆனால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை காண முடியவில்லை. எனவே இந்த புதிய அரசாங்கம் உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்களின் நம்பிக்கையை, வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகளை, மொழியை கலாசாரத்தை, உரிமைகளை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும் என்றார்.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான இரு நாட்கள் விவாதம் நேற்றும் பாராளுமன்றத்தில் தொடர்ந்த நிலையில் விவாதத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்
இலங்கையின் கேந்திரமும் தன்மைகளும் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பு செய்யும், இந்த விடயங்களுக்கும் தொழில்நுட்ப அபிவிருத்திக்கும் ஜனாதிபதி அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். இதில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆசிய- ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கப்படுவதன் மூலமாக அதற்கான இலக்கினை வெகுவாக அடைய முடியும் என நினைக்கின்றோம். எமது நாடு பாரிய கடன் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் 25 ஆண்டுகள் யுத்தம் ஒன்றிற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசியல் தலைமைகள் இதனை விரும்பாத போதிலும் யுத்தம் இடம்பெற்றது. யுத்தம் இல்லாது போயிருந்தால் கடன் நெருக்கடி வந்திருக்காது. இப்போதுள்ள கடன்களில் சில நியாயமான கடன்களும் உள்ளன. எனினும் உள்நாட்டு, வெளிநாட்டு கடன்களை நாம் அடைக்க எமது அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் தேசிய வேலைத்திட்டம் அவசியமாகும். சர்வதேச சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பும் அங்கீகாரமும் பெறப்பட வேண்டும். எனினும் கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் ஒருவரை ஒருவர் குற்றம் கூறிக்கொண்டு நடைமுறைகளை கைவிட்டன . அதேபோல் சர்வதேச நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்கின்றன . எனினும் இந்த நாட்டில் பெளத்த சிங்கள மக்கள் பெரும்பான்மை மக்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஏனைய சமூகங்களும் வாழ்ந்துவருகின்றன . அவர்களை புறக்கணிக்க முடியாது. ஏனைய மக்களின் கலாசாரம், சமூக கட்டமைப்பை மதிக்க வேண்டும். நீண்டகாலமாக இந்த கட்டமைப்பு உள்ளது. எமக்கு எவருடனும் முரண்பட வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அனைத்து மக்களுடனும் ஒன்றுபட்ட நாட்டுக்குள் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது.
அந்த விடயத்தில் நாட்டின் அரசியலமைப்பு மிகவும் முக்கியமான சட்டமாக கருதப்படுகின்றது. அரசியல் அமைப்பு நகர்வுகளில் ஏனைய நாடுகளை எடுத்துக்கொண்டால் அந்த நாடுகளில் சகல மக்களின் கருத்துக்கள், கொள்கைகள், உரிமைகள் என அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் அனைவரும் ஒரு இனம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த அடையாளம் இருக்க வேண்டும். ஜனாதிபதியும் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க விரும்புவதாக கூறியுள்ளார். எனவே அதுவும் இந்த முறையில் அமைய வேண்டும். 1956 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களின் கோரிக்கை நிலைப்பாடு ஒன்றாகவே இருந்து வருகின்றது. 1983,1987 ஆம் ஆண்டுகளில் பாரிய நெருக்கடி ஏற்பட்ட பின்னர் 1988ஆம் ஆண்டு 13 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ் மக்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய திருத்தம் வந்தது. எனினும் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழக்கூடிய சூழல் ஏற்படவில்லை.
அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்ற முயற்சிகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன, பல கரிசனைகள் முன்னெடுக்கப்பட்டன, ஆனால் முழுமையான தீர்வு ஒன்றுக்கு வர முடியவில்லை. தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியவில்லை.
எனவே இந்த புதிய அரசாங்கம் உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் பல நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. சர்வகட்சி மாநாட்டில் தீர்வுகள் குறித்து ஆராயப்பட்டது.
அவற்றை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். இன்று மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரரின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக் ஷவும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார். எனவே தீர்வு ஒன்றினை முன்னெடுக்க வேண்டும்.
அதேபோன்று இந்த விடயத்தில் சர்வதேத்தின் முக்கியத்துவம் அவசியமானது. குறிப்பாக இந்தியா மற்றும் சர்வதேசம் இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அதிக ஆர்வம் காட்டின. அப்போதும் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய ராஜபக் ஷ இருவரின் பங்களிப்பும் இருந்தது. எனவே இப்போது சர்வதேச கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும்.
அபிவிருத்தியின் தன்மையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதிகார பரவலாக்கல் மற்றும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச முதலீடுகள் அபிவிருத்திகள் என அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கு கூறுவது என்னவென்றால், நீங்கள் அரசியல்வாதி அல்ல, ஆகவே நீங்கள் உண்மையை பேசுகின்றீர்கள். ஆகவே நீங்கள் சரியானதை செய்வீர்கள் என நம்புகின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் நாம் ஒன்றுபட்டு செயற்பட தயாராக உள்ளோம். நாட்டின் அபிவிருத்திக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளோம். இது ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கலை செய்வதன் மூலமே சாத்தியமாகும்.
அது நடந்தால் நாமும் ஆதரவு வழங்க தயாரக உள்ளோம். இன்றும் தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றிகொள்ள முடியாது உள்ளது. அதற்கு நீங்கள் அவர்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாதமையே காரணமாகும்.
அவர்களின் நம்பிக்கையை, வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகளை, மொழியை கலாசாரத்தை, உரிமைகளை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போது அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM