(இராஜதுரை ஹஷான்)
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் வழக்கினை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சட்டமாதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்தினை அவமதித்த நீதிபதிகளையும் முறையான விசாரணைகளுக்கு உட்படுத்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபிக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுகின்றோம் என மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகரவிற்கும் இடையிலான உரையாடலில் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்புவதே நால்வரது எதிர்பார்ப்பும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் அதிகாரம் முழுமையாக இவரது விடயததில் வைராக்கியத்துடன் செயற்படுத்தப்பட்டுள்ளது .
பாரத லக்ஷமன் கொலை விவகாரத்தில் பொலிஸ், குற்றப்புலனாய்வு பிரிவினர் சேகரித்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைகளை மேற்கொண்ட விதம் தொடர்பில் தற்போது பாரிய சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நியாயம் நிலைநாட்டப்ட வேண்டும்.
மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சட்டமாதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் துமிந்த சில்வாவின் குடும்பத்தார் இவ்விடயம் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகளை இனி மேற்கொள்ளலாம்.
நீதிமன்றத்தினை அவமதித்து அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக செயற்பட்ட நீதிபதிகள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைப்பது தற்போதைய தேவையாக காணப்படுகின்றது. கடந்த அரசாங்கத்தில் முழுமையாக சட்டம் அரசியல் அதிகாரத்துடன் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.