எமது உணவுத் தேர்வுகள் பல சந்தர்ப்பங்களில் தனிநபர் நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை தருவதாக அமைந்து விடுகின்றன. உணவு ஒன்றின் உற்பத்தி முறைகளும் அதனை நீண்டகாலம் பேணி வைப்பதற்கான பாதுகாப்பு உத்திகளும் இந்த சீர்கேடுகளுக்கு காரணமாக அமைகின்றன. இதனால் உணவை தேர்வு செய்கின்ற போது சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார தாக்கங்களை குறைக்கும் வகையிலான உணவுகளை அறிந்து தெரிவு செய்தல் அவசியமாகும்.
உணவு வகைகளை நீண்ட தூரம் கொண்டு செல்வதன் மூலம் விநியோகம் செய்யப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் போக்குவரத்துக்காக பெற்றோலியப் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதுடன் உணவு அதன் தரத்தில் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பல்வேறு இரசாயனங்களை பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்த வகையில் உணவு உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து அதன் இறுதி நுகர்வோரை சென்றடைவதற்கு எடுக்கும் தூரம் முக்கியமான ஒரு குறிகாட்டியாக பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குறிகாட்டியே 'உணவுமைல்' என அழைக்கப்படுகின்றது. 1990களில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த பேராசிரியரான ரிம் லாங் (Tim Lang) என்பவர் இந்த குறிகாட்டி முறையை அறிமுகம் செய்தார். நீண்ட தூரங்களில் இருந்து உணவு இறக்குமதி செய்யப்படும் போது நேரும் சூழல் தாக்கங்களை முன்னிலைப்படுத்தி உள்ளூர் உணவுகளின் நுகர்வை தூண்டுவதே இவரின் நோக்காக இருந்தது.
உணவு அதன் உற்பத்தி புள்ளியிலிருந்து நீண்ட தூரம் கொண்டு செல்லப்படும் போது, மாசுபடுத்தும் கப்பல் முறைகள், மோசமான வேலை நிலைமைகள் மற்றும் விநியோகச் சங்கிலியின் வெவ்வேறு பகுதிகளின் நியாயமற்ற உள்ளீர்ப்பு என்பவற்றுக்கு உட்படுகின்றது. இவை நேரடியாக அதிகரித்த காபன் உமிழ்வை சுற்றாடலுக்கு ஏற்படுத்துகிறது.
உலக காபன் உமிழ்வில் 17% உணவு உற்பத்தி மற்றும் அதன் விநியோக சங்கிலி மூலம் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த விநியோகச் சங்கிலிகளைக் கொண்ட உணவுகள் மூலம் CO2 உமிழ்வைக் குறைக்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
உணவு மைல் புள்ளிவிபரங்கள்
இலங்கையின் மொத்த அந்நிய செலாவணியில் 12 - – 13% ஆனது உணவு இறக்குமதிக்குச் செலவிடப்படுகிறது. அரிசி, கோதுமை, பருப்பு, செத்தல் மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, பால் உற்பத்திகள் முதலியவை இலங்கையின் முதன்மையாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களாகும். இலங்கையில் இவற்றுக்கான அதிகரித்த உற்பத்தி வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் இவை தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுகின்ற போக்கினை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
2018 களில் மொத்த உணவு இறக்குமதிக்கான செலவினம் 422,489 மில்லியன் ரூபாய்களாயிருந்தது. உள்ளூரில் உற்பத்தி செய்யக்கூடிய சில உணவு வகைகளைக் கூட உள்ளூர் உற்பத்தி செலவை விட இறக்குமதி செலவு குறைவு என்பதனால் இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். குறைந்த வேலையாள் ஊதியம், பெருமளவு உற்பத்தி செய்வதனால் அலகு கூறுக்கான உற்பத்திச் செலவு குறைவாக இருத்தல் என்பவற்றின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது மலிவானதாக காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக வெங்காயம், உருளைக்கிழங்கு, அரிசி முதலான உணவுகளைக் குறிப்பிடலாம். இத்தகைய உணவுகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போது இவை உணவு மைல்களை அதிகரிப்பதுடன் உள்ளூர் உற்பத்திகளையும் பாதிக்கின்றன.
நகர்ப்புறங்களுக்கு அதனைச் சூழவுள்ள பகுதிகளிலிருந்து மூலப் பொருட்களாக அதாவது நேரடி விவசாய உற்பத்திகளாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதும் அங்கு அவை ஆடம்பர உணவுகளாகவும் உடனடி (instant) உணவுகளாகவும் உருமாற்றப்பட்டு மீண்டும் தூரமாக உள்ள சுற்றியல் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் பொதுவாக காணப்படுகிறது. இதுவும் உணவு மைல்களை அதிகரிக்கின்ற ஒரு உணவு உற்பத்தி செயற்பாடாகும். 2014 இல் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்ட 'இலங்கையின் உணவு நுகர்வு கோலம்' பற்றிய அறிக்கையில் மரபுவழி உணவுப் பழக்க வழக்கங்களில் இருந்து உடனடியான உணவுக்கும் ஆடம்பர உணவுக்கும் இலங்கை மக்கள் மாறிவரும் போக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரமான வாழ்க்கை முறை இந்தப் போக்குக்கு காரணமாகவும் கூறப்படுகின்றது.
மரபுவழி உணவுகளை பயன்படுத்துவதில் உள்ள தடைகள் எவை?
ஆதி மனிதன் உணவுக்காக காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தான். அன்றைய நாளுக்கான உணவே அவனது நாளாந்த இலக்காயிருந்தது. விவசாய சமூக கட்டமைப்பு தோற்றம் பெற்ற பின்னர் ஒரே இடத்தில் நிலையாக வாழ தொடங்கினான். தனக்குத் தேவையான உணவை தானே உற்பத்தி செய்தான். காலத்துக்கு ஏற்ப உற்பத்தியையும் அது சார்ந்த உணவுகளையும் வாழ்க்கை முறையையும் அமைத்துக்கொண்டான். கால ஓட்டத்தில் அவனது வாழ்க்கை முறைகள் இயந்திரமயப்பட்டன. வாழ்க்கையை இலகுவாக்கும் வழிமுறைகளை தேடி அலைந்தான். இதே இலக்கு அவனது உணவுத் தேடல்களிலும் அமைந்தது. சுவையான கவர்ச்சியான உணவுவகைகளை இலகுவாக கொள்ளுதல் என்கின்ற முறைமைக்கு அவன் ஆளானான். வேண்டிய எந்தக் காலத்திலும், ஆண்டு முழுவதுக்குமான பழங்களையும் காய்கறிகளையும் ஏனைய உணவுகளையும் ஒரே இடத்தில் பெறக்கூடிய சூப்பர் மார்க்கெட்டுகளைப் பழக்கப்படுத்திக் கொண்டான். உலகளாவிய உற்பத்திகளை எல்லாம் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளலானான்.
இவ்வாறுதான் உள்ளூர் உணவுப் பொருளாதாரங்களிலிருந்து ஆடம்பர உணவுப் பொருளாதாரங்களுக்கு மக்கள் மாற்றமடைந்து தேவையை பூர்த்தி செய்துகொண்டனர். உடல் உழைப்பை குறைத்து நேரடியாக தருவிக்கப்படும் உணவுகளுக்கு மாற்றமடைந்து கொண்டனர்.
தேவைக்கேற்ப பருவகாலமாக வளர்க்கப்படும் உணவை நுகர்வது என்பதிலிருந்து விலகி காலம் தப்பிய போதும் பாதுகாத்து பயன்படுத்தக் கூடிய ஆடம்பர உணவுகளுக்கு மாறி வந்தனர். அறுவடைக்குத் தயாராக இருக்கும் போது உணவை நுகர்வுக்கு வாங்குவதற்கு எதிராக இதை எடைபோட்டு பார்க்க வேண்டும். பருவத்துக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் உணவுகளை வாங்குவது உணவு மைல்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் விவசாயம் மற்றும் உணவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது ஒருபுறமிருக்க காலம் தப்பிய உணவுகளை நீண்ட காலம் பேணுவதற்காக அந்த உணவின் மீது பிரயோகிக்கப்படும் இரசாயனங்கள் குறித்தும் நாம் மனங்கொள்ள வேண்டும்.
அப்பிள் முதலான பழ வகைகள் நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு தயார்படுத்தப்படும் போது அறுவடைக்கு பின்னரான பங்கசுத் தாக்கங்களும் சேமிப்பு சேதங்கள் மற்றும் சேமிப்பு பீடைகளை கட்டுப்படுத்தும் வகையிலும் நீண்ட காலம் அவற்றின் புதுமை குன்றாது இருப்பதற்காகவும் அவற்றின்மீது பல்வேறு இரசாயனங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. 10- – 12 வெவ்வேறு இரசாயன பொருட்கள் அப்பிள் உற்பத்தியின் போது பயன்படுத்தப்படுவதாக சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றை நேரடியாக உண்ணக்கூடாது எனவும் வேறு தூய்தாக்கிகள் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பல்வேறு பாதுகாப்பு குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தூய்மைப் படுத்தும் இரசாயனங்களும் நீண்டகால நோக்கில் பாதிப்புகளை தராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தலைப்பில் இன்னொரு விடயத்தையும் கவனிப்பது பொருத்தம் என நினைக்கின்றேன். தூய குடிநீர் வசதிகள் நிலக்கீழ் நீராக பெறக்கூடிய கிராமங்கள் கூட குழாய் நீர்க் கலாசாரத்துக்கு மாற்றமடைந்து கொண்டுவருகின்றன. நிலத்தடியிலிருந்து பெறப்படும் குடிநீர், குழாய் நீரை விட ஆரோக்கியமானது. தொடர்ச்சியாக குளோரின் பிரயோகித்து சுத்தப்படுத்தப்பட்ட குழாய் நீரை அருந்துவது பல சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவதையும் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.
உணவு மைல்கள் என்பது உணவுக்கான முழு செலவுகளையும் நாங்கள் செலுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு கருவியாகும். உணவு விற்கப்படும் இடத்துக்குச் செல்வதற்கு உணவு எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருந்தது என்பதற்கான தெளிவான குறிப்பை இது தருகிறது. ஆனால், பயண தூரத்துக்கு அப்பால் சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் அதிக செலவுகள் இருக்கும்போது, குறிப்பாக அசல் உற்பத்தி செயல்பாட்டில், திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதற்கான மிக விரிவான படத்தை எங்களுக்கு வழங்குவதில் உணவு மைல்கள் தவறுகின்றன. நம்பகமான உள்ளூர் விநியோகச் சங்கிலிகள் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை தனிநபர்களுக்கு நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் உணவு தேர்வுகளை செய்ய உதவுகின்றன.
உணவு மைல்களைக் குறைத்தல்
நிலையான மற்றும் ஆரோக்கியமான உணவு தேர்வுகளுக்கான பின்வரும் ஆறு பரிந்துரைகள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன.
1. ஆரோக்கியமான மற்றும் உள்ளூர் விளைபொருட்களை உண்ணுதல்.
2.ஒரு நெகிழக்கூடிய நிலையான உணவு பொருளாதாரத்தை ஆதரித்தல்.
3.உணவு உற்பத்தியில் நிலையான அதிகரிப்பு.
4.உணவு உற்பத்தியில் இருந்து மாசு கூறுகள் உமிழ்வடைவதைக் குறைத்தல்.
5.உணவுக் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறு செயலாக்கம் செய்தல்.
6.உணவு அறிவை அதிகரித்தல் மற்றும் கிடைக்கும்போது சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
இந்தக் குறிக்கோள்கள் அதன் திசையைத் தெளிவாகக் காட்டும். ஒரு நிலையான உணவுப் பொருளாதாரத்தை உருவாக்க உதவும். உள்ளூர் தயாரிப்புகளை திரட்டுதல், விநியோகித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதை ஊக்குவிப்பதற்கு இது உதவும். உள்ளூர் உணவுகள் நமது சுகாதாரத்துக்கு கேடற்றவை என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக பறிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை நுகர்வது உணவு மைல்களை குறைக்கவும் பயன்படும்.
- சஞ்சீவி சிவக்குமார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM