ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதோடு புதிய தலைமையை சஜித் பிரேமதாஸ ஏற்கவுள்ளார். அவருடைய தலைமையின் கீழேயே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான வலுவான கூட்டணி பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்கும் என்று அக்கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கியத்தினையும் தேசியத்தினையும் ஒருங்கே கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் அந்த விடயங்கள் சீர்குலைந்துள்ளதே?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியானது இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் பங்களிப்பினால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கட்சியாகும். தற்போதும் அதேபாதையில் தான் எமது கட்சியானது உள்ளது. அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிப்படைவாதங்களையோ இனங்களுக்கிடையில் பேதங்களையோ நாம் உருவாக்கியது கிடையாது. எதிர்காலத்திலும் உருவாக்கப்போவதில்லை.
ஆனால் பெரும்பான்மையினர் மத்தியில் எமக்கு எதிராக பல்வேறு பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் நாட்டின் மீதும் பௌத்த சமயத்தின் மீதும் பற்றற்றவர்கள் என்று சித்தரிக்கப்பட்டிருந்தோம். இவ்வாறு பல விடயங்கள் இடம்பெற்ற நிலையில் தான் நாம் தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தி த்திருக்கின்றோம். அதன் பின்னர் அந்தப் பின்னடைவுகள் தொடர்பில் ஆராய்ந்து கொண்டு அடுத்த கட்டம் நோக்கி கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கே முனைந்து வருகின்றோம்.
அவ்வாறான நிலையில் கட்சிக்குள் சிலமாறுபட்ட நிலைப்பாடுகள், கருத்துருவாக்கங்கள் உள்ளன. அதனால் கட்சி பிளவடைந்து விட்டது என்றோ ஒற்றுமை இல்லையென்றோ கருதிவிட முடியாது. பாரம்பரியக் கட்சியாக இருக்கும் எமது கட்சியினுள் ஜனநாயகக் குணாம்சங்கள் மதிக்கப்படுகின்றன. அதன்படியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே விரைவில் நாம் இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளோம்.
கேள்வி:- நீங்கள் கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லையென்று கூறினாலும் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது மட்டுமன்றி இரு அணிகளாகவும் உறுப்பினர்கள் உள்ளனரல்லவா?
பதில்:- முரண்பாடுகள் உள்ளதாக கூறமுடியாது. தற்போதைய சூழலில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது. அத்துடன் அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவரைக் களமிறக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தற்போதைய கட்சித்தலைவராக ரணில் விக்கிரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெறப்போவதாகவும், தலைமைப்பொறுப்பினை சஜித் பிரேமதாஸவிடத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே, அடுத்த பொதுத் தேர்தலை சஜித் பிரேமதாஸ தலைமையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முகங்கொடுப்பதற்கு தயாராகி வருகின்றது. ஆகவே தலைமைத்துவ பதவி குறித்து ஐ.தே.கவுக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று கூறுவதெல்லாம் தவறான பிரசாரங்களாகும். அதுமட்டுமன்றி 2024ஆம் ஆண்டு வரையில் தலைமைத்துவப்பதவியில் நீடிப்பார் என்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தான் கூறப்பட்டது. தற்போது அந்த நிலைமைகள் எல்லாம் மாற்றமடைந்துள்ளன.
கேள்வி: -ஆனால் ரணில் விக்கிரமசிங்கவே கட்சித் தலைமையை வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுப்பினர்கள் அணியொன்று இருப்பதோடு மறுபக்கத்தில் 2024வரையில் கட்சித் தலைமைத்துவத்தினை மாற்றமுடியாது என்றும் யாப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளதல்லவா?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியினுள் பெரும்பான்மையானவர்கள் புதிய தலைமையை விரும்புகின்றார்கள். அந்தத் தலைமை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கருதுகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகள் தனியே நபர் சார்ந்ததொன்று அல்ல. அந்த பின்னடைவை கட்சி சார்ந்தே சிந்திக்க வேண்டும். ஆகவே இதில் அணியாக பிரிந்து நிற்பதாலோ பிளவுபட்டுக்கொள்வதாலோ எவ்விதமான பலனையும் யாரும் அடையப்போவதில்லை.
நாட்டில் தற்போது ராஜபக் ஷவின் குடும்ப ஆட்சி ஆரம்பித்துள்ளது. அந்த குடும்ப ஆட்சியின் பாதிப்புக்களை நாம் கடந்த காலத்தில் உணர்ந்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாம் வலுவான தரப்பாக அடுத்த தேர்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கின்றது. இல்லாது விட்டால் எமது பிரதான எதிராளிகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமையே ஏற்பட்டுவிடும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதனடிப்படையிலேயே நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எம்முடனேயே கைகோர்த்துள்ளன. ஆகவே நாம் எமது பலத்தினை வெளிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையே உடன் எடுக்க வேண்டியுள்ளது. சஜித் பிரேமதாஸவுக்கு கிடைத்துள்ள மக்கள் செல்வாக்கினை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் ஐக்கியத்துடன் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகின்றது. அத்துடன் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் 113இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பாராளுமன்ற அதிகாரத்தினை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு செயற்பட வேண்டும்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த நபரிடத்தில் கட்சித்தலைமைப் பதவியை வழங்கி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கின்ற போது பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான ஆதரவு உடன் கிட்டும் என்று கருதுகின்றீர்களா?
பதில்:- சஜித் பிரேமதாஸ பிரதித் தலைவராக இருந்தபோதும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சொற்பகாலத்தின் முன்னதாகவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதனால் பிரசார பணிகளின் போது சில நெருக்கடிகளும் இருந்தன. தற்போது அவ்வாறில்லை. புதிய வருடத்தில் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமைப்பொறுப்பினையும் ஏற்பார். அதனை விடவும் தற்போதே அவர் தொகுதி வாரியாக மக்கள் சந்திப்புக்களையும் ஆரம்பித்து விட்டார். மேலும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், ஏனைய உறுப்பினர்களும் அவருக்கு பக்கபலமாக உள்ளனர். ஆகவே நிச்சயமாக அவர் தலைமையில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல முழு ஐ.தே.க ஆதரவாளர்களுக்கும் உள்ளது.
கேள்வி:- உங்களுடைய அரசாங்கத்தின் நான்கு ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு நலிவுற்றமை, மத்தியவங்கி மோசடிகள் முதல் பல்வேறு விடயங்கள் குறித்த விமர்சனங்கள் பற்றி?
பதில்:- இந்த விடயங்கள் தொடர்பாக நாம் விசாரணை ஆணைக்குழுக்களை அமைத்திருந்தோம். அதுபற்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆனால் ராஜபக் ஷ அணியினர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை நாம் முன்னெடுத்த போது அதற்கு எதிராக பொய்யான பிரசாரங்களை செய்தார்கள். எம்.சி.சி.ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவிடத்தில் நாட்டை அடகு வைக்கப்போவதாக கூறினார்கள். தற்போது பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன என்று சிரேஷ்ட அமைச்சர்களை கைது செய்து அரசியல் பழிவாங்கல்களை ஆரம்பித்துள்ளார்கள்.
அத்துடன் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் முனைகின்றார்கள். மேலும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இடமளிக்காது அதனையும் ஒத்திவைத்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக ஜனநாயக விரோதமான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நாடு சர்வாதிகாரத்தினை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.
கேள்வி:- 2015ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தினை நீங்கள் பெறுவதற்கான பிரசாரங்களை செய்தபோது ஊழல்மோசடிகளை கட்டுப்படுத்துவோம், பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை தண்டிப்போம் என்று கூறியிருந்தபோதும் எந்தவொரு விடயங்களிலும் செயற்பாட்டு ரீதியான நிறைவினைக் கண்டிருக்கவில்லையே?
பதில்:- ஆம், நாங்கள் சுயாதீன கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தோம். நீதிமன்ற சுயாதீனத்தினை உறுதிப்படுத்தியிருந்தோம். ஜனநாயகத்துக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் மாறாக ஏதேச்சதிகாரமாக நாம் செயற்பட்டிருக்கவில்லை. காட்டுச் சட்டங்களை அமுலாக்கியிருக்கவில்லை. ஊழல், மோசடி உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் உரிய நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாகவே முன்னெடுப்பதற்குரிய இடைவெளியை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் எவையும் மக்களிடத்தில் செல்லவில்லை. எம்மைப்பற்றிய விமர்சனங்களே அதிகமாகச் சென்றன.
எமது அரசாங்கமும் சட்ட நடவடிக்கை விடயங்களில் தாமதங்களைச் செய்திருக்கின்றது என்ற ஆதங்கம் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் உள்ளது. இவ்வாறான தாமதங்களுக்கு எமது அரசாங்கத்தில் உள்ள சிலரும், அதிகாரிகளுமே காரணமாக இருந்துள்ளனர். இந்நிலைமையால் எமக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ‘டீல்கள்’ இருக்கின்றனவா என்று சாதாரண பொதுமக்கள் சந்தேகிக்கின்ற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டிருந்தன.
கேள்வி:- தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்வே இல்லை என்று கூறியுள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு அதுகுறித்து எவ்வாறிருக்கும்?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியானது 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொண்ட தரப்பாகும். மேலும் அனைத்து இன மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் இனநல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது நிலைப்பாட்டினை சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டிருந்தார். பெரும்பான்மை மக்கள் மத்தியில் ராஜபக் ஷவினரால் விதைக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள எம்மீதான மாறுபட்ட நிலைப்பாட்டினை மாற்றியமைத்து அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்பதே எமது முதற்கட்ட சவால் மிக்க பணியாகின்றது.
- நேர்காணல் - ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM