ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியைத் தழுவிய பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தேசியவாதம் வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்கு முக்கியமான காரணியாக இருந்தது, சிங்கள பௌத்த தேசியவாதம் தான்.
சிறுபான்மையினர் தமது ஆசனங்களையும், வாக்குகளையும் வைத்துக் கொண்டு அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்றும், தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாதிபதியைத் தெரிவு செய்து அந்த நிலையை தோற்கடிக்க வேண்டும் என்றும், சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் விரும்பின.
கோத்தாபய ராஜபக் ஷ அத்தகையதொரு தேசியவாத சிந்தனையாளராகவும், போர் வெற்றியை நிலைநாட்டிய நாட்டுப் பற்றாளராகவும், இருந்த தால், சிங்கள பௌத்த தேசியவாதிகளால், அந்த திட்டத்தை இலகுவாக நிறைவேற்ற முடிந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் சிங்களத் தேசியவாத சக்திகளுடன் மோதியது. எனினும், அதனால் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் வேரை அசைக்க முடியவில்லை.
ஐ.தே.கவைப் பொறுத்தவரையில், சிறுபான்மையின மக்கள் மத்தியில் பெற்றிருந்த நம்பிக்கையை சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பெற்றுக் கொள்ள முடியாமல் போயிருந்தது.
சிங்கள பௌத்த மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே, சிறுபான்மையின மக்களின் வாக்குகளால் வெற்றியைப் பெற முடியும். ஆனால் சஜித் பிரேமதாஸவினால் சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அளவுக்கு அவரால், சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளைப் பெற முடியவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், ஐ.தே.கவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த விடயத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள பௌத்த வாக்காளர்களிடம் இருந்து ஐ.தே.க விலகிச் சென்றிருக்கிறது, ஐ.தே.கவின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழந்திருக்கிறார்கள் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் பலரும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சிங்கள பௌத்தர்கள் அதிகம் பாதிக்கப்படாத போதும், நாட்டைப் பாதுகாக்க ராஜபக் ஷவினர் ஒருவரால் தான் முடியும், என்று அவர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினார்கள். இதுவே ஐ.தே.கவுக்குப் பெரும் நெருக்கடியாக மாறியது.
அதனால் தான், மீண்டும் அதிகாரத்துக்கு வர வேண்டுமானால் சிங்கள பௌத்த மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அவர்களின் வாக்குகளை அதிகளவில் பெற்றுக் கொள்வதற்கு முனைய வேண்டும் என்ற கருத்து ஐ.தே.கவுக்குள் வலுப் பெற்றிருக்கிறது.
ஒரே வரியில் சொல்வதானால், ராஜபக் ஷவினர் எவ்வாறு சிங்களத் தேசியவாத அரசியலை முன்னெடுத்தனரோ, விகாரைகளின் ஊடாக மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு பௌத்த சிங்கள வாக்குகளை தன் பக்கம் ஈர்த்தாரோ- அதேபோல ஐ.தே.கவும் விகாரைகளையும், சிங்கள பௌத்தர்களையும் நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கொன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, டுவிட்டரில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அமெரிக்கா, இந்தியா, இலங்கை வரிசையில் பிரித்தானியாவிலும் தேசியவாதம் வெற்றி பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது அந்தக் கருத்தின் ஊடாக கூற வந்த விடயம், உலகமே தேசியவாத அலையில் அள்ளுப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தான்.
அயல் நாடுகளில் மாத்திரமன்றி, மேற்குலகிலும் தேசியவாதத்தை முன்னிறுத்தும் கட்சிகளும் வேட்பாளர்களும் வெற்றி பெறுகின்ற நிலையில், சிங்கள பௌத்த மக்களிடம் இருந்து இனிமேலும் விலகிச் சென்று விடக்கூடாது என்பதில் ஐ.தே.க உறுதியான முடிவை எடுத்து விட்டது.
தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே, ஐ.தே.க தலைவர்கள் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளத் தவறி விட்டோம் என்று புலம்பினார்கள்.
அதற்குப் பின்னர் சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுகளின் பக்கம் ஐ.தே.க சாய்வதற்கான அறிகுறிகள் வெளிப்பட்டன. எனினும் கட்சிக்குள் நிலவுகின்ற தலைமைத்துவ குழப்பங்களால், இந்த விவகாரம் சற்று மந்த நிலையை எட்டியிருக்கிறது.
ஆனால், தலைமைத்துவக் குழப்பங்கள் ஓரளவுக்கு ஓய்ந்த பின்னர், சிங்கள பெளத்த தேசியவாதத்தை பலப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஐ.தே.க நாடப் போகிறது.
ஐ.தே.க சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டால் போதாது, சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளையும் பெற்றால் தான் நிலைத்திருக்க முடியும் என்பது கடந்த தேர்தலில் உறுதியாகி விட்டது.
இதற்குப் பின்னரும் அந்தக் கட்சி தூங்கிக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகின்ற சஜித் பிரேமதாஸ, சிங்களத் தேசியவாதத்தை இலகுவில் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய ஒரு தலைவர் தான். அவர் ரணில் விக்கிரமசிங்கவைப் போன்றவர் அல்ல.
அண்மைக்காலமாக, சஜித் பிரேமதாஸ வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள்- அவர், சிங்களத் தேசியவாதத் தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள எத்தனிக்கிறார் அல்லது சிங்களத் தேசியவாத சக்திகளின் கவனத்தை ஈர்க்க முனைகிறார் என்பதை உணர்த்துவதாக உள்ளன.
கோத்தாபய ராஜபக் ஷவின் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்கத் தயார் என்று சஜித் பிரேமதாஸ முதலில் அறிவித்திருந்தார்.
அதற்குப் பின்னர், எம்.சி.சி, அக்சா, சோபா போன்ற நாட்டுக்கு எதிராக வெளிநாடுகளுடனான உடன்பாடுகளை கிழித்தெறிய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இவையெல்லாம் சிங்களத் தேசியவாத சக்திகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் கையாளுகின்ற யுக்திகள் தான்.
சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் மத்தியில் தானும் அவ்வாறானதொரு தலைவர் தான் என்று நிரூபிக்க முனைகிறார் சஜித் பிரேமதாஸ.
தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரு சிங்களப் பேரினவாதக் கட்சி தான். கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள், அடக்குமுறைகளுக்கு காரணமான கட்சி தான்.
ஆனாலும் ஒப்பீட்டளவில் பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட, ஐ.தே.க பரவாயில்லை என்ற கருத்து பெரும்பாலான தமிழர்களிடம் காணப்பட்டது.
ஆனால், சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி சிங்களத் தேசியவாத கோட்பாடுகளுக்கு அமைய செயற்படத் தொடங்கினால்- தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் அந்தக் கட்சி கொண்டுள்ள நம்பிக்கை தகர்ந்து விடும்.
அதுமாத்திரமன்றி, இரண்டு பிரதான கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இனவாதம் கக்கினால், சிங்கள பௌத்த நலன்களுக்கான போட்டியில் குதித்தால்- அது சிறுபான்மையின மக்களின் நலனுக்குப் பாதகமாகவே அமைந்து விடும்.
அது மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் தற்போது கொண்டுள்ள கூட்டை ஐ.தே.க எந்தளவுக்கு கொண்டு செல்லும் என்ற கேள்விகளும் உள்ளன.
குறிப்பாக, சஜித் பிரேமாதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பின்னர், அந்தக் கட்சி தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் எந்தளவுக்கு நெருக்கத்தைப் பேணும் என்று கூறமுடியாத நிலையே தற்போது காணப்படுகிறது.
ஏனென்றால், சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு தலைமை தாங்கினால் இலகுவாக நாட்டின் அதிகாரத்தைப் பிடித்து விடலாம் என்ற கருத்து, இப்போது ஐ.தே.கவில் வலுப்பெற்றிருக்கிறது,
இவ்வாறான நிலையில், அதனை நோக்கித் தான் சஜித் பிரேமதாஸ நகர முயற்சிப்பாரே தவிர, தமிழ், முஸ்லிம்களைப் பற்றி கரிசனை கொள்ள வாய்ப்புகள் குறைவு.
-சத்திரியன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM