ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க தனது அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பிலான தீர்மானங்களை விரைவில் அறிவிக்கவுள்ள நிலையில் அவரே அனைத்தினங்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருக்கின்றார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அகிலவிராஜ் காரியவசம் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பில் உங்களது கட்சியின் ஆய்வு அறிக்கையில் சிங்கள பௌத்த, இளந்தலைமுறையினரின் வாக்குகளை பெறத்தவறியதாக கூறப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ளீர்கள்?
பதில்:- உண்மையிலேயே, கடந்த ஜனாதிபதித் தேர்தலை பார்த்தீர்கள் என்றால் தென்னிலங்கையில் அடிப்படைவாத சிந்தனைகளை மேலோங்கச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து அவற்றைப் பயன்படுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, தேசிய பாதுகாப்பு, சிங்கள தேசியவாதம், பௌத்த சமயம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே பிரசாரங்கள் அமைந்திருந்தன. தர்மத்தை போதித்த பௌத்த சமயத்தினை தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்தியுள்ளார்கள். மேலும் இரண்டு பிம்பங்களை உருவாக்கி பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். சிறுபான்மை மக்களை கவர்வதற்கான விடயங்களை ஒருபக்கத்தில் கூறிக்கொண்டு மறுபக்கத்தில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துருவாக்கத்தினையே செய்தனர்.
ஆனால், நாம் யதார்த்தமான விடயங்களையே முன்வைத்தோம். இனங்களை ஏமாற்றும் வகையில் முன்னுக்குப்பின்னர் முரணான வகையில் மாறுபட்ட கருத்துக்களை நாம் முன்வைக்கவில்லை. நாம் அனைவரும் சமத்துவமாக இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இந்த தீவில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதையும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதையும் மையப்படுத்தியே எமது விஞ்ஞாபனத்தில் பிரதிபலித்திருந்தோம்.
ஆகவே, பொதுமக்களை ஏமாற்றி நாம் வாக்குகளை சுவீகரிப்பதற்கு முயல வில்லை. துரதிர்ஷ்டவசமாக எமது எதிரணியினர் அவ்வாறு செய்தார்கள். இந்நிலையில் எமது பின்னடைவு குறித்த ஆய்வு அறிக்கையில் நீங்கள் கூறிய விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதுதொடர்பில் நாம் கவனம் செலுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்பது பற்றி சிந்திக்கின்றோம்.
கேள்வி:-அப்படியென்றால் நீங்கள் கடும்போக்கான சிங்கள பௌத்த நிலைப்பாடுகளை அடுத்து வரும் காலத்தில் பிரதிபலித்தாக வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளீர்களா?
பதில்:- அவ்வாறில்லை. ஐக்கிய தேசியக் கட்சியானது மூவின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகம் நிறைந்தவொரு பாரம்பரிய அரசியல் கட்சியாகும். எமது கட்சித் தலைமையிலான கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புகள் உள்ளன. அவர்கள் எமது கட்சியின் மீதும், தலைமையின் மீதும் வைத்துள்ள இனவாதமற்ற முற்போக்கான கொள்கை ரீதியான பிணைப்பின் காரணத்தினாலும், நம்பிக்கையினாலுமே எம்முடன் இணைந்து பயணிக்கின்றார்கள். ஆகவே நாம் எப்போதும் நடைமுறைச்சாத்தியமான யதார்த்த பூர்வமான விடயங்களை ஒளிவுமறைவின்றி மக்கள் முன்னிலையில் கூறியே அவர்களின் ஆணையைக் கோருவோம். இதில் எப்போதும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
கேள்வி:- எதிர்க்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை வழங்குமாறு வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளனவே?
பதில்:- ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பல்வேறு கருத்துக்கள் கட்சியினுள் எழுந்திருந்தன. இந்நிலையில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு, பாராளுமன்றக் குழு ஆகிய கலந்துரையாடல்களிலும் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவி வழங்கப்படுவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று அவருக்கு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் பதவி வழங்குவதற்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க கட்சியை மறுசீரமைத்து, ஒற்றுமையானதும், பலமானதுமான அரசியல் அணியாக உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார். குறிப்பாக, அடுத்த தலைமைத்துவம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலை முகங்கொடுப்பதற்கான வியூங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றையும் அமைத்துள்ளார்.
அக்குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆகவே அக்குழுவின் பரிந்துரைகளுடன் கட்சியின் அனைத்துக் கட்டமைப்புக்களுடனும் கலந்துரையாடி கட்சித்தலைமைத்துவம் சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க சிறந்த தீர்மானமொன்றை அறிவிப்பார். அச்செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- அடுத்து வரும் காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியில் உள்ள வகிபாகம் என்னவாக இருக்கப்போகின்றது?
பதில்:- அவரே தற்போது கட்சியின் தலைவராக இருக்கின்றார். அடுத்து வரும் காலத்தில் கட்சியினுள் எத்தகைய மாற்றங்கள் இடம்பெறும் என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக கட்சியின் தலைவர் என்ற வகையில் அடுத்த கட்டமான விடயங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் அவரே முடிவெடுக்கவுள்ளார். அதுபற்றி தற்போது அவசரப்பட வேண்டியதில்லை. அவர் உரிய நேரத்தில் முடிவுகளை அறிவிப்பார்.
கேள்வி:- உங்களது கட்சியினுள் ரணில், சஜித் அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் சஜித் ஆதரவு தரப்பினர் கட்சித் தலைமைத்துவத்தினை கோரிவருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு சாதகமற்றதொரு சூழல் ஏற்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கியம் கேள்விக்குறியாகிவிடுமல்லவா?
பதில்:- ஐக்கிய தேசியக் கட்சியினுள் ரணில் விக்கிரமசிங்க அணியினர், சஜித் பிரேமதாஸ அணியினர் என்று இரு தரப்பினர் இருக்கின்றார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால் எமது கட்சியினுள் வெவ்வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் உள்ளார்கள். ஜனநாயகத் தன்மை கொண்ட அரசியல் கட்சி என்ற வகையில் அனைவரின் கருத்துக்களையும் நாம் செவிமடுத்தே தற்போது வரையில் செயற்பட்டுவந்து கொண்டிருக்கின்றோம்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினுள் காணப்படும் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் களைந்து ஐக்கியப்பட்டாலே எம்மால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் 113ஆசனங்களைப் பெறமுடியும் அல்லது அந்த ஆசன எண்ணிக்கைக்கு அருகிலாவது வரமுடியும். அவ்வாறான ஆசன எண்ணிக்கையை எட்டுமிடத்து எம்மால் பாராளுமன்ற அதிகாரத்தினை ஏனைய தரப்புக்களையும் இணைத்து பெற்றுக்கொள்ள முடியும். இந்த யதார்த்த நிலைமையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எமது கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி அனைவரையும் ஒன்றிணைத்து பயணிப்பதே எமது இலக்காகவுள்ளது.
நாம் ஒற்றுமையாக செயற்பட்டதன் காரணத்தினாலேயே 2015ஆம் ஆண்டு ஜனவரி 8இல் ராஜபக் ஷ வினரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. அந்த முன் அனுபவத்தினை மையப்படுத்தி எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். நபர்களை மையப்படுத்தி விமர்சனங்களை முன்வைப்பதால் மென்மேலும் இடைவெளிகளே அதிகரித்துச் செல்லும் நிலைமைகளே உருவாகும். இதனால் நன்மையடைப்போவது யார் என்பதையும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
கேள்வி:- சஜித் பிரேமதாஸவை தோல்வியடையச் செய்வதற்கு கட்சியினுள் சூழ்ச்சி செய்யப்பட்டதாக கூறப்படுவது பற்றி?
பதில்:- கட்சியின் பெரும்பான்மையானவர்களின் தீர்மானத்திற்கு அமையவே வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்பட்டன. மேலும் எமது உறுப்பினர்களும், பங்காளிக்கட்சிகளும் அவரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்கள். ஆகவே பின்னடைவுகளின் பின்னர் கட்சியினுள் ஏற்படுத்தும் வகையிலேயே அவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக் கட்சிகள் உங்களின் தரப்புடன் கைகோர்த்தமை தென்னிலங்கையில் பின்னடைவுகளை சந்திப்பதற்கு காரணமாகியிருந்தது என்று கருதுகின்றீர்களா?
பதில்:- இல்லை. நாம் இந்த தரப்பினருடன் இணைந்தே 2015 இல் தேர்தல் வெற்றியைப் பெற்றிருந்தோம். அப்போது தென்னிலங்கையில் மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருந்தார்கள். ஆகவே அவ்வாறானதொரு கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. எமக்கு எதிராக ஊடக மாபியாக்
கும்பலைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க மேற்கொள்ளப்பட்ட இனவாதம் நிறைந்த விஷமப்பிரசாரமே காரணமாக அமைகின்றது. அதன் காரணமாக வெற்றியொன்றை ஒருதரப்பு பெற்றமையும் மிகவும் கவலைக்குரிய விடயமாகின்றது. எதிர்காலத்தில் இந்த நாட்டின் மக்கள் ஒவ்வொரு விடயத்தினையும் ஆழமாக அவதானித்து தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகவுள்ளது.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கான பிரசாரப்பணிகளே ஒப்படைக்கப்பட்டிருந்ததோடு, அவர் அதனை முறையாக முன்னெடுத்துள்ளமையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் அவரை கட்சித்தலைமையிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்துவதானது எவ்வளவு தூரம் நியாயமானது என்று கருதுகின்றீர்கள்
பதில்:- உங்களின் கேள்வி நியாயமானதே. இந்த நாட்டில் உள்ள தற்பேதைய அரசியல் தலைவர்களில் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார். கட்சியினுள் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அவர் அர்ப்பணிப்புடன் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தார். வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரடியாக பிரசாரப்பணிகளில் ஈடுபட்டார். சஜித் பிரேமதாஸவுக்கு அவர் காலைவாரிவிடவில்லை. மேலும் அவரை தலைமைப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரித்திரிபவர்கள் அவர்களின் தொகுதிகளில் ஏற்பட்ட பின்னடைவுகளையும் ஒருதடவை சுயபரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
கேள்வி:- அப்படியாயின் ரணில் விக்கிரமசிங்கவை தலைமைப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோருபவர்களிடத்தில் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினீர்களா?
பதில்:- தேர்தலின் பின்னர் நடைபெற்ற எமது கட்சிக்கூட்டங்களின் போது சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக எடுத்துக்கூறியுள்ளனர். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவினை தலைமைப்பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரும் தரப்பினர் அந்தக்கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதாக இல்லை. அவர்கள் வேறொரு நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதன் காரணத்தாலோ அல்லது அடுத்த தேர்தலில் தமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவோ வேண்டியே நியாயமான கருத்துக்கள் அனைத்தையும் நிராகரித்து செயற்பட விழைகின்றார்கள்.
கேள்வி:- எதிர்வரும் பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாரா?
பதில்:- அதுபற்றி எவ்விதமான கருத்துக்களையும் அவர் இதுவரையில் பகிர்ந்திருக்கவில்லை. ஆகவே அதுபற்றிய கருத்துக்களை என்னால் உத்தியோகபூர்வமாக கூறமுடியாது.
கேள்வி:- ரணில் விக்கிரமசிங்க அடுத்தகட்டமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவி நோக்கி நகரவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மைத்தன்மைகள் இருக்கின்றனவா?
பதில்:- இல்லை. அவ்வாறான எந்தவிதமான விடயங்களும் நடைபெற வில்லை. அவையெல்லாம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் வதந்திகளே.
கேள்வி:- புதிய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- புதிய ஜனாதிபதி ஒருசில நல்ல விடயங்களை முன்னெடுக்கின்றார். ஆனாலும் கடந்த காலத்தில் ஒரு குடும்பத்தினை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மெல்ல மெல்ல ஆரம்பமாகின்றன. ஜனநாயகச் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் உள்ளன. இராஜதந்திர தரப்புக்கள் அதிருப்தி அடையும் வகையிலான செயற்பாடுகள் ஆட்சி அதிகாரத்தினை பொறுப்பேற்று சொற்ப காலத்திலேயே அரங்கேறியுள்ளது.
இவற்றை விட எம்.சி.சி.ஒப்பந்தம் மூலமாக அமெரிக்காவுக்கு நாட்டை தாரைவார்த்து நாம் கொடுக்கப்போகின்றோம் என்று பிரசாரம் செய்தவர்கள். தற்போது 70சதவீதம் நாட்டுக்கு நன்மையான விடயங்கள் இருப்பதாக பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதன்மூலம் பொய்யான பிரசாரங்கள் ஊடாகவே ஆட்சியை கைப்பற்றியுள்ளார்கள் என்பது வெளிப்படையாகியுள்ளது.
கேள்வி:- ஒக்டோபர் புரட்சியின்போது ஜனநாயகத்தையும், அரசியல் சம்பிரதாயங்களையும் நிலைநாட்டுவதற்காக உயர்நீதிமன்றத்தினை நாடியிருந்த உங்களுடைய கட்சி தற்போது பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அமைச்சுக்களை ஜனாதிபதி வைத்திருப்பதால் அரசியலமைப்பு மீறப்படுவதாக கூறுகின்றபோது அதுகுறித்து நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது ஏன்?
பதில்:- 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாகவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் கட்டியெழுப்பப்பட்டு ஜனநாயக முறையிலான ஆட்சியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆகவே அந்த சட்டத்தினை நீக்குவதற்கோ மீறப்படுவதற்கோ நாம் இடமளிக்கப்போவதில்லை. ஆகவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தினை மீறும் வகையிலான அரசின் செயற்பாடுகள் குறித்து நாம் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து வருகின்றோம். சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து விரைந்து முடிவெடுப்போம்.
கேள்வி:- கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியொருவரின் நெருக்கமான உறவினர் என்று கூறப்படுகின்றதே?
பதில்:- அது முற்றிலும் பொய்யான கருத்தாகும். அரசாங்கம் தன்மீது விழுந்த கரும்புள்ளியை நீக்குவதற்கு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கின்றது.
நேர்காணல் - ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM