இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வீரகேசரி வெளியீட்டு நிறுவனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் ஒன்பது விருதுகளை தட்டிக்கொண்டது.
20ஆவது தடவையாக நடைபெற்ற இந்த விருதுவழங்கும் விழாவில் முதல் தடவையாக வீரகேசரி பத்திரிகையின் சார்பில் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான மேர்வின் டி சில்வா விருதை வீரகேசரி வார வெளியீட்டின் உதவி செய்தி ஆசிரியர் ஆர். ராம்குமார் பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
நாட்டின் பொதுமக்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர்களின் சேவையையும் பணியையும் அங்கீகரிப்பதே இந்த விருது வழங்கலின் மிக முக்கிய நோக்கமாகும்.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து வழங்கும் ஊடகவியலாளர்களுக்கான விருதுகளே அச்சு ஊடகத்துறையில் ஊடகவியலாளர் பெறும் அதி உயரிய விருதாக கருதப்படுகிறது.
இரவு, பகல் பாராது பொதுமக்களுக்கு உண்மையான தெளிவான உரிய தகவலை விரைவாக எடுத்து செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர். அவர்களின் அந்த அர்ப்பணிப்பு மிக்க சேவையை அங்கீகரிக்கும் வகையில் இவ்வாறு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த கட்டத்தில் இந்த விருது வழங்கும் செயற்பாடு 20 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகிறது.
1998 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இலங்கையில் ஊடக சுதந்திரம் முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்பட்டு ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அதற்கு எதிராக இலங்கையின் ஊடகத்துறை போராடிக்கொண்டிருந்தது.
அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை பத்திரிகைகள் வெளியீட்டாளர் சங்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்பன இணைந்து செயற்பட ஆரம்பித்தன.
அதனடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் இந்த அமைப்புக்கள் இணைந்து ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தன. கொழும்பில் நடந்த அந்த மாநாட்டில் இலங்கையின் ஊடகத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்ட பரந்துபட்ட திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது ஊடக சுதந்திரம் மற்றும் சமூகப் பொறுப்பு தொடர்பான கொழும்பு பிரகடனம் என்ற பெயரில் ஒரு பிரகடனமாக இந்த திட்டம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையிலேயே சிறந்த ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் சேவையை அங்கீகரித்து விருது வழங்கும் விழா 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படியே இம்முறை 20ஆவது சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. கல்கிஸை மவுண்ட் லெவேனியா ஹோட்டலில் நேற்று இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இம்முறை மிக முக்கியமான நிகழ்வாக வருடத்திற்கான அதி சிறந்த ஊடகவியலாளருக்கான மேர்வின் டி சில்வா விருதை வீரகேசரி வார வெளியீட்டின் உதவி செய்தி ஆசிரியர் ஆர்.ராம்குமார் பெற்றுக்கொண்டமை முக்கிய அம்சமாகும்.
கடந்த 20 வருடங்களாகவே இந்த சிறந்த பத்திரிகையாளருக்கான விருது சிங்கள மற்றும் ஆங்கில மொழிமூல பத்திரிகைகளுக்கே கிடைத்துள்ளன. இம்முறையே முதல் தடவையாக தமிழ் மொழிமூலம் ஊடகப்பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர் இந்த விருதை பெற்றுக் கொண்டுள்ளார்.
( அதி சிறந்த ஊடகவியலாளருக்கான மேர்வின் டி சில்வா விருது - வீரகேசரி வார வெளியீட்டின் உதவி செய்தி ஆசிரியர் ஆர்.ராம்குமார்)
வருடத்திற்கான சிறந்த ஊடகவியலாளருக்கான மேர்வின் டி சில்வா விருதை பெற்றுக்கொண்ட ஆர். ராம்குமார், யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்துள்ளதோடு 2008ஆம் ஆண்டில் ஊடகத்துறைக்குள் காலடியெடுத்து வைத்தார்.
2010ஆம் ஆண்டு ஊடகவியல் கல்லூரியில் தொலைக்காட்சிப்பிரிவில் டிப்ளோமா கற்கையை மேற்கொண்டதோடு வணிக முகாமைத்துவ டிப்ளோமா கற்கையையும் பூர்த்தி செய்துள்ளார்.
அத்துடன் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலையாள மனோரமா தொடர்பாடல் பாடசாலையில் ஊடகக் கல்வியையும் பூர்த்திசெய்துள்ளதோடு உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகப் பயற்சிகளையும் பெற்றுள்ளார்.
தினக்குரல் வாரவெளியீட்டின் ஊடாக விளையாட்டுத்துறை ஊடகவியலாளராக ஊடகப்பயணத்தினை ஆரம்பித்த இவர், பின்னர் ஸ்ரீ தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றிலும் இலத்திரனியல் ஊடகவியலாராக பணியாற்றியதோடு 2014 ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி வீரகேசரி நாளிதழ் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார்.
அதன்பின்னர், அரசியல், பொருளாதார சமூக செய்தி அறிக்கையிடலாளராகவும், பாராளுமன்ற ஊடகவியலாளராகவும், நேர்காணல்கள் செய்பவராகவும் பணியாற்றியதோடு, உதவி செய்தி ஆசிரியராக 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவி உயர்த்தப்பட்டு செய்தி அறையின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.
2012 ஆம் ஆண்டு ஆண்டின் சிறந்த விளையாட்டு ஊடகவியலாளராக(தினக்குரல் வாரவெளியீடு) தெரிவு செய்யப்பட்டதோடு, 2016ஆம் ஆண்டு சிறந்த பத்தி எழுத்தாளராகவும் (வீரகேசரி நாளிதழ்) தெரிவானார்.
மேலும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகை ஊடகவியலாளர்களுக்கான ஜனாதிபதி விருது நிகழ்வில் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான (வீரகேசரி நாளிதழ்) மற்றுமொரு விருதினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் 2018 ஜுன் முதல் வீரகேசரி வாரவெளியீட்டில் உதவிசெய்தி ஆசிரியராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் மேலும் 8 விருதுகளை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தினால் வெளியிடப்படும் பத்திரிகைகள் பெற்றுக்கொண்டுள்ளன. வீரகேசரி நாளிதழின் செய்தி ஆசிரியர் ஐ. ரொபட் அன்டனி வருடத்தின் சிறந்த விவரண கட்டுரைக்கான உபாலி விஜேவர்த்தன விருதை பெற்றுக்கொண்டார்.
( வருடத்தின் சிறந்த விவரண கட்டுரைக்கான உபாலி விஜேவர்த்தன விருது - வீரகேசரி நாளிதழின் செய்தி ஆசிரியர் ஐ. ரொபட் அன்டனி )
வீரகேசரி நாளிதழின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் எஸ்.ஜே. பிரசாத் வருடத்தின் சிறந்த விளையாட்டுத்துறை ஊடகவியலாளருக்கான விருதை தனதாக்கிக்கொண்டார். எஸ்.ஜே. பிரசாத் வெளிநாடு சென்றிருந்ததால் அந்த விருதை வீரகேசரி நாளிதழின் இரவு கடமைநேர ஆசிரியர் கே.சிவராஜா பெற்றுக்கொண்டார்.
(வருடத்தின் சிறந்த விளையாட்டுத்துறை ஊடகவியலாளருக்கான விருது)
அத்துடன் வீரகேசரி வார வெளியீட்டின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் வருடத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ.சிறிவர்த்தன விருதை தனதாக்கிக்கொண்டார்.
(வருடத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ.சிறிவர்த்தன விருது - வீரகேசரி வார வெளியீட்டின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன்)
அதேபோன்று வருடத்துக்கான சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருதை மெட்ரோ நியூஸ் இணையத்தளம் பெற்றது. இந்த விருதினை டிஜிட்டல் மீடியா பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ்குமார் பெற்றுக்கொண்டார்.
( வருடத்துக்கான சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான விருது மெட்ரோ நியூஸ் இணைய தளம் - டிஜிட்டல் மீடியா பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ்குமார்)
இதேவேளை சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருதுகள் இரண்டும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் பெற்றது.
வீரசேகரி மற்றும் விடிவெள்ளி ஆகிய இணையத்தளங்களே அவ்வாறு திறமை சான்றிதழ்களை பெற்றன.
வீரகேசரி இணையத்தளத்தின் சார்பில் அதன் உதவி ஆசிரியர் பிரியதர்ஷனும் விடிவெள்ளி இணையத்தளத்தின் சார்பில் அதன் சிரேஷ்ட உதவி ஆசிரியர் எஸ்.என்.எம். சுஹைலும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
( வருடத்திற்கான சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது - வீரசேகரி இணையத்தளம் சார்பில் அதன் உதவி ஆசிரியர் பிரியதர்ஷன்)
( வருடத்திற்கான சிறந்த கட்டமைக்கப்பட்ட செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது- விடிவெள்ளி இணையத்தளம் சார்பில் அதன் சிரேஷ்ட உதவி ஆசிரியர் எஸ்.என்.எம். சுஹைல்)
மேலும் சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான திறமை சான்றிதழ் விருதை விடிவெள்ளி பத்திரிகை பெற்றது. அதன் பக்க வடிவமைப்பாளர் ராமகிருஷ்ணன் விமலா விருதை பெற்றுக்கொண்டார்.
அத்துடன் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடாக வரும் சூரிய காந்தியின் சார்பில் வருடத்தின் சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான திறமை சான்றிதழ் விருதை ஊடகவியலாளர் எம். செல்வராஜா பெற்றுக்கொண்டார்.
மேலதிக படங்களுக்கு https://www.virakesari.lk/collections/443
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM