துரைசாமி நடராஜா
மலையக மக்கள் பல துறைகளிலும் உரிய அபிவிருத்தியினை அடையாதுள்ளனர். இவர்களின் அடைவுகள் தேசிய மட்ட நிலைகளில் இருந்தும் மிகவும் பின்தங்கியதாகவே காணப்படுகின்றன. எனவே இம்மக்களின் பல் துறைசார் அபிவிருத்தி கருதி அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுடன் சலுகைகள் பலவற்றையும் வழங்குதல் வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை மலையகத்து தலைமைகளின் வகிபாகம் இம்மக்கள் தொடர்பில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. மலையக மக்களின் வழிநடத்துகை தொடர்பில் தெளிவான சிந்தனை மற்றும் தொலைநோக்கு என்பன தலைமைகளுக்கு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத் தலைமைகளுடன் மலையக அமைப்புகளும் கைகோர்த்து மக்களின் எழுச்சிக்கு வலுசேர்க்க வேண்டும் என்ற கோஷங்களையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கையில் மட்டுமன்றி இன்னும் பல நாடுகளிலும் தீவுகளிலும் சென்று குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மிக மிக மோசமடைந்து காணப்பட்டன என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒரு விடயமல்ல. அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு முதலில் பிரித்தானிய, பிரான்சிய ஆட்சியாளர்களாலும் பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும் அந்தந்த நாடுகளையும் தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும் தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும் ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள், தோட்ட உத்தியோகத்தர்கள், பிற அலுவலர்கள் ஆகிய பலராலும் கொடூரமாக சுரண்டப்பட்டுள்ளனர். இன்னும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதனை புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். மேலும் இத்தகைய நாடுகளிலும் தீவுகளிலும் வாழும் தமிழ்த் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் இன்று தமிழ் பேசவோ எழுதவோ வாசிக்கவோ தெரியாத நிலையில் காணப்படுவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பிரித்தானியரின் மோக வலையில் சிக்கி தனது தாயகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் கொடுமையைப் போக்கவும் அதற்கு மேலாக பண்ணையாளர்களின் கொடுமையில் இருந்து தப்பி விமோசனம் தேடவும் புறப்பட்ட இலட்சோபலட்ச தமிழ்த் தொழிலாளர்கள் இலங்கையிலோ பிற இடங்களிலோ தொடர்ந்தும் பட்டினியாலும் வறுமையினாலும் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளமையை புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி கண்களைக் குளமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதேவேளை மு.நித்தியானந்தன் தனது நூல் ஒன்றிலே மலையக மக்கள் பட்ட இன்னல்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு கூறி இருக்கின்றார். இலங்கையில் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டு அவை காலனிகளின் கொள்ளைக் காடாக மாறிய காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து கூலிகளாகக் கொண்டு வந்து குவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இக்கொடூர சுரண்டல்களுக்கு பூரணமாக இரையாக நேர்ந்தது. குறுகிய காலத்திற்குள் இலாபத்தை குவித்துக்கொண்டுவிடும் பேராசை வெறியைத் தவிர தோட்ட முதலாளிகளை உந்திய காரணி வேறெதுவுமேயில்லை. இந்தத் தோட்டத்துரைமாரின் கொடும் ஒடுக்குமுறையும் கடுமையான தொழில் நிலைமைகளும் குறைந்த சம்பளமும் நோயும் மரணமும் தொழில் உறவுகளை போராட்டக்களமாக மாற்றிக்கொண்டிருந்தன. தோட்ட லயன்கள் சிறைக்கூடங்களாகவே அமைந்தன. இந்த வதைமுகாம்கள் தோட்ட லயன்களைத் தான் நினைவுக்கு கொண்டுவரும். கூலி, அடிமை முறையில் வாழும் தொழிலாளர்களை பட்டிகளில் அடைந்து வைப்பதன் குறியீடாகத்தான் இன்னும் அந்த லயன்கள் விளங்குகின்றன என்று நித்தியானந்தன் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
ஊழியச் சிறைக் கூடங்கள் தான் லயன்கள் என்றவாறு டேவிட் செல்போன் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். பெருந்தோட்டங்களில் குடியேறி வாழ்ந்த இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் இந்தியத் தமிழர் தொழிற்சங்கம் படிப்படியாக வளர்ச்சியடைந்தமை, அவர்களுடைய உரிமைகளுக்காக போராட எழுச்சியுற்ற தொழிற்சங்க இயக்கத்தின் பல்வேறு அம்சங்கள் இந்தியத் தமிழர் பிரச்சினை எவ்வாறு தோன்றியது என்பது பற்
றியும் அப்பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அரசாங்கங்களும் இந்தியத் தமிழ் இயக்கங்களும் மேற்கண்ட நிலைப்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியதாக பேராசிரியர் சோ. சந்திரசேகரனின் “இலங்கை இந்தியர் வரலாறு” அமைந்திருக்கின்றது. இந்நூலின் மையப்பொருள் பற்றி அங்கில மொழியில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளும் சில நூல்களும் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக சமூகத்தவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இந்நாட்டில் பல்வேறு சவால்களுக்கும் சிக்கல்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். இச்சவால்களும் சிக்கல்களும் இன்னும் தீர்ந்தபாடில்லை. இவை தொடர்கதையாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு எவ்வகையிலேனும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுதல் வேண்டும். மலையக சமூகத்தவர்கள் அரசியல் , பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு, சமூக நிலைமைகள், இருப்பிட வசதி என்பவற்றிலும் இன்னும் அபிவிருத்தியினைக்காணவேண்டியுள்ளது. இந்திய வம்சாவளியினர் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் 'பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை பறிப்பு’ நடவடிக்கையினால் பல்வேறுபாதக விளைவுகளையும் சந்தித்திருந்தனர். அரசாங்க தொழிலுக்கு விண்ணப்பம்கூட அனுப்ப முடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் வழங்கி தனது முன்னைய செயலுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டது. இதனைத் தொடர்ந்து மலையக மக்கள் மெதுமெதுவாக அபிவிருத்திப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்பதனையும் மறுப்பதற்கில்லை. இந்நிலை துரிதப்படுத்தப்படுதல் வேண்டும்.
கல்வியில் பின்னடைவு
தோட்டத் தொழிலாளர்களை சகல துறைகளிலும் வேரறுத்து அம்மக்களை நிர்வாணப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன. இம்மக்களின் கல்வி ரீதியான ஒடுக்கு முறைகளும் இவற்றுள் அடங்குகின்றன. தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் தோட்ட நிர்வாகிகள் கவனமாக இருந்தனர். தோட்ட முகாமைத்துவம் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் எதுவித கரிசனையையும் கொண்டிருக்கவில்லை. தொழிலாளர்களே தமது தோட்ட லயன்களில் பள்ளிகளை ஆரம்பித்து கொண்டு நடத்தினர். இவை தமிழகத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களின் சாயலில் அமைந்திருந்தன என்று பேராசிரியர் தை .தனராஜ் தனது நூல் ஒன்றில் குறிப்பிடுகின்றார். பின்னர் கங்காணிகள் தோட்டத்தில் இரண்டு வகையான பாடசாலைகளை ஆரம்பித்தனர். தமது சொந்த நாட்டிலேயே மிகவும் இழிவான நிலையில் பிறந்து வளர்ந்த தமிழ் கூலிக்கு எதனையும் விளங்கிக்கொள்ளக் கூடிய உளஆற்றல் இல்லை. எனவே அவனை மிஷனரிமாருக்கு பயனுள்ள வகையில் உருவாக்கிக்கொள்ள ஏதாவது கொஞ்சம் சொல்லித் தந்தால் அதுவே போதுமானது என்ற இழிவான எண்ணம் தோட்ட நிர்வாகிகள் பலரிடம் காணப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் தொடர்ந்தும் அடிமைகளாகவே வைத்து தனது காரியத்தை சாதித்துக்கொள்ளவே இவர்கள் முனைந்தனர்.
தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மலையக பாடசாலைகள் அபிவிருத்திப் பாதையில் காலடி வைக்கத்தொடங்கின. பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்திக்கு வலுசேர்க்கப்பட்டது. இலங்கையின் எழுத்தறிவு வீதமானது 2012 ஆம் ஆண்டில் பின்வருமாறு அமைந்திருந்தது. நகரப் பகுதி 97.7, கிராமப்பகுதி 95.7, தோட்டப் பகுதி 81.7 என்று எழுத்தறிவு வீதமானது அமைந்திருந்த நிலையில் இலங்கையின் எழுத்தறிவு வீதம் அந்த வரு
டத்தில் 95.7 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை 2012 ஆம் ஆண்டில் தோட்டப் பகுதி ஆண்களிடையே எழுத்தறிவு வீதம் 83.4 ஆகவும், தோட்டப்பகுதி பெண்களிடையே 80.9 ஆகவும் காணப்பட்டது. சமகாலத்தில் மலையக பாடசாலைகள் பல தரமுயர்த்தப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆரம்பக் கல்வித்துறையில் விருத்தி நிலை ஏற்பட்டு வருகின்றது. எனினும் உயர் கல்விக்கான வாய்ப்புகள் அதிகரிக்கவேண்டிய தேவை இருக்கின்றது. பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் தொகையை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும் பாடசாலைக்குச் செல்லாத பல மாணவர்கள் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
2012 ஆம் ஆண்டு தகவல் ஒன்றின்படி 16.6 வீதமானவர்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் இருந்து பாடசாலைக்குச் செல்வதில்லை என்று தெரியவருகின்றது. பேராசிரியர் மா.செ. மூக்கையா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகையில், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் பல்கலைக்கழகக் கல்வியின் நிலைவரம் 25 – 40 வீதமாகக் காணப்பட இலங்கையில் அது 04 வீதமாகவே காணப்படுகின்றது. அதுவே மிகவும் பின்தங்கிவிட்ட ஒரு நிலையாகும். ஆனால் தோட்டப்புற சமூகம் அதனை விடவும் பாரதூரமான நிலையில் பின்தங்கிக் காணப்படுவது என்பது இச்சமூகத்தினரின் கல்வியில் பின்தங்கிய பாரதூரமான குறை நிலையையே பிரதிபலிக்கின்றது. பாடசாலைக்குச் செல்லாதவர்களாக 16.6 வீதத்தினரும், ஐந்து வருடங்களே பாடசாலை சென்றவர்கள் 32.0 வீதத்தினருமாகக் காணப்படுகின்றனர். 10 வருட கல்வி பெற்றவர்கள் 7.2 வீதத்தினராகவும், க.பொ.த. உ/தர கல்வி பெற்றவர்கள் 2.6 வீதத்தினர்களாகவும் உள்ளனர். ஆண்களதும் பெண்களதும் கல்விப் பெறுபேறுகளைக் கவனித்தால் அப்போது இவர்களில் பெண்களது நிலைமை இன்னும் பின்தங்கியதாகவே காணப்படுகின்றது என்று பேராசிரியர் மூக்கையா தெரிவிக்கின்றார்.
மலையக பாடசாலைகளில் துறைசார்ந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. வளப்பற்றாக்குறைகள் உரியவாறு பூர்த்தி செய்யப்படவில்லை. விஞ்ஞான, கணித பாடங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். மலையக பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட வேண்டும். இவை குறித்த பார்வையினை அரசியல்வாதிகள் செலுத்துதல் வேண்டும்.
பொருளாதாரம்
மலையக மக்களின் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமுள்ளன. உழைப்புக்கும் ஊதியத்துக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட பல விடயங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. எனினும் கூட்டு ஒப்பந்தம் எதிர்பார்த்த சாதக விளைவுகளை பெற்றுக்கொடுத்துள்ளதா? உரிய சம்பள உயர்வானது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கின்றதா? என்பதெல்லாம் கேள்விக்குரிய விடயமேயாகும். தோட்டத்தில் கிடைக்கின்ற வருமானத்தைத் தவிர இவர்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. கூட்டு ஒப்பந்த நடைமுறை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வெளியார் உற்பத்திமுறை தொடர்பில் அதிகமாகப்பேசப்பட்டு வருகின்றது. இம்முறையின் மூலமாக தொழிலாளர்கள் கணிசமான வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் நிலைமை தொடர்பில் மலையக கட்சிகள் கவனம் செலுத்திவருகின்றன.
தோட்டங்களை கிராமங்களாக்கும் முயற்சி குறித்த கருத்துக்களை பலர் வெளியிட்டுள்ளபோதும் இது இன்றும் சாத்தியப்படவில்லை. இது தொடர்பில் அழுத்தமும், ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் துரிதமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். வெறுமனே விளம்பரத்துக்காக பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைப்பது சில மலையக அரசியல்வாதிகளின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சமூகம் குறித்த வலியுடனும், இதய சுத்தியுடனும் இவர்கள் செயற்பட முன்வருதல் வேண்டும். தோட்டத் தொழிலாளர்கள் தினக்கூலி பெறுபவர்களாக உள்ளனர். குறைந்த அளவு கல்வி மற்றும் சந்தைப்படுத்தக்கூடிய திறன்கள் இல்லாமை அவர்களுடைய அசைவை மிகவும் கட்டுப்படுத்துகின்றது என்று எம்.வாமதேவன் சுட்டிக்காட்டுகின்றார். எனவே தோட்டங்களில் காணப்படுகின்ற கீழ்உழைப்பு நிலைமையானது அங்குள்ள வறுமை நிலையை தீவிரப்படுத்துகின்ற ஒன்றாகும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை நோக்கத்தக்கதாகும். தோட்டத் தொழிலாளர்களின் வருமான அதிகரிப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். சுயதொழில் விருத்திக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். கடன் வசதிகள், இடம் எனப்பலவும் இதில் உள்ளடங்கும். தோட்டப்பகுதிகளில் காணப்படும் பயன்படுத்தப்படாத நிலங்களை தொழிலாளர்களின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கென்று பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அரசியல்வாதிகள் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். தொழிலாளர்கள் நாட்கூலிகளாக உள்ள நிலையில் மாதச் சம்பளம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை குறித்தும் கவனம் செலுத்துதல் வேண்டும்.
இளைஞர் அபிவிருத்தி
ஒரு நாட்டில் ஒரு சமூகத்தில் இளைஞர் சக்தி முக்கியத்துவம் பெறுகின்றது. பல உலக வரலாறுகளை இளைஞர் சக்தி மாற்றியமைத்திருக்கின்றது. பல தலைவர்கள் ஆட்சிபீடமேறுவதற்கு இளைஞர்களின் வகிபாகம் என்பது அதிகமாக இருந்திருக்கின்றது. இந்த வகையில் மலையக இளைஞர்களின் சக்தியும் முக்கியத்துவம் பெறுகின்றது. மலையக இளைஞர்கள் சகல துறைகளிலும் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். உரிய வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். தேர்தல் காலங்களில் இளைஞர்களின் உதவியினைப் பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள் பின்னர் அவர்களை புறந்தள்ளிச் செயற்படுவதாக, கைகழுவி விடுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. எனவே இளைஞர் வலுவூட்டல், அபிவிருத்தி குறித்த திட்டங்களை அரசியல்வாதிகள் முன்வைக்க வேண்டும். அவர்களின் தகைமைக்கேற்ற தொழில்வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும். உரிய தகைமை இல்லாது குறைந்த பெறுபேறுகளுடன் பாடசாலையை விட்டு வெளியேறும் இளைஞர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுதல் வேண்டும். இளைஞர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் விஸ்தரிக்கப்படுதலும் வேண்டும்.
மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என்று பரவலாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கேற்றவாறு காய்நகர்த்தல்கள் இடம்பெறுதல் வேண்டும். வாரிசு அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ஆளுமையுள்ள, திறமையுள்ள இளைஞர்களுக்கு அரசியலில் இடமளிக்கப்படவேண்டும். இளைஞர்களிடையே புதிய சிந்தனைகள், கருத்துகள் பலவும் காணப்படுகின்றன. இவற்றின் நியாயத் தன்மையை உணர்ந்து இவற்றுக்கு மதிப்பளிக்கவும், அங்கீகரிக்கவும் வேண்டும். இளைஞர்களை புறக்கணிப்பதால் ஏற்படும், ஏற்பட்ட விபரீதங்களை யாரும் மறந்து விடுதல் கூடாது.
மலையக பெருந்தோட்ட மக்களின் வீட்டு வசதிகள் பின்தங்கிய நிலைமையில் உள்ளன. லயத்துக் கலாசாரம் இம்மக்களின் எழுச்சிக்கு தடையாக உள்ள நிலையில் இவற்றில் இருந்து துரிதமாக இம்மக்களை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என்பது குறித்த திட்டங்கள் மிகவும் அவசியமாகும். கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு திட்டங்கள் மந்த கதியிலேயே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. சமகாலத்திலும் இந்த நிலைமையே தொடர்கின்றது. இந்நிலையைக் கருத்தில்கொண்டு முறையான திட்டவரைபு ஒன்றின் ஊடாக எவ்வாறு வீடமைப்பினை துரிதப்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். தோட்டப்புற சுகாதார, மருத்துவ விருத்திக்கு ஆற்றவேண்டிய பணிகள் குறித்த முறையான திட்டங்களையும் அரசியல்வாதிகள் தயாரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இருப்பு
பெருந்தோட்ட தேயிலைத் தொழில்துறை இன்று மெது மெதுவாக வலுவிழக்கின்றது. கம்பனியினரின் அடக்குமுறை, ஊதிய பற்றாக்குறை, தொழில் துறையில் நவீனத்துவம் உள்ளீர்க்கப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் இதற்கு ஏதுவாகின்றன. தோட்டத்
தொழில்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்து வருகின்றது. 1981 இல் நான்கு இலட்சத்து 97 ஆயிரத்து 995 தொழிலாளர்கள் தோட்டங்களில் பதிவு பெற்றிருந்தனர். இது 2009 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 42 ஆயிரத்து 666 ஆக குறைவடைந்திருந்தது. இன்று இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. பெருந்தோட்டங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. அபிவிருத்தித் திட்டம், குடியேற்றத் திட்டம் என்னும் போர்வையில் தோட்டப்புற நிலங்கள் சுவீகரிக்கப்படுகின்றன. பல தோட்டங்கள் இவைகளை காரணம் காட்டி மூடப்பட்டிருக்கின்றன. 1988 இல் கண்டியில் 2500 ஏக்கரும், மாத்தளையில் 2600 ஏக்கரும் நுவரெலியாவில் 2000 ஏக்கரும் பதுளையில் 2125 ஏக்கரும், இரத்தினபுரியில் 5485 ஏக்கரும் திட்டமிட்ட சிங்கள இனக்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஏ.சி.ஆர்.ஜோன் தெரிவிக்கின்றார். மேலும் இந்த நிலங்கள் மலையகத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பதையும் இவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM