நீதிமன்றத்திற்குத் தரப்பாராகச் செல்லாமல் ஒருவரது வாழ்க்கை அமையுமானால் அது போல் சிறந்த செயல் அவரது வாழ்க்கையில் வேறு ஒன்றுமில்லை எனலாம். சிலர் நீதிமன்றம் என்றதும் இது ஏதோ பொல்லாத இடம். அதற்குச் செல்லாமல் இருந்தால் அதுவே தனது வாழ்வில் பெரும் கொடையாகும் என்று கூறுவதை நாம் காணலாம்.
ஆயினும் இன்றைய சமூக சூழ்நிலையிலும் வாழ்க்கை முறையிலும் ஆசைகளும் தேவைகளும் பெருகியுள்ளதால் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலையில் பலர் உள்ளதை நாம் காணலாம். ஆகவே இன்று நீதிமன்றம் கோவில்களுக்குச் சமமாக உள்ளது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் ஒருவர் அங்கு பல வகையான வழக்குகளைக் காணலாம். அவற்றில் ஒன்று சிவில் வழக்காகும். சிவில் வழக்குக்குச் செல்லும் ஒருவர் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும மேன்முறையீடு, மீளாய்வு, நீதிமன்ற ஆணைகள் என்பன போன்ற வழக்குகளை தொடர்ந்து நடத்துவதையும் நாம் காணலாம். ஒருவர் நீதியைப்பெற்று வெளிவருவதற்கு காலக்கெடு கிடையாது. பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இதனால் பணச்செலவும் வழக்காளியும் வயதும் மற்றைய தேவைகளும் உயர்ந்து கொண்டே இருக்கும். இதனால்தான் சாதாரணமாக மக்கள் கூறும் வாசகங்களில் ஒன்று என்னவெனில் ‘கோடு ஏறுபவன் நாளடைவில் ஓடு (பிச்சாபாத்திரம்) எடுக்கவேண்டிவரும்’ என்பதாகும்.
நீதி என்பது இறைவனால் கிடைக்கிறது என்று சிலர் கூறுவது உண்மையாயினும் அந்த நீதியைப் பெறுவது இலகுவானதல்ல என்பதை உணர்பவர் ஒரு போதும் கோடு ஏறுவதை விரும்புவதில்லை. ஆயினும் இன்றைய சமூக சூழ்நிலையில் கோடு ஏறாமல் வாழ்க்கையை நடத்துவதும் கஷ்டம் என்பதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்கின்றனர்.
இன்று நாம் பார்க்கப்போவது சிவில் நீதிமன்றம் பற்றிய சில நடவடிக்கைகளேயாகும்.
பகுதி 1
சிவில் வழக்கு ஒன்றில் ஈடுபடப்போகும் இருவர் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது (Proxy) பதிலி எனப்படும் பத்திரம் பற்றியதாகும்.
1) பதிலி என்ற பத்திரமே வழக்காளியால் அல்லது எதிராளியால் அல்லது அவ் வழக்கில் சம்பந்தப்படும் தரப்பினரால் சட்டத்தரணி ஒருவருக்கு அவ்வழக்கில் தெரிபடுவதற்கு வழங்கப்படும் அதிகாரப் பத்திரமாகும். இதனை ஆங்கிலத்தில் Proxy என்பர். நடைமுறையில் பதிலி என்பதை விட புறக்சி என்பதே மக்களிடையே பரவலாக வழங்குகிறது. ஆகவே வழக்கில் சம்பந்தப்படும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது சட்டத்தரணிக்கு Proxy ஐ வழங்குவதாகும்.
2) இப்பதிலியானது முதன் நிலை சிவில் நீதிமன்றத்தில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வரையும் வழக்கிற்குத் தேவைப்படுகிறது.
3) இவ் ஆவணம் வழக்காளிக்கும் மனுதாரருக்கும் எதிராளிக்கும் பொறுப்பாளிக்கும் மற்றும் வழக்கில் ஈடுபடுவோர் சிலருக்கும் தேவைப்படும் ஓர் ஆவணமாகும்.
4) தரப்பார் ஒரு சட்டத்தரணிக்கு பதிலியைக் கையளித்தால் அதன் விபரம் வழக்கின் பதிவேட்டில் பதியப்பட்டு விடும். பின்னர் இப் பதிலியை ரத்துச் செய்யாமல் புதிய ஒருவருக்கு தரப்பார் பதிலியை வழங்கமுடியாது.
5) பதிலியைப் பெற்ற ஒருவர் அவ்வழக்கின் முதனிலை நீதிமன்ற நடவடிக்கைளிலும் மேன்முறையீட்டுக்கும், மேன்முறையீட்டுக்கான முன் அனுமதியைப் பெறும் வழக்குகளிலும் வாதாடலாம்.
6) மீளாய்வு விண்ணப்பமானால் ((Revision) விரும்பினால் வேறு ஒரு சட்டத்தரணிக்கு தரப்பார் பதிலியை வழங்கலாம்.
7) புறக்சியை பெற்ற ஒரு சட்டத்தரணி தனது வழக்கை நடத்துவதற்கு வழக்குரைஞர் (Counsel) ஒருவரை அமர்த்தலாம்.
8) புறக்சியானது சிங்களத்தில் அல்லது தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வழங்கப்படலாம்.
9) சிவில் வழக்கில் புறக்சிக்கு முத்திரை வரி செலுத்தப்படவேண்டும்.
10) வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை பதிலியைப் பெற்ற சட்டத்தரணி மட்டுமே கையொப்பம் இட்டு நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கவேண்டும்.
11) ஒரு வழக்கிற்கு பதிலி தேவையா? இல்லையா? என்ற சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் பதிலி ஒன்றை அணைப்பதே புத்திசாலித்தனமானது.
12) ஒரு வழக்கில் சட்டத்தரணி ஒருவரின் பதிலி அணைத்திருக்கும்போது அதனை ரத்துச் செய்யாமல் இன்னுமொரு சட்டத்தரணியின் புறக்சியை அணைக்க நீதிமன்றம் இடம்கொடுப்பதில்லை.
13) அட்டனித் தத்துவக்காரர் புறக்சியை ஒரு வழக்கிற்குக் கொடுக்கும்போது அப்புறக்சியில் சகல விபரங்களும் அடங்கியிருக்க வேண்டும்.
14) வழக்கின் தரப்பார் ஒரு சட்டத்தரணியின் புறக்சியை மீளப்பெறும்போது அவருக்குச் செலுத்தவேண்டிய பணம் எதுவும் இருந்தால் அதனைச் செலுத்திய பின்னரேயே புதியவரின் புறக்சியை அணைக்கவேண்டும்.
15) புறக்சி மீளப்பெறப்படும்போது நீதிமன்றத்தில் அது கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்.
16) சிவில் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் எந்தவொரு பிரிவும் சட்டத்தரணி தனது விருப்பத்தின்படி புறக்சியை மீளப்பெறலாம் என்று கூறுகிற பிரிவை நான் கண்டதில்லை.
17) சில வேளை சட்டத்தரணி வேறு நாடுகளுக்கு அல்லது மாவட்டங்களுக்குச் சென்று தொழில் புரியலாம் அத்தகைய சந்தர்ப்பத்தில் வழக்கில் புறக்சியை வழங்கியவர் சத்திய உரை ஒன்றை வழங்கி புறக்சியை வாபஸ்பெறக் கேட்கலாம்.
18) சில சந்தர்ப்பங்களில் சட்டத்தரணி தனது நியமனத்தை மீளப்பெறுவதானால் அதனை நீதிமன்றத்திற்கும் தனது தரப்புக்கும் தெரிவிக்கவேண்டும் அவரது தரப்பு ஏற்றுக்கொண்டால் பிரச்சினை எழாது.
19) புறக்சி ஒன்று மீளப் பெறப்படும்பொழுது வழக்கிற்கான புதிய திகதியை நீதிமன்றம் வழங்கும்.
20) சாதாரணமாக நீதிமன்றம் சட்டத்தரணி தவிர்க்க முடியாத காரணத்தால் புறக்சியை மீளப்பெற விரும்பினால் அதற்குரிய காரணத்தை கூறி புறக்சியை மீளப்பெற நீதிமன்றம் இடமளிக்கலாம்.
21) அட்டனித் தத்துவக்காரரும் புறக்சியை மீளப் பெறலாம்.
22) புறக்சி வழங்கியவர் இறந்தால் அல்லது சட்டத்தரணி இறந்தால் புறக்சி வலுவிழந்துவிடும்.
23) வழக்கொன்றைப் பொறுத்தவரை புறக்சி மிக முக்கிய ஆவணமாகும். சரியான முறையில் புறக்சியை மீளப்பெறாமல் வழக்கை நடத்தி இருந்தால் தீர்ப்பு வழங்கும்போது சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
பகுதி 2
சிவில் வழக்கொன்றை நடத்து வதற்கு அட்டனித்தத்துவ பத்திரம் வழங்குவதும் ரத்துச் செய்வதும் எப்படி?
1902 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க அட்டனித்தத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அட்டனித்தத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. 1902 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்த இக் கட்டளைச் சட்டம் 1913 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழும் 1933 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழும் 1978 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழும் செய்யப்பட்ட திருத்தங்களுடன் தற்போது அமுலில் உள்ளது.
இச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின்படி அட்டனித்தத்துவப் பத்திரம் என்பது குறித்த ஒரு நபருக்கு வேறு ஒருநபர் தன் சார்பில் சிலவற்றைச் செய்ய அனுமதியளிக்கும் பத்திரம் எனக்கூறலாம். அட்டனித்துவம் பெற்றவர் அட்டனித்தத்துவக்காரர் என அழைக்கப்படுவார்.
அட்டனித்தத்துவப் பத்திரம் சட்ட பூர்வமான காரியங்களைச் செய்ய மட்டுமே வழங்கப்படுகிறது. பின்வருவன அவற்றுள் சிலவாகும். காணிகளை விற்பதற்கு, வாங்குவதற்கு மாற்றீடு செய்வதற்கு, வாடகைக்கு கொடுக்க, குத்தகைக்கு கொடுக்க, வர்த்தக விடயங்களை கவனிக்க, அரச திணைக்களங்கள்– கூட்டுத் தாபனங்கள்– அதிகார சபைகளில் தோன்ற, நீதிமன்றத்தில் தோன்ற, வங்கிக் கணக்குகள் இருப்பின் அவற்றை தொடர்ந்து பேணிவர இவை போன்றவற்றுக்கு ஒருவர் இன்னுமொருவருக்கு அட்டனித் தத்துவத்தை வழங்கலாம்.
அட்டனித்தத்துவம் சம்பந்தமாக நீதிமன்றங்கள் சில மட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதில் முக்கியமானது என்னவெனில் அட்டனித்தத்துவத்தை வழங்குபவரும் அட்டனித்தத்துவக்காரரும் ஒரே நீதிமன்ற நியாயாய எல்லைக்குள் வசித்தால் அட்டனித்தத்துவக்காரர் அந்த வழக்கில் அட்டனித் தத்துவத்தை வழங்கியவருக்காக வழக்கில் தோன்றமுடியாது என்றாகும்.
அதேபோல் விவாகரத்து வழக்குகளில் அட்டனித்தத்துவத்தின் கீழ் விவாகரத்தை பெறமுடியாது. கணவர் சார்பில் அவரது அட்டனித் தத்துவக்காரரும் மனைவி சார்பில் அவளது அட்டனித்தத்துவக்காரரும் சாட்சியம் சொல்லி விவாகரத்தைப் பெறமுடியாது.
இவ்வாறு அட்டனித்தத்துவத்தின் கீழ் கட்டுப்பாடுகள் இருப்பினும் அவற்றை கவனியாது பலர் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்வதும் உண்டு. வழக்கை தாக்கல் செய்யலாம். ஆனால் விவாகரத்து சட்டப்படி கிடைக்காது.
அட்டனித்தத்துவப்பத்திரம் பொதுவான (General Power of Attorney) அட்டனித் தத்துவமாகவும் விசேட (Special Power of Attorney)அட்டனித்தத்துவமாகவும் வழங்கலாம். விசேட அட்டனித்தத்துவம் விசேட காரியாலயங்களுக்காக வழங்கப்படுகிறது. இவ்விடயத்தில் ஒரு சுவையான வழக்கெழுகாரணம் ஒன்று பிரபல சட்டத்தரணியால் எழுப்பப்பட்டதை அறிவுக்காகவும் ஆலோசனைக்காகவும் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
இது சிந்திக்கக் கூடிய ஒரு பிரச்சினை என்பதால் சகலருக்கும் பிரயோசனமாகவும் இருக்கும்.
பிரச்சினை இதுதான். காணியொன்றின் உரித்து யாருக்குச் சொந்தமாகிறது என்ற வழக்கு உரித்து நிறுவல் வழக்கு என அழைக்கப்படுகிறது. உரித்து நிறுவல் வழக்கு முக்கியமாக நிரூபிக்கப்பட வேண்டியது, உரித்தானது சங்கிலித் தொடர்போல் அறுபடாமல் உரித்தாளருக்கு வந்தது அல்லது வந்து அடைந்துள்ளது என்பதை அவர் நிரூபிக்கவேண்டும். அதற்கு அவர் அக்காணியின் ஆரம்பகால சொந்தக்காரர் யார் என்றும் அந்த உறுதியை மாற்றிய நொத்தாரிசின் பெயர் உறுதி இலக்கம் என்பன பற்றிய விபரங்களுடன் அவரிடமிருந்து வேறு ஒருவருக்குச் சென்றிருந்தால் அதுபற்றிய விபரம் அதன் பின் உரித்து மாற்றம் நடைபெற்றிருந்தால் அது பற்றிய விபரம் எல்லாவற்றையும் காட்டும். (Title report) உரித்துப் பட்டியலைக் காட்டவேண்டும்.
இவ்வாறு உரித்து பட்டியலைக் காட்டும்போது உண்மையான உரித்தாளர்களே ஏனையவர்களுக்கு விற்கிறார் என்பதைக் காட்டவேண்டும். உண்மையாக உரித்தாளர்கள் இல்லாமல் வேறு யாரும் உரித்தை மாற்றி இருந்தால் அங்கு சங்கிலிக்கோர்வை உடைவதைப் போல் உரித்துப் பட்டியல் உடையந்திருக்கும். இதனால் உரித்து நிறுவல் வழக்கு பிரச்சினைக்குள்ளாகலாம்.
உரித்து உடைந்த நேரத்தில் இருந்து 10 வருடத்திற்கு மேல் இன்னுமொருவர் ஏதோ வழியில் அக்காணியை உடைமையைகொண்டிருந்தால் ஆட்சியுரிமையால் அக்காணி அவருக்குச் செல்லும். ஆகவே உரித்து நிறுவல் வழக்கில் உரித்தானது உரித்தாளர் ஒருவரிடம் இருந்தே மற்றையவருக்கு மாற்றப்படவேண்டும்.
இவ்விடத்தில்தான் முக்கியமான பிரச்சினை எழுகிறது. உரித்தாளர் ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அவர் அட்டனித்தத்துவத்தை ஒருவருக்கு வழங்கி அந்த அட்டனித்தத்துவக்காரர் உரித்தை மாற்றினால் அந்த அட்டனித்தத்துவக்காரரை உரித்தாளர் என்று கொள்ளலாமா? இன்னுமொரு கேள்வி, உரித்து நிறுவல் வழக்கிற்கு அந்த சட்டத்தரணியால் உறுதிப்படுத்தப்பட்ட மாற்றல் உறுதி உரித்தாளர் ஒருவரால் உரித்து மாற்றம் செய்யப்பட்ட உறுதி என்று கொள்ளலாமா? என்று வினா எழும். இது பற்றி தாஜுதீன் வழக்கில் எழுந்தது.
எனது சொந்தக் கருத்து முடியாது என்பதாகும். இந்த விபரத்தை நாம் எழுதியது அட்டனித்தத்துவக்காரர் எல்லா விடயங்களையும் செய்யமுடியாது. ஆகவே காணியின் உரித்தை மாற்றலாம் என எடுத்துக்கொண்டால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதைக் காட்டவேயாம். நீங்களும் இதனை சிந்தித்துப் பாருங்கள். அட்டனித்தத்துவப் பத்திரத்தின் கீழ் செய்ய முடியாதவை பலவுண்டு. விவாகம் செய்ய முடியாது. குழந்தை ஒன்றை விற்கமுடியாது. அதேபோல் காணியையும் விற்கமுடியாது என்று கூறினால் அது பிழை என்று காட்ட சரியான காரணங்களை வழங்க வேண்டும். குற்றவியல் வழக்குகளுக்கு அட்டனித்தத்துவப்பத்திரத்தை சந்தேக நபர் ஒருவர் வேறு ஒருவருக்குக் கொடுத்து வழக்கை நடத்தி வழக்கை வெற்றிபெற முடியுமா? என சிந்திக்க வேண்டும். ஆகவே அட்டனித் தத்துவக்காரர் மாற்றுவதும் உரித்தாளர் மாற்றுவதும் ஒரே மாதிரியானதா? என்று சிந்திக்க வேண்டும்.
அட்டனித்தத்துவப்பத்திரம் ஒன்றை நிறைவேற்றுதல் பற்றி அறிய வேண்டியது
இதில் அறிய வேண்டியது வெளிநாட்டு அட்டனித்தத்துவப்பத்திரம் பற்றியதாகும். வெளிநாட்டில் உள்ள ஒருவர் உள்நாட்டுக்கு அட்டனித்தத்துவப் பத்திரம் ஒன்றை அனுப்பவேண்டுமானால் அப்பத்திரத்தை அந்நாட்டுச் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையிலும் சாட்சிகள் முன்னிலையிலும் தயாரித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு அமைச்சு அந்த அட்டனித்தத்துவப்பத்திரமானது சட்டத்தின்படி ஏற்கக்கூடியது என்றும் அதில் கையொப்பம் வைத்துள்ள சட்டத்தரணி தற்போதும் வழக்கறிஞராகச் செயல்படுத்துகிறார் என்பதையும் உறுதிப்படுத்தி கையொப்பம் இடவேண்டும். அந்த அட்டனித்தத்துவப்பத்திரத்தையே இலங்கைக்கு அனுப்பவேண்டும்.
இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு ஒருவர் அட்டனித்தத்துவத்தைக் கொடுக்கும்போதும் அப்படியே செய்யவேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி நடைபெறுவது குறைவு. பாஷைப் பிரச்சினையே இதற்குக் காரணம் என்று சிலர் கூறுவதை நான் கேட்டதுண்டு.
அட்டனித்தத்துவத்தை பதிவு செய்யும் முறை
அட்டனித்தத்துவப்பத்திரம் முன்னர் இலங்கை காணிப்பதிவாளர் நாயகத்தின் காரியாலயத்திலேயே பதியப்பட்டு வந்தது. தற்போது மாவட்டங்களில் உள்ள காணிக்கிளைக் காரியாலயங்களிலும் பதியப்படுகிறது.
அட்டனித்தத்துவப்பத்திரம் ஒன்று பதிவு செய்யப்படாவிட்டால் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அட்டனித்தத்துவப்பத்திரம் 7 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்வது பிரயோசமானது.
அட்டனித்தத்துவப்பத்திரத்தை பதிவுசெய்ய வேண்டுமானால் மூலப் பிரதியையும் மூலப்பிரதியிலிருந்து போட்டோ பண்ணப்பட்ட பிரதி ஒன்றையும் (True copy) எடுத்து உண்மைப் பிரதியென அத்தாட்சிப்படுத்தப்பட வேண்டும். மூலப் பிரதிக்கு முத்திரை ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
அட்டனித்தத்துவத்தைப் பெற்றவர் இவ் அட்டனித்தத்துவப்பத்திரம் உண்மையானது என்று கூறி சத்தியக் கடதாசி ஒன்றையும் அணைக்க வேண்டும்.
பதிவுக் கட்டணமும் செலுத்தப்படவேண்டும்.
மேலேயுள்ள முறையில் பதிவாளர் நாயகக் காரியாலயத்தில் அல்லது கிளை காணிப்பதிவுக் காரியாலயங்களில் கையளிக்கப்பட்ட அட்டனித்தத்துவப் பத்திரம் பதிவு செய்யப்பட்டு அதற்குரிய ஒரு இலக்கத்தையும் அதன் திகதியையும் கொண்டதாக பின்னர் அப்பத்திரம் பாரம் கொடுத்தவருக்கு திருப்பிக் கொடுக்கப்படும்.
அட்டனித்தத்துவப்பத்திரத்தை தேவையற்றபோது ரத்துச்செய்யலாம். அட்டனித்தத்துப்பத்திரத்தை வழங்கியவர் அல்லது பெற்றவர் அதனை ரத்துச் செய்யலாம்.
ரத்துச்செய்ய வேண்டுமானால் பதிவு செய்யப்பட்ட மூலப் பிரதியுடன் அதனை ரத்துச் செய்வதற்கான காரணத்தையும் சத்திய உரையொன்றையும் பதிவாளர் நாயகத்தின் காரியாலயத்தில் சமர்ப்பித்து ரத்துச்செய்யலாம்.
அட்டனித்தத்துவப்பத்திரம் ரத்துச் செய்தல் பற்றிய தகவலை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கவேண்டும். அத்துடன் கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய தினசரி பத்திரிகைகளிலும் அது ரத்துச் செய்தல் பற்றிய அறிவித்தலைப் பிரசுரிக்கவேண்டும். அதன் பின்னரே அட்டனித்தத்துவப்பத்திரம் ரத்துச்செய்யப்படும்.
ரத்துச்செய்யப்படுவதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் அப்பத்திரத்தின் கீழ் செய்யப்பட்ட கருமங்களில் சகலதும் செல்லுபடியாகும்.
மேலேயுள்ள முறையில் அட்டனி ்தத்துவப்பத்திரம் தயாரிக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டு ரத்துச் செய்யப்படுகிறது.
மேற்கூறியவை சட்டத்தின் பாற்பட்ட விதிகளாகும்.
தொகுப்புரை
சிவில் வழக்குகளில் கட்டாயம் பதிலி (Proxy) அணைக்கப்பட வேண்டும். ஆகவே அது பற்றிய சகல விபரங்களையும் அடக்கி இக்கட்டுரையின் முதலாவது பகுதியும் பின்னர் அட்டனி ்தத்துவப்பத்திரத்தைப் பற்றிய இரண்டாவது பகுதியும் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு Proxy என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கம் இல்லை. வழக்கிற்குத் தேவையான ஒரு ஆவணம் என்றே நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு என்றும் பரிபூரண விளக்கத்தை அவர்கள் அறியவேண்டுமென்பதை கருத்தில்கொண்டு இப் Proxy என்ற பகுதி எழுதப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதி அட்டனி ்தத்துவம் பற்றிய சகலரும் அறிந்திருக்க வேண்டியது. அட்டனித்தத்துவத்தில் வழங்க முடியாதவை எவை என்பது பற்றியும் அது பதிவுசெய்யப்படும் முறைபற்றியும் ரத்துச்செய்யும் முறை பற்றியும் எழுதப்பட்டுள்ளது. பலருக்கு பிரயோசனமானது.
- கே.ஜீ.ஜோன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM