"ஹொங்கொங்கில் சீனாவின் வானம் தலைகீழாக மாறியது" என வர்ணிக்கும் அளவிற்கு அதன் தேர்தல் முடிவுகள் சீனாவை அச்சுறுத்தியுள்ளன. ஹொங்கொங்கில் நடைபெற்று முடிந்துள்ள மாவட்ட சபை தேர்தல்களில் ஜனநாயக ஆதரவு இயக்கம் எதிர்பாராத பாரிய வெற்றியை பெற்றுக்கொண்டது.
இந்தத் தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வேட்பாளர்கள் மொத்தமாக 347 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர். சீன சார்பு கட்சியின் வேட்பாளர்கள் வெறுமனே 60 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர். சுயாதீனக்குழு 45 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் சீன சார்பு தரப்பின் முக்கிய வேட்பாளர்கள் படுதோல்வியைத் தழுவியுள்ளனர்.
இதில் சீன சார்பு கட்சியின் படுதோல்வியானது வெறுமனே மூன்றேவார காலத்தில் நிர்ணயிக்கப்பட்டது எனலாம். காரணம் என்னவெனில், தேர்தல் இடம்பெற முன்னர் சுமார் மூன்று வாரகாலமாகவே ஹொங்கொங்கில் ஜனநாயகத்தை அடக்கும் வகையில் இடம்பெற்ற வன்முறைகள், மக்களின் ஜனநாயக தாகத்துக்கான போராட்டம், முகமூடி ஆர்ப்பாட்டங்கள் என, நடைமுறை சீன சார்பு அரசாங்கத்தை ஆட்டுவித்துக்கொண்டே இருந்தது.
இதில் சீன சார்பு கட்சியின் நகர்வு முற்று முழுதாக ஹொங்கொங் காவல்துறையினருக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் கொடுத்ததாகவும், ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்கிய கும்பல்களுடன் தொடர்பை பேணி வந்ததாகவும் இருந்தது என சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
அப்படி ஹொங்கொங் மக்களின் ஜனநாயக வெறிப்போராட்டம் தான் என்ன? யாருக்கு எதிரானது இந்தப் போராட்டம்? இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் சீனா தான்.
ஹொங்கொங் ஆரம்பத்தில் இருந்தே பிரிட்டிஷ் முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. எனினும் 1997ஆம் ஆண்டு பிரிட்டன், ஹொங்கொங்கை சீனாவிடம் கையளித்து ஒதுங்கிக்கொண்டது. அதாவது ஹொங்கொங் விடுதலை பெறுகின்றது என கூறாமல் மீண்டும் ஒரு அசுரப்பிடிக்குள் சிக்கவைத்து விட்டது எனலாம். அன்றிலிருந்து இன்று வரையிலும் ஹொங்கொங் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ்.
இருப்பினும் ஹொங்கொங், ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் அடிப்படையில் தொடர்ந்தும் பிரிட்டிஷ் சட்டதிட்டங்களுடன், தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் தனித்துவமான நாணயம், சட்டதிட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், காவல் துறை, அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளதுமாகவே இருந்தது.
எனினும் ஹொங்கொங் மக்கள் தம்மை தனித்த இறையாண்மை மக்களாக கருதி வருகின்ற போதிலும் சீனா அதனை விடுவதாக இல்லை. பரந்த சீனாவின் ஒரு பகுதியே ஹொங்கொங் என்ற நிலைப்பாட்டில் இருந்தே சீனா பார்க்கின்றது. இந்நிலையில்தான் சில காலமாகவே சீனாவின் இரும்புப்பிடி ஹொங்கொங்கையும் அதன் மக்களையும் அதிகமாக வாட்டத் தொடங்கியது. இதன் தாக்கம் படிப்படியாக மக்களால் வெளிப்படுத்தப்பட்டது.
இது ஹொங்கொங்கில் நீண்டகாலமான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க ஏதுவாக அமைந்தது. இன்னொரு நாடு தமது நாட்டைச் சுவிகரிக்கப் போவதாகவே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அண்மைக்காலமாக சுமார் 16 வாரங்களை கடந்து ஹொங்கொங் மக்கள் தொடர்ச்சியாக வீதியில் இறங்கி போராட ஆரம்பித்தனர். இவை அனைத்துக்கும் பிரதானமாக அவர்கள் கையில் எடுத்துக்கொண்ட விடயம் கைதிகள் பரிமாற்ற சட்டமே.
ஹொங்கொங் ஏற்கனவே 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைதிகளை பரிமாற்ற இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் கூட, சீனாவுடன் இந்த கைதிகள் பரிமாற்று ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை. 20 ஆண்டுகளாக இந்த நிலைமை இருந்தாலும் தற்போது இந்த சட்டத்தில் ஏற்பட்ட தளர்வு தன்மையே ஹொங்கொங் அரசாங்கத்துடன் அந்நாட்டு மக்கள் முட்டிமோத காரணியாக அமைந்தது.
அதாவது ஹொங்கொங்கில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி அங்கு வைத்து சட்ட விசாரணைகளைச் செய்யும் வகையிலான சட்டத்தை கொண்டுவர சீன சார்பு ஹொங்கொங் அரசாங்கம் தீர்மானித்திருந்த நிலையிலேயே இந்த போராட்டம் வெடித்துள்ளது. சீனா தனது நிர்வாக இறைமைக்குள் செய்துள்ள தலையீடு இன்னும் சிறிது காலத்தில் தமது அரசியல் இறைமைக்குள் தலையிட ஆரம்பித்து தமது இறைமையை பறித்துவிடும் என்பதே ஹொங்கொங் மக்களின் கோஷமாக எழுந்துள்ளது.
அதேபோல் சீனாவின் பலத்த கட்டமைப்பின் ஹொங்கொங் நிர்வாகம் தள்ளப்படும், இதனால் ஹொங்கொங் நீதித் துறையின் சுதந்திரம் முற்றாக அழிந்துவிடும் என்பதே அவர்களின் அச்சம். இது நியாயமாக அச்சப்பட வேண்டிய காரணியும் கூட. ஏனெனில் சீனா ஹொங்கொங்கில் கால்பதித்துள்ள அளவைப் பார்த்தால் அவர்களின் ஆதிக்கம் இல்லாத இடமே இல்லை. சகல பகுதிகளிலும் சீனாவின் வர்த்தக கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள், துறைமுகங்கள் மட்டுமல்லாது சீனா ஹொங்கொங்கை இணைக்கும் மேம்பாலங்களின் ஆதிக்கம் வெறுமனே அபிவிருத்தி மட்டுமல்ல சீனாவின் ஆதிக்க தன்மையும் கூட. அதனை ஹொங்கொங் மக்கள் உணர்ந்து விட்டனர். ஹொங்கொங்கில் சீனா செய்துள்ள முதலீடுகளின் தாக்கம் ஹொங்கொங்கினால் மீட்சி பெற முடியாதது.
ஹொங்கொங்கில் மட்டுமல்ல தென்சீனக் கடல் பரப்பில் உள்ள சொலமன் தீவுகள், பேர்செல் தீவுகள், வனுவாடு தீவுகள், புஜி தீவுகள், பபுவாநியூகினியா, போகன்வெல் தீவு உள்ளிட்ட சில முக்கிய தீவுகளின் நிர்வாக அதிகாரம் சீனாவிடமே இருக்கின்றது. அதாவது இந்த தீவுகளின் துறைமுக நிர்வாகம், சுற்றுலா ஆதிக்க நிர்வாகம், மீன்பிடி கப்பல்துறை நிர்வாக அதிகாரம் முழுமையாக சீனாவிடமே உள்ளது.
கடல்மார்க்க வர்த்தக நகர்வுகளில் சீனாவின் "நீலப் பொருளாதார கட்டமைப்பு" விரிவடைந்து செல்வது இதனைத் தெளிவாகக் காட்டுகின்றது. குறிப்பாக தீவு நாடுகளை தன்வசப்படுத்திக்கொண்டு அதில் தமது ஆதிக்கத்தை செலுத்தும் சூட்சும நகர்வுகளை சீனா மிகவும் ஆழமாகவும் அவதானமாகவும் முன்னெடுத்து வருகின்றது.
இந்த ஆதிக்க பொறி வலையில் சீனாவின் மிகப்பெரிய இலக்காக சிக்கும் நாடு இலங்கையே. சர்வதேச ஊடகங்கள் இப்போதே அதனை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டன. இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எடுத்து நோக்கினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்துமே சீனாவின் வசமே உள்ளன.
தெற்கில் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி சீனாவின் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டம். இதற்காக 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகச் செலுத்தி இன்று 99 ஆண்டுகளுக்காக துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்து சீனா தனதாக்கிக்கொண்டுள்ளது. தலைநகரில் முன்னெடுக்கும் பாரிய வர்த்தக வேலைத்திட்டங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. சர்வதேச கடன் வாங்கலில் 60 வீதமான கடன் சீனாவிடம் இருந்தே பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு தொட க்கம் 2015ஆம் ஆண்டு வரையில் இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களான மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், அனல்மின் நிலையம், தொடர்பாடல் திட்டக்கோபுரம் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்திக்காக மாத்திரம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வாரி இறைத்துள்ளது. இப்போது வரையில் சீனாவினால் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடன் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடன்கள் உள்ளடங்கலாக ஜப் பான், உலக வங்கி, இந்தியா, ஆசிய அபிவிருத்தி வங்கி என அனைவரிடமும் இலங்கை இப்போது வரை, வாங்கியுள்ள சர்வதேச கடனானது 55 பில்லியன் அமெரிக்க டொல ர்கள். 2020ஆம் ஆண்டு முதல் நான்குமாத காலத்தினில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளிடம் இருந்து வாங்கியுள்ள கடன்களில் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்று உறுதிப்படுதியுள்ளது. இலங்கை ரூபாவில் இது 13.5 பில்லியன் ரூபாய்.
அதேபோல் 2019ஆம் ஆண்டு தொடக் கம் 2022ஆம் ஆண்டு வரையில் செலுத்த வேண்டிய கடன்தொகை 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இதில் 14 வீதமான கடன் சீனாவிற்கே கொடுக்க வேண்டியுள்ளது. வாங்கிய கடன்களை திரும்ப கொடுக்கக்கூடிய அளவில் இலங்கை கடந்த 10 ஆண்டுகளில் வருமானத்தை பெற்றுள்ளதா அல்லது அதற்கான வேலைத்திட்டங்களையாவது செய்துள்ளதா என்றால் அதில் பாரிய சந்தேகம் எழுந்துள் ளது.
அபிவிருத்தி என பாரிய அளவில் நிதி யைக் கொட்டி செய்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பல இன்னமும் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டங்களாக இல்லை என்றே வர்ணிக்கப்படுகின்றது. சில பாரிய வேலைத்திட்டங்கள் திறப்புவிழா கண்டுள்ள போதிலும் கூட அவற்றை முழுமைப்படுத்த இன்னமும் பல கோடி ரூபாய்கள் தேவைப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் கடன்களை திருப்பிக்கொடுப்பதில் இலங்கை பாரிய நெருக்கடி நிலைகளை சந்திக்கும் என கருதப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஹொங்கொங் மீதான சீனாவின் பாய்ச்சல் இன்று எவ்வாறு உள்ளதோ அதே அளவில் அல்லது அதற்கும் மேலானபாய்ச்சலை சீனா இலங்கை மீது செலுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏனெனில் இலங்கையில் சீனா முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் அனைத்துமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகு திகளில் முன்னெடுக்கப்பட்டதாகும். துறைமுகங்கள், விமான நிலையங்கள், தலைநகர் மற்றும் சுற்றுலா பிரதேசங்களில் அண்டிய பகுதிகளில் சீனாவின் கால்த்தடம் பதிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் இலங்கை அரசாங்கம் வாங்கிய கடன்களை செலுத்த திணறும் நிலையில் அவற்றின் மீதான முழுமையான ஆதிக்கத்தை சீனா செலுத்தும்.
ஆகவே இந்த இரும்புப்பிடியில் இருந்து இலங்கை தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அந்நிய நேரடி முத லீட்டை ஈர்ப்பதற்கும், சில மானியங்க ளைப் பெறுவதற்கும், ஏற்றும தியை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் மிகக் குறு கிய காலத்தில் ஒரு திட்டத்தை வகுக்க வேண் டும். இந்த திட்டம் திடமான நிலைத்துக் கொண்டுசெல்லக்கூடிய வகையிலும் அமைய வேண்டும்.
இல்லையேல் இலங் கையின் நிர்வாக அதிகாரங்களில் சீனாவின் தலையீடுகள் ஏற்படும் நிலையில் இலங்கையிலும் மக்கள் போராட்டங்களை முன்னெ டுக்க நேரும்.
துரதிஷ்டவசமாக, இப்போதும் இலங்கை குதிரைக்கு முன்னால் வண்டிலை கட்டிய தைப் போலவே செயற்படுவதாக வர்ணிக் கப்படுகின்றது. சீனாவிடம் அளவுக்க திகமாக வாங்கிய கடன்களை மறந்து மேலும்மேலும் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் கொள்கை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளமை அச்சு றுத்தலானது என்பதில் எதுவித சந்தேக முமில்லை.
- ஆர். யசி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM