நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றுத் துரோகத்தால் அக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தது மட்டுமல்லாது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்ட தமிழ் பேசும் சமூகங்களும் அதிர்ச்சியில் உள்ளன என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்றுமுன்தினம் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சி பெரும் பங்களிப்புச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் பங்காளிக் கட்சிகள் தங்களின் முழுச் சக்தியையும் பாவித்து தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கின. ஆனால் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் வேட்பாளரை போட்டியிட வைத்து அந்தக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சர்களும் மேற்கொண்ட துரோகத்தனத்தால் வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்ததாக ஐ.தே.கட்சியின் அமைச்சர் நளின் பண்டார பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியுள்ளார்.
அது மாத்திரமின்றி இத்துரோக செயற்பாட்டை கண்டிக்கும் முகமாக எதிர்வரும் மார்ச் மாதம்வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இயங்க வேண்டிய அமைச்சரவையிலிருந்து தங்களின் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ததுடன் உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா செய்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டும். இதற்கு இணங்க மறுத்தால் தாங்கள் மஹிந்த ராஜபக் ஷவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கான ஆதரவை வழங்கப் போவதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்ததால் வேறு வழியின்றி பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை முன்கூட்டியே இராஜினாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் சூட்சுமங்களை அறிந்தே மறைந்த எமது பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் முஸ்லிம்களும் ஒருபோதும் ஐ.தே.கட்சியை ஆதரிக்கமாட்டோம் என்ற தூரநோக்கான சிந்தனையை அன்று முஸ்லிம் சமூகத்திடம் தெரிவித்திருந்தார்.
ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஐ.தே.கட்சியின் புதிய எழுச்சியுடன் சிறுபான்மை மக்கள் நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கக்கூடிய நிலைமையை உருவாக்கி, தான் ஜனாதிபதி தேர்தலிலே வெற்றி பெற்றால் நாட்டில் வாழும் சகல இன மக்களும் தத்தமது மதச் சுதந்திரத்துடனும் கலாசார விழுமியங்களுடனும் நிம்மதியாக வாழும் நிலைமையை உருவாக்கி வறுமையை ஒழித்து நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் வடக்கு, கிழக்கிலே வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலிலே சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர். ஜனாதிபதி தேர்தலில் தமிழ்– முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழ் பேசும் சமூகங்கள் செயற்பட்டுள்ளன.
ஜனநாயக ரீதியில் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குரிமையை எமக்கு விரும்பிய வேட்பாளருக்காக வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நமக்கான உச்ச அளவில் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்று எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்து காட்டுவதற்கு அனைவரும் உறுதி பூணவேண்டும்.
இதேவேளை, புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ்ஷ தலைமையிலுள்ள அரசாங்கம் நல்ல செயற்பாடுகளையும், சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளையும் வெல்லக் கூடிய சிறந்த வெளிப்பாடுகளை முன்கொண்டு செல்லுமாயின் சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்ல முடியும் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM