இலங்கை இன ரீதியாக இரு முனைகளில் கூர்மையடைந்திருக்கின்றது. இந்தக் கூர்மையின் வெளிப்பாடாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்துள்ளது. அதில் வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ சிங்கள மக்களின் ஏகபோக தலைவராகத் தலைநிமிர்த்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கு அடுத்ததாக ராஜபக் ஷ குடும்பம் இந்தத் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி பதவியைத் தன்னுடைமையாக்கிக் கொண்டிருக்கின்றது. தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக அல்லாமல் மிக மிகப் பெருமளவில் சிங்கள பௌத்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவராக, தேசிய மட்டத்திலான ஓர் அரசியல் தலைவராக அவர் தேர்வு பெற்றிருக்கின்றார்.
இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்த தேச வரைபடத்தில் நிறந்தீட்டி, ஜனாதிபதி கோத்தாபயவுக்கு எங்கெங்கு வாக்குகள் கிடைத்திருக்கின்றன, எங்கெங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்ற தேசப்படம் ஒன்று வெளியாகியிருக்கின்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்தபாய ராஜபக் ஷவை இந்தத் தேர்தலில் ஆதரித்து வாக்களிக்கவில்லை என்பது தேர்தல் பெறுபேறுகளின் முடிவு.
இந்த வாக்களிப்பு வெளிப்பாட்டுத் தேசப்படத்தில் அதில் ஜனாதிபதி கோத்தாபயவுக்கு எதிராக வாக்களிக்கப்பட்ட பிரதேசம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிநாடாகிய தமிழீழ வடிவத்தை ஒத்ததாகக் காட்டப்பட்டிருந்தது. இது ஒரு குறியீடாகக் காட்டப்பட்டிருந்த போதிலும், அது தீவிரமான ஓர் அரசியல் கருத்தை வெளிப்படுத்தி இருந்தது.
பூகோள ரீதியாக விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்திருந்ததன் மூலம் யுத்த மோதல்களின்போது நாடு பிளவுபட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, பூகோள ரீதியான இந்தப் பிளவு இல்லாமல் செய்யப்பட்டது.
ஆனால் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களின் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அக நிலை அரசியலில் நாட்டு மக்கள் இன ரீதியாகப் பிளவுண்டு கிடப்பது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
தேர்தல் முடிவுகள் வெளியாகியதையடுத்து, சிறுபான்மை இன மக்கள் இனவாதப் போக்கில் வாக்களித்திருந்தார்கள் என்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் உறுதியாக மறுத்திருந்தனர். அது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இந்த விடயம் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டு, தமிழ்மக்கள் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு வாக்களிக்கவில்லையே தவிர இனவாதப் போக்கில் தமிழ் வேட்பாளர் ஒருவருக்குத் தங்களுடைய வாக்குகளை அவர்கள் அளிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருந்தனர்.
சிறுபான்மை இன மக்கள் கோத்தாபயவை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவையே ஆதரித்து வாக்களித்திருந்தனர். இனவாத ரீதியில் அல்லது விடுதலைப்புலிகளின் நோக்கிலான போக்கில் வாக்களிக்கப்பட்டதாக இதனைக் கருதினால், சஜித் பிரேமதாச யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. இனவாத ரீதியில் புலிகளின் போக்கில் வாக்களித்திருந்தால், சஜித் பிரேமதாச புலிகளின் கொள்கையைக் கொண்டவரா என்ற கேள்வி உரமாக எழுகின்றது.
உண்மையில் கோத்தாபய ராஜபக் ஷவைப் போன்று சஜித் பிரேமதாசவும் ஒரு பௌத்த சிங்களவரே. நாடு பிரிவடைவதை அவரும் விரும்பவில்லை. விடுதலைப்புலிகளை கொள்கையளவில் ஏற்காத ஒருவரே என்பதை எவரும் மறுக்க முடியாது.
சிறுபான்மை இனமக்கள் குறிப்பாகத் தமிழ்மக்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களுடன் இணைந்து ஐக்கியமாகவும் கண்ணியமாகவும் வாழவே விரும்புகின்றனர். அதுவே அவர்களின் அரசியல் உள்ளக்கிடக்கை.
ஆனால் பேரினவாதிகள் அவர்களுடைய உண்மையான அரசியல் வேட்கையை உணர மறுத்துள்ளார்கள். அவர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற இனவாத சிந்தனையிலும் பௌத்த மதவாத சிந்தனையிலும் ஊறிப்போயுள்ளார்கள். இதன் காரணமாகவே தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த இனப்பிரச்சினை தீர்வு காணப்படாமல் காலம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கின்றது. அந்தப் பிரச்சினையும் புரையோடிப் போயுள்ளது.
தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கும்போதும், அந்த உரிமைக்கான அவர்களுடைய அரசியல் செயற்பாடும் உரம் பெறும்போதும், சிங்களப் பேரினவாதம் எழுச்சி கொண்டெழுந்து வன்முறைகளின் மூலமாகவும் இன ரீதியான அடக்குமுறை வழிகளின் ஊடாகவும் அவற்றைத் தணிக்கச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். இதுவே இனப்பிரச்சினையின் பின்புல அரசியல் வரலாறு.
சாத்வீகப் போராட்டங்கள் தோல்வியடைந்து பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முறியடிக்கப்பட்ட பின்னணியிலேயே வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிநாட்டுப் போராட்டத்துக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் தனிநாட்டுத் தீர்மானத்துக்கு ஏகமனதான ஆணையை வழங்கினார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கிலும் கிழக்கிலும் அமோக வெற்றி ஈட்டியது.
இணைந்து வாழ்வதற்கான அரசியல் கோரிக்கை சார்ந்த அரசியல் உரிமைக்கான சாத்வீகப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதையும், அக்கறையற்ற போக்கை வெளிப்படுத்தி உதாசீனம் செய்வதையும் தமிழ் மக்களின் போராட்டத்தை முறியடிப்பதற்கான வியூகமாக பேரினவாதிகள் பயன்படுத்தினார்கள். ஆயினும் அந்த வியூகத்தையும் மேவி தனிநாட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டதை பேரினவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அது மௌன அரசியல் ஆத்திரமாக அவர்களுடைய மனங்களில் கனன்றுகொண்டிருந்தது. அந்தத் தருணத்திலேயே மாவட்ட சபைகளின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டது. தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்திருந்த தமிழ்த்தலைவர்கள் நிர்ப்பந்தம் காரணமாகவோ அல்லது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த அரசியில் காரணங்களினால் மாவட்ட சபை முறைமைக்கு இணக்கம் தெரிவித்து அதற்கான தேர்தலில் குதித்திருந்தனர்.
ஆனால் 1977ஆம் ஆண்டு தேர்தலில் தனிச்சக்தியாகத் திகழ்ந்த தமிழ்மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை ஊடுருவச் செய்து, வடக்கிலும் கிழக்கிலும் பேரின அரசியல்வாதிகள் கால் பதிக்க முற்பட்டார்கள். ஆனால் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட சபைத் தேர்தல்களில் பேரின அரசியல்வாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.
தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகக் கால் ஊன்றுவதற்கான தங்களுடைய அரச தந்திரம் பலிக்காமல் போனதையடுத்து. அவர்கள் சீற்றம் கொண்டார்கள். அந்தச் சீற்றத்தின் வெளிப்பாடாக வெடித்த வன்முறைகளிலேயே யாழ். நூலகம் எரியூட்டப்பட்டது. யாழ் நகரப்பகுதி சின்னாபின்னமாக்கப்பட்டது. ஆனாலும் அவர்களுடைய அரசியல் சீற்றம் அடங்கவில்லை.
யாழ்.நகர வன்முறைகளின் மூலம் தமிழ் மக்களின் அறிவியல் கலாசாரச்
சின்னம் அழிக்கப்பட்ட வழிமுறைக் குப் பதிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாகவும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் செய்திருந்த தமிழ்மக்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து 1983 கறுப்பு ஜூலை வன்முறை நாடளாவிய ரீதியில் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அக்காலப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல்களைத் தொடுத்திருந்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தின் ஒரு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இராணுவ வாகனத் தொடரணி மீதான கண்ணிவெடி மற்றும் துப்பாக்கிச் சமர் தாக்குதல் 1983 ஜூலை வன்முறைக்குப் பெரும் தூண்டுகோலாக அமைந்தது.
அரச படைகளுக்கும் அரசுக்கும் எதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடுத்திருந்த புலிகள் பௌத்த பிக்குகளையும் சிங்கள மக்களையும் தாக்
கினார்கள், தாக்க வருகின்றார்கள் என்ற வதந்தியைக் காட்டுத் தீபோல பரவச் செய்து கறுப்பு ஜூலை வன்முறையை ஓர் இன அழிப்பு நடவடிக்கையாகவே அப்போதைய அரசாங்கம் கனகச்சிதமாக முன்னெடுத்திருந்தது.
நாட்டின் தென்பகுதியில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் அந்நியோன்னியமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தமது உடைமைகளையும் வாழ்வாதாரத்துக்கான பொருளாதாரத்தையும் இழந்து வெறும் கையுடன் வடக்கு நோக்கியும் தமிழகத்தை நோக்கியும் விரட்டப்பட்டார்கள். இதன் பின்னர் மேலும் தீவிரமடைந்த ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோரிக்கையை சர்வதேச அளவில் பூதாகரமாக்கி இருந்தது.
அந்த அரசியல் போராட்டத்தை சகிக்க முடியாத நிலையிலேயே அதனைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து அதீத இராணுவ பலப்பிரயோகத்தில் மிக மோசமான முப்படைகளும் சங்கமித்திருந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் 2009ஆம் ஆண்டு யுத்தத்திற்கு மஹிந்த ராஜபக் ஷ முடிவு கண்டிருந்தார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்களையும் அரசியல் ரீதியாக ஏற்பட்டிருந்த தோல்வி நிலையிலான மனப்புண்ணையும் ஆற்றி ஆசுவாசப்படுத்தி அவர்களைத் தனது பங்காளிகளாக்கி நாட்டை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக் ஷ ஈடுபடவில்லை.
மாறாக 1977ஆம் ஆண்டு தேர்தலில் எழுச்சி பெற்றிருந்த தமிழ்த் தரப்பு அரசியல் அலையை வடியச் செய்து தமிழ்ப்பிரதேசங்களில் 1981 ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தல்களின் ஊடாகக் கால் பதிக்க முயன்றதைப் போன்று மஹிந்த ராஜபக் ஷவும் வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் ரீதியாகக் கால் பதிக்க முற்பட்டிருந்தார்.
இராணுவமயமான ஒரு சூழலில் மேற் கொள்ளப்பட்டிருந்த இந்த முயற்சிக்கு 2010ஆம் ஆண்டு தமிழ் மக்கள் இடம்கொடுக்கவில்லை. அதேபோன்று 2015ஆம் ஆண்டிலும் மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் எண்ணங்களை ஈடேறச் செய்ய தமிழ் மக்கள் வழிவிடவில்லை. அதனால் மஹிந்த ராஜபக் ஷ எதிர்பாராத வகை யில் மோசமானதோர் அரசியல் தோல்வியை எதிர்கொண்டார்.
அன்றைய ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன யுத்த வீரனாகவும், சிங்கள மக்களின் தேசிய மட்டத்திலான கதாநாயகனாகவும் திகழ்ந்த மஹிந்த ராஜபக் ஷ இந்தத் தோல்வியினால் துவண்டு
போனார். இருப்பினும் அவர் சோர்ந்து போகவில்லை.
இன ரீதியாக எழுச்சி கொண்டிருப்பதாகத் தமிழ்மக்களை நோக்கிய மஹிந்த ராஜபக் ஷ அடிமட்டத்தில் இருந்து அப்போது ஆரம்பித்த இனவாத அரசியல் பிரசாரச் செயற்பாட்டின் விளைவாகவே வரலாறு காணாத வகையில் அரசியல் பின்புலம் எதுவுமற்ற, இராணுவ பின்னணியைக் கொண்ட கோத்தபாய ராஜபக் ஷ இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது.
தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு இல்லாமலேயே ஜனாதிபதி தேர்தலில் வரலாறு படைக்கும் வகையில் அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மஹிந்த ராஜபக் ஷ குழுவினர் இனவாதப் பிரசாரத்தையே முன்னெடுத்திருந்தனர். உண்மையாகவே தமிழ்மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களின் குறைநிறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் அவர்கள் செவிசாய்த்திருக்க வேண் டும். அத்தகைய அணுகுமுறையின் மூலம் தமிழ் மக்களின் பங்களிப்பைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான பத்து ஆண்டுகளிலும் தங்களுக்கு எதிர்மறையான நிலைப்பாட்டிலேயே அரசியல் பயணம் செய்த தமிழ் மக்களை ஏறிட்டுப் பார்க்கக்கூட அவர்கள் விரும்பவில்லை. தயாராக இருக்கவும் இல்லை.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 74 வீதத்தைக் கொண்டுள்ள சிங்கள மக்களின் வாக்குகளில் மாத்திரமே இந்தத் தேர்தலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற இனவாத நோக்கத்திலேயே அவர்களுடைய அரசியல் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
தேர்தல் காலத்தில் மக்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது ஒன்றும் புதிய நடவடிக்கை அல்ல. அரசியல் கட்சிகளிடமும் முன்னணியில் உள்ள வேட்பாளர்களிடமும் தங்களுடைய கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் முன்வைத்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான உத்தரவாதத்தைப் பெற முயற்சிப்பதே அரசியல் நடைமுறை.
இதற்கு அமைவாகவே ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து 13 கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்வதற்குத் தமிழ்த்தரப்பு முனைந்திருந்தது. அந்தத் தருணத்தில் தமிழ் மக்களின் அந்த கோரிக்கைக் குரலுக்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ செவிசாய்க்கத் தயாராக இருக்கவில்லை. அதனை அவர் நேரடியாகவே கூறியிருந்தார். தமிழ் மக்களின் ஆதரவு வேண்டும் என்று கோரிய அவர் அந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கும் அவற்றைக் கேட்பதற்குக்கூடத் தயாராக இல்லாத நிலையிலேயே தேர்தலை எதிர்கொண்டு தனிச்சிங்கள வாக்குகளின் மூலம் வெற்றி பெற்று அதிகாத்திற்கு வந்துள்ளார்.
தேர்தல் காலத்தில் தன்னுடன் வந்து இணையுமாறு தமிழ் மக்களுக்குத் தான் விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்காதது மட்டுமல்ல. தேர்தலிலும் தனக்கு அவர்கள் பங்களிக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே கோத்தாபய தெரிவித்திருந்தார். ஆனாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தானே ஜனாதிபதி என்ற ரீதியில் தமிழ் மக்களை நோக்குவதாகவும், அந்த மக்களும் தன்னுடன் இப்போதாவது இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க முன்வர வேண்டும் என கோரியிருக்கின்றார்.
இந்த நேரத்திலும்கூட தமிழ்மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. விசேடமாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய பொறுப்பும் இருக்கின்றது என்பதைக்கூட அவரால் கோடிட்டுக் காட்டி தன்னுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அவர் அழைப்பு விடவில்லை. இந்த நிலைமை மிகவும் கவலைக்குரியது.
தனிச்சிங்கள மக்களுடைய ஆதரவில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயற்பட்டு வெற்றி பெற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நிர்வாகத் திறமை கொண்டவர். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதில் வல்லவர்.
நல்லாட்சி அரசாங்கம் என பெயர் பெற்றிருந்த முன்னைய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கின்ற தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுகின்ற திறன் குறைந்தவராகவே செயற்பட்டிருந்தார். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அத்தகையவர் அல்லர். அவரிலும் பார்க்க நிர்வாகத் திறனுடையவர். துணிவுடையவர். செயல் வல்லமை கொண்டவர்.
ஆனால் அவருடைய வரலாற்றுப் பின்னணி தமிழ் மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சிகரமானதாக படியவில்லை. அச்சத்தையும் சந்தேகத்தையுமே படிய வைத்துள்ளது. ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள முறையும் அவர் என்ன செய்வார் தங்களுடைய விடயங்களில் எவ்வாறு நடந்து கொள்வார் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்கே வழிசமைத்துள்ளது.
இந்த நிலையில் அவர் தமிழ்மக்கள் மீது காட்டுகின்ற சமிக்ஞைகள் ஆரோக்கியமானதாகவும் வெளிப்படையானதாகவும் அமைய வேண்டியது அவசியம். அதேநேரம் தமிழ்த்தரப்பு விடயங்களில் மிகவும் கடுமையானவராகக் கருதப்படுகின்ற அவரை தமிழ்த்தரப்பும் உரிய முறையில் அணுகி அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளின் மூலம் அவரை வசப்படுத்துவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டிய தேவையும் உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நிலைமையை தமிழ் மக்களுக்கு இணக்கமுள்ளததாக மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது.
இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கு தமிழ்த்தரப்பு ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தந்திரோபாயச் செயற் பாடுகளை சரியாக இனம் கண்டு ஓரணியில் ஒன்றிணைந்து ஒரு குரலில் பேச வேண்டும். அந்தப் பேச்சுக்களும் அவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்களும் மிக மிக பொறுப்புணர்ச்சியுடனும் மிக மிக கவனமாகவும் வெளிவர வேண்டியது அவசியம்.
இந்தக் கைங்கரியம், கல்லில் நார் உரிப்பதிலும் பார்க்க பல மடங்குகடினமான காரியம் என்பதை மனதில் இருத்திச் செயற்பட வேண்டி இருக்கும் என்பதையும் மறந்துவிடலாகாது.
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM