வேட்பாளர் இருவருமே உண்மை பௌத்தர்கள், பேரினவாத சிங்களவர் என்ற அடிப்படையில் இவர்களிடம் காணப்பட்ட வேற்றுமைதான் என்ன? இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் இழைத்த தவறுதான் என்ன?
வரலாற்றுக் கால பௌத்த சிங்கள மன்னன் ஒருவன் மீண்டும் நாட்டை ஆளப் பிறந்துள்ளானா, என ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்ப்பதுபோல் மக்கள் பார்த்த ஒரு நிகழ்வாக நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோத்தபாய ராஜபக் ஷவின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெற்றிருந்தது.
பழைய ராசதானியான அநுராதபுரத்தில் சிங்கள பௌத்த மன்னர்களின் வரலாறுகளை நினைவூட்டும் ருவன்வெலிசாயவுக்கு அருகில், புனித வெள்ளரசு மர நிழல் தெறிக்கும் மேற்படி புனித மண்ணில், பௌத்த குருமார் புடைசூழ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வைபவம் கடந்த திங்கட்கிழமை (18.11.2019) இடம்பெற்றுள்ளது.
தனது பதவியேற்பு வைபவத்தின்போது 7 ஆவது ஜனாதிபதி ஆற்றிய உரை, சர்வதேச அளவிலோ அன்றி உள்நாட்டு அளவிலோ முக்கியமுடையதாக காணப்படுகிறதோ என்னவோ சிறுபான்மையினரைப் பொறுத்தவரை குறிப்பாகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாமென்பது கவனத்துக்குரியது.
புதிய ஜனாதிபதி தனது உரையில் மிக அழுத்தமாகவும் அதிகாரபூர்வமாகவும் சில கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
“நான் ஒரு சிங்கள பௌத்தன். எனவே எனது நாட்டின் சிங்கள பௌத்தத்தின் பாதுகாவலனாக விளங்குவேன்.
சிங்கள மக்களின் வாக்கின் அடிப்படையில் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட் டேன். ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த பின் நிற்கமாட்டேன். தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை கோரியிருந்தேன். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எமது தாய்நாட்டை பயங்கரவாதம், பாதாள உலக குழுவினரிடமிருந்தும், கப்பம் பெறுதல், போதைப்பொருள் வர்த்தகம், பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்தையும் இல்லாதொழித்து சிறந்த சமூகமாக இலங்கையை வடிவமைக்கப் போகிறேன்” என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் முடிவைத் தொடர்ந்து பதவியேற்பு வைபவத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை உள்ளிட்ட விவகாரங்கள், தமிழ் மக்களை அந்நியப்படுத்திக் காட்டும் போக்கையும் இனவாத மயப்பட்ட பார்வையையும் உண்டாக்கிவிட்டதோ என்று அச்சப்படும் அளவுக்கு காணப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கும் போக்கானது இனவாத கண் கொண்டு பார்க்கும் நிலையொன்றை உருவாக்கியிருப்பதுடன் தமிழ் மக்களை எதிரிகளாக வர்ணித்துக்காட்டும் புதிய பரிணாமத்தை ஜனாதிபதியின் உரையும் விமர்சனங்களும் கொண்டுள்ளதாக பேசப்படுகின்றன.
“சிங்கள மக்களின் வாக்குப்பலமொன்றே என்னை ஜனாதிபதியாக பதவியேற்க வைத்தது. நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரியிருந்தேன். எனது எதிர்பார்ப்பு உதாசீனம் செய்யப்பட்டுவிட்டது” என்ற தோரணையில் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
தமிழ்மக்கள் ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுக்க வேண்டி இருந்தது. அவர்கள் வாக்களித்த குறித்த வேட்பாளர் தமிழ் மக்களால் மகாத்மாவாகவோ அல்லது மகானாகவோ கருதப்பட்டாரா என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் யதார்த்தங்களும் எதிர்பார்ப்புகளும் மாறுபட்டதாகவே இருந்துள்ளன.
நீண்டகாலப் பிரச்சினையாகவும் நீறுபூத்த நெருப்பாகவும் இருந்து வருவது இனப்பிரச்சினையே.
இந்தப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்காக தமிழ்மக்கள் பல்வேறு வடிவங்களில், உத்திகளில் போராடி வந்திருக்கிறார்கள். அவர்கள் பல சாணக்கியங்களில் ஈடுபட்டுப் பார்த்திருக்கிறார்கள். தந்திரங்களை கையாள முயற்சி செய்து வந்திருக்கிறார்கள். எல்லாமே புறக்குடத்து நீராக அவமாகியதேயுண்மை.
இவ்வாறானதொரு தொடர்நிலை அனுபவங்களுக்குப் பின்னால் நடக்க இருந்ததே 7 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல். போட்டியிட்ட வேட்பாளர்களில் இரண்டொருவரைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் அனைவருமே சிங்கள பௌத்தர்கள்தான். அதிலும் குறிப்பாக பிரதான போட்டியாளர்களான பொதுஜன பெரமுன வேட்பாளராயினும் சரி, புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளராயினும் சரி அடிப்படையில் இருவருமே பௌத்தர்கள், சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
இவ்விருவரில் தமது நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய நியாயமான ஒருவரை தீர்மானிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் தமிழ்மக்கள் முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை. இன்னொரு வகையில் ஆராயப்படுமானால் இருவருமே ஒரே தேசத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், ஒரே பண்பாடு பாரம்பரியங்களினூடாக வளர்ந்து வந்தவர்கள், அரசியல் என்ற கொள்கை கோட்பாடுகளில் மாறுபட்ட கொள்கை கோட்பாடு கொண்டவர்களாக காணப்பட்டாலும் இருவரின் நதி மூலம் ஒன்றே. அவ்வாறான சூழ்நிலையில் சாதகமான நபர் யாராக இருக்க முடியுமென்பதை கண்டறிவதில் கடினங்கள் இருந்தாலும் கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது தமிழ்மக்களுக்கு என்பது யதார்த்தமே.
இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் தமிழ் மக்கள் தங்கள் தெரிவை நிதானமாகவும் கவனமாகவும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய நிலைமை உருவானது. இதற்கு அவர்கள் பயன்படுத்திய உரைகல்தான் பின்வரும் காரணிகள். வேட்பாளர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம், அவர்களுடைய அரசியல் அரிச்சுவடிகள், ஐந்து கட்சிகள் சேர்ந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கை ஆகியவை தமிழ்மக்களின் முடிவுக்கு பின்னணி வகுத்தன.
இதில் ஒப்பீட்டு ரீதியாக குறித்த ஒரு வேட்பாளரின் தீர்மானங்களும் விஞ்ஞாபனங்களும் அவரின் மேடைப்பேச்சுக்களும் சாதகமாக இருக்க முடியுமென்ற நம்பிக்கையின் பேரிலேயே தாங்கள் அவ்வாறானதொரு முடிவுக்கு வந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியிருந்ததுடன் பிரசார நடவடிக்கைகளிலும் கூட்டமைப்பினர் ஈடுபட்டிருந்தனர்.
10 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கொடுமையான அனுபவங்கள், இழப்புக்கள் அதன்முன்னும் பின்னும் ஏற்பட்ட பாதிப்புக்கள், தமிழ் கட்சிகளோ, மக்களோ மறந்துவிட முடியாத வடுக்களாக இருந்த காரணத்தினாலேயே இத்தகையதொரு முடிவை அவர்கள் எடுக்க வேண்டியதாயிற்று. இதுவே தென்பகுதி சமூகத்தின் மீதும் தலைமைகள் மீதும் பகையுணர்வையும் தீராத கோபத்தையும் தமிழ் மக்களுக்கு இன்னும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழ்மக்களைப் பொறுத்தவரை சிங்கள மக்கள் தம்மை ஆளும் இனம் அரசியல் உரிமைகளை விட்டுத்தர முடியாத கொடாக் கண்டர்களாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து சமஷ்டியைப் பெற முயற்சிக்கிறார்கள், நாட்டை துண்டாடப் போகிறார்கள். வட–கிழக்கை இணைப்பதற்கு சதித் திட்டம் தீட்டுகிறார்கள், நாடு துண்டாடப்படப் போகிறது என்ற அதிதீவிரமான கற்பனை காரணமாக தென்னிலங்கை மக்கள் தம் தாய் நாட்டை பாதுகாக்கக் கூடிய துட்டகைமுனு போன்ற ஒருவருக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்ற ஆவேசமான எண்ணத்துடன் பொதுஜன பெரமுன வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற வைத்துள்ளார்கள்.
இன்னுமொரு முறையில் கூறுவதானால் வடக்கு–கிழக்கைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள் தமது செய்தியை ஒன்றுகூடி சொல்வதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்துள்ளனர். தென்பகுதி பெரும்பான்மை மக்களோ பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன் குறிகாட்டி எவ்வாறு அமைகிறதென்றால் சிங்கள தேசம் ஒரு வேட்பாளரை ஆதரிக்க அதற்கு எதிராக தமிழ் பேசும் மக்களும் முஸ்லிம் மக்களும் மென்போக்கு தன்மை கொண்டவர் என பாவனை பண்ணிக் கொண்டு புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
தென் துருவத்தின் நோக்கம் ஒரு பார்வை கொண்டதாகவும் வட துருவத்தின் இலக்கு இன்னொரு வகைப்பட்டதாகவுமே அமைந்த தேர்தலாக இது நடந்தேறியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளானது ஒரு பக்கத்தின் பலத்தையும், இன்னொரு பக்கத்தின் பலவீனத்
தையும் காட்டுவதாக எவர் ஒருவர் கற்பனை பண்ணிப் பார்க்கிறாரோ அது இந்த நாட்டின் தேச ஒற்றுமைக்கும் இனங்களின் கூட்டாண்மைக்கும் பாதகமாக அமைந்து விடும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
“நான் சிங்களப் பெரும்பான்மையின் உதவியுடனும், அனுசரணையுடனும் வெற்றி பெறும் வாய்ப்புக் கொண்டவனாக இருக்கிறேன்” என நம்பிக் கொண்டாலும், “சிறுபான்மை மக்கள் எனக்கு ஆதரவு தர வேண்டுமெனக் கோரியிருந்தேன். எனது முயற்சி வெற்றியளிக்கவில்லை. இருந்தபோதிலும் என்னை ஆதரித்தவர்களுக்கும் வாக்களிக்க தவறியவர்களுக்கும் கூட நான் ஜனாதிபதியாகவே பாகுபாடின்றி செயற்படுவேன்” என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ தனது உரையின்போது குறிப்பிட்டிருந்தமை வரவேற்கத்தக்க விடயம் மாத்திரமல்ல, ஒரு தலைவனுக்குரிய உயர் பண்பையும் புலப்படுத்துவதாகவே இருந்தது.
கடந்த ஏழு தசாப்த கால வரலாற்று விரிசலுக்குப் புதிய ஜனாதிபதி முடிவு காண வேண்டுமென்பது தான் இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகத்தினரின் பிரார்த்தனையாக மாறியிருக்கிறது. சிங்கள தேசமும் தமிழர் தேசமும் பிளவுபட்டு நிற்கின்றது. இந்த வரலாற்றுப் பகைமைக்கு முடிவு காண்பது கடினம் என்ற நிலைப்பாடும் இறுக்கமான மனப்பாங்கும் மாற்றப்பட வேண்டுமாயின் இன்றைய ஜனாதிபதி, சிறுபான்மை மக்களின் மனங்களை வெல்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். காலங்காலமாக தசாப்தம்தசாப்தமாக கூறப்பட்டு வரும் இப்பகைமைக்கு ஒரு தீர்க்கமான முடிவை காண வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அத்தகையதொரு வாய்ப்பை தன் தாய் மண்ணின் மைந்தர்கள் தன்னிடம் ஒப்படைத்துள்ளனர். என்ற உயர்ந்த மனப்பாங்கு கொண்டவராக மாற வேண்டுமென்பதே அனைத்து தரப்பினர்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த விடயத்துக்கு கட்டியம் கூறுவது போலவே ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு தகுந்த தீர்வை தான் எடுக்கப் போவதாகவும் அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்க ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறிய கருத்தானது சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் மெல்லிய நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மனநிம்மதி அளிக்கிறது.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு ஏற்பவே பிரதமராக பதவியேற்றுக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் தாராளப் பண்புடன் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்துள்ளார். தமிழர் மனங்களை வெல்லும் கருத்தாகக் கூட இது நினைக்க வைக்கிறது. “இன்னொருவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்பதற்காக நாம் தமிழர்களை
ஒதுக்கிவிட முடியாது. வேறுபாடு காட்டவும் முடியாது அவர்கள் இந்நாட்டில் தலைநிமிர்ந்து வாழும் நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்துவோம். தமிழ் மக்களை வென்றெடுப்போம்” என செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவரின் இந்தக்கருத்தானது மிக ஆழமான அனுமானங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
நாட்டின் தேசப் பிரஜைகள் என்ற வட்டத்துக்குள் அடக்கப்படுகின்ற மூவின மக்களும் நாட்டின் நல்லிணக்கத்திற்காகவும், பாதுகாப்புக்காகவும், மேம்பாட்டுக்காகவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதுமே அனைவரதும் கனவு. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் என்ற ஓர் இனம் தேசத்துடனும் தேசியத்துடனும் ஒன்று கலக்க வேண்டுமாயின் புதிய ஜனாதிபதி துணிச்சல்மிக்க கைங்கரியங்களை செய்தாக வேண்டும்.
தமது உரிமைகளுக்காகவும் அதிகாரங்களுக்காகவும் போராடிப்போராடி செய்த தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும். அந்த தியாகத்தின் மூலவேர்கள் அறியப்பட்டு எந்த நோக்கத்துக்காகவும் உரிமைகளுக்காகவுமாக போராடி வந்தார்களோ அவர்களின் தாய்ப் பூமியில் சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் ஒருமித்த நாட்டுக்குள் வாழும் மகத்துவமான அரசியல் சூழலொன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி முன்னெடுத்து இடை நடுவில் முறிந்துபோன பேச்சுவார்த்தைகள் மற்றும் புதிய அரசியல் சாசன விவகாரங்கள் மீண்டும் தொடரப்பட வேண்டும்.
தொடரப்படுவது மட்டுமின்றி இனங் காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வகையில் நல்லாட்சி அரசாங்கமென்ற கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட விவகாரங்கள் குறைப் பிரசவமாக போனது மட்டுமன்றி பல குழப்பங்களையும் உண்டு பண்ணியது என்பதை நாடறியும்.
அடிப்படை வாதம், மதவாதம், இனவாதம், பேரினவாதம் என்று நாட்டை சீரழிக்க எத்தனிக்கும் காலத்துக்கும் நாட்டுக்கும் ஒவ்வாத கோட்பாடுகளையும் கோஷங்களையும் மண்மூட வைத்து தேசத்தை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உயர்த்தக் கூடிய சிறப்பு மிக்க கொள்கைகளை முன்மொழிய வேண்டும்.
வடபுல புத்திஜீவிகள் மற்றும் தென்னிலங்கை சிவில் சமூகத்தவர்கள் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையொன்றில் வடகிழக்கில் வாழ்வோர் எமது சகோதர இனத்தவர்கள் அவர்களும் தேசப்பற்றுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதை தென்னிலங்கை வாழ்மக்கள் தாராள மனதுடனும் நெகிழ்வுடனும் தூர நோக்குடனும் முன்வந்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நாட்டில் புரையோடிப்போய் நீறுபூத்த நெருப்பாக இன்னும் தக தகத்துக் கொண்டிருப்பது இனப்பிரச்சினை.
இனப்பிரச்சினையென்பது ஒரு சமூகத்தின் இனத்தின் விதண்டாவாதமான கோஷமும் அல்ல கோரிக்கையும் அல்ல, அது மொழி, பிரதேசம், கலாசாரம் என்ற பெறுமதி மிக்க விழுமியங்களைக் கொண்டது. அவற்றின் அடிப்படையில் எழுந்தவையே இலங்கையின் இனப்பிரச்சினையென்னும் பூதம். இதற்கான தீர்வை, முடிவை அரசியல் அதிகார முறைமை சார்ந்ததாகவே தீர்க்கப்பட வேண்டுமென்பது தமிழர் தரப்பு வாதம். அவ்வாறானதொரு பிரத்தியேக உரிமைக்கு உடையவர்கள் தமிழர்களல்லர் என்பது ஆட்சியாளர்களின் தர்க்கம். இவையே இந்த நாட்டின் அடிப்படைப் பிரச்சினையாக கடந்த 70 வருடங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இப்பிரச்சினை பேரின தலைமைகளால் ஆழமாக அறியப்பட்டு ஏற்றுக் கொள்
ளப்பட்டபோதும் அதை தீர்ப்பதற்காக வழிவகைகளை காண்பதில்தான் பல்வேறு தடங்கல்கள் காணப்படுகின்றன.
இலங்கையின் அரசியல் வரலாற்றுப் போக்கில் அதிலும் குறிப்பாக தமிழ்மக்களின் அரசியல் பயணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்பட்டுப் போகிற அளவுக்கு ஏனைய கட்சிகளுடன் உடன்பட்டுப் போவதையோ அல்லது ஏற்றுக் கொள்வதையோ இல்லையென்று சொல்லப்படும் அபிப்பிராயமொன்று தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இக்குற்றச்சாட்டில் உண்மையுண்டோ இல்லையோ அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயம் தான். அதற்குக் காரணம் கடந்தகால அனுபவங்கள்தான். 1965ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் பங்காளிக் கட்சிகளாக இருந்ததும் இடையில் முறிந்து போய் இலங்கை தமிழரசுக் கட்சியின் அமைச்சராக இருந்த திருச்செல்வம் பதவியை ராஜினாமா செய்த சம்பவங்களும் நடக்கத்தான் செய்தன.
இதேபோன்றதொரு உடன்பாடு அல்லது ஆதரவு வழங்கும் சந்தர்ப்பங்கள் ஏனைய கட்சிகளுடன் இருந்ததில்லையென்ற காரணத்தினால் இன்றும் அக்குற்றச்சாட்டு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அடிப்படையில் தான் 2015ஆம் ஆண்டின் அரசாங்கத்துடன் உடன்பட்டுப்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போதைய நிலையில் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென சுட்டிக்காட்டுவோரும் உள்ளனர்.
எது எவ்வாறு இருந்தபோதிலும் அண்மைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றோர் புதிய ஜனாதிபதியுடன் தமிழ்மக்களின் எதிர்கால நன்மை கருதி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். இது ஒரு நல்ல சகுனமாகக் கூட கொள்ளலாம்.
வடபகுதித் தலைவர்கள் பலர் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளானது தமிழ்மக்களின் ஏகோபித்த முடிவை மாத்திரமன்றி, அவர்களின் செய்தியையும் சொல்லியிருக்கிறது. இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று மிக நீண்டகாலமாகவே துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. தமிழ்மக்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தின்போது ஏற்பட்ட அனர்த்தங்கள், அழிவுகள், அழிப்புக்கள், அநீதிகள் என்பவற்றை இன்னும் மறந்து போகவில்லை என்பதையும் தமக்குரிய ஒரு அரசியல் முறையான பலமான பாதுகாப்பை வேண்டி நிற்கின்றார்கள் என்ற உண்மையையும் வட–கிழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் வாக்களிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே தான் புதிய ஜனாதிபதி, தமிழ் மக்க ளையோ, அவர் சார்ந்த தலைமைகளையோ, பகைமைக் கண் கொண்டு பார்ப்பதையோ, எண்ணுவதையோ தவிர்த்துக்கொண்டு யதார்த்தத்தின் நெடும் பயணத்தின் தாற் பரியத்தை உணர்ந்து அதற்குரிய நிரந்தரப் பரிகாரத்தைக் காண தனது பதவியையும் அதிகாரத்தையும் நிறைவேற்று வல்லமையையும் பயன்படுத்த வேண்டுமென்பது அனைத்து தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பும் கோரிக்கையுமாகும்.
அதுபோன்றே தமிழ் தலைமைகளும் இன்னுமொரு வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற வெறும் கற்பனாவாத பயணத்துக்காக காத்திருக்காமல் கிடைத்திருக்கும் சந்தர்ப்பமும் வாய்ப்பும் சின்னதாக இருந்தாலும் அதை மலைபோல மாற்றும் சாணக்கியத்தையும் தந்திரோபாயத்தையும் வகுத்துக் கொள்வதன் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும். அந்தவகையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியொன்றின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றைத் தீர்க்கப்போவதாகவும் சமவுரிமை வழங்கப்போவதாகவும் ஜனாதிபதி கோத்தபாய கூறிய கருத்தை தாம் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வதாகவும் இக்கருத்தின் அடிப்படையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் விரைவில் அவரை சந்திக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையொரு சிறந்த வாய்ப்பாகவும் சந்தர்ப்பத்தை உண்டாக்கும் மேடையாகவும் பயன்படுத்தி நல்ல பயணத்துக்கான அடி யிடுகையை இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டுமென்பதே காலத்துக்குரிய சிறப்பான முடிவாக இருக்கும்.
திருமலை நவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM