இனியேனும் மதகுருமார், மதத் தலைவர்களை அரசியலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் - தேர்தல் ஆணைக்குழு

Published By: Digital Desk 4

16 Nov, 2019 | 11:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மதகுருமார்களையும், மத தலைவர்களையும் அரசியல்வாதிகள்   தங்களின் அரசியல் பிரச்சாரத்திற்கு  பயன்படுத்திக் கொள்வதை இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.மதகுருமார்களை அடிப்படையாகக் கொண்டு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை தற்போது பகிரங்கப்படுத்துவது பொருத்தமானதமாக அமையாது. 

அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான  பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் கட்சியிகளின் செயற்பாடுகள் குறித்து ஆணைக்குழுவிற்கு  4ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மத தலைவர்கள் , மற்றும் குருமார்கள் ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கு சார்பாக பிரச்சார மேடைகளில் கருத்துரைப்பது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு  பொதுமக்கள் தொடர்ந்து முறைப்பாடுகளை செய்துள்ளார்கள்.

இவ்விடயம் தொடர்பில்  எவ்வித சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது.  ஒருவரின் பேச்சு சுதந்திரத்திற்கு பிறிதொருவர் தடை விதிக்க முடியாது. ஆனால் பதவிகளையும்,  வகிக்கும் நிலையினையும்  கருத்திற் கொண்டு  கருத்துக்களை தெரிவிப்பது நாகரீகமாக அமையும்.

அரசியல்வாதிகளின் தங்களின் தேர்தல் பிரச்சாரத்திற்காக  மதங்களை அடிப்படையாக்குவது நாகரீகமான செயற்பாடு அல்ல, இனிவரும் காலங்களில் இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் பிரச்சார காலத்தின் போது மதகுருமார்களை தொடர்புபடுத்திய முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 

தற்போது அதனை குறிப்பிடுவது பொறுத்தமற்றது. இருப்பினும் குறிப்பிடாமல் இருக்கவும் முடியாது உரிய நேரத்தில் உரிய விதத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அவமதிக்காத வகையிலும் தெளிவுப்படுத்துவோம்.

ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தி முடித்துள்ளேன் என்ற திருப்தி காணப்படுகின்றது. ஆகவே ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன். தேர்தல் நிறைவுப்பெற்று விட்டது.கணக்கறிக்கை தயாரிக்கப்பட்டு உரிய  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவரிடம் பதவி விலகும் தீர்மானத்தினை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்