சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்த நாட்டில் சமூகங் களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் ஒரு ஜனாதிபதியாக திகழ்வார் என ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.
வீரகேசரிக்கு அவர் வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
கேள்வி: சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணம் என்ன?
பதில்: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்குள் இரண்டு வேட்பாளர்களுக்கிடையிலேயே போட்டி நிலவுகின்றது. அதில் நாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். சஜித் பிரேமதாச சிறுபான்மை சமூகங்களையும் அரவணைத்துச் செல்கின்ற ஒருவராக காணப்படுகின்றார். தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகள் அவர்களின் பாதுகாப்பு இவைகளை கருத்திற் கொண்டு செயற்படுபவராக காணப்படுகின்றார். அதனால்தான் சிறுபான்மை சமூகம் ஒன்றுபட்டு சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கின்றது.
கேள்வி: சமூக நல்லிணக்கத்தை உருவாக்க சஜித் பிரேமதாச எவ்வகையான நடவடிக்கைகளை எடுப்பார்?
பதில்: சமூக நல்லிணக்கத்துக்காக சமூக ஒற்றுமைக்காக சமூகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக நாம் பாடுபட்டு வருகின்றோம் என சஜித்பிரேமதாச அடிக்கடி அவருடைய ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் கூட்டங்களில் கூறி வருவதுடன் அந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் விளக்கி கூறியுள்ளார். இதனை மட்டக்களப்பில் வைத்தும் அவர் தெரிவித்தார். நாங்கள் சமூக நல்லிணக்கத்துக்காக சமூக ஒற்றுமைக்காக சமூகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகத் தான் நாம் பாடுபாட்டு வருகின் றோம். எதிர் காலத்தில் அனைவரையும் ஒரு தாய் மக்களாக ஒரே குடை யின் கீழ் வாழச் செய்யும் அமைப்பையும் ஏற்படுத்தப் போவதாக அவர் கூறுகின்றார்;.
கேள்வி: நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு தொகுதிக்கு சஜித் பிரேமதாச வெற்றிபெற்று ஜனாதிபதியானால் எவ்வகையான அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வார்?
பதில்: மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினருக்கு சுத்தமான குடிநீர் இல்லாத பிரச்சினை இருக்கின்றது. உன்னிச்சை நீர் திட்டத்தினை அபிவிருத்தி செய்து அவர் ஜனாதிபதியானதும் முதலில் ஆரம்பிக்கும் நீர் திட்டமாக உன்னிச்சை நீர் திட்டம் அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் அதன் மூலமாக அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் என்பதையும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காணியில்லாதவர்களுக்கு காணிகளை வழங்குவது மாத்திரமல்ல. அந்தக் காணிகளில் வீடுகளை அமைத்துக் கொடுத்து அந்த வீட்டுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி அனைத்தையும் செய்து தந்து குடும்ப வாழ்வை மிகவும் சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
இந்தப் பிரதேசத்திலிருக்கின்ற றூகம் குளம் உட்பட அனைத்து குளங்களையும் அபிவிருத்தி செய்து நீர்ப்பாசனத் திட்டத்தினை விரிவுபடுத்தி குறிப்பாக அனைத்து விவசாயிகளுக்கு நீரினை வழங்கி விவசாயம் அபிவிருத்தி செய்யப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கைகளை எடுப்பதுடன் இங்குள்ள வீதிகளை புனரமைப்பு செய்வதுடன் பாலங்களும் அபிவிருத்தி செய்யப்படும்.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தை சர்வதேச மைதானமாக மாற்றுவதற்கு முயற்சிகளை எடுப்பதுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
சுற்றுலாத்துறையை விருத்தி செய்து சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் இங்குவரச் செய்வதற்கான வழிவகைகள் மேற் கொள்ளப்படுவதுடன் இவ்வாறு அபிவிருத்தியில் புதிய புரட்சிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் நாம் ஏற்படுத்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திட்டமிட்டுள்ளார்.
கல்லடி வாவியை தோண்டி அபிவிருத்தி செய்து விவசாயிகளுக்கு தேவையான சிறந்த முறையிலான நீரைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகளும் மேற்கொள்ளப்படுவதுடன் வெள்ள அனர்த்தத்துக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளும் இதன்மூலம் செய்யப்படும். வரலாற்றில் அதிகமான அபிவிருத்திகளை செய்த ஒரு யுகமாக சஜித் பிரேமதாசவின் யுகம் காணப்படும். இம்மாவட்டத்துக்கு தேவையான அனைத்து அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படும். வறுமையை நீக்குவதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன். அந்த வகையில் சமுர்த்தி வேலைத்திட்டம் நடைமுறையிலுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முப்பதாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை இன்னும் விரிவுபடுத்தி ரணசிங்க பிரேமதாச அன்று வழங்கிய ஜனசவிய திட்டத்தினையும் மேலதிகமாக மக்களுக்காக வழங்கும் திட்டத்தினையும் மேற் கொள்வார்.
கேள்வி: சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனத்தில் சகல விடயங்களும் உள் வாங்கப்பட்டுள்ளன. அபிவிருத்தி புரட்சிகள் தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சகல இனங்களையும் சகல மதங்களையும் கௌரவப்படுத்தும் வகையில் இவரது விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. அந்த விஞ்ஞாபனத்தை இன்று இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
கேள்வி: சஜித் பிரேமதாச வெற்றி பெறுவாரா?
பதில்: இன்று சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக இந்த நாட்டிலுள்ள சிங்களவர்கள் தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விட்டார்கள். தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவும் அந்தக் கட்சி தலைவர்கள் மலையக கட்சிகளின் ஆதரவும் அந்த தலைவர்களின் ஆதரவும் சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை மக்கள் அவருக்கான பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர். எல்லா மத தலைவர்களின் ஆசியையும் பெற்றுள்ளதுடன் இளைஞர்களின் ஆதரவையும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளனர்.
கேள்வி: மேலதிகமாக என்ன கூறவிரும்புகிறீர்கள்?
பதில்: நேர்மையான ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்காக சஜித் பிரேமாசவை அனைவரும் ஆதரிக்க வேண்டும். வாக்குகளை சிதறடிக்காமல் நேரடியாக சஜித் பிரேமதாசவின் சின்னமான அன்னம் சின்னத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். சஜித்தின் வெற் றியை தடுக்க சிலர் இனங்களுக்கிடையிலான மோதல்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். இது தொடர்பில் சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM