நாட்டுக்கு மாற்றம் ஒன்று வரவேண்டும். அந்த மாற்றம் மஹிந்த, கோத்தா மாற்றமாக அமைய வேண்டும். எமது மக்களின் தேவை என்ன என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதனை மஹிந்த, கோத்தா ஆகிய இருவருமே இப்போது உங்களிடத்தில் உறுதியளித்துள்ளனர். ஆகவே மொட்டு சின்னத்தை வெற்றிபெற வைப்பதன்மூலம் பாரிய அபிவிருத்திகளை எதிர்பார்க்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தலைமைவகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் மொட்டு சின்னத்தை வெற்றிபெற வைத்து பாரிய அபிவிருத்திகளை நாம் எதிர்பார்க்க முடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கும் கட்சிகளில் பெரும்பான்மையான சிறுபான்மை கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
வானமே நமது எல்லை. ஒற்றுமையே நமது பலம். எனவே மக்கள் அனைவரும் ஒற்றுமையை பலப்படுத்தி தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
கூட்ட மேடையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் நாம் எமது மக்களுக்காக கேட்டுக் கொண்டதற்கமைய செய்ய வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் உங்களிடம் தெரிவித்தார்கள்.
அந்தவகையில், மலையக மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் அவர்களூடாக எமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கொத்மலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில், ஒருவர் 1500 ரூபாவை சம்பளமாக தருவதாக கூறினார். அது கிடைக்குமா? என உருக்கமான கேள்வியை எழுப்பினார்.
நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் முன்வைத்த கோரிக்கைகளில் எமக்கு வீடமைப்புத் திட்டம் வேண்டும். வீடுகளுக்கு கூரை வேண்டாம் என தெரிவித்தோம். மாறாக கூரைகளுக்கு பதில் மேல் மாடிகள் அமைக்கும் வகையில் வீடமைப்புத் திட்டத்தை நாம் கேட்டுள்ளோம்.
இது எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் பயன்பெறக் கூடிய ஒன்றாக அமையும். மாடி வீட்டனன் மேலே இருந்து எச்சில் துப்பினால் கீழே வருவதாக சிலர் சொல்லுகின்றார்கள். எச்சில் கீழே விழாமல் வேறு எங்கு விழும். நடைமுறைகளுக்கு சாத்தியமான விடயங்களை இந்த தலைவர்கள் நமக்கு செய்து கொடுப்பதாக உங்கள் மத்தியில் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து தாமரையை போல மலையக மக்களின் வாழ்க்கை மலர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.