பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் மலையக மக்களுக்கு வாக்குறுதியளித்து வருகின்றனர். எனினும் இழுபறி நிலைக்குள்ளாகி வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மீண்டும் ஒரு ஏமாற்றத்தைப் பெற்றுக்கொடுக்காது இதிலுள்ள தெளிவுத்தன்மைகளை மக்களிடத்தில் பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பசறை, லுணுகலை மற்றும் கோணக்கலை ஆகிய பெருந்தோட்ட புறங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாம் இவ்விடயத்தில் குழப்பமடைந்திருப்பதாகவும் எவ்வாறு இத்தொகையினை தரப்போகின்றனர் என்று புரியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ள அதேவேளை தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் தமது கோரிக்கையை ஏற்று நிலைப்பாடுகளை பகிரங்கமாக அறிவிக்குமாறு குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் மேற்படி பிரதேச மக்களிடத்தில் வினவியபோது அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருவதாக 2015 ஆம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது. எனினும் அந்த தொகை இதுவரையில் தொழிலாளர்களுக்கு கிட்டவில்லை. இறுதியாக இடம்பெற்ற கூட்டு ஒப்பந்தத்தின் போதும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோன்று மேலும் 50 ரூபா கொடுப்பனவை வழங்கப்போவதாகவும் கூறினர். அமைச்சரவையிலும் இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாகவே கூறப்பட்டது. ஆனாலும் இதுவரையில் அந்த 50 ரூபா கிடைக்கப்பெறவில்லை. அதுமாத்திரமன்றி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முற்பணத் தொகையில் மேலும் 5000 ரூபா பெற்றுத்தரப்போவதாகவும் தெரிவித்தனர். பின்னர் அதுவும் கிடைக்கவில்லை.
இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவது புதிதான விடயமல்ல. காலகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் அனைத்து தரப்பினராலும் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது 1500 ரூபா என்றும் 1000 ரூபா என்றும் பிரதான வேட்பாளர்கள் கூறுகின்றனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய இரு தரப்புக்களுமே மேற்படி வாக்குறுதிகளுக்கு துணை நிற்கின்றன.
1500 ரூபாவை பெற்றுத் தருவதாக கூறும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் அதனை எவ்வாறு பெற்றுத்தரப் போகிறார். அண்மைக்காலமாக 50 ரூபாவுக்கே அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் 1500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருவதாக இருப்பின் அது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் இதுவும் ஒரு வகையில் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் வாக்குறுதியா என்பது புரியவில்லை.
அதேபோன்று மறுபுறத்தில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தபாய 1000 ரூபா பெற்றுத்தருவதாகக் கூறுகிறார். ஆனாலும் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 1000 ரூபாவை வழங்குவது என்பது சாத்தியமற்றது. அத்தோடு அடுத்த கூட்டு ஒப்பந்தத்தின்போது 1000 ரூபா பெற்றுத்தரப்படும் என்று கோத்தபாய கூறுவாரானால் அது இயல்பாகவே இடம்பெறும் 1000 ரூபா அதிகரிப்புக்கு பெயர் போட்டுக்கொண்டதாகவே ஆகிவிடும்.
ஏனெனில் அந்த கூட்டு ஒப்பந்தத்தின் போது தோட்டத் தோழிலாளர்களின் நாட் சம்பளம் 1000 ரூபாவை எட்டிவிடும் என்பது திண்ணமாகும். ஆகவே கோத்தபாய ராஜபக் ஷ கூறுகின்ற 1000 ரூபா சம்பள அதிகரிப்பை தேர்தல் முடிவுற்றதும் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளிக்க வேண்டும். அப்படி இல்லாது போனால் இதுவும் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும்.
ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பினருமே தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியே அரசியல் செய்கின்றனர் என்பது புரிகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வங்கியாக மாத்திரமே பார்க்கப்படுகின்றனர். ஆகவே இம்முறையேனும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றாது உண்மையானதும் இயலுமானதுமான வாக்குறுதிகளை வழங்கி அதனை நிறைவேற்றுங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM