நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப்பணிகள் யாவும் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டுக்கொண்டிருக்கின்ற சூழலில் மக்கள் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை தமது ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யவுள்ளனர்.
இந்த பின்னணியில் தேர்தல் தொடர்பான விபரங்கள், வாக்களிப்பு முறைகள், மற்றும் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவது எவ்வாறு, மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்துவதன் முக்கியம் என்பன தொடர்பில் இங்கு பார்க்கவேண்டியது அவசியமாகின்றது.
நவம்பர் 16 ஆம் திகதி இந்தநாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களத்தில் 35 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் பிரதானமாக மூன்று வேட்பாளர்களே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ, ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருமே பிரதான வேட்பாளர்களாக மக்கள் மத்தியில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மூவருமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
அவற்றில் இந்த நாட்டை அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ரீதியில் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பான தமது கொள்கைகளையும் யோசனைகளையும் அணுகுமுறைகளையும் வேட்பாளர்கள் மூவரும் முன்வைத்திருக்கிறார்கள்.
ஏழாவது ஜனாதிபதி
எட்டாவது தேர்தல்
முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் முறையே 1982 ,1988, 1994, 1999, 2005, 2010, 2015 ஆகிய வருடங்களில் ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றன. எனினும் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆ.ர் ஜயவர்த்தன 1977ஆம் ஆண்டே அப்போதைய முதலாவது குடியரசு யாப்பில் ஒரு திருத்தத்தை செய்து அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி பதவியேற்றுக்கொண்டார்.
அதன்படி முதலாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறாமலேயே அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகவே ஜே.ஆர். ஜயவர்த்தன முதலாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின்னரே மேற்குறிப்பிட்ட வருடங்களில் ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற்றன. இம்முறை எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றாலும் நபர் என்ற ரீதியில் ஏழாவது நிறைவேற்று தலைவரையே தெரிவுசெய்ய இருக்கின்றோம். முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே. ஆர். ஜயவர்த்தன இரண்டு தடவைகள் (1977- –1988)பதவி வகித்தார். பின்னர் ரணசிங்க பிரேமதாச ஒரு தடவை (1988–1993) ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
தொடர்ந்து டி.பி. விஜேதுங்க மூன்றாவது ஜனாதிபதியாக குறுகியகாலம் (1993 மே–- 1994 நவம்பர் வரை) பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து நான்காவது ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு தடவைகள் (1994-–2005) வரை பதவி வகித்தார். தொடர்ந்து மஹிந்த ராஜபக் ்ஷ ஐந்தாவது ஜனாதிபதியாக இரண்டு தடவைகள் (2005–-2015) பதவி வகித்தார். ஆறாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை பதவியிலிருக்கின்றார். அதன்படி ஏழாவது ஜனாதிபதியை நாம் இம்முறை தெரிவுசெய்ய இருக்கின்றோம்.
வாக்காளர்கள்
அந்தவகையில் ஜனாதிபதியை அல்லது எமது நாட்டின் அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவரை தெரிவுசெய்வதற்கான பொறுப்பு வாக்காளர்களிடமே காணப்படுகின்றது. அதனால் வாக்காளர்கள் தமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தவேண்டியது அவசியமாகும். எவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் தெளிவான புரிதலை மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.இம்முறை ஜனாதிபதி தேர்தலானது 2018ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமையவே நடைபெறுகிறது. இது எட்டாவது ஜனாதிபதி தேர்தலாகும். இம்முறை தேர்தலில் 15992096 பேர் நாடளாவிய ரீதியில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களிலும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் 16ஆம் திகதி காலை 7மணியிலிருந்து மாலை 5 மணிவரை தேர்தல் நடைபெறும். இம்முறை தேர்தலில் பல்வேறு சுவாரஷ்யமான விடயங்கள் காணப்படுகின்றன.
விசேட அம்சங்கள்
வழமையாக தேர்தல் வாக்களிப்பானது காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை ஒன்பது மணித்தியாலங்களே நடைபெறும். ஆனால் இம்முறை காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை 10 மணித்தியாலங்கள் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. காரணம் இந்த தேர்தலில் 35 பேர் போட்டியிடுவதால் வாக்களிப்பு சீட்டு 26 அங்குலம் நீளமானதாக காணப்படுகின்றது. இதுவே வரலாற்றில் மிக நீளமான வாக்குச் சீட்டாகும். எனவே அதனைக் கையாள்வதில் அனைத்துத் தரப்பினருக்கும் மேலதிக நேரம் தேவை என்பதால் வாக்களிப்பு நேரம் ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இம்முறை தேர்தலில் பதவியிலிருக்கின்ற ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ போட்டியிடவில்லை. அத்துடன் 20 வருடங்களின் பின்னர் பெண் வேட்பாளர் ஒருவர் இம்முறை களமிறங்கியுள்ளார். இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு இறுதியாக பெண் வேட்பாளர் என்ற வகையில் சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிட்டிருந்தார்.
அடையாள அட்டை
வாக்களிப்பு எனும்போது வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏனைய அடையாள அட்டைகளையும் பயன்படுத்த முடியும். அதன்படி தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியோருக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை போன்றன அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை எதுவுமே இல்லாதவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகித்து வருகின்றது.
வாக்களிப்பது எவ்வாறு?
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும்போது வாக்காளர்களுக்கு பல தெரிவுகள் உள்ளன. அதாவது வாக்காளர் வாக்களிப்புச் சீட்டின் 35 வேட்பாளர்களின் பெயர்களும் சின்னங்களும் இருக்கும்.
வாக்காளர்கள் தமக்கு பிடித்த வேட்பாளரின் சின்னத்திற்கு முன்னால் உள்ள பெட்டியில் X புள்ளடியிட முடியும். மேலும் விருப்பத்தெரிவை மேற்கொள்ள வேண்டுமானால் தமக்கு முதலாவது பிடித்த வேட்பாளருக்கு முன்னால் 1 என்ற இலக்கத்தை இட்டுவிட்டு இரண்டாவது பிடித்த வேட்பாளருக்கு எதிரே 2 என்ற இலக்கத்தை இடமுடியும். மூன்றாவது விருப்பத் தெரிவும் வாக்காளருக்கு இருப்பின் அந்த வேட்பாளரின் சின்னத்துக்கு முன்பாக உள்ள பெட்டியில் 3 என்ற இலக்கத்தை இடலாம்.
அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 என்றும் மற்றொரு வேட்பாளருக்கு 2 என்றும் வாக்களிக்க முடியும். இதுவே வாக்களிக்கும் முறையாகும். மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட வேட்டாளர்களுக்கு X என்று புள்ளடியிட்டால் அவை நிராகரிக்கப்படும். அத்துடன் ஒரு வேட்பாளருக்கு X என்று புள்ளடியிட்டுவிட்டு விருப்ப தெரிவு வேட்பாளருக்கு இலக்கம் ஒன்றையோ அல்லது இரண்டையோ இட்டால் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும். அத்துடன் எந்தவொரு வாக்குச்சீட்டிலும் வெறுமனே இரண்டு, அல்லது மூன்று என்ற இலக்கங்களை இட்டாலும் அவையும் நிராகரிக்கப்படும்.
ஏன் விருப்பத் தெரிவு?
இந்த விருப்பத் தெரிவு வாக்களிப்பு விடயத்தில் மக்களுக்கு சில குழப்பங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் இந்த விடயதானத்தை சரியாக புரிந்துகொண்டு வாக்களித்தால் குழப்பங்கள் ஏற்படாது. காரணம் இவ்வாறு விருப்பத் தெரிவு முறைமை இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு அவர் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 50 வீதமான வாக்குகளைப் பெறவேண்டும். அதாவது 50 வீதத்துடன் அவர் ஒருவாக்கை சேர்த்து பெறவேண்டும். அவ்வாறு பெறுபவரே ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.
எனினும் தேர்தல் ஒன்றில் எந்தவொரு வேட்பாளரும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 50 வீதமான வாக்குகளை பெறாவிடின் மற்றுமொரு தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கே இந்த விருப்பத் தெரிவு முறைமை பிரயோகிக்கப்படுகிறது. அப்படியாயின் எவ்வாறு இந்த விருப்பத் தெரிவு முறைமை பிரயோகிக்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழலாம்.
எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளை பெறாவிடின் எவ்வாறு இந்த விருப்பத் தெரிவு முறைமை பிரயோகிக்கப்படும் என்பதை விரிவாக பார்க்கலாம். தற்போது 35 வேட்பாளர் போட்டியிடுவதால் யாருக்கும் 50 வீதமான வாக்கை பெற முடியாமல்போய்விடுமோ என்ற கருத்தியல் நிலவுகிறது. எனதோன் இம்முறை விருப்பத் தெரிவு விடயம் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. அது எவ்வாறு என்று பார்ப்போம்.
எவ்வாறு விருப்பத் தெரிவு பிரயோகிக்கப்படும்?
உதாரணமாக ஜனாதிபதி தேர்தல் களத்தில் A, B, C, D, E ஆகிய ஐந்து வேட்பாளர்கள் உள்ளனர் என வைத்துக்கொள்வோம். ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகள் 100 என்று எடுத்துக்கொள்வோம். அப்படியாயின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவேண்டியவர் 50 வீத வாக்குகளை பெறவேண்டும்.
ஆனால் தேர்தல் முடிவின்படி A என்ற வேட்பாளர் 40 வாக்குகளையும் B என்ற வேட்பாளர் 35 வாக்குகளையும் C என்ற வேட்பாளர் 15 வாக்குகளையும் D என்ற வேட்பாளர் 6 வாக்குகளையும் E என்ற வேட்பாளர் 4 வாக்குகளையும் பெற்றுள்ளதாக எடுத் துக்கொள்வோம். தற்போது இதில் யாருக்கும் 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
இப்போதுதான் இந்த இரண்டாவது அல்லது மூன்றாவது வாக்களிப்பு பிரயோகம் கவனத்தில் எடுக்கப்படும். இதற்கு இரண்டாம் எண்ணுதல் என்றும் கூறுவர். இந்த இரண்டாம் எண்ணுதல் செயற்பாட்டில் முதலாவதாக முதலிரண்டு இடங்களைப் பிடித்த A, B வேட்பாளர்களை தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
அதன் பின்னர் C, D, E, ஆகிய வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட மொத்த 25 வாக்களிப்பு சீட்டுகளில் அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது மூன்றாவது தெரிவு விருப்பு வாக்குகள் எண்ணப்படும். அவ்வாறு C, D, E, ஆகிய மூன்று வேட்பாளர்களினதும் வாக்குச்சீட்டுகள் மீண்டும் எண்ணப்பட்டு அவற்றில் A அல்லது B ஆகிய வேட்பாளர்களுக்கு விருப்பத் தெரிவுகள் உள்ளனவா எனப் பார்க்கப்படும். அதனால்தான் அதனை இரண்டாம் எண்ணுதல் என்று கூறுகின்றோம். உதாரணமாக D என்ற வேட்பாளரின் ஒரு வாக்களிப்பு சீட்டில் A என்ற வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பத் தெரிவும் B வேட்பாளருக்கு மூன்றாவது விருப்பத் தெரிவும் வழங்கப்பட்டிருந்தால் அந்த வாக்குச்சீட்டு A என்ற வேட்பாளரின் வாக்குகளுடன் சேர்க்கப்படும். அல்லது B என்ற வேட்பாளருக்கு இரண்டாம் விருப்பத் தெரிவும் A என்ற வேட்பாளருக்கு மூன்றாவது தெரிவு வழங்கப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு B என்ற வேட்பாளரின் வாக்குகளுடன் சேர்க்கப்படும்.
இதேவேளை ஒரு வாக்காளர் C என்ற வேட்பாளருக்கு வாக்களித்த வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பு வாக்கை E என்ற வேட்பாளருக்கு வழங்கிவிட்டு மூன்றாவது விருப்பு வாக்கை A அல்லது B என்ற வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு வழங்கியிருந்தால் அவருக்கு வழங்கப்படும். எனினும் குறித்த வாக்குச்சீட்டில் இரண்டாவது தெரிவு C க்கும் மூன்றாவது விருப்பு வாக்கு E க்கும் வழங்கப்பட்டிருந்தால் அது கவனத்தில் எடுக்கப்படாது. இந்த வகையிலேயே போட்டியிலிருந்து நீக்கப்பட்ட C, D, E ஆகிய மூன்று வேட்பாளர்களினதும் வாக்குகள் மீள் எண்ணப்பட்டு அதில் A, அல்லது B க்கு விருப்பு வாக்குகள் உள்ளனவா எனப் பார்க்கப்பட்டு அவை அந்த வேட்பாளர்களின் வாக்குகளுடன் சேர்க்கப்படும்.
அதாவது முதலிரண்டு ( A மற்றும் B) வேட்பாளர்களின் வாக்குகளுடன் அவர்கள் ஏனைய வேட்பாளர்களூடாக பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் சேர்க்கப்படும். அதன்பின்னர் அந்த இரண்டு பிரதான வேட்பாளர்கள் விருப்பு வாக்குகளுடன் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதில் 50 வீதம் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார்.
இதன்போது மேற்கண்ட உதாரணத்தில் A என்ற வேட்பாளருக்கு மூன்று விருப்பு வாக்குகள் கிடைத்திருப்பின் அவர் ஏற்கனவே பெற்றுக்கொண்ட 40 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமாக 43 வாக்குகளைப் பெறுவார். (A=40+3=43) மறுபுறம் B என்ற வேட்பாளர் 10 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர் ஏற்கனவே பெற்றுக்கொண்ட 35 வாக்குகளுடன் இவை சேர்க்கப்பட்டு அவர் 45 வாக்குகளைப் பெற்றுக்கொண்டவராக அறிவிக்கப்படுவார். ( B=35+10=45).
இப்போது A, B ஆகிய இருவரும் பெற்ற மொத்த வாக்குகளான 88 ( 43+ 45=88) வாக்குகளே மொத்த செல்லுபடியான வாக்குகளாக கணிக்கப்பட்டு அதில் 50 வீதம் பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார். இந்த உதாரணத்தைப் பார்க்கும் போது 88 இன் 50 வீதம் 44 காக காணப்படுகின்றது. அப்படி பார்க்கும்போது முதல் தடவை குறைந்த வாக்குகளைப் பெற்ற B என்ற வேட்பாளர் விருப்பு வாக்குகளில் A யைவிட அதிக வாக்குகளை பெற்றதால் வெற்றிபெறுபவராக அறிவிக்கப்படுவார். இதன்போதும் இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றால் தேர்தல் ஆணைக்குழுவினால் திருவுளச்சீட்டு முறை மூலம் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார்.
இதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்கு முறைமை பயன்படுத்தப்படுகின்றது. வாக்காளர்களைப் பொறுத்தவரையில் இது சற்று குழப்பமானதாக இருந்தாலும் அதனை சரியாக கணித்து வெற்றிபெறுபவரை அறிவிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவை சார்ந்ததாகும். அவர்கள் அதனை சரியான முறையில் செய்வார்கள்.
எப்படியிருப்பினும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்குகளை சரியான முறையில் அளிக்கவேண்டும். கடந்த ஒவ்வொரு தேர்தலிலும் அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அவ்வாறில்லாமல் வாக்காளர்கள் தமது வாக்கை சரியான முறையில் அளித்து புதிய தலைவரை தெரிவுசெய்து கொள்வதற்கான ஜனநாயக உரிமையை பயன்படுத்தவேண்டும்.
வாக்களிப்பின்போது ஜனாதிபதி தேர்தலுக்குரிய வாக்களிப்பு முறைமைக்கமைய வாக்காளர் தமது வாக்கை நிராகரிக்கப்படாதவாறு பிரயோகிக்கவேண்டும். இம்முறை தேர்தல் முடிவுகள் 16ஆம் திகதி நள்ளிரவு வெளியாகாது என்றும் 17 ஆம் திகதி பிற்பகல் வேளையிலேயே முதலாவது முடிவை அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகின்றார்கள் என்பதை பார்ப்போம்.
-ரொபட் அன்டனி -
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM