(கே.ஜீ.ஜோன்)
ஜனாதிபதித் தேர்தல் நெருங்க நெருங்க இன முரண்பாடுகளை பெரும்பான்மைக் கட்சிகள் கிளறத் தொடங்கியுள்ளன. சென்றவாரம் தொலைக்காட்சியில் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பௌத்த மத பீடத்தின் பிரதம குருவிடம் சிறுபான்மைக் கட்சிகள் வைத்துள்ள கோரிக்கையைச் சுட்டிக்காட்டியதை நான் பார்த்தேன். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கோரிக்கை முன்வைப்பது தவறு இல்லை என்றும் அதனை வழங்கியிருந்தாலேயே அது பற்றி தர்க்கிக்க வேண்டும் என்றும் சுடச் சுட பதில் கூறினார். விசேடமான அவரது பதிலை எல்லோரும் மெச்ச வேண்டும்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் இன்று என்னுடன் கதைக்கும்போது சிறுபான்மையினர் முன்வைத்திருக்கும் 13 அம்சக் கோரிக்கை மிக அதிகமானதல்லவா என்று கேட்டார். நான் கூறிய பதில் என்னவெனில் என்னால் அதனை ஒத்துக்கொள்ள முடியாது என்றாகும். இவ்வாறு பட்டி தொட்டி எல்லாம் தற்போது தமிழ்ப் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கொள்கை நாட்டைப் பிரித்துவிடப் போகிறது என்பது போல் கதைப்பதையும் நாம் காணக்கூடியதாயிருக்கிறது. இதில் ஒன்று மட்டும் உண்மையாகும். மற்றவர் இதனை விமர்சிப்பர் என்பதற்காகவோ அல்லது தான் சேர்ந்த கட்சி தோற்கடிக்கப்படக்கூடிய வாய்ப்பு இதனால் ஏற்பட்டு விடும் என்பதற்காகவோ நடைபெற முடியாத ஒன்றை நடைபெறும் என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதாகும்.
சிறுபான்மையினத்தவருக்கும் பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களுக்கும் இடையில் மேலே கூறிய விமர்சனம் இம்முறை மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பல தடவை நடந்துள்ளதை நாம் காணலாம். ஆனால் அவற்றால் ஆகிய பலன் ஒன்றுமே இல்லை என்றே கூற வேண்டும். இதனை விபரமாக பின்வருமாறு கூறலாம்.
தற்போது யுத்தத்தால் பிரச்சினைகள் தீர்க்கலாம் என்ற எண்ணம் மழுங்கிப் போய்விட்டது. அதற்குப் பதிலாக இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் வலுவடையத் தொடங்கியுள்ளது. ஆயினும் இச் சந்தர்ப்பத்தில் இதற்கு முன்னர் இப்பிரச்சினையைத் தீர்க்க அரசியல் ரீதியாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஓரளவு பார்ப்பது நல்லது.
பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம்
உக்கிரம் அடைந்துள்ள இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக பிரதமர் பண்டாரநாயக்கவும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் பல தடவை மேற்படி பிரச்சினையைப் பற்றிப் பேசினர்.
பேச்சுவார்த்தையின்போது ஆரம்பத்தில் சமஷ்டி கட்சியின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிலையில் பிரதமர் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
சமஷ்டி ஆட்சி அமைப்பை ஏற்படுத்தவோ தமிழ் பகுதிகளுக்கு சுயாதீனமான ஆட்சியை அளிப்பதற்கோ சிங்களம் மட்டும் சட்டத்தை ரத்துச்செய்யவோ தான் ஆயத்தம் இல்லை எனவும் அவை தனது கட்சிக் கொள்கைக்கு முரணானது எனவும் அவர் பகிரங்கமாகக் கூறினார்.
அப்போது எழுந்த பிரச்சினை என்னவெனில், சமஷ்டி கட்சியின் அடிப்படைக் கொள்கையில் இருந்து வெளியேறாமலும் தங்களது கோரிக்கையை சாகடிக்காமலும் தங்களது கோரிக்கைகளை மாற்றக்கூடிய வழிகள் உள்ளனவா என ஆலோசிக்குமாறு சமஷ்டி கட்சியிடம் கோரிக்கையை வேறு வழியில் வைக்க முடிமா என்று ஆலோசிக்குமாறு பிரதமர் சமஷ்டிக் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சமஷ்டி கட்சியின் கோரிக்கையை வேறுவழியில் செய்ய முடியுமாவென்று ஆலோசிக்குமாறும் விசேடமாக, மாவட்ட சபை முறையை ஏற்றுக்கொள்ளுமாறும் பிரதமர் தனது பதிலீட்டு ஆலோசனையாக மாவட்ட சபை அமைப்பை முன்வைத்தார்.
தமிழ்மொழி பிரச்சினை
அரசாங்க பாஷை அல்லது உத்தியோகபூர்வ மொழி பிரச்சினையில் பிரச்சினையுள்ளது என்பதை பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்டார். ஆனால் அதற்காக ஆக்கப்பட்ட சட்டமான சிங்கள மட்டும் சட்டத்தை ரத்துச் செய்யாமல் வடக்கு –கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களின் பாஷையை அப்பகுதிகளின் உத்தியோக மொழியாக ஏற்றுக்கொள்ள உடன்பட்டார். தற்போது சிங்களம் மட்டும் சட்டமும் தமிழ் உத்தியோக மொழி சட்டமும் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டட்லி சேனாநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம்–1965
1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி சேனாநாயக்கவும் தலைவர் செல்வநாயகமும் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டனர். பின்வரும் ஆலோசனைகளை டட்லி சேனாநாயக்க அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
1)வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிர்வாகம் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் சம்பந்தமாக வடக்கு – கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி உபயோகம் சம்பந்தமாக விசேட சட்டம் ஒன்று இருக்க வேண்டுமென டட்லி சேனாநாயக்க ஏற்றுக்கொண்டார். (நிருவாக மொழி)
2)வடக்கு –கிழக்கு மாகாணங்களின் நீதி நிருவாக மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசித்து நீதி நிர்வாக மொழியாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நீதி நிருவாக மொழியாக இருக்க வேண்டும் என்பதை டட்லி சேனாநாயக்க ஏற்றுக்கொண்டார்.
3)இரு பகுதியாரும் ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு தீர்மானம் மாவட்ட சபைகள் அமைப்பதாகும். மாவட்ட நிருவாகம் மாவட்ட சபையிடமே இருக்கவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் மாவட்ட அமைச்சு ஒன்று இருக்க வேண்டும் என்றும் அதற்கு மாவட்ட நிருவாக அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4)காணிக் கட்டளைச் சட்டம் திருத்துவதற்கு ஒத்துக்கொள்ளப்பட்டது. இலங்கை பிரஜைகளுக்கு அரச காணியை பகிர்ந்தளிக்க முன்னுரிமை கொடுக்குமுகமாக மேற்படி காணிக் கட்டளைச் சட்டம் திருத்துவதற்கும் ஒத்துக் கொள்ளப்பட்டது.
மேலும் அரச காணி சம்பந்தமாக பின்வரும் நிபந்தனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அ) வடக்கு – கிழக்கில் உள்ள அரச காணிகள் முதலில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் வடக்கு – கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமையாக வழங்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆ) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இ) இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழருக்கும் மற்றும் இலங்கைப் பிரஜைகளுக்கும் காணி அளிக்கப்படவேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இலங்கையில் அமைதியான பொது வாழ்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துகின்ற இந்திய – இலங்கை ஒப்பந்தம்
மேலே காட்டியவாறு டட்லி–செல்வநாயகம், பண்டாரநாயக்க– செல்வநாயகம், ஆகியவர்களின் ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. எதிர்க்கட்சியினர் கூறியது என்னவெனில், இந்நாட்டை தமிழர்களுக்கு அடகு வைத்து விட்டார்கள் என்றும் வடக்கு –கிழக்கு மாகாணங்கள் இணைந்து இலங்கையை இரண்டாகப் பிரிக்கப்போகிறார்கள் என்றும் மற்றும் அதையொத்த பிழையான தகவல்களை வழங்கி வடக்கு – கிழக்கில் நிரந்தரமாக அமைதியை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் இடம் கொடுக்காமல் குழப்பத்தை விளைவித்து கொண்டே இருந்தன. இதனால் இலங்கையில் வகுப்பு வாத கிளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இந்நிலை இலங்கையில் தொடர அனுமதிப்பது தவறு என்றும் இந்திய நாட்டுக்கும் தீயதாகவே அமையும் என்பதால் இந்நிலையை மாற்ற இலங்கையுடன் அரசியல் தீர்வு ஒன்றை கொண்டுவர தன்னால் ஆன முயற்சியைச் செய்தது. இதனால் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி சில விடயங்களை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியது ஏன்?
பலர் பல்வேறு விதமாக இவ் இலங்கை –இந்திய ஒப்பந்தத்தை விமர்சிக்கின்றனர். ஆகவே இவ் ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் அனைத்தையும் ஒருவர் இலகுவில் மனதில் வைத்திருக்கமுடியாது. ஆகவே முக்கியமான சில விடயங்கள் மட்டும் இங்கு கூறப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் அமைக்கப்படுதல்
இலங்கையின் ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உரியது என்றும் அவ்வதிகாரம் தேவையான விடயத்தில் மாகாண மட்டத்திற்கு பரவலாக்கம் செய்யப்படவேண்டும் என்றும் அதற்கு வசதியாக இலங்கையில் மாகாண சபைகள் அமைக்கப்படவேண்டும் என்பது இலங்கை– இந்திய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகியது.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு மாகாண சபை அமைய வேண்டுமென்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது வடக்கு –கிழக்கு மாகாண மக்களின் மொழி, கலை, கலாசாரம், பாரம்பரிய பண்பாடு என்பன பெரும்பாலும் ஒன்றாக இருப்பதால் அவ் இரண்டு மாகாணங்களும் அம்மாகாணங்களின் மக்களது விருப்பம் அறியப்படும் வரையும் ஒரு மாகாண சபைக்குள் இயங்கவேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
பல வருடங்களின் பின்னர் இவ் இரண்டு மாகாணங்களும் இரண்டு மாகாணங்களாகக் குறிப்பிடப்பட்டு இரண்டு மாகாண சபைகளுக்குள் கொண்டு வரப்பட்டன. இதனால் இலங்கை –இந்திய ஒப்பந்தப்படி ஒரே மாகாண சபையின் கீழ் இயங்கிய வடக்கு –கிழக்கு மாகாணங்கள், தனித் தனியாக வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டாகப் பிரிந்து இயங்கி வருகிறது.
மாகாண சபைகளின் அதிகாரங்கள்
அரசின் அதிகாரங்கள் மூன்று நிரல்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிரல்களிலும் அவை குறிப்பிடப்பட்டன. இந்தக் கட்டுரைக்குத் தேவையான நிரல் மாகாண சபை நிரலாகும். ஆகவே மாகாண சபை நிரலுக்குள் எவை அடங்குகின்றன என்பவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
1) பொலிஸ் நிருவாகமும் மக்கள் பாதுகாப்பும் மாகாண சபையிடம் வழங்கப்பட்டது.
2) மாகாண மட்டத்தில் உள்ள பொருளாதாரத் திட்டங்களை அமுல்படுத்தும் அதிகாரங்கள் மாகாண சபைக்கு உரித்தாக்கப்பட்டது.
3) குறிக்கப்பட்ட வரையறைக்குள் வரும் கல்விச் சேவை மாகாண சபையிடம் ஒதுக்கப்பட்டது.
4) உள்ளூராட்சி சபைகளின் நிருவாகம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
5) வீடமைப்பும் கட்டிடமும் மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
6) சமூக சேவைகளும் புனர்வாழ்வும் மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
7) பெரும் தெருக்கள், பெரும்பாலங்கள் தவிர்ந்த ஏனைய தெருக்கள். பெரும் பாலங்கள் தவிர்ந்த ஏனைய பாலங்கள் மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
8) கிருஷிகம், விவசாயம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
9) சுகாதாரம், சௌக்கியம் என்பன மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
10) சுதேச வைத்திய சேவை மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
11) உள்ளூர் சந்தைகள், விற்பனை நிலையங்களுக்கான அனுமதி மாகாண சபைக்கு வழங்கப்பட்டது
12) நீர்ப்பாசனம், பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தவிர்ந்தவை மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் இன்னும் 25 விடயங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டன. சுருக்கமாகக் கூறுவதானால் உள்ளூர் மட்ட உயர்வுக்குத் தேவையான விடயங்கள் அனைத்தும் மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச காணி இன்னும் பிரச்சினையாக உள்ளது
அரச காணி மத்திய அரசிடமும் உள்ளது
இதற்குள் குடியேற்றமும் காணி வழங்கல் உட்பட மற்றும் தேவைகளுக்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டது. சில நிபந்தனையுடனேயே அரச காணி மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ளது எனலாம்.
“அரச காணி அரசுக்குரியது என்பது தொடர்ந்தும் ஏற்கப்பட வேண்டும் என்றும் அக்காணிகள் எவ்வாறு காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் முன்னர் கூறப்பட்ட சட்ட திட்டங்களுக்கமையவே இவ் அரச காணிகளை மாகாண சபை கையாள வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. இதன் பொருளை விளங்கிக் கொள்ள சிறு உதாரணத்தை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். உதாரணமாக உயர்கல்வி அமைச்சு வடமாகாணத்தில் ஒரு பல்கலைக்கழகத்தையோ அல்லது வேறு உயர் தொழில்நுட்பக் கல்லூரியையோ நிர்மாணிக்க விரும்புகிறது என்றால், மேற்படி கல்வி அமைச்சு மாகாண சபையிடம் அதனைச் சுட்டிக்காட்டி அக்காணியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதற்குக் காரணம் அரச காணி மாகாண சபையின் விடயத்திற்குள் வரவில்லை என்றும் மத்திய அரசு அதற்குரிய அனுமதியை மாகாண சபையிடம் பெற்றுக்கொள்ளாமல் கட்டடத்தை கட்டத் தொடங்க முடியாது என வாதிடுவது தவறு என்றும் கூறுகின்றனர். இந்த வினாவை பல அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டி மத்திய அரசு தனது தேவைக்கென காணி ஒன்றை பெறுவதற்கு மாகாண சபையிடம் அனுமதியைப் பெறுவது அரசின் இறைமைக்கு சவால் என்றும் கூறுவதை நாம் காணலாம். பாராளுமன்றத்திலும் இத் தர்க்கம் நடைபெறுவதுண்டு. பாராளுமன்றம் தனக்குத் தேவையான காணியை குறிப்பிட்டு அக்காணியில் அபிவிருத்தியை தொடங்க மாகாண சபையின் அனுமதி தேவையில்லை என்றும் நடைபெறப் போகும் விடயத்தை மாகாண சபைக்கு கூறினால் மட்டும் போதும் என்றும் சட்டப் பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றமும் 2013.09.26 ஆம் திகதி வழங்கிய சோலைமுத்து ராசு வழங்கிய தீர்ப்பு இதற்கு சார்பாக இருப்பதையும் காணலாம்.
சோலைமுத்து ராசு வழக்கு
மேலே கூறிய மாகாண சபையின் அதிகாரத்தினுள் அரச காணிகளின் அதிகாரம் வருகிறது என்பதற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இடமில்லாமல் போய்விட்டது.
1979 ஆம் ஆண்டு அரச காணியை மீளப்பெறுதல் சட்டத்தின் கீழ் ஒருவரை அரச காணியிலிருந்து வெளியேற்றும் கட்டளையை கண்டி மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதன் பின்னர் இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு இறுதித் தீர்ப்புக்கு வந்தது. உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்த்தது. அரச காணி ஒன்றில் குடியேற்றம் நடத்தப்படவேண்டுமெனில் அதற்குரிய காணியை தெரிவு செய்து மத்திய அரசிடம் (மத்திய காணி ஆணையாளரிடம்) அனுமதியை மாகாண சபை அரசு பெற வேண்டும். இதன் மூலம் மாகாண சபை காணியாளர் தனது செயலுக்கான அனுமதியை மத்திய அரசின் காணியாளரிடம் இருந்தே பெறவேண்டியுள்ளது. ஆகவே மத்திய அரசுக்கே காணி சம்பந்தமான அதிகாரம் உண்டு என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க மாகாண சபையிடம் அனுமதியைப் பெறவேண்டும் என்பது வினோதமானது. ஆகவே மாகாண சபைகளுக்கு அரச காணி சம்பந்தமாக அனுமதியைப் பெறுதல் அவசியம் என கூறமுடியாது” என உயர் நீதிமன்றம் கூறியது.
ஆகவே 13 ஆவது அரசியலமைப்பில் மாகாண சபை நிரலுக்குள் வரும் அரச காணி பற்றிய விடயம் தெளிவில்லை என கூறக்கூடியதாயிருக்கிறது.
புதிய அரசியலமைப்பு ஒன்று வரும் எச்சந்தர்ப்பத்திலாவது சட்ட அறிஞர்கள் இவ்விடயத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.
மாகாண சபை நிரலில் உள்ள அரச காணி பற்றிய முடிவு பரிபூரணமானதாக இருக்கவேண்டும்
மாகாண சபை பற்றிய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் அச்சபைக்குரிய அதிகாரங்களும் சட்டச்சிக்கல் நிறைந்து காணப்படுகின்றது. அதற்கு நல்லதொரு உதாரணம் அரச காணி என்ற விடயமாகும்.
சனாதிபதி தேர்தலின் பின்னர் இப்பிரச்சினை எழுவது தடுக்க முடியாது இருக்கும். ஆகவே 13 ஆவது அரசியலமைப்புக்கு திருத்தம் தேவையாயின் அதனைத் திருத்தி காணி சம்பந்தமான விடயம் அவ் அவ் மாகாணங்களில் உள்ளவர்களிடையே விட வேண்டும். இதற்குரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தொகுப்புரை
நிலமானது ஒரு குறித்த அளவிலேயே ஒரு நாட்டுக்குச் சொந்தமாகவிருக்கிறது. சில நாடுகளில் சண்டை நடைபெறுவது நிலப் பரப்பை கூட்டிக்கொள்ளவேயாகும் என்பதை மறுக்கமுடியாது. ஆகவே ஒவ்வொரு நாட்டிலும் நிலம் நிச்சயமானது. இலங்கையிலும் இந்நிலையேயுண்டு.
இலங்கையில் காணிக்குடியேற்றங்கள் மத்திய அரசினாலேயே ஏற்படுத்தப்பட்டன. 13 ஆவது அரசியலமைப்பில் நிலம் என்பது மாகாண சபை நிரலுக்குள் வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை இலங்கை உயர் நீதிமன்றம் சோலை முத்துராசு வழக்கில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே காணிக்குடியேற்றம் மாகாண சபைகளால் நடத்தப்பட்டபோதும் மத்திய அரசின் அனுமதி அரச காணியைப் பெற தேவையாயுள்ளது. ஆகவே அரச காணியின் நிலை என்ன என்பதை தெளிவாக அறிவுறுத்த மாகாண அரசுகளும் மத்திய அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அரச காணியின் நிலையை ஒரு முடிவுக்குள் கொண்டுவரவேண்டும்.
மேலும் இலங்கையில் உள்ள இனப் பிரச்சினையை மேலும் தாமதிக்காமல் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் இலங்கை சுபிட்சம் நிறைந்த நாடாக மாறமாட்டாது.
வரப்போகும் அரசுகள் இதனை மனதில் எடுக்கவேண்டும். தற்போதைய காலம் தேர்தல் காலமாதலால் இப்பிரச்சினையை மனதில் பதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM