எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டமானது இன்றைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முதல் காலாண்டுக்காக 1474 பில்லியன் ரூபா அரசாங்க செலவீனத்துக்காக ஒதுக்கப்படுவதுடன், அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் சார்பில் திரட்ட வேண்டிய கடன்தொகை 721 பில்லியன் ரூபாவை விஞ்ஞாததாக இருக்கும்வகையில் பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவுள்ளனர்.
பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கூடுகின்ற நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வரையில் நான்கு மாத காலத்துக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1474 பில்லியன் ரூபாவை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த கணக்கறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
அதேபோல் மேலதிகமாக அரசாங்கத்தின் சார்பில் திரட்டப்பட வேண்டிய கடன்தொகை 721 பில்லியன் ரூபாவை விஞ்ஞாததாக இருப்பதற்கும் பாராளுமன்றத்தில் அனுமதி கோரப்படவுள்ளது.
இன்றும் நாளைய தினமுமாக பாராளுமன்றத்தைக் கூட்ட ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் கூட நாளைய தினம் பாராளுமன்றத்தை கூட்டாது இன்றைய தினம் மாத்திரம் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்றைய தினமே நிதி சட்டமூலம், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடுகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள், உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் உள்ளிட்டவைகளும், விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டு சட்டத்தின் கீழான ஆறு ஒழுங்கு விதிகள், நிதிச் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்கு விதிகளும் இன்றைய தினமே நிறைவேற்றப்படவுள்ளன.