தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வந்து அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஐந்து தமிழ் தேசியக்கட்சிகள் இணங்கியிருந்த நிலையில் அந்த இணக்கப்பாட்டு விவகாரமானது தற்போது தென்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சி உட்பட கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புௌாட், , ரெலோ ஆகியனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் 13 அம்ச திட்டமொன்றினை தயாரித்திருந்தன.
யாழ். மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த 13 அம்சங்கள் அடங்கிய பொது ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதில் வடக்கு, கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையுடனான சமஷ்டி தீர்வு, வடக்கு, கிழக்கில் சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்துதல் உட்பட பல்வேறு விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.
இந்த 13 அம்சங்களின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வருவது என்றும் முடிவு காணப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கோரும் வகையிலேயே இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏழு தசாப்தத்திற்கும் மேலாக தமிழ் மக்கள் கோரிவருகின்ற விடயங்களே இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த விடயங்கள் குறித்து ஐந்து தமிழ் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து பிரதான வேட்பாளர்களுடன் பேசுவதற்கு முன்னரே தென்பகுதியில் இந்த ஆவணம் தொடர்பில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சில தென்பகுதி பத்திரிகைகளும் இலத்திரனியல் ஊடகங்களும் இந்த விடயத்தை பெரும் பூதாகரமாக காண்பித்து சிங்கள மக்களை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளன. தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஈழத்தைக் கோருவ தாகவும் விடுதலைப்புலிகளினால் அடைய முடியாததை ஆவணங்களின் மூலம் அடைவதற்கு இந்த தமிழ் கட்சிகள் முயல்வதாகவும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஐந்து தமிழ் கட்சிகளின் 13 அம்ச திட்டம் குறித்து பேசுவதற்கு தயாரில்லை என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து தயாரித்துள்ள 13 அம்சங்களின் அடிப்படையில் அந்தக்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தமாட்டேன். அதில் எந்தப் பயனுமில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்கத் தயார். ஆனால் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கூட நான் தயாரில்லை என்று கோத்தபாய ராஜபக் ஷ அறிவித்திருக்கின்றார்.
இதேபோன்றே பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷவும் தேர்தலுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிபந்தனைகளை முன்வைத்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எமக்கு எமது நாடும் இறைமையுமே முக்கியமாகும். நாட்டைப் பேரம்பேசி எந்தக் கோரிக்கையையும் நாங்கள் ஏற்கத் தயாரில்லை என்று தெரிவித்திருக்கின்றார். நேற்று பெலியத்தையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தமிழ் கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைகளை நிராகரிக்கும் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை. யார் எமது கோரிக்கைகளை ஏற்கின்றார்களோ அவர்களுக்கு எமது ஆதரவை வழங்க முடியும். இந்த விடயம் தொடர்பில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் இந்த வாரம் கூடி இறுதித்தீர்மானத்தை எடுக்கவுள்ளோம் என்று அறிவித்திருக்கின்றார்.
இவ்வாறு தமிழ் கட்சிகளின் 13 அம்ச கோரிக்கையினை பொதுஜன பெரமுன நிராகரித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தக்கட்சிகள் முனைந்து வருகின்றன. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் சந்தித்து பேசியிருந்தனர். இதன்போது வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன ஆகியோரை ஒன்றாக சந்தித்து இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று இவர்கள் கோரியுள்ளனர். தான் கொழும்பு திரும்பியதும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்குவதாக இந்த சந்திப்புக்களில் தெரிவித்திருக்கின்றார்.
இதனைவிட முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனையும் தனித்து சந்திப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக பிரதமர் செயலகத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தான் தனித்து பேசவிரும்பவில்லை என்றும் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து சந்திப்பதற்கான ஏற்பாட்டை செய்யுமாறும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிணங்க சில தினங்களில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியினர் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினாலும் இந்த 13 அம்ச திட்டங்களை தற்போதைய நிலையில் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஏனெனில் தென்பகுதியில் இந்த 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இனவாத பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக அறிவித்தாலே ஐக்கிய தேசிய கட்சி ஈழத்தை தாரைவார்க்கப்போவதாக தென்பகுதி எதிரணியினரால் பிரசாரம் மேற்கொள்ளப்படும். தற்போதுகூட சிங்கள மக்கள் மத்தியில் இந்த 13 அம்ச திட்டமானது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாறான சூழலை இனவாத சக்திகள் ஏற்படுத்திவிட்டுள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ சிங்கள மக்களின் ஆதரவை திசை திருப்பி தேர்தலை வெற்றிகொள்வதற்கு முயன்று வருகின்றார். ஐந்து கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணங்குவதாக அவர் தெரிவித்தால் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே தற்போதைய நிலையில் ஐக்கிய தேசிய கட்சி கூட இந்த 13 அம்ச திட்டத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை தெரிவிக்குமா என்பது சந்தேகத்திற்குரியது.
தமிழ் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அடிபணியும் என்று தற்போது பிரசாரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை மறுக்கும் வகையில் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும் ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என்றும் சிறுபான்மை கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டோம் என்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்கள் தற்போது கூறி வருகின்றனர்.
எனவே இவ்வாறான நிலையில் அடுத்த கட்டமாக எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பில் ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் ஆராயவேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம்தான் எதிர்காலத்தில் ஏதோ ஒருவகையில் தீர்வுகளை காணக்கூடிய நிலைமை ஏற்படும். அதற்கேற்றவகையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி புதிய தீர்மானத்திற்கு வர வேண்டும்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்கும் வேட்பாளர்களுடன் பேச்சுக்களை நடத்தி உறுதியான தீர்மானத்திற்கு வருவதற்கு ஐந்து கட்சிகளின் தலைவர்களும் முன்வருவதே இன்றைய நிலையில் செய்யவேண்டிய காரியம் என்பதை நினைவு படுத்த விரும்புகின்றோம்.
வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்களம் ( 22.10.2019)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM