நா.தனுஜா
கோத்தாபய ராஜபக் ஷ புதிய நாடொன்றைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறுகின்றார். யார் புதிய நாட்டை உருவாக்குவது? கடந்த பத்துவருட காலம் அவர்களே ஆட்சியதிகாரத்தில் இருந்தனர்.இப்போது கூறுபவற்றை அப்போது செய்திருக்கலாம். இம்முறை தேர்தலில் எதிரணி வெற்றியடைந்தால் கோத்தாபய ராஜபக் ஷ, மஹிந்த ராஜ பக் ஷ, பசில் ராஜபக் ஷ, நாமல் ராஜபக் ஷ ஆகியோரே நாட்டை ஆள்வர்.
இங்கு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? எனவே எதிர்காலத்தில் உணவு உண்பதா? அல்லது துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காவதா? என்ற தீர்மானத்தை நாட்டுமக்கள் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டும். உணவுண்பதெனின் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியினால் நேற்று சனிக்கிழமை லக்கல நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
இப்போது எம்மத்தியில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பொறுப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது ஒன்றேயாகும். கடந்த காலங்களில் லக்கல என்பது மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்பட்டது. எனினும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயரத்ன பண்டா இங்கு அபிவிருத்தியை ஏற்படுத்தினார். அதன்பின்னர் மீண்டும் எல்லோருக்கும் லக்கல மறந்துபோய்விட்டது. எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் நாம் மீண்டும் ஆட்சியமைத்த பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டிருக்கின்றன. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையில் பாடசாலைகள் அமைக்கப்பட்டும், வசதிகள் மேம்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.மாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு உயர்த்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான சுரக்க்ஷா காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் நாட்டில் வாழும் பல்வேறு பிரிவினரையும் கருத்திற்கொண்டு பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று லக்கல பிரதேசத்தில் 5000 ஏக்கர் இறப்பர் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்.
பலாலியின் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தை திறந்து வைத்திருக்கிறோம். அடுத்ததாக மட்டக்களப்பு விமான நிலையத்தையும் சர்வதேச விமானநிலையமாக மாற்றுவோம். இப்பிரதேசத்திற்கு சுனாமி முன்னறி கருவியைப் பெற்றுக்கொடுப்போம். அது வேண்டுமெனில் வரவிருக்கும் பெரிய பூதத்தைத் தோற்கடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ராஜபக்ஷாக்கள் எப்போதும் ராஜபக்ஷாக்களே. அவர்கள் ஆட்சியிலிருந்த போது மெதமுலானவை அபிவிருத்தி செய்ததை போன்று ஏனைய பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவில்லை. அப்போது பொருட்களின் விலைகளையும் குறைக்கவில்லை. குடிநீர் கோரி ரதுபஸ்வெலவில் போராடியவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்கள். எனினும் 2015 இல் நாம் ஆட்சிக்கு வந்தபின்னர் நிவாரணங்களை வழங்க ஆரம்பித்தோம். அதனையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
எனவே எதிர்காலத்தில் உணவு உண்பதா? அல்லது துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காவதா? என்ற தீர்மானத்தை நாட்டுமக்கள் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி மேற்கொள்ள வேண்டும். உணவுண்பதெனின் எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM