13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை : கோத்தாபய ராஜபக்ஷ விசேட செவ்வி

Published By: Daya

19 Oct, 2019 | 12:41 PM
image

வடக்கில் தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்க தயாராக இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அச் செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி: கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை தயாரித்து ஒரு ஆவணத்தை கைச்சாத்திட்டுள்ளன. அது தொடர்பில் உங்கள் தரப்புடனும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். நீங்கள் தயாரா?

பதில்: அந்த 13 விடயங்கள் அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. இதுதான் இந்த நாட்டின் பிரச்சினை. இப்படிதான் மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த 13 விடயங்கள் குறித்து பேசி பயனுள்ளதா? வடக்கு கிழக்கை இணைக்க கோருகின்றனர். ஒற்றையாட்சியை நீக்குமாறு கோருகின்றனர். இவற்றை செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. கடந்த 72 வருடங்களாக இதனையே செய்து வருகின்றனர். தற்போதும் இதனையே செய்ய முயற்சிக்கின்றனர். இதுவொரு பொய் முயற்சி. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை.

பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ்க் கட்சிகளை சந்தித்து பேசலாம். ஆனால் 13 விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். இதனை தெளிவாக எழுதுங்கள். இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளகிக்க தயாராக இருக்கின்றேன்.

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள ஹிஸ்புல்லாவை நீங்கள் தான் களமிறக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இது உண்மையா?

பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவ்வாறான எந்த முயற்சியையும் நான் செய்யவில்லை.

கேள்வி :  தொண்டமான் உங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா பிரச்சினைக்கு உங்கள் பதில் என்ன ?

பதில் :  1000 ரூபாவைவிட பாரிய திட்டம் ஒன்றை நாங்கள் முன்னெடுப்போம். தொண்டமான் முன்வைத்துள்ள 32 அம்ச கோரிக்கை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அவை முக்கியமானவையாகும். கல்வி, பல்கலைக்கழகம், தொழிற்பயிற்சி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளன. இன்று ஒருவருக்கு 1000 ரூபா கிடைக்காவிடின் என்ன செய்யலாம்?நான் தேயிலை தோட்ட உரிமையாளர்களிடம் கேட்டேன். அவர்கள் ஆயிரம் ரூபா வழங்க முடியும் என்று கூறினார்கள். அவர்கள் மேலும் பல பங்கு இலாப திட்டங்களையும் முன்வைக்கின்றனர். நான் இதுதொடர்பில் ஆராய்ந்து பார்த்திருக்கின்றேன். ஆனால் 1000 ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். ஆயிரம் ரூபா கூட இல்லாமல் ஒரு மனிதனால் வாழமுடியுமா?

கேள்வி: கோத்தாபயய ராஜபக்ஷவுக்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது என கூறப்படுகின்றதே?

பதில்: எனக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்கள். நான் மொத்தமாக 62 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டுவேன்.

கேள்வி: இராணுவத்துக்கு தலைமை வகிக்கவில்லை என்று கூறுனீர்கள். உண்மையில் என்ன நடந்தது?

பதில்: நான் கூறியது உண்மைதான். குறித்த அந்த ஊடகவியலாளர் இராணுவத்துக்கு நான் தலைமை வகித்தேன் என்று கூறினார். நான் இராணுவத்துக்கு தலைமை வகிக்கவில்லை. என்னால் இராணுவத்துக்கு தலைமை வகிக்க முடியாது. இராணுவத்தை இராணுவத்தளபதியும் கடற்படையை கடற்படை தளபதியும் விமானப்படைய விமானப்படைத் தளபதியும் பொலிஸாரை பொலிஸ் மா அதிபரும் வழிநடுத்துவார்கள். நான் அனைத்து தரப்பினரையும் இயக்கினேன். எனது நுட்பங்கள் செயற்படுத்தப்பட்டன.

உதாரணமாக இராணுவத்தளபதியினால் ஒரு இராணுவ வீரரை கூட மேலதிகமாக நியமிக்க முடியாது. அதற்கு ஒரு காரணம் உள்ளது. இராணுவத்தளபதிக்கு தான் நினைத்த மாத்திரத்தில் வீரர்களை அதிகரிக்க முடியும் என்றால் அவர் இலட்சக்கணக்கில் இராணுவத்துக்கு மக்களை சேர்த்து அரசாங்கத்தை கைப்பற்றி விடுவாரே.

இராணுவத்தளபதிக்கு அப்படி செய்ய முடியாது. ஜனாதிபதிக்கு அதனை செய்ய முடியும். நான் செயலாளராக இருந்தேன். இதனை இவர்கள் புரிந்துகொள்வில்லை. நான் இராணுவத்துக்கு தலைமை வகிப்பதாக கூறியிருக்கலாம். ஆனால் அது தவறு. நான் செயலாளராக பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தேன்.

கேள்வி: நீங்கள் அதிகாரத்துக்கு வந்தால் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுமா?

பதில்: நாட்டுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவைப்படுகின்றது. தற்போதைய அரசியலமைப்பில் பல திருத்தங்களை மேற்கொண்டு இதனை குழப்பியிருக்கின்றனர். அழித்து இருக்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது நல்லதாகும்.

கேள்வி: ஜெனிவா பிரேரணையை நிராகரிப்பதாக ஏன் கூறுகின்றீர்கள்?

பதில்: அது ஒரு பக்க தகவல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கேள்வி: அரசாங்கமும் சேர்ந்துதான் இந்த பிரேரணையை தயாரித்துள்ளது?

பதில்: அது தவறு. இந்த பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும். பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பாத எதையும் செய்ய முயற்சித்தால் அதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் யதார்த்தம். ஆனால் ஜெனீவா பேரவையுடன் புதிய விடயங்களை மேற்கொள்வோம். ஆனால் ஐ.நா. நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அமெரிக்க இந்த பேரவையிலிருந்து விலகி விட்டது. அவர்கள் தான் இந்த பிரேரணையை கொண்டு வந்தார்கள்.

கேள்வி: நீங்கள் ஜனாதிபதியானதும் பிரதமரை உடனடியாக மாற்றுவீர்களா?

பதில்: நாம் பதவிக்கு வந்ததும் புதிய அரசாங்கம் அமைய வேண்டும். அதுதான் மக்களின் பிரார்த்தனை. தற்போதைய அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே மக்கள் நம்புகின்ற ஒரு பிரதமரை நான் நியமிக்க வேண்டிவரும்.

கேள்வி: சுதந்திரக் கட்சி ஆதரவளித்தாலும். சந்திரிக்கா குமார துங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளாரே?

பதில்: அவர் தற்போது அரசியலில் இல்லை. நான் அவருடன் பேசுவதில்லை.

கேள்வி நீங்கள் சீனாவுடன் நெருங்கி இருப்பதாக கூறப்படுகின்றதே?

பதில் அது முற்றிலும் பொய்யானது. நாம் இந்தியாவுடன் பணியாற்றும்போது .இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கின்றது என்று நாம் பார்ப்பதில்லை. எமது ஆ;ட்சியில் நாங்கள் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றினோம். முன்னாள் இந்திய வெ ளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன் தெரிவுகள் என்று ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். அதனை வாசித்தால் நாம் இந்தியாவுடன் எவ்வாறு பணியாற்றினோம் என்று புரிந்துகொள்ள முடியும்.

சிவ்சங்கர் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராவும் இருந்தார். அவர் திறமையான ஒரு அதிகாரி.

கேள்வி: உங்கள் அரசாங்கத்தில் பசில் ராஜபக்ஷவின் வகிபாகம் என்ன?

பதில்: தற்போது அவர் எம்.பி. கூட இல்லை. ஆனால் அவர்தான் கட்சியை வழிநடத்தி நுட்பங்களை மேற்கொண்டு வருகின்றார். அரசியல் ரீதியில் செயற்படுகின்றார். அவர் எமக்கு ஆலோசகராக இருந்தால் அவரை பயன்படுத்துவோம்

கேள்வி: இறுதி யுத்தத்தின் போது புலித் தலைவர்கள் சரணடைந்ததாக கூறப்படுகின்றது.

பதில்: வெள்ளைக்கொடி ஏந்தி வந்ததை எங்காவது காணொளியில் பார்த்துள்ளீர்களா? அதிகாலை நான்கரை மணிக்கே வருபவர் யார் என்று கூட தெரியாது. பிரபாகரனின் தாய் தந்தையரை நாம் காப்பாற்றினோம். ஆனால் அவர்கள் பிரபாகரனின் பெற்றோர்கள் என எமக்கு தெரியாது. பொட்டு அம்மான் எவ்வாறு இருந்தார் என யாருக்கும் தெரியாது. ஒரு இராணுவ வீரருக்கு பொட்டு அம்மான் யார் என்று தெரியுமா? பொட்டு அம்மானை என்னால் கூட அடையாள காண முடியாது. பிரபாகரனை கூட அடையாளம் காண முடியாது. அதனால் தான் பிரபாகரனை அடையாளம் காண அங்கு கருணாவை அனுப்பினோம்.

கேள்வி: இவ்வாறு தலைவர்கள் சரணடைய வருவதாக சர்வதேச தகவல் ஏதும் உங்களுக்கு வந்ததா?

பதில்: அவ்வாறு எதுவும் வரவில்லை.

கேள்வி: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் உங்கள் தீர்வு என்ன?

பதில்: அரசியல் கைதிகள் என்று கூறமுடியாது. சிறைக் கைதிகளே உள்ளனர். இன்னும் 200 பேர் அளவிலேயே இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். நான் அதுதொடர்பில் திட்ட முறைமையை தயார்படுத்தி இருந்தேன். நாங்கள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம். இந்த 200 பேர் விடயத்திலும் அந்த தீர்வுக்கு செல்ல முடியும்.

கேள்வி: நீங்கள் ஆட்சிக்கு வந்தால் குறித்த 200 பேர் அளவில் தமிழ் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த முடியும் என உறுதி வழங்க முடியுமா?

பதில்: 200 பேர் தொடர்பிலும் என்னால் உறுதி வழங்க முடியாது. சிலர் பாரிய குற்றச் செயல்களை செய்தவர்கள். அவர்களில் சிங்களவர்களும் உள்ளனர். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் உள்ளவர்களை நாம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தலாம். லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் வெடி வைத்தவர் விடுதலையாகி விட்டாராம். ஆனால் மரக் கிளைகளை வெட்டியவர் இன்னும் தடுப்பில் உள்ளாராம்.

அதாவது கதிர்காமர் மீது வேறு ஒரு வீட்டில் இருந்து துப்பாக்கி சூட்டுக்கள் நடத்தப்பட்டது. அங்கு மரத்தில் ஒரு கிளை இருந்துள்ளது. எனினும் அந்த கிளை கதிர்காமரின் வீட்டை மறைத்துள்ளது. அப்போது பொதுவாக வீதிகளில் மரக்கிளைகளை வெட்டும் ஒருவர் இந்த மரக்கிளைகளையும் வெட்டியிருக்கிறார். அவர் அதனை வெட்டியதனால் தான் அந்த இடம் தெளிவாக தெரிந்திருக்கின்றது. அந்த கிளையை வெட்டியவர் இன்னும் சிறையில் இருக்கின்றார். எனவே குற்றம் நிரூபிக்கப்படாத அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்படாத தமிழ் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயப்படுத்தலாம். இவை மனிதாபிமான விடயங்கள். இவற்றை மனிதாபிமான ரீதியாக முன்னெடுக்கலாம்.

நேர்காணல் - ரொபட் அன்டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41