2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் 8 ஆவது ஜனாதிபதித்தேர்தலாகும். இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களிலிருந்து இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பல விசேட அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானது முன்னைய ஜனாதிபதிகளோ, நடைமுறையில் உள்ள பிரதமரோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமையாகும். மேலும் இம்முறை தேர்தலில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி பதவிக்கு 35 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் சிறுபான்மை இனத்தவரின், மதத்தவரின் ஆசிர்வாதத்தை பெற்ற கட்சிகளின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. அவ் இனத்தினது மதத்தினது அபேட்சகர்கள் இருவர் போட்டியிடுவது உண்மையாயினும் அவர்கள் தாங்கள் சேர்ந்த கட்சிகளின் சார்பில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது. மேலும் ஒரேயொரு பெண்மணியும், பௌத்த துறவியும், இராணுவத் தளபதியும் போட்டியிடுகின்றனர்.
இவ்வாறு பல்வேறு விசேட அம்சங்களைக் கொண்ட இந்த ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதை முன்கூட்டியே பலர் கூறினாலும் இறுதி வரை இக்கூற்று எப்படி முடியும் என்று இப்போது கூற முடியாது. ஆகவே நாங்களும் அமைதியுடன் இருந்து இத்தேர்தலை அவதானிப்பதுடன் இறுதியில் எமது வாக்கையும் தவறாமல் அளிக்க வேண்டும். யாருக்கு அளிப்பது என்பது ஒவ்வொரு வாக்காளரின் முடிவில் தங்கியிருக்க வேண்டுமேயொழிய பிறரது வற்புறுத்தலில் தங்கியிருக்க கூடாது என்பதை மனதில் எடுக்க வேண்டும்.
சிறுபான்மை இனத்தவரது மதத்தவரது ஒற்றுமையை பிரதிபலிக்கும் தேர்தலாக அமையப் போகும் தேர்தல் இதுவாகும்
வழக்கமாக எத்தேர்தல்வரினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் பெரும்பான்மையோரும் இதே இன மதத்தைக் கொண்டுள்ள வேறு மாகாணங்களில் வாழும் சிறுபான்மையோரும் ஆகிய இரு பகுதியாரும் ஒரே எண்ணத்துடன் இருப்பதை பல வழிகளில் நாம் காணக்கூடியதாகவிருக்கிறது.
நாட்டில் இன, மதத்துவேசமற்ற ஒரு நிலை நிலவ வேண்டும் என்றும் அதற்கு தமது வாக்கை அளிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளார்கள் என்பதை காணக்கூடியதாயிருக்கிறது. ஆகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அமைதியான தேர்தலாகவும், எதிர்காலத்தின் சுபிட்சத்திற்கு ஆதாரமானதாகவும் அமையும் எனவும் கூறலாம்.
தேர்தல் ஆணையாளர் பொலிஸாரின் நடுநிலைமை
19 ஆவது அரசியலமைப்புச் சட்டதிருத்தத்தின் கீழ் தேர்தல் ஆணையாளருக்கு அவரது கடமையைச் செய்ய பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுசன அபிப்பிராயத்தை பிழையாக திரித்து கூறுவதை தடுத்தும் உண்மையான நிலைகளை எடுத்துக் கூறவும் தேர்தல் ஆணையாளர் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் விடுத்த வேண்டுகோளை அந்நிறுவனங்கள் புறக்கணிக்காது செய்திகளை பிரசுரிக்கின்றன.
ஆயினும் தமது நிறுவனங்களின் நலனையும் அவை கவனித்து செய்திகளை வெளியிடுகின்றன. இது தவிர்க்க முடியாததாகும்.
தேர்தல் ஊர்வலங்கள், கட்அவுட் மற்றும் மின்சார கம்பங்களில் தொங்கவிடும் கட்சிக் கொடிகள் மற்றும் பொதுச் சுவர்களில் காட்சிப்படுத்தப்படும் அபேட்சகர்களின் படங்கள் என்பவற்றையும் கட்டுப்படுத்த ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.
பொலிஸ் மாஅதிபர்
சில காலத்துக்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் சட்டவிதிகளை மீறுகிறவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தாலும் நீண்ட காலத்துக்கு அவர்களை தடுத்து வைக்க அரசியல்வாதிகள் இடமளிப்பதில்லை. தற்போது இந்நிலை மாறியுள்ளதுபோல் தெரிகிறது.
தற்போது தேர்தல் சட்டவிதிகளை மீறுபவர்களை கைது செய்யுமாறும் வழக்குகளை தாக்கல் செய்யுமாறும் பொலிஸ் மாஅதிபர் கட்டளையிட்டுள்ளதால் பொலிஸாரும் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கட்சி பேதமின்றி சட்டத்தை மீறுபவர்களை கைது செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் காலத்தில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறையும் என்பதுடன் மேலும் குறையலாம் என எதிர்பார்க்கலாம்.
ஆகவே இம்முறை வாக்காளர்கள் பயமின்றி தமது வாக்கை தாம் விரும்பிய அபேட்சகருக்கு அளிக்கலாம் எனக்கூற முடியும்.
தேர்தல் தினத்தன்று நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்?
நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் உங்களுக்கு உத்தியோகபூர்வமான தேர்தல் அட்டைகள் கிடைக்கும். அந்த வாக்காளர் அட்டையில் தேர்தல் மாவட்டத்தின் பெயரும் இலக்கமும், வாக்காளரின் பெயர், முகவரி, பதிவு இலக்கம், வாக்கெடுப்பு பிரிவு, வாக்கெடுப்பு மாவட்டம், வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையம், வாக்களிக்கும் திகதியும் நேரங்களும் குறிக்கப்பட்டிருக்கும்.
தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு இவ்வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்பட மாட்டாது.
சில சமயங்களில் இவ்வாக்காளர் அட்டை கிடைக்காமல் இருக்கலாம். கிடைக்காவிட்டால் வாக்காளர் அறிமுக அட்டையுடன் தபால் நிலையத்திற்கு சென்று தபால் அதிபரிடம் விசாரிக்க வேண்டும். அங்கு அவரது வாக்காளர் அட்டை இருப்பின் தபால் அதிபர் அதனை உங்களுக்கு வழங்குவார். வாக்காளர் வந்து கேட்காவிட்டால் அந்த வாக்காளர் அட்டை தபால் நிலையத்திலேயே வைக்கப்பட்டிருக்கும்.
ஒருவரது வாக்காளர் அட்டையை இன்னுமொருவருக்கு வழங்குதல் குற்றமாகும். 6 மாத சிறைத் தண்டனையும் உண்டு.
தபாலில் வாக்காளர் அட்டை கிடைத்தால் அதனை கவனமாக வைத்திருக்க வேண்டும். எங்கே வாக்களிப்பது என்பதை மனதில் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தேர்தல் தினத்தன்று நீங்கள் வாக்களிக்க வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும்போது கட்டாயம் உங்களிடம் உள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை கொண்டு செல்ல வேண்டும். இவ் அட்டை இல்லாத பட்சத்தில் வாக்களிக்க முடியாது என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால் வாக்காளர் அட்டையை நீங்கள் கொண்டு சென்றால் தேர்தல் அதிகாரிக்கு அது உதவியாயிருக்கும்.
அடையாள அட்டை அவசியம்
கட்டாயம் கொண்டு செல்ல வேண்டிய ஆவணம் என்னவெனில் உங்களை அடையாளம் காட்டும் ஆவணமாகும். அவை,
01. தேசிய அடையாள அட்டை
02. கடவுச்சீட்டு
03. சாரதி அனுமதிப் பத்திரம்
04. ஓய்வூதியக்காரராயின் ஓய்வூதிய அட்டை
05. முதியோர் அடையாள அட்டை
06. ஆட்பதிவு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மதகுருமார்களுக்கான அடையாள அட்டை.
07. தேர்தல் செயலகத்தால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டை.
மேலே கூறியவை தவிர வேறு புகைப்படங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. ஆகவே நீங்கள் வாக்களிக்க செல்லும் போது கட்டாயம் மேலேயுள்ள அடையாள அட்டைகளில் ஒன்றை கொண்டு செல்ல தவறக்கூடாது. வாக்களிக்கும் நேரத்திற்குள் வாக்களித்து விட வேண்டும். பெரும்பாலும் காலை 7 மணிமுதல் 4 மணி வரையுமே வாக்களிப்பு நடைபெறுவது உண்டு.
ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வாக்களிப்பது
நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறப்போவது ஜனாதிபதித் தேர்தலாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் முறை ஏனைய பாராளுமன்ற, மாகாணசபை உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்கும் முறையினின்றும் வேறுபட்டது. ஆகவே அதனை தெளிவாக அறிய வேண்டும்.
அரசியலமைப்பின் படி ஜனாதிபதியானவர் மக்களால் தெரிவு செய்யப்படுகிறார். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு முன்னர் தேசாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை. பிரதமரின் சிபார்சின் படியே அவர் தெரிவு செய்யப்படுகிறார். ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு பின்னர் மக்களே ஜனாதிபதியை தெரிவு செய்கின்றனர்.
வாக்களிப்பு நிலையத்திற்கு நீங்கள் சென்று உங்களது அடையாளத்தை நிரூபித்ததன் பின்னர் தேர்தல் அதிகாரி உங்களது பெயர் வாக்காளர் இடாப்பில் இருந்தால் உங்களுக்கு ஒரு வாக்குச் சீட்டைத் தருவார்.
அந்த வாக்குச் சீட்டை பெற்றுக் கொண்டு வாக்கை அடையாளப்படுத்தும் இடத்திற்கு செல்ல வேண்டும். இம்முறை முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதால் வாக்கு சீட்டில் நீங்கள் யாருக்கு வாக்களிக்க உத்தேசித்துள்ளீர்களோ அவரது பெயரை தேட வேண்டும். பெயரை தேட முடியாவிட்டால் அவரது சின்னத்தை தேட வேண்டும். பெயரை அல்லது சின்னத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த வாக்குச் சீட்டில் உள்ள கோட்டுக்குள் நீங்கள் 1 என்ற இலக்கத்தை அடையாளமிட வேண்டும்.
இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பின் ஒருவருக்கே வாக்களித்து விட்டு வாக்குச் சீட்டை பெட்டிக்குள் போடலாம்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் 2, 3 ஆம் தெரிவையும் நீங்கள் அடையாளமிடலாம். உதவியாக நீங்கள் 1 ஐ அளித்த பின்னர் இன்னும் ஒருவருக்கு உங்களது விருப்பு வாக்கை கொடுக்க தீர்மானித்தால் அதனை நீங்கள் விரும்புகின்ற பெயர் உள்ளவரின் கோட்டுக்குள் 2 என எழுத வேண்டும்.
அதேபோல் இன்னும் ஒருவரையும் நீங்கள் அடையாளப்படுத்தலாம். அதாவது 1 ஆவது ஆள் யார் என்று அடையாளப்படுத்திய பின்னர் 2 ஆள் யார் என்று அடையாளப்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொண்டால் அதனையும் அடையாளப்படுத்திய பின்னர் 3 ஆவது ஆள் யார் என்று அடையாளப்படுத்தலாம்.
ஆகவே நீங்கள் 1, 2, 3 என உங்களது விருப்பு வாக்குகளை இம்முறை தெரிவிக்கலாம். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில் 1 ஐ எழுதாமல் 2, 3 என்று மட்டும் எழுதினால் அந்த வாக்குச் சீட்டு செல்லாது போகலாம்.
கட்டாயம்1 எழுதப்பட வேண்டும். அதன் பின்னரே 2, 3 எழுதப்பட வேண்டும்.
இது சிக்கலான விடயம் எனக் கண்டால் நீங்கள் விரும்புகிற ஆளுக்கு x ஒன்றை மட்டும் இட்டு உங்களது விருப்பை தெரிவிக்கலாம்.
மேலும் கவனிக்க வேண்டியதொரு விடயம், 1, 2, 3 க்கு மேல் 4, 5, 6 என்று எழுதியிருந்தால் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியாகாமல் போகலாம்.
ஆகவே ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி மிக முக்கியமாக தெரிய வேண்டிய விடயம் வாக்காளர் தனது வாக்குச் சீட்டில் x இடலாம். அல்லது 1, 2, 3 என அடையாளம் இடலாம் என்பதாகும்.
வாக்கு எண்ணுதலில் யார் ஒருவர் 50+ 1% வாக்கை பெறுகிறாரோ அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் ஏன் 2, 3 என்ற விருப்புரிமை வாக்குகள் அளிக்கப்படுகின்றன என்பதை வாசகர்கள் அறிய வேண்டும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் வெற்றியடைய 50% + 1 வாக்கை பெற வேண்டும். அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் 50% + 1 வீதத்தை ஒருவர் பெறாவிட்டால் அவர் வெற்றி பெற்றவராக கருதப்படமாட்டார். ஆகவே அபேட்சகர் யாரும் 50% வாக்குகளை பெறாவிட்டால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் ஜனாதிபதியும்
1978 ஆம் ஆண்டு மூல அரசியல் அமைப்பில் 30 ஆம் பிரிவு பின்வருமாறு இருந்தது.
30 (1) இலங்கை குடியரசுக்கு ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவரும், ஆட்சித் துறையினதும் அரசாங்கத்தின் தலைவரும் ஆயுதங் தாங்கிய படைகளின் தலைவருமாவார்.
2) குடியரசின் ஜனாதிபதி மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். அவர் ஆறு ஆண்டுகள் கொண்டதொரு தவணைக்குப் பதவி வகித்தல் வேண்டும் என்றும் இருந்தது. இப்பிரிவு 19 ஆவது அரசியலமைப்பின் திருத்தத்தினால் மாற்றப்பட்டுள்ளது.
30 (1) ல் மாற்றமில்லை.
30 (2) மாற்றம் உள்ளது. அதன்படி அத்திருத்தம் பின்வருமாறு அமைந்துள்ளது.
“குடியரசின் ஜனாதிபதி மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டுமென்பதுடன் ஐந்து ஆண்டுகள் கொண்ட ஒரு காலப் பகுதிக்குப் பதவி வகித்தலும் வேண்டும்” என்று மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே தற்போதைய ஜனாதிபதியின் காலமும், இனிவரப்போகிற ஜனாதிபதியின் காலமும் 5 ஆண்டுகளே பதவி வகிக்க முடியும்.
1978 ஆம் ஆண்டு மூல அரசியலமைப்பில் 31 (1) அப்படியேயுள்ளது. ஆனால் 31 (2) ஆம் பிரிவு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அத்திருத்தம் பின்வருமாறு உள்ளது.
“ஜனாதிபதிப் பதவிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் எவரும் அதன் பின்னர் அத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியற்றவராவார்” என்று மாற்றப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டு மூல அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள பதவி வகிக்கும் காலம் இருமுறை என்பதாகும். 19 ஆம் அரசியலமைப்பிலும் பதவி வகிக்கும் காலம் இருமுறை என்பதேயாகும்.
ஆகவே இவ்விடத்தில் எழுகிற கேள்வி என்னவெனில் ஏன் 19 ஆவது அரசியலமைப்பில் மூல அரசியல் அமைப்பில் உள்ள காலப் பகுதியை மீண்டும் கூற வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்பதாகும்.
அரசியல் அமைப்பின் 18 ஆவது அரசியல் சீர்திருத்தத்தில் 1978 ஆம் ஆண்டு மூல அரசியலமைப்பில் இருந்த இரண்டு தடவை என்பது பின்வருமாறு மாற்றப்பட்டது.
1978 ஆம் ஆண்டு மூல அரசியலமைப்பில் கூறியுள்ளபடி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுபவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாதவராக இருக்க வேண்டும் என்பது 18 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் பின்வருமாறு மாற்றப்பட்டது” ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என மாற்றப்பட்டது. ஆகவே அந்த 18 ஆம் அரசியலமைப்பு மாற்றத்தை நீக்கவே 19 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் இது மீண்டும் மாற்றப்பட்டு கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும் போது இறந்தால் என்ன நடக்கும்?
அரசியல் அமைப்பின் 40 (1) அ பிரிவு பின்வருமாறு கூறுகிறது.
“ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக வறிதாகினால் பாராளுமன்றம், ஜனாதிபதி என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையுடையவராய் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். ஜனாதிபதிப் பதவிக்கு சவால் விடுக்கின்ற ஆள் எவரும் பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்” என்கிறது.
1993 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாச மரணமடைந்தார். அவ்விடத்திற்கு அப்போது பிரதமராக இருந்த டி.பி. விஜயதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1994 ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்தார். பின்னர் 1994 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அதில் விஜயதுங்க போட்டியிடவில்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜனாதிபதி இறந்த நேரத்தில் முதலமைச்சர் பதவி வறிதாக இருந்தால் அல்லது முதலமைச்சர் பதிற் கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாராயின் ஜனாதிபதி என்ற பதவியில் சபாநாயகர் பதில் கடமையாற்றுதல் வேண்டும்.
ஜனாதிபதி ஆட்சிக்கு சார்பானதும் எதிரானதுமான கருத்துக்கள் சில
ஜனாதிபதி ஆட்சிக்கு சார்பானதும் எதிரானதுமான கருத்துக்கள் பல. ஆயினும் இக்கட்டுரை நீளுவதால் அவற்றில் சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.
நன்மைகள்
1) இலங்கையில் நிலையானதும் பலமானதுமான ஆட்சி நடைபெற வேண்டுமாயின் நிருவாகம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நலன்களை முக்கியமாக தெரிவிக்கின்ற சட்டத்துறை உறுப்பினர்களின் நலன்களை மட்டும் கவனிப்பதாக இல்லாமல் மக்களின் நலனை கவனிப்பதாக இருக்க வேண்டுமானால் நிருவாகத்திற்கு என ஒரு ஜனாதிபதி இருத்தல் வேண்டும் என்ற தத்துவத்தை ஜனாதிபதி ஆட்சி நிறைவேற்றுகிறது.
2) ஜனாதிபதி பதவிக்கு பொது மக்கள் சகலரும் வாக்களித்து தெரிவு நடை பெறுவதால் ஜனாதிபதி பதவியவர்களை ஒரு குறித்த இனத்தினதும் மதத்தினதும் அல்லது பகுதியினது ஜனாதிபதியாக மட்டும் இருக்க முடியாது. முழு இலங்கைக்கும் பொதுவானவராக கருதப்படுவார். இன, மத ஒற்றுமைக்கு இப்பதவி ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
3) அவசர தீர்மானங்களை எடுக்கவும் அவற்றை செயற்படுத்தவும் சிறு இன மதத்தவரின் கோரிக்கைகளை கவனிக்கவும் ஜனாதிபதி ஆட்சி உதவுகிறது.
தீமைகள்
1) ஜனாதிபதியும் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பொது மக்களால் தெரிவு செய்யப்படுவதால் கட்சி ரீதியில் அத்தெரிவு அமையுமாயின் வெவ்வேறு கட்சியில் சேர்ந்தவர்கள் தெரிபட்டால் நாட்டின் அபிவிருத்திக்கும் மற்றும் செயற் பாடுகளுக்கும் அந்த ஜனாதிபதிமுறை பாதகமாக அமையும்.
2) அரசியலமைப்பின்படி கட்சி ரீதியாக ஆட்சியமைவதால் நாட்டில் குழப்பம் நிலவ இடமுள்ளது.
தொகுப்புரை
இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சகலரும் படித்தறியக் கூடியவாறு எழுதப்பட்டுள்ளது. ஆயினும் உங்களுக்கு தேர்தல் சம்பந்தமாக விநியோகிக்கப்படும் ஆவணங்களை கவனமாக படித்து அதன்படி உங்களது வாக்கை அளிக்க வேண்டும்.
விசேடமாக ஜனாதிபதி தேர்தல் தவிர ஏனைய தேர்தல்களில் நாம் X யிட்டே எமது விருப்பத்தை தெரிவிக்கிறோம். ஆகவே பாமரமக்கள் 1, 2, 3 என எழுதுவது பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் கவனமாக தேர்தல் திணைக்களத்தால் அல்லது வேறு நிறுவனங்களால் வெளியிடப்படும் விபரங்களையும் படித்துப் பார்க்க வேண்டும்.
இம்முறை தேர்தல் மிக முக்கியமானது என எல்லோரும் கூறுகிறார்கள். ஆகவே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நீங்கள் வாக்களிக்க ஒருவர் அல்லது இருவர் கூறுவதை மட்டும் மனதில் எடுக்காமல் பலவற்றையும் படித்து மனதில் எடுத்து வாக்களிக்க வேண்டும் நல்லாட்சிக்கு அதுவே தேவையாகும்.
தேர்தலில் விருப்பு வாக்குகள் பெறும்இடம்
ஜனாதிபதித் தேர்தலில் A, B, C, D என 4 பேர் போட்டிபோடுகின்றனர் என எடுப்போம். தேர்தலில் ஒருவரும் 50% த்திற்கு மேற்பட்ட வாக்குகளை ஒருவரும் முதலாவது கணிப்பில் பெறவில்லை எனவும் எடுப்போம். அவர்களில் A, B யே கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளனர் எனவும் எடுப்போம்.
இச்சந்தர்ப்பத்தில் C, D போட்டியில் இருந்து தவிர்க்கப்படுவார்கள். மற்றைய A, B இருவருமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.
நீக்கப்பட்டவர்களின் வாக்குச் சீட்டுக்களில் (CD யில்) காணப்படுகின்ற இரண்டாது விருப்பு வாக்குகள் வாக்கின் கணிப்பிற்காக மேலே கூறிய A,B யின் வாக்குகளுடன் சேர்க்கப்படும். அப்போதும் AB க்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையாயின் நீக்கப்பட்ட C,D யின் மூன்றாம் விருப்புத் தெரிவுகள், A, B யுடன் சேர்த்துக் கொள்ளப்படும். அப்போதும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் திருவுள சீட்டின் மூலம் ஜனாதிபதியானவர் தெரிவு செய்யப்படுவார். இவ்வாறே ஜனாதிபதி ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார். மேலேயுள்ள முறையிலேயே ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுகிறார்.
இலங்கையில் இவ்வாறு விருப்பு வாக்குகள் சேர்க்கப்பட்டு ஜனாதிபதியாக யாரும் தெரிவு செய்யப்படவில்லை. முதல் வாக்கு கணிப்பிலேயே அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டனர்.
ஆகக் கூடுதலான வாக்கை பெற்றவர் சந்திரிகா பண்டாரநாயக்க ஆவார். அவரது வாக்கு வீதம் 62.2 வீதமாக இருந்தது. ஆகக் குறைந்த வாக்கை பெற்று தெரிவு செய்யப்பட்டவர் மஹிந்த ராஜபக் ஷவாகும். அவரது வாக்கு வீதம் முதல் தடவை 50.4 வீதமாகவும் இரண்டாவது தடவை 50.3 வீதமாகவும் இருந்தது.
கே.ஜீ.ஜோன்
(சட்டத்தரணியும் ஆய்வாளரும் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM