நாட்டில் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் பிரசாரக் கூட்டங்கள் தீவிரமடைய ஆரம்பித்துள்ளன.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நாடளாவிய ரீதியில் சூறாவளிப் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
பிரதான வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கு கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் கொழும்பிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அநுராதபுரத்திலும் கடந்தவாரம் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தாம் தேர்தலில் வெற்றிபெற்றால் எவ்வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.
இவ்வாறு நாட்டின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற சூழலிலும் அரசியல் கட்சிகளினதும் பிரதான வேட்பாளர்களினதும் பிரசாரக் கூட்டங்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ள பின்னணியிலும் நாட்டின் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டிய விடயம் ஒன்று காணப்படுகின்றது.
அதாவது தேர்தல் காலத்தில் எக்காரணம் கொண்டும் யாரும் வன்முறைகளைத் தூண்டும் வகையில் செயற்படக்கூடாது என்பதுடன் எந்தவகையிலும் வன்முறை கலாசாரத்தை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருக்கவேண்டும். தேர்தல் என்பது ஜனநாயக கட்டமைப்பின் மிக முக்கியமான பண்பாகும். இந்தத் தேர்தலூடாகவே மக்கள் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதுடன் தமக்கு தேவையான தமக்கு விருப்பமான தலைவரை தெரிவு செய்கின்றனர். எனவே அந்தத் தேர்தலில் வாக்காளர்கள் சுயமாக முடிவெடுக்கவும் சுதந்திரமான நீதியான முறையில் வாக்களிக்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் வன்முறைகள் மக்களின் தீர்மானங்களிலோ அல்லது தெரிவிலோ அழுத்தம் பிரயோகித்துவிடக் கூடாது. இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் மிகவும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.
தேர்தல் காலம் என்றாலே வன்முறைகள் இடம்பெறுவது வழமையாகிவிட்டது. அண்மைய காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் வன்முறை சம்பவங்களின் பதிவுகள் ஒப்பீட்டு ரீதியில் குறைவாக காணப்படினும் கூட இன்னும் வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. நாட்டின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல்கள் நிறைவடைந்துள்ளதுடன் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரசாரங்களை ஆரம்பித்துள்ள சூழலில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் தகவல் கொடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவில் நிறுவப்பட்டுள்ள பிரிவுக்கு பல முறைப்பாடுகள் வன்முறைகள் தொடர்பில் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலம் ஆரம்பித்து சிறிய காலப்பகுதிக்குள்ளேயே பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது ஆரோக்கியமான விடயமல்ல. எந்தவகையிலும் எந்தவொரு தரப்பும் வன்முறைகளை தூண்டிவிடவோ கையிலெடுக்கவோ கூடாது. வன்முறைகளூடாக தேர்தல் வாக்களிப்பில் அழுத்தம் பிரயோகிக்க முற்படுவது ஜனநாயகத்துக்கு விழுகின்ற பாரிய அடியாகவே கருதப்படுகிறது. வன்முறைகள் ஊடாக ஜனநாயக ரீதியில் எதனையும் சாதிக்க முடியாது என்பதை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வன்முறைகளை பிரயோகிப்பதன் மூலமாக பெறப்படும் வெற்றியானது ஜனநாயக வெற்றியாக அமையாது. அதுமட்டுமன்றி வன்முறைகளை பிரயோகிப்பதனூடாக பெறப்படும் வெற்றியானது நிலைத்த தன்மையை கொண்டிருக்காது என்பதையும் சகல தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். வாக்காளர்கள் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை பார்த்து அவற்றை மதிப்பீடு செய்து அவற்றிலுள்ள சாதக பாதக தன்மைகளை ஆராய்ந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவ்வாறு அந்த மக்கள் தீர்மானம் எடுப்பதற்கு சந்தர்ப்பம் சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். அதற்கான சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மாறாக வாக்காளர்களின் தீர்மானத்தில் வன்முறை நிலைமைகள் தாக்கம் செய்யப்படக் கூடாது. பிரசாரக் கூட்டங்களின்போது அல்லது தேர்தல் காலத்தின் போது எந்தவொரு தரப்பும் எந்தவகையிலும் வன்முறைகளில் ஈடுபட்டுவிடக் கூடாது. அவ்வாறு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது பொதுமக்களுக்கும் அரசாங்கம் மற்றும் தனியார் சொத்துக்களுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தி விடும். இதனால் அப்பாவி பொதுமக்கள் கூட பாரிய பாதிப்புகளை சந்திக்கவேண்டி ஏற்படும். எனவே இவற்றை முழுமையாக தவிர்த்துவிடுவதே ஜனநாயகத்துக்கு ஒரு சிறந்த விடயமாக அமையும். அதனால் ஆதரவாளர்கள் எக்காரணம் கொண்டும் வன்முறைகளில் ஈடுபடக்கூடாது என்பதை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் சரியான முறையில் அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு அறிவுறுத்துவதனூடாகவே வன்முறைகளை தவிர்க்க முடியும். எனவே இந்த விடயத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் பிரதிநிதிகளுக்கும் மிக முக்கியமாக வேட்பாளர்களுக்கும் பாரியதொரு பொறுப்பு இருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது.
அதுமட்டுமன்றி தேர்தல் ஆணைக்குழுவும் இந்த விடயத்தில் மிகவும் செயற்றிறனான முறையில் செயற்பட்டு எங்கும் வன்முறைகள் இடம்பெற்றுவிடாது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கவேண்டியது இன்றியமையாதது. பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்பினூடாகவே வன்முறைகளை தவிர்ப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க முடியும். ஆதலால் இந்த தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு மிகவும் அவசியமானதாகவும் முக்கியமானதாகவும் காணப்படுகிறது.
அதேபோன்று சுயாதீன மற்றும் நீதியான தேர்தல்களை வலியுறுத்துகின்ற சிவில் அமைப்புகளும் வன்முறைகளைத் தவிர்ப்பதில் பாரியதொரு வகிபாகத்தை வகிப்பது அவசியமாகிறது. மக்களுக்கு நீதியானதொரு தேர்தலை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த சிவில் நிறுவனங்கள் தமது பங்களிப்பை சரியான முறையில் வழங்க வேண்டும். யாரும் வன்முறைகளில் ஈடுபடக்கூடாது என்பது தொடர்பான பிரசாரத்தை மிகவும் செயற்றிறனான முறையில் மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கு சுயாதீனத் தேர்தலை உறுதிப்படுத்துவதற்கான அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனால் சுயாதீன மற்றும் நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கான பொது அமைப்புகளுக்கும் இந்த வன்முறைகளை தவிர்ப்பதில் காணப்படுகின்ற பொறுப்பு தொடர்பில் உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது நாட்டில் அண்மைக்காலமாக வன்முறைகளை தடுப்பதில் சுயாதீன தேர்தலை உறுதிப்படுத்தும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோன்று இந்த வன்முறைகளை தடுக்கும் செயற்பாட்டில் நாட்டின் சர்வமதத் தலைவர்களும் மிக முக்கியமான வகிபாகத்தை வகிக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றார்கள். மதத் தலைவர்கள் பொதுவாக மக்களுக்கு வழங்குகின்ற ஆலோசனைகள், அறிவுரைகள் முக்கியமானவை என்பதுடன் அவை பெரிதும் மதிக்கப்படுகின்றன. எனவே தேர்தல் காலத்தில் வன்முறைகள் இடம்பெறாத வகையில் ஒரு சூழலை உருவாக்குவதற்கு சர்வமதத் தலைவர்களும் தமது உயரிய பங்களிப்பை வழங்கவேண்டியது மிகவும் முக்கியத்துமிக்கதாக காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி வாக்காளர்களும் பொதுமக்களும் தாம் எந்தவகையிலும் வன்முறைகளுக்கு உட்படாதவர்களாக இருந்து தமது வாக்குப்பதிவு தொடர்பான தீர்மானத்தை சுயாதீனமாக எடுக்க வேண்டும்.
எது எப்படி நடந்தாலும் இறுதியில் வாக்காளர்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். எனவே எந்தவொரு வகையிலும் வன்முறைகள் ஊடாக அழுத்தத்துக்கு உட்படாமலும் வன்முறைகளை தடுத்து தவிர்ப்பதற்கும் வாக்காளர்களும் தமது தரப்பில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து தரப்பினரும் இந்த விடயத்தில் பொறுப்புடனும் வன்முறைகளை தடுக்கும் உயரிய நோக்கத்துடனும் செயற்படுவதே வன்முறைகளற்ற சுயாதீனமான நீதியான தேர்தலுக்கு வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM