Published by T. Saranya on 2019-10-10 10:55:19
பிரபல சர்வதேச நிறுவனமாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் (Johnson & Johnson) நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் 800 கோடி அமெரிக்க டொலரை அபராதமாக விதித்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத் தயாரிப்புகள் அவ்வப்போது வழக்குகளில் சிக்கி வருகின்றன. அந்த வகையில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்றை பயன்படுத்தியதால் தனது மார்பகங்கள் வளர்ந்ததாகவும், இம்மருந்தை பயன்படுத்தினால் மார்பகம் வளரும் என இந்நிறுவனம் எச்சரிக்கை செய்யவில்லை எனவும் 26 வயதுடைய நிக்கலஸ் மறே என்ற நபர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்துக்கு 800 கோடி டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 144,448 கோடி ரூபாய்) நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
ஆனால் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம், ரிஸ்பெரிடால் மருந்து தொடர்பான தங்கள் தரப்பு ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாகவும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.