தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைகிறது. 6 ஆவது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா. வலுவான எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளது.
தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்ய இம்மாதம் 16 ஆம் திகதி தேர்தல் இடம்பெற்றது.
அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர்ந்த ஏனைய 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த தேர்தலில் 4 கோடியே 28 இலட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியது.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலைவரப்படி அ.தி.மு.க . கூட்டணி 131 தொகுதிகளிலும் தி.மு.க. 100 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
அதிமுக 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் திமுக 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 86,474 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறை முதல்வரானார். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த அவருக்கு ஆதரவாக மக்கள் பெருவாரியாக வாக்குகளை வாரி வழங்கினர்.
அப்போது அவர் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றார். அதன் பின்னர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி என மாறி மாறி இரண்டு கட்சிகளும் ஆட்சிப் பீடத்தில் இருந்து வந்தன.
இந்நிலையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வரலாற்றை மீள்பதிவு செய்திருக்கிறது. 2 ஆவது முறையாக ஜெயலலிதா ஆட்சியை தக்க வைத்துள்ளார்.
எம்.ஜி.ஆருக்குப் பின் தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி செலுத்தும் பெருமையை ஜெயலலிதா தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வலுவான எதிர்க்கட்சியாக திமுக இடம் பிடித்துள்ளது இத்தேர்தலின் மற்றுமொரு சாதனை என்றே கூற வேண்டும்.
கடந்த 2011 இல் திமுக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது, தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. 2006-ல் அதிமுக கூட்டணி 69 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக இருந்தது.
2001இல் திமுக கூட்டணி 37 இடங்களுடன் எதிர்க்கட்சியாக இருந்தது. அதற்கும் முன்னதாக 1996 இல் பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோல்வியடைந்தார். ரஜினிகாந்த் திமுகவுக்கு ஆதரவாக செய்த பிரச்சாரம் அத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிமுக பெரும் சரிவை சந்தித்தது.
இப்படி தமிழக சட்டப்பேரவையின் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்த கட்சிகள் சொற்ப அளவிலான தொகுதிகளை மட்டுமே தன் வசம் வைத்திருந்த நிலையில் ஒரு வரலாற்றுச் சாதனை என்று சொல்லும் அளவுக்கு திமுக கூட்டணி இத்தேர்தலில் 98 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இது அத்தனையும் வெற்றியாக மாறும் நிலையில் வலுவான எதிர்க்கட்சி என்ற மற்றுமொரு சாதனையை நிகழ்த்துவது உறுதி.
இந்தத் தேர்தலில், முதன்முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாமக கல்வியும், மருத்துவ சேவையும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. அடுத்ததாக வந்த திமுக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு ஏதும் இல்லை.
எல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் கடைசியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக. ஏற்கெனவே, எதிர்பார்க்கப்பட்டது போலவே இலவச அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.
அம்மா கைபேசி, மகளிருக்கு 50% மானியத்தில் ஸ்கூட்டர் என்ற இலவச அறிவிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 4 மணி நிலைவரப்படி அதிமுகவுக்கு 41 வீதமும் திமுகவுக்கு 31.3 வீதமும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 6.6 வீதமும் பாமகவுக்கு 5.02 வீதமும் பாஜகவுக்கு 2.8 வீதமும் தேமுதிகவுக்கு 2.3 வீதமும் மதிமுகவுக்கு 0.9 வீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM