முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவையும் மீறி அடாத்தாக கொலம்பே மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையும், அந்த சந்தர்ப்பத்தில் புத்த பிக்குகள் நடந்து கொண்ட அடாவடித்தனச் செயற்பாட்டையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களின் அமையம் மற்றும் அவைத்தலைவர் இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது,
உயிரிழந்த மேதாலங்கார தேரர் நீராவியடிப்பிள்ளையார் கோவில் ஆலயப் பகுதியில் அடாத்தாக விகாரை ஒன்றை அமைத்து அமைதிக்குப் பங்கமாகச் செயற்பட்டவர். இந்த இடத்தில் விகாரை இருந்தது என்ற கூற்றை இனவாத தொல்பொருட் திணைக்களப்பணிப்பாளரே மறுதலித்துள்ளார்.
உயிரிழந்த ஒருவரின் உடலை அமைதியாகத் தகனம் செய்வதே மானிட தர்மம். ஆனால் அங்கு வந்த பிக்குகளோ அதனை வைத்து சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வன்முறை மூலமாக நிலைநிறுத்த முயன்றுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அத்தேகலகொட ஞானசார தேரரும் நேற்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாயிருந்தபொழுதே நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்படியிருந்தும் அவர் இந்த அடாத்தான உடல் தகனத்தில் முன்னின்று கலந்து கொண்டுள்ளார். இந்தமுறையும் அவர் நீதிமன்றத்தை அவமதித்தே உள்ளார். சட்டநியாயப்படி இவருக்கெதிராக மீண்டுமொரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படுவதே முறையான சட்ட ஒழுங்கு பராமரிப்பு செயற்பாடாகும்.
ஆனால் இந்த நாட்டு நீதித்துறை இவ்வாறு செயற்படாது என்ற துணிச்சலிலே தான் அவரும் அவருடன் சேர்ந்து இயங்கும் பிக்குகளும் சட்டத்தை தமது கைகளில் எடுத்துக்கொண்டு செயற்படுகின்றனர்.
இந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் எவரும் பணத்துக்காக வழக்காடவில்லை. அவர்கள் நீதிக்காக வாதாடியவர்கள். அவ்வாறு வாதாடிய சட்டத்தரணியைப்பார்த்து இந்த நாட்டில் பிக்குகளுக்குத்தான் முன்னுரிமை என்பது உனக்குத் தெரியாதா? என்று இறுமாப்புடன் ஒரு பிக்கு கேட்கிறார். அவரையும் ஏனையோரையும் தாக்கியுமுள்ளனர். பிக்குகளை எவரும் எச் சந்தர்ப்பத்திலும் அவமதிக்கவில்லை.
நாம் அறிந்தவரையில் பிக்குகளிற்கு சட்டத்திற்கு மேலான அதிகாரமோ, முன்னுரிமையோ இல்லை என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். மதத்தலைவர்களை மதிக்கும் பண்பு கொண்டவர்கள் தமிழர்கள். அதை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு மேலாகத் தாங்கள் தான் மேம்பட்டவர்கள், மேலானவர்கள் என்று எவரும் கூறிவிட முடியாது.
நேற்று அரங்கேற்றப்பட்ட அடாவடித்தனம் அப்பட்டமான சட்டமீறல் என்பதால் இது சம்பந்தமான காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என வலியுறுத்தி நிற்கின்றோம் என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM