புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் தகனம் செய்ய அறிவுறுத்திய நீதிமன்றம், பிக்குவின் சமாதி அமைப்பதற்கு தடை விதித்து கட்டளையிட்டது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை காலமானார்.
அவருடைய பூதவுடலை முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.
தகவலின் பிரகாரம் நேற்றுமுன்தினம் இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பிள்ளையார் ஆலயத்தைச் சேர்த்தவர்கள், பௌத்த பிக்குவின் உடலை இந்து ஆலயத்திற்கு அருகில் தகனம் செய்வது இந்து மதத்தை அவமதிக்கும் செயற்பாடு எனவும் அதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியின்மை ஏற்பட சந்தர்பங்கள் உள்ளமையால், முல்லைத்தீவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்தனர்.
அதுதொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர்.
நிரந்த நீதிவான் விடுப்பில் இருந்தமையால் பதில் நீதிவான், இன்று திங்கட்கிழமை வரை பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் புதைக்கவோ, தகனம் செய்யவோ முடியாது என இடைக்காலக் கட்டளை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் வழக்கு நிரந்தர நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்தனர். இதன் பிரகாரம் வழக்கை விசாரித்த நீதிமன்று மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
UPDATE
இந்த நிலையில் நீதிமன்றின் உத்தரவு வெளியாக முன்னர் நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான கேணியில் பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கான வேலையை ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து முன்னெடுத்த நிலையில் நீதிமன்றின் தீர்ப்புடன் நீராவியடி ஆலய பகுதிக்கு சென்று பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்யும் இடத்தை அடையாளம் காட்ட சென்ற சட்டத்தரணிகளுடன் தர்க்கம் புரிந்த பிக்குகள் உடலை வேறு எங்கும் எரிக்க முடியாது ஆலயத்துக்கு சொந்தமான கேணியில் மாத்திரமே எரிக்க முடியும் என தெரிவித்து ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் உயிரிழந்த பிக்குவின் உடலத்தை நீதிமன்றின் தீர்ப்பையும் மதிக்காது எடுத்துச்சென்று நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான புராதன தீர்த்த கேணியில் தகனம் செய்தனர்.
இதனால் நீதிமன்றின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் மக்கள் நீதியை மதிக்காது ஆலய வளாகத்திலேயே உடலம் எரிக்கப்பட்டதற்காக கண்ணீர் விட்டு கதறியழுத்தனர் . நீதிமன்றின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் உடலத்தை நீதிமன்று காட்டிய இடத்துக்கு புறம்பான இடத்தில் எரிப்பதனை வேடிக்கை பார்த்ததோடு தகனம் முடியும் வரை பூரண பாதுகாப்பையும் வழங்கியிருந்தனர் .
மேலும் நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்ற சட்டதரணிகள் மீதும் பௌத்த பிக்குகள் தாக்குதல்களை மேற்கொண்டமையை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டதரணிகள் அனைவரும் இடை நேரத்துடன் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டனர் .
இதனால் நீதிமன்றின் பணிகள் யாவும் மதியத்துடன் கைவிடப்பட்டன . சட்டதரணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தொடர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட போவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர் .
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான சட்டதரணிகளான சுகாஸ் , மணிவண்ணன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை பதிவுசெய்துள்ளனர் .
மேலதிக செய்திகளுக்கு ;-
01 ;- நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்
02 ;- பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி ; தடை செய்யக் கோரி பொலிஸில் முறைப்பாடு!
03 ;- நாளை வரை பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை
04 ;- நீராவியடி பிள்ளையார் ஆலய பௌத்த பிக்கு விவகாரம் ; ஞானசார தேரர் நீதிமன்றுக்கு விஜயம்!
05 ;- பெளத்த பிக்குவின் இறுதி கிரியை ; நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM