தமிழ் மக்கள் அணிதிரண்டு தமது நிலைப்பாட்டையும் பிரச்சினைகளையும் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்ற அரசியல் தேவையை தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல் குழுக்களும் உரிய முறை யில் உணரவில்லை என்பதையே இந்தக் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளிப்படுத்தியிருந்தன.
ஜனாதிபதித் தேர்தலை நாடு எதிர்கொண்டுள்ள சூழலில் தமிழ்த் தரப்பு அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். தமிழ் மக்களின் அரசியல் வெளிப்பாடு என்ற பொது நிலைப்பாட்டில் இந்த முக்கிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நகர்வாக இலங்கையிலும் புலம் பெயர் தளத்திலும் நடந்தேறியுள்ள எழுக தமிழ் நிகழ்வு முக்கிய படிப்பினையையும் வெளிப்படுத்தியுள்ளது.
தமிழர் தரப்பு அரசியலின் கொள்கைநிலை வெளிப்பாடாக, இந்த நிகழ்வு பொது வெளியில் கருதப்படத்தக்க வகையில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழ் அரசியலின் பங்காளிகளான அனைத்து அரசியல் சக்திகளும் இதில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். ஆனால், கட்சி அரசியல் மாயையிலும், தேர்தல் அரசியல் மோகத்திலும் மீட்சி பெற முடியாமல் மூழ்கிப் போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல் குழுக்களும் எழுக தமிழுக்கு அரசியல் சாயம் பூசி அதனை மழுங்கடிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன.
இந்த முயற்சிகளை முறியடித்து எழுக தமிழ் நிகழ்வை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் வெளிப்பாட்டுக் குரலாக வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குத் தமிழ் மக்கள் பேரவை மிகத் தீவிரமாகச் செயற்பட்டிருந்தது.
நேர் முரணான நிலைமையில் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட பின்னணியில் வெற்றி வெற்றி என்ற நிலையில் எழுக தமிழ் நடந்து முடிந்துள்ளது என்றே கூற வேண்டும்.
எழுக தமிழைப் புறக்கணித்தவர்களும், அரசியல் காரணங்களுக்காக எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாக அரசியல் குத்துக்கரணம் அடித்தவர்களும் விரும்பிய வண்ணம் பெரிய அளவில் இந்த நிகழ்வு இடம்பெறவில்லை. சில ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்ததன் மூலம் பலர் அதனைப் புறக்கணித்துவிட்டதாக இவர்கள் திருப்தி கொண்டிருக்கலாம். மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அந்த வகை யில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதாகக் கருதலாம்.
வடக்கு, கிழக்குப் பிரதேச அளவில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் தமிழ் மக்கள் பேரவை நடத்திய இந்த நிகழ்வில் எதிர்பார்த்த அளவில் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ். நகரில் வந்து குவிந்தமையும், யாழ்ப்பாணத்தில் மழை பெய்யாமையும் தமிழ் மக்கள் பேரவைக்கு சாதகமான விடயங்களாகும். இந்த வகையில் எழுக தமிழ் 2019 சிறப்பாக இடம்பெற்றிருந்தது. பேரின அரசியல் சக்திகளுக்கும் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய குரல்கள் சிறப்பாக ஒலித்துள்ளன. அந்த வகையில் இது எழுக தமிழ் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே கொள்ள வேண்டும்.
ஆக எழுக தமிழ் நிகழ்வை நடத்தியவர்களுக்கும், அதனை எதிர்க்கும் நோக்கில் புறக்கணித்தவர்களுக்கும் வெற்றி வெற்றி என்ற வகையில் முடிவடைந்துள்ளது. அந்த நிகழ்வு தந்துள்ள படிப்பினையை தமிழ் அரசியல் சக்திகள் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது முக்கியம்.
எழுக தமிழின் முயற்சிகள்
எழுக தமிழின் பிரகடனம் ஏழு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் யுத்தத்தின் பின்னர் பத்து வருடங்களாகத் தொடரும் தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளை மையப்படுத்தி இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் இந்த நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
சிங்கள பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்துபயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்கு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி விடுதலை செய்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நியாயமான தீர்ப்பு வேண்டும்.
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து சர்வதேசமே இலங்கையில் தமிழர் மீதான இன அழிப்பு விசாரணையை நடத்து என்ற கோரிக்கைகளையே எழுக தமிழின் பிரகடனம் இலங்கை அரசிடமும் சர்வதேசத்திடமும் முன்வைத்துள்ளது.
இந்த நிகழ்வில் முக்கிய உரையாற்றிய முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தியாவும் சர்வதேசமும் இலங்கை விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த வகையில் எழுக தமிழ் இந்தியாவினதும், சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்க முனைந்துள்ளது. அதேவேளை, எழுக தமிழின் ஊடாக இணைந்த தமிழ் மக்களின் கொள்கை ரீதியான அரசியல் திரட்சி தேர்தலுக்குத் தயாராகி வருகின்ற தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் கவ னத்தைத் தம் பக்கம் திருப்புவதற்கு முயன்றிருக்கின்றது.
இருப்பினும் எழுக தமிழ் நிகழ்வில் எதிர்பார்த்த அளவில் மக்கள் கலந்து கொள்ளாமையும், அந்த நிகழ்வையொட்டி விடுக்கப்பட்டிருந்த கடையடைப்பு மூலமான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையும் பிசுபிசுத்துப் போன நிலைமையும் இந்த நிகழ்வு ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியிருப்பதாகத் தெரிகின்றது.
எழுக தமிழின் இந்த முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றன என்பதை உடனடியாக உய்த்துணரவோ தேடி அறியவோ முடியாமல் உள்ளது. ஏனெனில் இலங்கையிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள இடங்களிலும் இடம்பெற்றுள்ள எழுக தமிழ் நிகழ்வு குறித்த எதிர் வினைகள் அல்லது அது தொடர்பான கருத்துகள் இநதியாவிடம் இருந்தோ அல்லது சர்வதேசத்திடம் இருந்தோ உடனடியாக வெளியாகவில்லை. இந்த நிகழ்வு குறித்த செய்திகள் உரிய அளவில் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியிருக்கக் கூடும். இதுவும் இந்த நிகழ்வு குறித்த கருத்துகள் வெளியாரிடம் இருந்தும் வெளிநாடுகளிடம் இருந்தும் உடனடியாக வெளியாகாமைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
சூழல்
ஜனாதிபதித் தேர்தலுக்கு தென்னிலங்கைக் கட்சிகளும், அரசியல் சக்திகளும் சுறுசுறுப்போடு தயாராகிக் கொண்டிருக்கின்ற ஒரு நிலைமையில் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. தேர்தலை இலக்காகக் கொண்டு தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வட பகுதி மக்களின் வாக்குகளைக் குறி வைத்து வட மாகாணத்துக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எழுக தமிழ் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள பிரச்சினைகளின் வீரியம், அவற்றின் தாக்கம் என்பவற்றை முழுமையாக அறிந்தவர்களாக அவர்கள் தமது பிரசாரத்தை முன்னெடுக்கவில்லை. அவற்றை அறிந்திருந்தாலும், அறியாதவர்களாக அல்லது அபிவிருத்திச் செயற்பாடுகளே பிரச்சினைகளைத் தீர்க்க வல்லவை என்ற கருத்தியல் கொண்டவர்களாக அவர்கள் செயற்படுகின்றார்கள்.
தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதை மட்டுமே அவர்கள் இலக்காகக் கொண்டிருக்கின்றார்கள். பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை கவர்ச்சி கரமாக முன்வைத்து தமது பிரசாரங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள். பிரச்சினைகளின் ஆழத்தையும், பாதிக்கப்பட்ட மக்கள் மீதான அவற்றின் தாக்கத்தையும் உணராத நிலையிலேயே இந்தக் கருத்துகளும் வாக்குறுதிகளும் அமைந்திருக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரபூர்வ அறிவித்தலுக்கு முன்பே, தன்னைத்தானே ஜனாதிபதி வேட்பாளராகக் கருதி மக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டி வருகின்ற சஜித் பிரேமதாச தேர்தலில் வெற்றி பெற்றால் ஆறு மாதங்களில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாகக் கூறியுள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரண்டு வருடங்கள் தேவை என்று சஜித் பிரேமதாச சார்ந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகிய கோத்தபாய ராஜபக் ஷ, தான் ஓர் இனவாதியல்ல என்பதை இந்தத் தேர்தலின் மூலம் நிரூபிக்கப் போவதாகக் கூறியுள்ளதுடன், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என வாக்குறுதியளித்துள்ளார்.
மொத்தத்தில் தெளிவற்ற ஓர் அரசியல் சூழலையே ஜனாதிபதித் தேர்தல் களம் கொண்டிருக்கின்றது. இதுவரையில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடியவர்களாக இல்லை. இந்தத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலேயே கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகின்றது. ஆனால், இதில் மற்றுமொரு முக்கிய பாத்திரமாகக் கருதப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராகத் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்ற சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற ஆளுமையைக் கொண்டிருக்கின்றாரா என்று சாதாரண தமிழ் மக்கள் மத்தியிலும் சந்தேகம் நிலவுகின்றது.
மீட்சிக்குரிய வழிகளைக் காணவில்லை
இத்தகைய சூழலில் தமிழ்த் தரப்பு அரசியலின் தலைமை வலிமையும் செயல் வல்லமைக்கான வீரியமும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால் அத்தகைய தலைமையைக் காண முடியவில்லை. எழுக தமிழ், தமிழ் மக்களை அணி திரட்டி, தமிழ்த் தரப்பின் திரட்சியை வெளிக்காட்ட முற்பட்டிருக்கின்ற போதிலும், அங்கேயும் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஈடுகொடுக்கத்தக்க ஆளுமை மிக்க தலைமை இல்லை என்பது வெளிப்பட்டிருக்கின்றது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக்கொண்ட ஒரு தலைமை அவசியம் என்ற அரசியல் தேவை கடந்த பத்து வருடங்களாக தமிழர் தரப்புக்கு உணர்த்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆளுமை மிக்க தலைமையில் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், சாத்வீக வழியிலான போராட்டங்களை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆளுமை மிக்க அரசியல் தலைமை அமையவில்லை.
இந்தக் கசப்பான உண்மையை கடந்த பத்து வருடங்களும் அனுபவ ரீதியாகத் தமிழ் மக்களுக்கு உணர்த்தியிருக்கின்றன. யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் அரசியலில் ஏற்பட்டிருந்த தலைமைக்கான வெற்றிடத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிரப்பியிருந்தது. தமிழ் மக்களும் மிகுந்த நம்பிக்கையோடு அதன் கீழ் அணி திரண்டிருந்தனர்.
இருப்பினும் இறுக்கமான ஒரு கட்டமைப்பைக் கொண்ட ஓர் அரசியல் அமைப்பாக அது பரிணமிக்கத் தவறி விட்டது. ஆயுத மோதல்கள் முடிவடைந்த பின்பும், ஒரு மௌன யுத்தத்தின் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களின் அரசியல் மீட்சிக்குரிய உறுதியான அரசியல் வழிகாட்டல்
களையும் அரசியல் வழித்தடத்தையும் கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகவும், தமிழ்த் தரப்பு அரசியலில் செல்வாக்குப் பெற்ற சக்தியாகவும் திகழ்ந்தது, திகழ்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால், கூட்டமைப்பு தேர்தல் அரசியலிலும் கட்சி அரசியலைக் கட்டியெழுப்புவதிலும் காட்டிய அக்கறையும் கரிசனையும், தமிழ்த்தரப்புக்கான ஆளுமை மிக்க தலைமையைக் கட்டியெழுப்பத் தவறிவிட்டது. ஆளுமையும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, அவற்றைப் படிப்படியாகக் குறைக்கத்தக்க செயல் வல்லமையும் கொண்ட ஓர் அரசியல் தலைமையை உருவாக்குவதற்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முடியாமல் போய்விட்டது.
அரசியல் சோகம்
தேர்தலில் வெல்ல வேண்டும் நாடாளுமன்ற அரசியலில் பலம் மிக்கதாகத் திகழ வேண்டும் என்ற கட்சி அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தப்பட்டதே தவிர தீர்க்கதரிசனம் மிக்க அரசியல் வழிமுறைகளில் தமிழ் மக்களை வழிநடத்துவதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும் இராஜதந்திர ரீதியில் தீர்க்க தரிசனம் மிக்க வழிமுறைகளில் பேரின அரசியல் சக்திகளுடனான அரசியல் தொடர்புகளை கூட்டமைப்பு மேற்கொள்ளவில்லை. எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்த மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கத்தை உறுதியாக எதிர்கொண்டிருந்த போதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்தக்க வகையில் அதனை வளைத்து நெளித்துச் செயற்படச் செய்ய முடியவில்லை.
தென்னிலங்கையின் பொது அமைப்புகள், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து எதேச்சதிகாரப் போக்கில் சென்ற மஹிந்த ராஜபக் ஷவை 2015 தேர்தலில் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய போதிலும், நல்லாட்சி அரசாங்கத்திலும் கூட்டமைப்பினால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.
நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி பல விட்டுக்கொடுப்புகளைச் செய்திருந்த போதிலும், அதற்கு ஈடாக சிறிய அளவிலான பிரச்சினைகளைக் கூட தீர்த்து வைப்பதற்குப் புதிய அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க முடியாமல் போயுள்ளமை மிக மோசமான அரசியல் சோகமாகும்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும், ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு காண முடியும் என்ற அதீத நம்பிக்கையுடன் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி அரசாங்கத்தை நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களுடைய அதிருப்தியைச் சம்பாதிப்பதற்கே வழிவகுத்திருந்தது.
கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழக்கத்தக்க நிலைமைகளுக்குள் தமிழ் மக்களைத் தள்ளிய நல்லாட்சி அரசாங்கம் தங்களையும் ஏமாற்றி விட்டது, தாங்களும் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என்று கூட்டமைப்பின் தலைமையே பகிரங்கமாகக் கூறும் அளவுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் நிலைமைகள் மோசமடைந்தமை மிக மிக மோசமான மற்றுமொரு சோகமாகும்.
நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் மட்டுமல்ல நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைகளை உருவாக்கி உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானத்துக்கு மேல் தீர்மானங்களை நிறைவேற்றி அரசாங்கத்தை வழிநடத்திய ஐ.நா.வும் சரி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் அதன் அங்கத்துவ நாடுகளைக் கொண்ட சர்வதேசமும் சரி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய நடைமுறைச் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இதுவும் கவலைக்குரியதே.
எழுக தமிழ் தந்துள்ள படிப்பினை
இத்தகைய பின்னணியில்தான் ஜனாதிபதித் தேர்தலும் அடுத்ததாகப் பொதுத் தேர்தலும் நடத்தப்பட உள்ளன. அதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாத அமர்வும் ஆரம்பமாகியிருந்தது. உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் மிக்க இத்தகையதோர் அரசியல் சூழமைவிலேயே தமிழ் மக்களின் ஒன்றிணைந்த குரலை ஒலிக்கச் செய்வதற்கான எழுக தமிழ் நிகழ்வை தமிழ் மக்கள் பேரவை அரங்கேற்றியுள்ளது.
பல்வேறு சிரமங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் கடுமையான விமர்சனங்களுக்கும் மத்தியில் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான திரட்சியை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்திருந்தது. அதில் அங்கம் வகிக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட செயற்பாடாக தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட்டிருந்தன.
எழுக தமிழ் நிகழ்வின் ஊடாக ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி என்பன தேர்தல் கால அரசியல் இலாபம் அடைய முற்பட்டிருப்பதாகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கண்டனங்களும் வெளியிடப்பட்டன.
தமிழ் மக்கள் அணிதிரண்டு தமது நிலைப்பாட்டையும் பிரச்சினைகளையும் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்ற அரசியல் தேவையை தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல் குழுக்களும் உரிய முறையில் உணரவில்லை என்பதையே இந்தக் கண்டனங்களும் விமர்சனங்களும் வெளிப்படுத்தியிருந்தன.
ஜனாதிபதித் தேர்தல் நிலைமைகளும், அடுத்து வரவுள்ள பொதுத் தேர்தல் கள நிலைமைகளும் தமிழ்த்தரப்புக்கு பெரும் சவால் மிகுந்த அரசியல் நிலைமைகளை உருவாக்க வல்லன என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்தத் தேர்தல் கால அரசி யல் சவால்களைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்ததோர் அரசியல் சக்தியின் ஊடாகவே எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இந்த அரசியல் யதார்த்தத்தை எழுக தமிழ் பேரணி ஒரு படிப்பினையாக ஆழமாக உணர்த்தியுள்ளது. இதனை தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் உணர்ந்து செயற்பட வேண்டியது அவசி யம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM