ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது அணியை தோற்கடிக்கச் செய்வதற்காகவே திட்டமிட்டு இழுபறியான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆகவே ஐ.தே.க தாமதிக்காது வேட்பாளரை பெயரிட வேண்டும். இந்த விடயத்தில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது என்று பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவதற்கான பணிகள் எவ்வளவு தூரம் நிறைவடைந்துள்ளன?
பதில்:- ஆகஸ்ட் ஐந்தாம் திகதி ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கியிருந்தோம். அத்துடன் அரசியல் புரட்சி ஏற்பட்டதன் பின்னர் ஜனநாயக கட்டமைப்புக்களைக் கொண்ட அனைவரும் பங்கேற்கவல்ல பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்து மே முதலாம் திகதி அறிவிப்பதற்கு முனைந்திருந்தோம். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் கூட்டணி அறிவிப்பினை ஆகஸ்ட் ஐந்தில் வெளியிடுவதென தீர்மானித்திருந்தோம்.
இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியில் கூட்டணி அறிவிப்பினை விடுப்பதற்கு முன்னதாக வேட்பாளரை அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டால் முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக அந்த நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் கூட்டணி தொடர்பில் சஜித் தரப்பின் சார்பில் அஜித் பெரேரா, சுஜீவ சேரசிங்க ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை கவனத்தில் எடுத்து கலந்துரையாடினோம்.
அதன்பிரகாரம், கடந்த 24ஆம் திகதி கூட்டணி சம்பந்தமாக பங்காளிக்கட்சித் தலைவர்களாகிய நாம் இணக்கப்பாட்டினை எட்டியிருந்தோம். எனினும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் கடந்த 31ஆம் திகதிக்கு முன்னதாக வேட்பாளர் மற்றும் கூட்டணி பொதுச்செயலாளர் தொடர் பில் எமக்கு அறிவிக்கப்படும் என்றும் கபீர் ஹாசிம் அறிவித்திருந்தார்.
கூட்டணியின் யாப்பு ஜனநாயகமாக உள்ளதோடு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் யாப்பின் பிரகாரம் ஐ.தே.கவினால் வேட்பாளரின் பெயர் முன்மொழியப்பட்டு அது கூட்ட
ணித்தலைவர்களின் அங்கீகாரத்தினைப் பெற வேண்டும். தற்போது வேட்பாளரின் பெயரை ஐ.தே.கவினுள் இறுதி செய்வதில் இழுபறியான நிலைமைகள் காணப்படுகின்றன. இதனால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கேள்வி:- இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில் பரந்துபட்ட கூட்டணி சாத்தியமாகுமென்று கருதுகின்றீர்களா?
பதில்:- சர்வாதிகாரத்தினை விரும்பும் ஒருதரப்பு கோத்தாபய வினை வேட்பாளராக அறிவித்துள்ளது. மறுபக்கத்தில் ஜே.வி.பி
அநுரகுமார திஸாநாயக்கவை முன்னிறுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் ஐ.தே.க உள்ளிட்ட பரந்துபட்ட கூட்டணியின் வேட்பாளரும் விரைந்து தமது வேட்பாளரை அறிவிக்க வேண்டும். மாறாக இழுபறியான நிலைமைகள் தொடர்வதானது எமது அணிக்கு தேர்தல் தோல்வியையே பெற்றுத்தரும். எமது அணியை தோற்கடிக்கச் செய்வதற்காகவே இவ்வாறான இழுபறியான நிலைமைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று கருதுகின்றேன். ஆகவே ஐ.தே.க நிலைமைகளை புரிந்துகொண்டு விரைந்து வேட்பாளர் தொடர்பிலான இறுதி முடிவினை எடுக்க வேண்டும். அதனை நாம் வலியுறுத்தியுள்ளோம்.
கேள்வி:- ஐ.தே.கவில் பிரதமர் ரணில், சபாநாயகர் கரு, அமைச்சர் சஜித் ஆகியோரின் பெயர்கள் கலந்துரையாடப்படுகின்ற நிலையில் இந்த நபர்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய தனித்து நிலைப்பாடுகள் எதனையும் எடுத்துள்ளதா?
பதில்:- இல்லை. ஐ.தே.க முதலில் தனது வேட்பாளரை இறுதி செய்து கூட்டணித்தலைவர்களின் அங்கீகாரத்திற்காக முன்மொழிகின்றபோது எமது நிலைப்பாட்டினை பகிரங்கப்படுத்துவோம். அதற்கு முதல் எம்மால் எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாதுள்ளது.
கேள்வி:- தாங்கள் பங்கேற்றுள்ள கூட்டணிக்குள் குழப்பங்கள் நீடிக்கின்ற நிலையில் சுதந்திரக்கட்சியின் 68ஆவது மாநாட்டில் பங்கேற்றமை பேசுபொருளாகியுள்ளதே?
பதில்:- சுதந்திரக்கட்சிக்கும் எமக்கும் எவ்விதமான முரண்பாடுகளுமில்லை. எம்முடன் அவர்கள் நட்பு ரீதியாக தற்போதும் உள்ளனர். அதன் அடிப்படையிலும், நாட்டின் பிரதான கட்சியின் தேசிய மாநாடு என்ற அடிப்படையிலும் எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று பிறிதொரு கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருந்தேன்.
கேள்வி:- 2020இல் சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி அமையும் என்று ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் தங்கள் தரப்புடனான நட்பும் ஐ.தே.கவினுள் நீடிக்கும் முரண்பாடுகளும் அக்கூட்டணியில் பங்கேற்பதற்கான கலந்துரையாடல்களுக்கு வழிசமைக்குமா?
பதில்:- அவ்வாறு உடனடியாக கூற
முடியாது. எனினும் எதிர்கால நிலைமைகளை பொறுத்தே எமது தீர்மானங்கள் அமையும். சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றபோது சுதந்திரக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவே தவிர பொதுஜன பெரமுனவுடன் எந்தவொரு கலந்துரையாடல்களுக்கும் நாம் செல்லப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலொன்றுக்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவா?
பதில்:- எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப்போட முடியாது. ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறான முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. டிசம்பர் 8ஆம் திகதி இந்த நாட்டில் புதிய ஜனாதிபதி இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டம் இருஅதிகார மையங்களை உருவாக்கியுள்ளதாகவும் அடுத்த ஆட்சியில் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்றும் முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகள் வலியுறுத்துகின்றனரே?
பதில்:- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் சர்வசன வாக்கெடுப்பு அவசியமற்றது. அனைத்து அதிகார விடயங்களும் 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்டாகிவிட்டது. அதற்காகத்தான் 2015இல் ஜனாதிபதி மைத்திரிக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலான பதவியில் நீடிப்பதற்காக அல்ல.
கேள்வி:- 1994ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் அதனை முழுமையாக நீக்கி வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற முறைமையை அடுத்துவருகின்ற குறுகிய காலத்திற்குள் ஸ்தாபிப்பதற்கு வாய்ப்புகள் உண்டா?
பதில்:- அம்முறைமை முழுமையாக நீக்கப்படுவதென்றால் சர்வசன வாக் கெடுப்பு அவசியமாகின்றது. தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை.
கேள்வி:- எதிர்வரும் தேர்தலில் நிறைவேற்று அதிகார முறைமையை முழுமையாக ஒழித்தல் என்ற விடயத்திற்கு தேர்தல் அறிக்கையில் முதன்மைத்தனம் வழங்கப்படுமா?
பதில்:- அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். எனினும் நிறைவேற்று அதிகாரம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தினை நாட்டு மக்கள் கொண்டிருக்கவில்லை.
கேள்வி:- தமிழ் மக்கள் கொண்டிருக்கின்ற கசப்பான அனுபவங்கள் தென்னிலங்கை தலைவர்கள் மீது எவ்வாறு தொடர்ந்தும் நம்பிக்கை கொள்வது என்ற மனநிலையை இயல்பாகவே ஏற்படுத்துகின்றதல்லவா?
பதில்:- ஆம், தமிழ் மக்களுக்கு அல்ல, தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியிலும் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினால் நம்பிக்கை வைப்பது தொடர்பில் கேள்விகள் இல்லாமலில்லை. அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை என்பது நாட்டின் பொதுவான பிரச்சினையாகும். ஆனால் ஒப்பீட்டு ரீதியாக பார்க்கின்றபோது ஜனநாயக விழுமியங்களுடனான முன்னேற்றங்கள் எவையுமே ஏற்படவில்லை என்று கூறமுடியாது.
நேர்காணல்:- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM