பாகம் ;- 2 நம்பிக்கையைத் தந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்

Published By: Digital Desk 4

04 Sep, 2019 | 09:51 PM
image

சவேந்திர சில்வா நியமனம்

கேள்வி : இராணுவமய நீக்கம் நோக்கிய முயற்சிகள் குறித்து நீங்கள் குறிப்பிட்டீர்கள். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அவர் ஜனாதிபதியினால் அண்மையில் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை குறித்து எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : கூட்டரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதும் ஜனாதிபதி கடுமையான சில நடவடிக்கைகளில் நாட்டம் காண்பிக்கத் தொடங்கினார். 2018 அக்டோபரில் அது ஒரு உச்சநிலைக்கு வந்து பிரதமர் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்தார். இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையையும் அந்த அடிப்படையிலேயே நோக்க வேண்டியிருக்கிறது. 2015 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் காணப்பட்ட திசைமாற்றத்திற்கும், தற்போதைய திசைமாற்றத்திற்கும் இடையே பெருமளவு வேறுபாடு இருக்கிறது. போர் வெற்றித் தினத்தைக் கொண்டாடுவதை நிறுத்தியதன் மூலமும், தேசிய தினத்தன்று தமிழிலும் தேசியகீதத்தைப் பாடுவதற்கு ஏற்பாடு செய்ததன் மூலமும் இனநல்லிணக்கம் மற்றும் புதியதொரு அரசியலமைப்பு ஆகியவற்றை உறுதியாக நியாயப்படுத்தியதன் மூலமும் மிகவும் ஆக்கபூர்வமானதொரு வழியில் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக வழிநடத்தியவர் ஜனாதிபதியே.

ஆனால் இப்போது அவர் அவை எல்லாவற்றிலிருந்தும் பின்வாங்கிவிட்டது பெரும் கவலை தருகிறது. நாங்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்திருக்கிறோம். ஏனென்றால் இனவெறிக்கு வசப்படக்கூடியவரல்ல ஜனாதிபதி என்பதை நாமறிவோம். அதிகாரப்பகிர்வு குறித்த மிகவும் முற்போக்கான கருத்துக்களை அவர் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது அவர் தேர்தல் மற்றும் ஏனைய அரசியல் காரணங்களால் நிர்பந்திக்கப்பட்டு, அவர் தனது குணவியல்புக்குப் புறம்பான முறையில் நடந்துகொண்டிருக்கிறார்.

ஆனால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் கருத்து எதனையும் கூறவில்லை.

சர்வதேச சமூகத்தின் பங்கு 

கேள்வி : சர்வதேச சமூகத்தின் பங்கை இப்பொழுது நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அதன் நகர்வுகளும் எம்மைப் பொறுத்தவரை முக்கியமானவையாக இருந்துவருகின்றன. ஒரு நல்ல விடயம் என்னவென்றால் ஐ.நா தீர்மானங்கள் கட்டுப்படுத்தும் தன்மையானவை என்றில்லாத போதும்கூட, அவை மிகுந்த தூண்டுதலாக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. இலங்கையில் இடம்பெற்றிருக்கக்கூடிய பெருமளவான மாற்றங்கள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விளைவானவை என நான் நினைக்கின்றேன். அந்தத் தீர்மானங்களில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இலங்கை இணையனுசரணை வழங்கிய தீர்மானங்களும் அடங்கும். குறிப்பிட்டதொரு நடவடிக்கையே ஒவ்வொரு மாற்றத்திற்கும் நேரடியாகக் காரணமென்று கூறமுடியாது. ஆனால் மேற்பார்வை என்று இருக்கும்Nபுhது அது பயன்தரக்கூடியதாக இருக்கும். 

சர்வதேச சமூகமென்று கூறும்போது நான் இதுவரையில் இந்தியாவைத் தவிர்ந்த நாடுகளையே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். ஏனென்றால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானங்களில் இந்தியா தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளவில்லை. அது பெரும்பாலும் நடுநிலையாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் இந்தியாவிற்கு விசேட அக்கறை இருக்கிறது. இலங்கையுடன் செய்துகொண்ட இருதரப்பு உடன்படிக்கையான இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையிலிருந்தே இந்த அக்கறை எழுகிறது. இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கலைச் சாதிப்பதற்குத் தலைவர்கள் உடன்படிக்கைக்கு அப்பாலும் செல்வதைக் காணவும் இந்தியாவிற்கு அக்கறை இருக்கிறது. ஏனென்றால் அந்த உறுதிnhமழி வேறு யாராலும் அல்ல, மஹிந்த ராஜபக்ஷவினாலேNயு வழங்கப்பட்டது.

எனவே சர்வதேச சமூகத்தின் நெருக்குல் பற்றி நாம் பேசும்போது அது இந்தியாவையும், ஏனைய நாடுகளையும் சம்பந்தப்படுத்தியதாகும். ஏனைய நாடுகள் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரங்களில் எம்மை ஆதரிக்கின்ற அதேவேளை, இந்தியா மாத்திரமே அரசியல் தீர்வுடன் தொடர்பான விடயங்களில் நேரடியான தொடர்பெர்னறைக் கொண்டிருக்கிறது. இந்தியாவினால் மாத்திரமே 13 ஆவது திருத்தத்தின் மூலமாக 1987 இல் இலங்கையில் ஆட்சிமுறைக் கட்டமைப்பை மாற்றக்கூடியதாக இருந்தது. 

இந்தியாவுடனான எமது போராட்டம் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடாக பிறகு டில்லியில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி உன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இலங்கைக்கு வந்திருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்திற்குக் கூடச் சென்றார். யாழுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமரும் அவரேயாவார். இலங்கை தொடர்பிலும், தமிழர் பிரச்சினை தொடர்பிலும் இந்தியாவின் கொள்கை முன்னரைப் போன்றே தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தியாவின் முக்கியத்துவம்

கேள்வி : பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் டில்லியில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்கான சாத்தியங்கள் குறித்துக் கருத்துக்கூறிய போது சில அரசியல் தலைவர்கள் இந்திய அரசாங்கம் ஜம்மு – காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தார்கள். அதை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் : ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசாங்கம் எடுத்த தீர்மானம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் ஏதாவதொரு தாக்கத்தைக் கொண்டிருக்கும் என நினைக்கவில்லை. நல்லதோ, கெட்டதோ ஜம்மு – காஷ்மீர் விசேட அந்தஸ்த்து ஒன்றைக் கொண்டிருந்தது. அதை இல்லாமல் செய்து அந்த மாநிலத்தை இந்திய அரசாங்கம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருத்திருக்கிறது. 

ஆனால் கடந்தகாலத்தில் ஏனைய மாநிலங்களுடனான விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் அணுகுமுறையை நோக்குவீர்களேயானால் பேச்சுவார்த்தைகளின் ஊடாக மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதில் மிகுந்த நெகிழ்ச்சித் தன்மையை அது வெளிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பிய மிசோரம், அசாம் அல்லது பஞ்சாப் போன்ற மாநிலங்களை உதாரணமாகக் கூறமுடியும். இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவாகுவதற்கு எந்த எதிர்ப்புமில்லை. அண்மைக்காலத்தில் தெலுங்கானாவும், அதற்கு முன்னர் சத்தீஸ்கரும் புதிய மாநிலங்களாக உருவானதை நாம் கண்டோம். எனNவு எம்மைப் பொறுத்தவரை இந்தியா இந்த விவகாரங்களை நடைமுறைச் சாத்தியமான வழியிலேயே அணுகுகின்றது என்றே நாம் நினைக்கின்றோம். 

பிரதமர் மோடி எமக்களித்த உறுதிமொழியின் அடிப்படையில் நோக்குகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு முன்னையதைப் போன்றே தொடர்கின்றது. இந்தியாவின் நல்லெண்ணம் முக்கியமானதாக இருக்கின்றது. அதேவேளை இந்திய - இலங்கை உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டவாறு அர்த்தமுடைய அதிகாரப்பரவலாக்கலைச் சாதிப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இதற்காக விரைவில் பிரதமர் மோடியை டில்லியில் சந்திக்கும் போது அவரது உதவியை நாம் நாடுவோம். 

தமிழ் - முஸ்லிம் உறவு 

கேள்வி : ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையும், அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் அடுத்து முன்னர் தமிழருக்குச் செய்த அட்டூழியங்கள் இப்போது முஸ்லிம்களுக்குச் செய்யப்படுகின்றது என்று நீங்கள் கவலை வெளியிட்டிருந்தீர்கள். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான குழப்பகரமான வரலாற்றையும், இரு சமூகங்களுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் அவநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இப்போது கிழக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் உறவுகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? அங்கே ஒருமைப்பாடு இருக்கிறதா?

பதில் : ஏப்ரல் 21 இற்குப் பிறகு தொடக்கத்தில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளி அகலமாகிக்கொண்டு போனது போன்று தோன்றியது. அதை இப்பொழுது நீங்கள் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் முன்னரைக் காட்டிலும் நாம் ஒன்றிணைந்து இருக்க வேண்டியதன் தேவையை இப்போது இரு சமூகங்களும் கூடுதலாக உணர்கின்றன என்று நான் நினைக்கின்றேன். நாம் இலக்கு வைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் எங்களுடன் நிற்கவில்லை என்ற ஒரு உணர்வு தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்தாலும் கூட அந்தவகையான மனோபாவம் எந்தப் பயனையும் தராது என்று இப்பொழுது கூடுதலான மக்கள் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். வடக்கிலும், கிழக்கிலும் சனத்தொகை எண்ணிக்கையில் அதிகப் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழ் பேசும் சமூகங்கள் என்ற வகையில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும். அல்லது பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து வருகின்ற நெருக்குதல்களுக்கு எம்மால் தாக்குப்பிடிக்க இயலாமல் போகும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களும். அதற்குப் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களும் இந்தப் புரிந்துணர்வை வலுப்படுத்த உதவியிருக்கிறது என்பது நிச்சயமானது.

கூட்டமைப்பு மீதான விமர்சனம்

கேள்வி : அரசாங்கம் இழைத்திருக்கக்கூடிய பல தவறுகளையும் பொருட்படுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதைத் தொடர்ச்சியாக ஆதரித்து வருவதாக சில தமிழர்கள் அடிக்கடி கண்டனம் செய்கின்றார்கள். மறுபுறத்தில் 2013 வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிமுறை குறித்து தமிழ்ச் சமூகத்திடமிருந்து கடுமையான கண்டனங்களும் வந்திருக்கின்றன. அதனால் உங்களுக்கு இரட்டைப் பிரதிகூலங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது?

பதில் : வடமாகாண சபையைப் பொறுத்தவரை அது நிச்சயமாகத் தவறவிடப்பட்ட ஒரு வாய்ப்பேயாகும். மிகவும் பாரதூரமான தவறு. ஏனென்றால் அது பெருமளவு சிக்கலானதும், விரும்பத்தகாததுமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது. நாம் அதிகாரப்பரவலாக்கலைக் கோரும்போது எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தையே பாழாக்கியவர்கள் என்று எம்மைப் பார்த்துக் கூறுகின்றார்கள். மாகாணசபைகளுக்குப் புதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றாலும் கூட, மட்டுப்படுத்தப்பட்ட அந்த அதிகாரங்களைக்கூட நாம் பயன்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. அந்தக் குற்றச்சாட்டில் அர்த்தம் இருக்கிறது.

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான மெய்யான வாய்ப்பொன்று வருகிறது என்று நம்பிய காரணத்தினால் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டோம். என்றாலும் அவ்வாறு நாம் செய்தது எம்மைப் பாதித்திருக்கிறது. கூட்டரசாங்கம் இப்பொழுது முறிவடைந்து போயிருக்கிறது. அந்த முறிவினால் பல்வேறு பாதகமான விளைவுகளை இன்று நாம் பார்க்கின்றோம். அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுத்த, இன்னமும் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான குதிரையொன்றிற்கு ஆதரவளித்துப் பணத்தைக் கட்டிவிட்டது, அதன் மக்களுக்காக எதையும் சாதிக்கக்கூடியதாக இருக்கவில்லை என்றே நோக்கப்படுகின்றது. அது ஒரு உண்மையுமாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

தென்னிலங்கை முற்போக்கு சக்திகள்

கேள்வி : கடந்த 5 வருடங்களாக தெற்குத் தலைமைத்துவத்துடன் ஊடாட்டங்களைச் செய்து ஒத்துப்பேர்கும் அரசியலொன்றை முன்னெடுத்தீர்கள். கடந்த வருடம் அக்டோபரில் அரசியல் நெருக்கடியின் போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற கட்சிகள் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மிகவும் அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சேர்ந்து பணியாற்றும் என்றும். முஸ்லிம்;களுடன் நேர்ந்து நிற்கும் என்றும் கூறியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் எவ்வாறானதாக இருக்கும்?

பதில் : விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தனியரசு ஒன்றுக்கான கோரிக்கை முடிந்துவிட்டது. அந்தத் திட்டம் முடிந்துபோன பிறகு எமது அணுகுமுறையும் மாறவேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தனிநாடு ஒன்றுக்காகப் போராடப் போவதில்லை. அது எமது குறிக்கோளும் அல்ல. ஒரு நாட்டிற்குள்தான் தீர்வு என்றார் பேச்சுவார்த்தை தான் முன்நோக்கிய ஒரேவழி.

துரதிஷ்டவசமாக இதை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையில் போதுமான மாற்றங்கள் ஏற்படவில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாம் இன்னமும் பழைய எதிர்ப்பு அரசியல் பழக்கத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கின்றோம். எதிர்ப்பு அரசியலைச் செய்யலாம், ஆனால் பெருமளவிற்கு ஈடுபாட்டில் நாட்டம் காட்ட வேண்டும். மற்றும் நாம் ஒரு நாட்டிற்குள்ளேயே வாழ்கின்றோம் என்ற புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். எமது மக்கள் அந்த மாற்றத்திற்குத் தயாராக இருக்கின்றார்களென நான் நினைக்கின்றேன்.

கடந்த 5 வருடகாலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற போதிலும் நாம் மேலும் கூடுதலான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்ற விளக்கப்பட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அதிக பங்களிப்புச் செய்திருக்கக்கூடும்.

அடுத்தகட்டம் நாம் எவ்வாறு தெற்கிலுள்ள சக்திகளுடன் ஈடுபாட்டை கொண்டிருக்கப்போகின்றோம் என்பதில் முக்கிய நகர்வைக் காணக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். அக்டோபர் 26 இற்குப் பின்னரான 51 நாள் அரசியல் நாடகத்திற்குப் பிறகு ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் பக்கத்தில் ஒன்றாக நிற்கும் இருகட்சிகள் என்றும், ஒரு அரசியல் செயற்திட்டத்தில் அவையிரண்டும் ஒன்றாக வருவது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பலர் எம்மிடம் கூறினார்கள். அத்தகைய சக்திகளுடன் ஒன்றாக வருவதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணலாம் என்று என்னால் கூறமுடியாது. ஆனால் நீண்டகால அடிப்படையில் அதுவே செல்வதற்கான பாதை. இரண்டு பிரதான கட்சிகளில் ஏதாவது ஒன்றே ஆட்சியில் இருக்குமென்பதால் நாங்கள் இந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதாவதொரு வகையில் ஒத்துழைக்க வேண்டியிருக்கலாம். ஆனால் உண்மையான மாற்றத்திற்கு நாம் தெற்கிலுள்ள ஜே.வி.பியுடனும், ஏனைய முற்போக்குக் கட்சிகளுடனும், மாற்று சக்திகளுடனும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.

-த இந்துவிற்கு அளித்த நேர்காணலில் எம்.ஏ.சுமந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13