(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
எனினும் இறுதிக் கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை நிவர்த்தி செய்து விரைவாக விசாரணைகளை நிறைவு செய்யவும் மேலும் சிலரை கைது செய்வது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் சி.ஐ.டி. நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்டது தொடர்பிலான முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ செயற்பட்டுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவலை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் தனியாக ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.

குறித்த ஜனாதிபதி சட்டத்தரணிக்கு பல முறை சி.ஐ.டி.யில் வாக்கு மூலம்பெற அழைப்பு விடுக்கப்பட்டும் சமூகமளிக்காமல் இருப்பதனால், நீதிமன்றின் உத்தரவு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் இணைத்ததாக சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வவினால் சட்ட மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு அவ்விடயம் தொடர்பிலான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னனியில் தற்போது இந்த விவகாரத்தில், கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன் தொடர்பில் சில வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் , வெளிப்படுத்தப்படும் தகவல்களை மையபப்டுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.