முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான Brandix அதன் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலையை சூழலுக்கு இசைவான தொழிற்சாலையாக சிறந்த முறையில் கட்டமைத்து ஏனைய உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக தமது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் காணப்படும் சிறந்த நிலைபேராண்மை அபிவிருத்தி செயற்பாடுகளை பின்பற்றுவதில் தொடர்ச்சியாக முன்னணி வகிக்கும் இந்நிறுவனத்தின் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு உலகின் Net Zero Carbon என்ற அந்தஸ்து இவ்வாண்டு கிடைத்துள்ளது. அது மாத்திரமின்றி இந்த தொழிற்சாலை 2008 ஆம் ஆண்டு உலகின் முதலாவது Leed பிளாட்டனம் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.
இவ்வாறு சிறப்பம்சங்கள் பலவற்றை கொண்டுள்ள மட்டக்களப்பு Brandix ஆடைத் தொழிற்சாலையை பார்வையிடுவதற்கான வாய்ப்பு அண்மையில் எமக்குக் கிடைத்தது. நாம் ஒரு குழுவாக அங்கு சென்றிருந்தோம்.
குறித்த ஆடைத் தொழிற்சாலை வளாகத்துக்குள் நுழைந்தபோது ஏனைய ஆடைத் தொழிற்சாலைகளைப் போல் அல்லாது வித்தியாசமான ஒரு உணர்வு ஏற்பட்டது. தொழிற்சாலையைச் சுற்றி காற்றோட்டமான நல்ல இடைவெளி, அழகிய மரங்கள், செடிகள், கொடிகளென பார்ப்பதற்கு பச்சை பசேலென காட்சியளித்தது.
அந்த ரம்மியமான காட்சிகளை ரசித்தவாறே ஆடைத்தொழிற்சாலைக்குள் அடியெடுத்து வைத்தோம். தொழிற்சாலைக்குள்ளே முதலில் நாம் சென்றது பிரதான கலந்துரையாடல் அறைக்கே. அங்கு எமக்கு சில விளக்கங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் வழிகாட்டல் குழுவொன்றின் ஊடாக உற்பத்தி செயற்பாடுகள் இடம்பெறும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
வியப்பூட்டும் வகையிலான் அற்புதமான கட்டமைப்பு ஏனைய ஆடைத் தொழிற்சாலைகளைப் போன்றே இங்கும் ஆடைகளின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியான பிரிவினரால் தைக்கப்பட்டு இறுதியில் ஆடை முழுமையாக்கப்பட்டு பொதி செய்யப்படுவதை காணமுடிந்தது. ஆனால் எவ்வித பரபரப்பும் பதற்றமும் இன்றி ஊழியர்கள் தமது பணிகளை முன்னெடுத்தவண்ணம் இருந்தனர்.
அவர்களுக்கான விசேட அறிவித்தல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஒலிபெருக்கி மூலமாக வழங்கப்பட்டன. ஒரு ஆடையின் ஒவ்வொரு பகுதியும் மற்றொரு தரப்பினரின் உற்பத்தி செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பதால் ஆரம்பம் முதல் இறுதிவரையான சகல தரப்பினருக்குமிடையில் தொடர்புகள் பேணப்பட வேண்டும். அதனை இலகுபடுத்துவதற்காக பொதுவான டிஜிட்டல் திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதில் நாளொன்றுக்கு தேவையான மொத்த மூலப்பொருட்கள் மற்றும் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தயாரிக்கப்பட வேண்டிய அளவுகள் போன்றன குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோன்று ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு பிரிவிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள அங்கங்கள் பற்றிய தரவுகள் பதிவாகிக்கொண்டே இருக்கும். அதைக் கருத்திற்கொண்டு ஊழியர்கள் தமது பணியினை முன்னெடுப்பதையும் காணமுடிந்தது.
பின்னர் முழுமையாக்கப்பட்ட ஆடைகள் பரிசோதிக்கப்பட்டு தரமற்றவைகள் நிராகரிக்கப்பட்டு தரமானவை பொதி செய்யப்பட்டு வாடிக்கையாளர் பரிசோதனைக்காக களஞ்சியசாலையில் வைக்கப்படுகிறது. இறுதியில் அவற்றில் சிலவற்றை வாடிக்கையாளர் பரிசோதித்து தரம் உறுதிப்படுத்தப்பட்டதும் அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நிறுவனத்தின் உற்பத்தி மற்று சிக்கனம், சூழலுக்கு இசைவான செயற்பாடுகள் குறித்து நிறுவனத்தின் விசேட வேலைத்திட்டத்துக்கான சிரேஷ்ட பொதுமுகாமையாளர் ஹேமிந்த ஜயவர்த்தன விளக்கமளித்தார்.
உற்பத்தி நடவடிக்கைகளின்போது மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக குறைந்த வலுவில் இயங்கக்கூடிய தையல் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மட்டக்களப்பு தொழிற்சாலையில் நாம் 1800 தையல் இயந்திரங்களை பயன்படுத்துகின்றோம். இவை தினசரி 16 மணி நேரம் இயங்குகின்றன. இவை அனைத்துக்கும் Clutch மோட்டர்களுக்கு பதிலாக குறைந்த வலுவில் இயங்கும் VSD Servo மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. உற்பத்தி காலப்பகுதியில், Clutch மோட்டர்கள் தொடர்ச்சியாக இயங்குகின்றன. Servo மோட்டர்கள் ஊசி இயங்கும் காலப்பகுதியில் மாத்திரமே இயங்குகின்றன. ஊசி இயக்கம் செயற்பாட்டு நேரத்தின் 17வீதத்தை மாத்திரமே கொண்டுள்ளது. Clutch மோட்டருடன் ஒப்பிடுகையில் Servo மோட்டரினால் 68-–73 வீத வலுவை சேமித்துக் கொள்ள முடிகிறது.
வாயு சேமிப்பு சாதனங்கள் (Air Saving Devices) தைக்கப்பட்ட ஆடைகளில் சுருக்கங்களை அகற்றுவது என்பது புதிய செயற்பாட்டு தேவையாக அமைந்துள்ளது. இதற்காக அழுத்தப்பட்ட வாயு தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகின்றது. உள்ளக அணியினால் புத்தாக்கமான வாயு சேமிப்பு சாதனம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக அழுத்தப்பட்ட வாயு விரயத்தை 40 வீதத்துக்கு மேல் குறைத்துக்கொள்கின்றோம்.
அதேபோன்று கழிவு நூல்களை மீள பயன்படுத்துவதற்காக எஞ்சிய நூல்களை வேறாக்கி அவற்றை சேமித்து வைக்கின்றோம். இந்த நூல்களை புதிய அலங்காரங்கள் அறிமுகம் செய்யும்போது மீள பயன்படுத்துகின்றோம். கழிவு நீர் வடிகட்ட நாம் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியொன்றை நிறுவியுள்ளோம். அதனூடாக வடிகட்டப்பட்ட நீரை மீள்சுழற்சிக்குட்படுத்தி கழிவறைகள் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுத்துகின்றோம். அதே போன்று தொழிற்சாலையில் காணப்படும் நீர் தூய்மையாக்கல் கட்டமைப்பினூடாக சகல ஊழியர்களுக்கும் சுத்தமானதும் பாதுகாப்பானதுமான குடிநீரை வழங்கி வருகின்றோம்.
உணவுக் கழிவு உரமாக்கல் செயற்பாடுகளும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது . 24 மணி நேர காலப்பகுதியினுள் உணவு கழிவுகளிலிருந்து கொம்போஸ்ட் உரம் உரமாக்கல் இயந்திரத்தினூடாக தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் உள்ளக உரத் தேவைக்கு பயன்படுத்தப்படுவதுடன் ஊழியர்களது தேவைக்காகவும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
உணவுத் தட்டுகளை கழுவும்போது நீரின் அளவை குறைத்துக் கொள்ள dishwasher பயன்படுத்தப்படுகின்றது. இதனூடாக நீரின் வீண் விரயம் தடுக்கப்படுகிறது. அத்தோடு தட்டுகளை கழுவுவதற்கு கொதி நீரை பெற்றுக்கொள்வதற்காக solar hot water கட்டமைப்பை நாம் பயன்படுத்துகின்றோம்.
நீரை மேலும் சிக்கனமாக பயன்படுத்த நவீன குழாய் பொருத்திகளை தொழிற்சாலை வளாகத்தில் பொருத்தியுள்ளோம். பாரம்பரிய நீர் பொருத்திகளுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய பொருத்திகள் ஊடாக 53 வீதமான நீரை சேமிக்க முடிகிறது என எமக்கு விளக்கமளித்தார்.
தொழிற்சாலையின் கூரைப்பகுதியில் சோலா பெனல்கள் பொருத்தப்பட்டு சூரிய சக்தி மூலமாக மின்சாரம் சேமிக்கப்பட்டு தொழிற்சாலை தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது . இவ்வாறு பல்வேறு முன்மாதிரியான செயற்பாடுகளை மட்டக்களப்பு Brandix ஆடைத் தொழிற்சாலையில் எம்மால் காண முடிந்தது. இதுபோன்று சகல நிறுவனங்களும் சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி தமது உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- எம்.நேசமணி-
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM