அடுத்த ஜனாதிபதி யார் என்பதைவிட அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் யார் என்பதில் இப்போது கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் இது விடயத்தில் அதிக ஆர்வமுடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஜனாதிபதி ஆட்சி முறைமையில் கடந்த காலங்களில் அவர்களுக்கு எற்பட்டுள்ள கசப்பானதும், மறக்க முடியாததுமான அரசியல் அனுபவங்களே இதற்கு முக்கிய காரணம்.
அரசியல் கட்சிகளே ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்கின்றன. வழமையாக முக்கிய கட்சிகளின் தலைவர்களே வேட்பாளர்களாக களமிறங்குவார்கள். அதனால் கட்சிகளின் தலைவர் மீது மக்கள் ஏற்கனவே கொண்டிருக்கின்ற அனுமானங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகளின் அடிப்படையில் தமது ஜனாதிபதியைத் தெரிவு செய்வது அவர்களுக்கு வசதியாக இருந்து வந்தது.
ஆனால் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அத்தகைய உறுதியானதொரு நிலைமையைக் காண முடியவில்லை. பொதுஜன பெரமுனவின் தலைவராகிய மஹிந்த ராஜபக் ஷ இரண்டு தடவைகள் ஏற்கனவே ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார். அரசியலமைப்பு சட்டத்தின்படி – குறிப்பாக 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக அவர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பதை இந்தத் திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்றது. ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியும் என்று 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஒரு நிலைமையை, ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது அவர் உருவாக்கியிருந்தார்.
மூன்றாவது தடவையாகவும் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அதிகார ஆசை காரணமாகவே அவர் 18 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தார். அது மட்டுமல்ல, சுயாதீன குழுக்களை நியமிப்பதிலும் அவற்றுக்கான தலைவர்கள், உறுப்பினர்களை நியமிப்பதிலும் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு ரீதியாக இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, ஜனாதிபதி விரும்பியவர்களை நியமிக்க முடியும் என்ற நியதியையும் அந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் அவர் கொண்டு வந்திருந்தார்.
தேக்க நிலைமை
ஆனால் மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தடாலடியாக மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி பதவிக்கு ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். இதனால் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகிய ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றிருந்தாலும்கூட, ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கான வெற்றிவாய்ப்புக்கள் மங்கலான நிலையிலேயே அரசியல் களத்தில் காணப்படுகின்றது. இது வெட்டவெளியான ஒரு நிலைமை.
அதேவேளை, அந்தக் கட்சியின் முக்கியஸ்தராகிய சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ளமையும், அதற்கு அந்தக் கட்சிக்குள் காணப்படுகின்ற ஆதரவும்கூட ரணில் விக்கிரமசிங்க, வேட்பாளராக வருவதில் முட்டுக்கட்டையாகக் காணப்படுகின்றது.
அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிவு செய்வதில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. இதன் காரணமாக வேட்பாளர் தெரிவு தேக்கமடைந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் வெற்றி பெறவில்லை. இதனால் அவர் அந்தத் தேர்தலில் வெற்றியே பெறமாட்டாரோ என்ற ஓர் அரசியல் ரீதியான ஐயப்பாடும் நிலவுகின்றது. இந்த ஐயப்பாட்டை இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது. இருப்பினும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது போட்டியிட்டே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவர் காணப்படுகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வர் என்ற குடும்ப அரசியல் செல்வாக்கை பெற்றுள்ள சஜித் பிரேமதாஸவும் எப்படியாவது இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அவருடைய ஆதரவாளர்களும் அதற்கு உரமேற்றி வருகின்றார்கள். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு கட்சித் தலைவரா அல்லது வேறு ஒருவரா என்ற வலுவான அரசியல் ரீதியான கேள்விக்கு உறுதியான பதிலைப் பெற முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றார்கள்.
ஒரே தொகுதி நேரடி தெரிவு
ஜனாதிபதித் தேர்தல் என்பது நாடு முழுவதும் ஒரே தேர்தல் தொகுதி என்ற அடிப்படையில் வாக்காளர்களாகத் தகுதி பெற்ற நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டு மக்கள் அனைவரும் - பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதமின்றியும், இனக் குழுமங்கள் என்ற ரீதியிலான பேதமின்றியும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைத் தெரிவு செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெரிவு செய்கின்ற ஜனாதிபதி மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். இதனால், அனைவருக்கும் அவரே ஜனாதிபதி என்ற அரசியல் நிலைப்பாடு நிலவுகின்றது. இந்தப் பொதுவான நிலைப்பாடு தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் தொடர்ந்து பேணப்படுவதில்லை.
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் நிச்சயமாக பௌத்த மதத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார். பௌத்த மதத்தைச் சேராத ஒருவர் இதுவரையிலும் இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை.
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டதில் இருந்து பௌத்தர்களே இதுவரையில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையின் பிதாமகராகிய ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நாட்டின் ஜனாதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவராகத் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி பொறுப்பை ஏற்றிருந்தவர்கள், எல்லோருக்கும் பொதுவானவர்களாக நடந்து கொண்டார்களா என்ற கேள்வி முக்கியமானது. இறுதியாக ஜனாதிபதியாக பதவி வகிக்கின்ற மைத்திரிபால சிறிசேனவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவராக செயற்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் உள்ளது.
முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களுடன் சம உரிமைகளுடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு 1976 ஆம் ஆண்டு தமிழ் அரசியல் தலைவர்கள் வலிந்து தள்ளப்பட்டிருந்தார்கள்.
சிங்கள மக்களுடன் சம உரிமை உடையவர்ளாக, அரசியல் அதிகார பலத்துடன் தமது தாயகப் பிரதேசங்களில் - தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ வேண்டும் என்ற கோரிக்கை சிங்கள பேரின அரசியல்வாதிகளினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
தமிழ் மக்களின் இந்த நியாயமான அரசியல் கோரிக்கை தொடர்ச்சியாக சிங்கள அரசியல் தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டு வந்ததனால், இது இலங்கையின் இனப்பிரச்சினையாக வடிவெடுத்தது. இனப்பிரச்சினைக்கு அரசியல் வழியில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள், அணுகுமுறைகள் என்பவற்றின் கீழ் எட்டப்பட்ட உடன்பாடுகள், செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டன. அல்லது கிடப்பில் போடப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டன.
இதனால் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் ஒன்று கூடிய தமிழ் அரசியல் தலைவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை நிறைவேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை, தனிநாட்டு கோரிக்கைக்கான சர்வசன வாக்கெடுப்பாகவே கருதி தமிழ் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.
இந்தத் தேர்தலில் அமோகமாக தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றிருந்தது. தொடர்ந்து தனி நாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டமும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கருக்கட்டியிருந்தது. அக்காலப்பகுதியில் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக கல்வியில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் நடைமுறை இந்தத் தனிநாட்டுப் போராட்டத்திற்கு உரமான அடித்தளத்தை இட்டிருந்தது.
இத்தகையதோர் அரசியல் சூழலில்தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்போது பிரதமராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன முதலாவது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திறந்த பொருளாதாரக் கொள்கை
இந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாகிய அப்போதைய பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தீவிர சிங்களத் தேசியக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், உள்ளூர் உற்பத்திப் பொருளாதாரத்தில் கடும் பற்று கொண்டவராகத் திகழ்ந்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்காவிடம் இருந்து 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினுடைய தலைமையின் கீழ் நிலவிய இந்தப் பொருளாதாரக் கொள்கை அரசியல் ரீதியாக விரக்தி அடைந்திருந்த தமிழ் இளைஞர்கள், தமிழ்க் குடும்பங்கள் பலவற்றுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
கல்வியில் தரப்படுத்தல், வேலையில்லாத் திண்டாட்டம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கோரி நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் போன்ற காரணங்களினால் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் தமது எதிர்காலம் குறித்து பெரிதும் கலக்கமடைந்திருந்தார்கள். இந்த நிலையில் அரசு மேற்கொண்டிருந்த திறந்த பொருளாதாரக் கொள்கை பலரையும் வெளிநாடுகளை நோக்கிப் படையெடுப்பதற்குத் தூண்டியிருந்தது. அதேவேளை நாட்டின் அரசியல் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டிருந்த பலர் பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர நேர்ந்தது என்பதும் முக்கியமானது.
அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் தமது அந்த நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தமது வாழ்க்கையை நிரந்தரமாக்கிக் கொள்ள முடிந்தது. பின்நாட்களில் தாயகத்தில் யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் மக்களுக்கு இவர்களுடைய பொருளாதார நிலைமைகள் பெரிதும் கைகொடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு வகையில் தமிழ் சமூகத்திற்கு நன்மையளித்திருந்தது என்றே கூற வேண்டும். யுத்த மோதல்கள் தீவிரமடைந்து, நிலைமைகள் தாயகத்தில் மிகவும் மோசமடைந்திருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான பொருளாதார உதவிகளையும், அதேபோன்று ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவையும் இவ்வாறு புலம்பெயர்ந்திருந்தவர்கள் பெருமளவில் வழங்கியிருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கான புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் இப்போதும் தொடர்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொடூரங்கள்
திறந்த பொருளாதாரக் கொள்கை தமிழ் மக்களுக்கு ஒரு வகையில் நன்மையளித்த போதிலும், அரசியல் ரீதியாக ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சி கொடுங்கோலாட்சியாகவே திகழ்ந்தது என்பதை மறுக்க முடியாது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்கு சிங்களத் தலைவர்கள் உடன்பட்டிருக்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தியிருந்தனர். இதனால் விரக்தியடைந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் முனைப்பு காட்டியதைத் தொடர்ந்து மாவட்ட சபை முறைமையை, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜே.ஆர். அரசாங்கம் முன்வைத்தது.
பிராந்திய சுயாட்சியைக் கோரியிருந்த போதிலும், கிடைப்பதைப் பெற்று அதில் இருந்து முன்னோக்கி நகரலாம் என்ற அடிப்படையில் மாவட்ட சபை முறைமையை ஏற்று அதற்கான தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டிருந்தது.
அந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கான மாவட்ட அபிவிருத்தி சபையின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கு முறையற்ற வகையில் முயற்சி செய்த அரசாங்கம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டது. இந்த வன்முறைகளின்போதுதான் யாழ் நூலகத்தை எரித்து, சிங்களக் காடையர்கள் யாழ்ப்பாணத்தில் வெறியாட்டம் போட்டார்கள்.
தமிழர்களின் கலாசாரப் பெருமை வாய்ந்த நூலகமும், தமிழர்களின் கலாசாரத் தலைநகரமுமாகிய யாழ்ப்பாணமும் இந்த வன்முறை வெறியாட்டத்தின்போது எரிந்து சாம்பராகின. தமிழர்களின் தாயக நகரில் அவர்களுடைய வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டு பொருளாதாரமும் பொசுக்கி அழிக்கப்பட்டது, உயிரிழப்புக்களும் நேர்ந்தன.
தொடர்ந்து ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சியில்தான் வரலாற்றுக் கறைபடிந்த கறுப்பு ஜுலை தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையாக அரங்கேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் கொத்தியும் தீயில் போட்டு எரித்தும் கொல்லப்பட்டார்கள்.
இந்த கொடூரங்களை நிகழ்த்திய பின்னர், ஏதிலிகளாக அகதி முகாம்களில் அச்சத்தோடு அபயம் தேடியிருந்த தமிழர்களை நோக்கி, போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று ஜனாதிபதி ஜயவர்தன கர்ச்சனை செய்திருந்தார்.
சந்திரிகாவும் சாதிக்கவில்லை
ஜே.ஆருக்குப் பின்னர் ஜனாதிபதியாக பின்னர் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாஸ, அப்போது நாட்டில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரை வெளியேற்றுவதற்காக ஒரு வகையில் விடுதலைப்புலிகளைப் பயன்படுத்திக் கொண்டார். துரதிர்ஷ்டவசமாக தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்றிற்கு மேதின நாளில் அவர் பலியாகிப்போனார். அவருடைய ஆட்சிக்காலத்தில் அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போனது என்றே கூற வேண்டும்.
பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் அஸ்தமித்துப் போனது. அதனையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தமிழ் மக்களுக்கு விடிவெள்ளியாகத் தோற்றமளித்த சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியானார்.
அவர் மீது தமிழ் மக்கள் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கையின் அடையாளமாக மக்கள் மத்தியில் அதிகம் பாவனையில் இருந்த பொருட்களைக் கொண்டு செல்கின்ற பை – வயரினால் ஆன பேக், சந்திரிகா பேக் என பிரபல்யம் பெற்றிருந்தது.
அது மட்டுமல்ல. புடவைக் கடைகளில் பெண்களைக் கவர்ந்த வண்ண டிசைன்களிலான சாரிகளும் சந்திரிகா சாரி என்ற பெயரோடு பிரபல்யம் பெற்றிருந்தது. ஆனாலும், விடுதலைப்புலிகளுடனான யுத்த மோதல்களைத் தணிப்பதற்காக இடம்பெற்ற பேச்சுக்களின்போது, பூநகரி ஊடான சங்குப்பிட்டி – கேரதீவு ஊடான யாழ் குடாநாட்டுக்கான தரைவழி மார்க்கத்தில் அமைந்திருந்த இராணுவ முகாம் ஒன்றை சில மீற்றர் தொலைவுக்குப் பின்னோக்கி நகர்த்தி பொதுமக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு விடுத்த விடுதலைப்புலிகளின் கோரிக்கை அவரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதன் விளைவாக மோதல்கள் தீவிரமடைந்தன. பூநகரி பாதையும் மூடப்பட்டது. மாற்றுவழியாக குடாக்கடலேரியைப் படகுகள் மூலம் பூநகரி பிரதேசத்தில் உள்ள நல்லூர் - கிளாலி வழியாக நடைபெற்ற பொதுமக்கள் போக்குவரத்து மார்க்கத்தில் படகுகள் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்கள்.
சந்திரிகாவின் காலத்தில் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வும் கிடைக்கவில்லை. அவர் மீதான தாக்குதல்கள் இடம்பெறும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன. அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் அவரும் தமிழ் மக்களுக்கான ஜனாதிபதியாக நடந்து கொள்ளவில்லை.
மருட்சியுடனான காத்திருப்பு
அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகளைப் போலவே அவரும் சிங்கள மக்களின் ஜனாதிபதியாகவே நடந்து கொண்டார். தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் அவருடைய ஆட்சி நடைமுறைகள் இடம்பெற்றிருக்கவில்லை.
அந்த கொடூர ஆட்சியின் அழிக்க முடியாத பதிவாக முள்ளிவாய்க்கால் பேரழிவு இடம்பெற்றதும், தமிழர் பிரதேசங்களில் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நிர்வாக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. யுத்தம் முடிவுற்ற சூழலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, சிறுபான்மை இன மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ் மக்களின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதே தவிர, அவர்களுடைய வாழ்க்கையில் விடிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை.
இத்தகைய பின்னணியில்தான் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் அரசியல் வெளியின் மூலையில் காத்து நிற்கின்றது. அந்தத் தேர்தலில் யார் யார் எந்தக் கட்சிகளின் சார்பில் களமிறங்கப் போகின்றார்கள் என்பதை அறிவதற்கு மக்கள் ஆவல் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் வெளிவருவதை உண்மையான ஆர்வத்துடன் பார்த்திருக்கின்றார்கள் என்பதைவிட அவர்கள் ஒருவகையில் அரசியல் மருட்சியுடன்தான் பார்த்திருக்கின்றார்கள். காத்திருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM